சனி, 11 ஜூன், 2011

Singalam support moon: பான் கி மூன் மீண்டும் ஐநா பொதுச்செயலராக இலங்கை ஆதரவு


வேறு யாரேனும் வந்தால் கொலைகாரச் சிங்களத்திற்கும் ஆபத்து. கொலையை மறைத்த பான்கீமூனுக்கும் ஆபத்து.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!



பான் கி மூன் மீண்டும் ஐநா பொதுச்செயலராக இலங்கை ஆதரவு

First Published : 11 Jun 2011 01:28:21 PM IST

Last Updated : 11 Jun 2011 02:04:28 PM IST

கொழும்பு, ஜூன்.11: பான் கி மூன் இரண்டாவது முறையாக ஐநா பொதுச்செயலர் ஆவதற்கு இலங்கை அரசு ஆதரவு தெரிவித்துள்ளதாக அந்நாட்டில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை மையமாக வைத்து இலங்கை அரசுக்கும் ஐநா சபைக்கும் இடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது.இந்த நிலையில் பான் கி மூனின் பதவிக்காலம் விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளது. இரண்டாவது முறையாக அவர் போட்டியிட விரும்புகிறார். அவருக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பான் கி மூன் ஐநா பொதுச்செயலர் ஆவதற்கு இலங்கையும் ஆதரவு தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

6 இலட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த மனிதனின் எச்சம்

6 இலட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த மனிதனின் எச்சம் வடமராட்சியில் கண்டுபிடிப்பு

தற்போதைக்கு ஆறு அல்லது ஏழு இலட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்ததாக கருதப்படும் ஹோமோ இரெக்டஸ் வர்க்க மனிதனின் எச்சம் வடமராட்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் கற்காலத்துக்கு முந்திய (lower paleoloithic) காலத்து மனிதன் இலங்கையில் வாழ்ந்திருப்பதற்கான உறுதியான தடயமாக அதனைக் கொள்ள முடியும் என்று தொல்பொருளியல் ஆராய்ச்சித் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் ஹோமோ இரெக்டஸ் வர்க்க மனிதன் இலங்கையில் வாழ்ந்திருந்ததற்கான உறுதியான தடயம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதற்தடவையாகும்.
கற்காலத்துக்கு முந்திய காலத்து மனிதன் பயன்படுத்தியதாக கருதப்படும் கற்கோடாரிகள் சில வடமராட்சியில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதையடுத்தே தொல்பொருளியலாளர்கள் மேற்கண்ட அறிவித்தலை விடுத்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள கற்கோடாரியானது ஆச்சூலியன் ஆயுத கலாசாரத்தைச் சோ்ந்தவையாகும் என்றும் அவர்கள்  மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
Short URL: http://meenakam.com/?p=25896

Why the delays?

ஒரு மணி நேரத்திற்கொரு முறை தணிக்கை ஆய்வு செய்க. நேற்றைய பதிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லையே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


67 ஆண்டு பழுமையான தில்லி தமிழ்ச் சங்கம்!

இலங்கையுடனான நிலைப்பாட்டை மாற்ற மத்திய அரசை திமுக வலியுறுத்த வேண்டும்: தா.பாண்டியன்

D.M.K. will continue with cong. : காங்கிரசுக் கூட்டணியில் நீடிப்போம்: திமுக முடிவு

நான் முன்னரே குறிப்பி்ட்டவாறு எதிர்பார்த்த முடிவுதான். கனிமொழி கைது குறித்து மட்டும் போராட்டம் நடத்தினால் வரவேற்பு இருக்காது; நீதிமன்ற அவமதிப்பு ஆகலாம் என்பதால் பத்தோடு ஒன்றாக ஒரு தீர்மானத்தை இயற்றித் தீர்மான விளக்கம் என்ற பெயரில் அதற்கு முதன்மை கொடுக்கும் முயற்சியே இது.  மக்களிடையே கொண்டு செல்லாமல் சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளித்து உரிய நடவடிக்கை எடுப்பின் நன்று. அல்லது அலைக்கற்றை ஊழலின் முதன்மைக் குற்றவாளிகளையாவது பகிரங்கப்படுத்த வேண்டும். அவர்கள் வெளியில் இருக்க, இவர்கள் உள்ளே இருப்பது முறையல்ல என்றாவது புரிய வைக்கலாம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

காங்கிரஸ் கூட்டணியில் நீடிப்போம்: திமுக முடிவு

First Published : 10 Jun 2011 07:33:47 PM IST

Last Updated : 10 Jun 2011 07:45:52 PM IST

சென்னை, ஜூன் 10- காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம் என்று திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுவின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.சென்னை அண்ணா அறிவாலயத்தில், இன்று மாலை நடைபெற்ற இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:* காங்கிரஸ் கூட்டணியில் திமுக நீடிக்கும்* இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக் கோரும் சட்டப்பேரவையின் தீர்மானத்திற்கு வரவேற்பு* 2 ஜி விவகாரத்தில் சிபிஐ.,க்கு கண்டனம்* சட்டமேலவை ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம்* தலைமைச் செயலகத்தை மாற்றியதற்கு எதிர்ப்புஇவை உட்பட மொத்தம் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இத்தீர்மானங்களை விளக்கி திமுக சார்பில் ஜூன் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் நடத்தப்படும்.
கருத்துகள்

போங்க அப்பா போங்க . தமிழன் தான் தீர்ப்பு சரியாய் எழுதிட்டானே இனியாவது தமிழனை உருப்படியா சிந்திக்க உடுங்க.
By சம்பு உங்கள் நண்பன்
6/10/2011 7:56:00 PM
We can now guess what T.R. Balu's might have discussed in the yesterday's meeting with PM. I believe he received an assurance from PM that bail for Kanimozhi will be given soon. That is why the DMK agreed to be continue the alliance with Congress. Let us wait and see the outcome of Kanimozhi's appeal to the Supreme Court.
By Subbu
6/10/2011 7:52:00 PM
காங்கிரஸ் கூட்டணியில் திமுக நீடிக்கும் என்று எடுத்த முடிவுடன், அமைச்சரவையிலிருந்து விலகி வெளியிலிருந்து ஆதரவை தொடரலாம் என்ற முடிவே சரியாக இருக்கும்.
By Gangadharan
6/10/2011 7:49:00 PM
உயர் மட்ட குழு உயர் மட்ட குழு அப்படின என்ன?
By valaikadal
6/10/2011 7:46:00 PM
dmk has taken this decision per force . they dont have any choice but to continue in upa. with out the alliance they will be politically orphaned. they are power monkers, with no power in tn they want to retain power in centre. but anycase things will change once dayanithi maran will be dropped from the cabinet for his involvement in 2g.
By viji varadan
6/10/2011 7:45:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 10 ஜூன், 2011


67 years old thilli thamizh changam: 67 ஆண்டு பழமையான தில்லி தமிழ்ச் சங்கம்!

தில்லித் தமிழ்ச்சங்கம் மேலும் சிறப்பாக வளரவும் தமிழ் வளர்க்கவும் தமிழர் நலன் பேணவும் வாழ்த்துகள். செய்தியாளருக்குப் பாராட்டுகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

67 ஆண்டு பழுமையான தில்லி தமிழ்ச் சங்கம்!

First Published : 10 Jun 2011 10:46:02 AM IST


புதுதில்லி, ஜூன் 9: தில்லிவாழ் தமிழர்களிடையே கடந்த 67 ஆண்டுகளாக தமிழ் வளர்ச்சிக்கான பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது தில்லி தமிழ்ச் சங்கம்.இச் சங்கமானது இப்போது தில்லிவாழ் தமிழர்களின் குழந்தைகளுக்கு நன்றாக தமிழ் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவும் திட்டமிட்டு வருகிறது.இந்தியத் தலைநகரான தில்லியில் உள்ள ராமகிருஷ்ணாபுரத்தில் மூன்று தளங்களுடன் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது தில்லித் தமிழ்ச் சங்கக் கட்டடம். 1946-ம் ஆண்டு ஒரு சிறிய அறையில் தொடங்கப்பட்ட இச்சங்கம், பல்வேறு வளர்ச்சிப் படிநிலைகளைத் தாண்டி இன்று தில்லிவாழ் தமிழர்களின் பெருமையாகத் திகழ்கிறது.இலக்கிய விழா, கருத்தரங்கம், மாணவர்களுக்கான கட்டுரை, ஓவியப் போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது இச் சங்கம். இதன் வளர்ச்சி குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் சங்கத்தில் அரை நூற்றாண்டுக்கு மேலாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவரும், இப்போதைய தலைவருமான எஸ்.கிருஷ்ணமூர்த்தி "தினமணி'க்கு அளித்த பேட்டி: தில்லி தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சியில் தலைவர்கள் மூதறிஞர் ராஜாஜி, காமராஜர், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, பக்தவத்சலம், எம்.ஜி.ஆர். உள்ளிட்ட பலரது பங்களிப்பு அளப்பரியது. பெருந்தலைவர் காமராஜர் ஒருமுறை தில்லி தமிழ்ச் சங்கத்திற்கு வருகை தந்தபோது அவரிடம் உறுப்பினராகச் சேருவதற்கு ரூ.100 கேட்கப்பட்டது, அப்போது தன்னுடைய சட்டைப் பையில் கைவிட்டு கைக்குட்டையை வெளியே எடுத்து "என்னிடம் இதுதான் உள்ளது' என்று கூறியுள்ளார். ஆனாலும், தன்னை உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளச் சொன்ன அவர், பின்னர் ஒரு வாரத்திலேயே அதற்கான பணத்தையும் அனுப்பி வைத்தார்.அதேபோன்று, டெல்லி தமிழ்ச் சங்கம் என்று பெயரிடப்பட்டிருந்த நிலையில், சங்கத்திற்கு வருகை தந்த கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி, சங்கப் பெயர்ப் பலகையைப் பார்த்து "இதென்ன டெல்லி தமிழ்ச் சங்கம்?' "தில்லி துருக்கர் செய்த வழக்கமடி' என்று பாரதியார்கூட டெல்லியை தமிழில் தில்லி என்று தானே அழைத்துள்ளார். பின்னர் ஏன் டெல்லி தமிழ்ச் சங்கம் என்று பெயரிட்டுள்ளீர்கள்?'' என்று வினவியுள்ளார். அதன்பிறகு, சங்கத்தின் பெயர் தில்லி தமிழ்ச் சங்கம் என்று பெயர் மாற்றப்பட்டதாக சங்கத்தின் மூத்த நிர்வாகிகளாக இருந்த குப்புசாமி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் என்னிடம் கூறியதுண்டு.அதேபோன்று, சங்கக் கட்டட வளர்ச்சி நிதிக்காக தமிழக முதல்வராக இருந்த பக்தவத்சலம் ரூ.1 லட்சம் அரசு நிதி தந்தார். தில்லி வந்திருந்தபோது அப்போதைய முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா ரூ.50 ஆயிரம் தருவதாக அறிவித்திருந்த நிலையில் மறைந்துவிடவே, அந்நிதியை முதல்வராக இருந்த கருணாநிதி வழங்கினார். அதேபோன்று, எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ரூ.5 லட்சம் நிதி தருவதாக கூறியிருந்தார். நிதி பெறுவதற்காக நானும், எனது மனைவியும் அவரைச் சென்னையில் சந்திக்க நேரில் சென்றோம். எனினும், அவரைச் சந்திக்க முடியவில்லை. பின்னர், இதுபற்றிய தகவல் அவரிடம் கொண்டு சேர்க்கப்படவே, தில்லியில் பாரதியார் சிலையை நிறுவிடும் விழாவில் வைத்து ரூ.5 லட்சத்தை எங்களிடம் வழங்கினார். அதேபோன்று சங்கத்தில் ஆடிட்டோரியம் கட்டுவதற்கு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி ரூ.10 லட்சம் அரசு நிதி தந்தார்.சங்கத்தின் மாடியில் இயங்கிவரும் நூலகத்தில் பலதரப்பட்ட இலக்கிய நூல்கள், வார இதழ்கள் உள்பட 20 ஆயிரம் நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. வட இந்தியாவில் உள்ள பெரிய அளவிலான தமிழ் நூலகமாக இது உள்ளது. இங்கு வரும் வாசகர்களுக்கு உதவிட நூலகரும், பணியாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் பாரதி விழா, பொங்கல் விழா, சித்திரைத் திருவிழா, பாவை விழா நடத்தி வருகிறோம். மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டி, குழு விவாதப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படுகின்றன.குறைந்த கட்டணத்தில் பரத நாட்டியம், பாட்டு, மிருதங்கம், குச்சுப்புடி, ஓவியம் ஆகியவற்றில் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. தில்லி தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்புகள் வரையில் தமிழ் பயிலும் மாணவர்களில் முதலாவதாக வரும் மாணவர்களுக்கு தலா ரூ.1000-மும், 9, 10-ம் வகுப்பு மாணவர்களில் தமிழில் முதலாவதாக வரும் மாணவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரமும், 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் தமிழ்ப் பாடத்தில் முதலாவதாக வரும் மாணவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரமும் பரிசு வழங்கி ஊக்கப்படுத்துகிறோம். எதிர்காலத் திட்டம்: இனிவரும் காலங்களில் தில்லி தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளுடன் இணைந்து தமிழை நன்றாக கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை கொடுப்பது குறித்தும் யோசித்து வருகிறோம். தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து இதற்காக உதவி கோரவும் முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.

இலங்கையுடனான நிலைப்பாட்டை மாற்ற மத்திய அரசை திமுக வலியுறுத்த வேண்டும்: தா.பாண்டியன்

சரியான கருத்து. ஆனால், கூட்டுக் கொலையாளியான காங். மாற முடியாது. எனவே, காங்.ஆட்சியை விரைவில் மாற்ற பரப்புரை மேற்கொண்டு வெற்றி காண வேண்டும். முதலில் காங்.ஆளும் மாநிலங்களிலும் பிறகு பிற மாநிலங்களிலும் கொலைகாரக் காங்.ஐ ஏன் விரட்டி அடிக்க வேண்டும் என முனைப்பான பரப்புரை மேற்கொண்டு தமிழர் நலனில் கருத்து செலுத்தும் புதிய அரசை அமைக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இலங்கையுடனான நிலைப்பாட்டை மாற்ற 
மத்திய அரசை திமுக வலியுறுத்த வேண்டும்: தா.பாண்டியன்

First Published : 10 Jun 2011 02:35:31 AM IST


சென்னை, ஜூன் 9: இலங்கையுடனான இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மத்திய அரசை திமுக வலியுறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.  சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களையும் வரவேற்கிறோம். இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை என்பது ஓர் அடையாள நடவடிக்கைதான்.  ராஜபட்ச அரசின் போர்க்குற்றங்களை விசாரிக்கவும் இலங்கையுடனான இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவும், மத்திய காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக வலியுறுத்த வேண்டும். அது ஏற்கபடாவிட்டால் மத்திய ஆட்சியிலிருந்து திமுக விலக வேண்டும்.  தினகரன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கை விரைந்து நடத்தவும், அதற்கு உத்தரவிட்ட அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.  மாநாடு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமும் அகில இந்திய மாநாடு மார்ச் மாதம் பாட்னாவிலும் நடைபெற உள்ளது என்று கூறினார். 

because of cong. d.m.k. fall down -k. veeramaniyar: திமுகவின் தோல்விக்குக் காங்கிரசே காரணம்: கி. வீரமணி குற்றச்சாட்டு

ஆசிரியர் வீரமணியார் சரியாகத் தெரிவித்து உள்ளார். எனினும் காங்.உடன் விரும்பியே தி.மு.க., இணைந்திருந்ததும் அது  துரத்தினாலும் விரட்டினாலும் ஒட்டிக் கொண்டிருந்ததும்தானே இனப்படுகொலைகளுக்குத்  துணையாக அமைந்தது.தமிழர் நலன் கருதி வெளியேறாமல் மத்திய அரசை இறுகப் பற்றிக் கொண்டு தவம் இருந்தது ஏன்? எனவே, தீ வினை விதைத்தவர்கள் தீ வினை அறுக்க வேண்டும்.  ௨.) குற்றம் செய்தவர்கள் தண்டனை பெறும்  பொழுது பரிவு காட்டலாம். ஆனால், குற்றமற்றவர்கள் போன்ற தோற்றத்தை உருவாக்கக்கூடாது அல்லவா? எனவே, படுகொலைகளுக்கு உதவியவர்களுக்காகப் பல்லக்கு தூக்காமல். இனி அ.தி.மு.க. அரசிற்கு ஒத்துழைப்பாக இருந்து தமிழ் நலப் பணிகளை விரைந்து ஆற்ற வழிகாட்ட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

திமுகவின் தோல்விக்கு காங்கிரஸே காரணம்: கி. வீரமணி குற்றச்சாட்டு

First Published : 10 Jun 2011 02:34:49 AM IST


சென்னை, ஜூன் 9: காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் பல்வேறு செயல்களுக்கு பழியேற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதால்தான் தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேரிட்டது என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.  "லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.  இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானம் சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  இது வரவேற்கப்பட வேண்டிய, வரலாற்று முக்கியத்துவம் வாயந்ததாகும். தமிழர்களின் நன்றிக்குரிய தீர்மானமாகும். இதனை திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வரவேற்றுள்ளன.  ஒட்டுமொத்தமாக தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இந்தத் தீர்மானத்துக்குப் பதில் அளித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, திமுகவையும், அதன் தலைவர் கருணாநிதியையும் கடுமையாக விமர்சனம் செய்திருப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும்.  தமிழக அரசியலில் கடந்தகால கசப்பான அனுபவங்களையே சுட்டிக்காட்டி ஒவ்வொருவரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கப்படும் நிலையால் ஏற்படும் விளைவுகள்தான் என்ன?  பொது எதிரியான ராஜபட்ச தப்பித்துக் கொள்ளவே இது வழிவகுக்கும். மத்திய அரசை அந்தரங்க சுத்தியுடன் வற்புறுத்தி செயல்பட வைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நிலைக்கு எதிர் விளைவாக பொதுப்பிரச்னையை மறந்து விட்டு, பொது எதிரிகளை ஒதுக்கிவிட்டு இங்குள்ள கட்சிகள் ஒருவருக்கொருவர் தன்னிலை விளக்கம் அளித்து வருகின்றனர். இதன் மூலம் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைப் பிரச்னையை இன உணர்வுப் பிரச்னையாகவோ, மனித உரிமை பிரச்னையாகவோ பார்க்காமல், நல்ல அரசியல் முதலீடு எனக் கருதி தீயை அணைக்க முயலாமல், யார் எந்த அளவுக்குத் தண்ணீர் ஊற்றி அணைத்தார்கள் என்ற ஆராய்ச்சி லாவணியிலா இறங்குவது?  காங்கிரஸே காரணம்: இலங்கைக்கு ராணுவப் பயிற்சி முதற்கொண்டு அளித்ததற்குக் காரணமான காங்கிரஸ் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்போம் என்று அதிமுக பொதுச்செயலாளர் கூறியதையெல்லாம் இப்போது மறுமொழியாக திமுக கூற ஆரம்பித்தால் தமிழக அரசின் வலிமை குறைந்து விடும்.  மத்தியில் ஆளும் காங்கிரசுடன் இருந்து கொண்டு அதன் பல்வேறு செயல்களுக்கும் பழியேற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதால்தான் தேர்தலில் இவ்வளவு பெரிய தோல்வியைப் பெற்றது திமுக.  எனவே, அனைத்துக் கட்சிகளின் ஆதரவைப் பெற்று தீர்மானத்தை செயலாக்க ஆளும் கட்சியும், முதல்வரும் முன்வர வேண்டும். அதற்கு நம் அனைவருக்கும் இடையே ஒற்றுமையும், ஒத்துழைப்பும் தேவை' என கி. வீரமணி வியாழக்கிழமை விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.

will D.M.K. continue in the central govt.? : மத்திய அமைச்சரவையில் திமுக தொடருமா? இன்று முடிவு

சிங்கள அரசுடன் மத்திய அரசு கூடா நட்பு கொண்டதே ஈழத்தமிழர்க்கும் அதனால் ஆட்சிக்கும் பெருங்கேடாய் அமைந்தது. எனினும் கலைஞர் அதைக் கூறும் உறுதி பெற்றிருக்கவில்லை. காங்.உடன் தி.மு.க. கூடா நட்பு கொண்டதே பெருந்தோல்விக்குக் காரணம். எனினும் கலைஞர் அதை வெளிப்படுத்தும் துணிவு பெற்றிருக்கவில்லை. மத்திய ஆட்சியில் பெயரவிற்கேனும் பங்கு  இல்லாவிடில் பெருந் தொல்லை. எனவே, காங்.ஐ எதிர்க்க முடியாது. தொண்டர்கள் அ.தி.மு.க.வுடன் நட்பு கொண்டு கட்சி மாறும் சூழல் வரக்கூடாது என்பதற்காகக் கட்சியினருக்குத்தான் அதனைக் கூடா நட்பாகக் கூறியுள்ளார். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


மத்திய அமைச்சரவையில் திமுக தொடருமா?இன்று முடிவு

First Published : 10 Jun 2011 02:10:39 AM IST

Last Updated : 10 Jun 2011 05:06:07 AM IST

சென்னை ஜூன் 9: திமுக - காங்கிரஸ் உறவு தொடர்பாக, வெள்ளிக்கிழமை நடக்கும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுவின் அவசரக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  அக் கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் மாலை 4.30 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலிமாறன் வளாகத்தில் இக் கூட்டம் நடக்கிறது.  பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின். முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன், தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.  சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு வெளியானதற்குப் பிறகு கட்சியின் தலைவர்கள் பங்கேற்கும் முறைப்படியான முதலாவது கூட்டம் இதுவாகும்.  தேர்தல் தோல்விக்குக் காரணம், "கூட்டணிக் கட்சிகள் கேட்டுப் பெற்ற இடங்களா, அவர்களுக்கு விட்டுக் கொடுத்த இடங்களா' என்று கருணாநிதி கூறியுள்ளார். கூட்டணி ஆட்சிதான் வரும் என்றால் அதை தமிழக மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்ற கருத்தை காங்கிரஸ் தலைவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் கருணாநிதி.  இருந்தாலும் காங்கிரஸ் தலைமை பிடிவாதமாக இருந்து 63 தொகுதிகளைப் பெற்றதால், திமுக 118 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் நிலை ஏற்பட்டது. எனவே கூட்டணி ஆட்சி என்ற சூழ்நிலையை தவிர்க்கவே மக்கள் விரும்புவர் என்ற கருணாநிதியின் கருத்தை உறுதி செய்வதைப் போலவே தேர்தல் முடிவு அமைந்துவிட்டது.  அதைத் தொடர்ந்து தனது பிறந்த நாளன்று அண்ணா நினைவிடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, கூடாநட்பு கேடாய் முடியும் என்பதை தொண்டர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறினார். இதற்கு பல அர்த்தங்கள் கூறப்பட்டாலும், அதில் ஒன்று காங்கிரஸ் உறவைக் குறிப்பது என்று காங்கிரஸ் தரப்பினரே கருதுகின்றனர்.  இதுதவிர, கருணாநிதியின் மகள் கனிமொழி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு 18 நாள்களாகிவிட்டன.  திருவாரூரில் கடந்த 5-ம் தேதி நடந்த நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி, மத்திய அரசு உத்தரவாலோ அல்லது அலட்சியத்தாலோ அல்லது வேறு காரணங்களாலோ கனிமொழி சிறை செல்ல நேரிட்டது என குறிப்பிட்டார். உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சி.பி.ஐ. நடத்தும் விசாரணையில் கனிமொழி கைதாகி இருப்பதால் இதில் மத்திய அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.  சி.பி.ஐ. நீதிமன்றத்திலும், தில்லி உயர் நீதிமன்றத்திலும் கனிமொழியின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன. கருணாநிதிக்கு இது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.  மாநிலத்தில் ஆட்சி இல்லாத சூழ்நிலையில், மத்திய ஆட்சியில் நீடிப்பதே பாதுகாப்பானதாக இருக்கும் என திமுக தலைவர்கள் கருதி வந்தனர்.  ஆனால் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்காததும், மாநிலத்தில் ஆட்சியை இழக்க காரணமாக இருந்தது என்ற கருத்தும் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராகவே இருக்கிறது.  2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் தொலைத்தொடர்பு அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த ஆ. ராசா சிறை சென்று சுமார் 4 மாதங்கள் ஆகிவிட்டன. கனிமொழியும் சிறையில் உள்ளார். மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள், வலுப்பெற்று வருவதால் அவரும் மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்கப்படலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. அடுத்தடுத்து திமுக அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் வருவது குறித்து கட்சித் தலைமை அதிருப்தி அடைந்திருப்பதாகத் தெரிகிறது.  இவ்வளவு நடந்த பிறகும் காங்கிரஸ் கட்சியுடன் உறவு இருந்து எதைக் காப்பாற்றப் போகிறோம் என்ற கருத்து கட்சித் தலைவர்களிடம் காணப்படுகிறது.  இதற்கிடையில், வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ள திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, ""தேர்தலில் திமுக இவ்வளவு பெரிய தோல்வியை சந்தித்ததற்கான காரணங்களில் ஒன்று மத்திய ஆளும் காங்கிரசுடன் இருந்து அதன் பல்வேறு செயல்களுக்கும் பழி ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதுதான்'' என கூறியுள்ளார்.  திமுக தலைமையின் ஒப்புதல் இல்லாமல் இப்படி ஒரு கருத்தை வீரமணி தெரிவித்திருக்க மாட்டார் என்றே அரசியல் வட்டாரத்தில் கருத்தாக உள்ளது.  இவைதவிர, இக் கூட்டத்தில் தலைவர்கள் பேசும்போது தேர்தல் தோல்விக்கான காரணங்களைப் பட்டியலிடுவார்கள். அதிலும் காங்கிரஸ் மீது குறைகள் தெரிவிக்கப்படலாம். எனவே காங்கிரஸ் கட்சியுடன் உறவைத் தொடருவதா, மத்திய அமைச்சரவையில் பங்கேற்பைத் தொடருவதா அல்லது வெளியில் இருந்து ஆதரவா என்று முக்கிய முடிவு ஏதாவது இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்திவைப்பு, புதிய தலைமைச் செயலக பணிகள் நிறுத்தம் போன்றவற்றைக் கண்டித்து ஏற்கெனவே மு.க. ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். இதுதொடர்பாக கட்சித் தலைவரிடம் கலந்து பேசி போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.  அதுபோன்ற போராட்ட முடிவுகளும் எடுக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

வியாழன், 9 ஜூன், 2011

தமிழ் ஈழக் கொடிக்குப் பிரிட்டனில் தடையில்லை

தமிழ் ஈழக் கொடிக்குப் பிரிட்டனில் தடை இல்லை என்ற ஆன்றோர்க்குப் பாராட்டுகள். தமிழ் ஈழக் கொடி பாரெங்கும் பட்டொளி வீசிப் பறக்கட்டும்! தமிழ் ஈழம் தனியாட்சியில் தழைக்கட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

தமிழ் ஈழக் கொடிக்கு பிரிட்டனில் தடையில்லை
First Published : 09 Jun 2011 12:55:53 PM IST

Last Updated : 09 Jun 2011 01:00:47 PM IST
கொழும்பு, ஜூன் 9- தமிழ் ஈழக் கொடிக்கு பிரிட்டனில் தடை இல்லை என்று அந்நாட்டின் பிரபல வழக்கறிஞர்கள் அடங்கிய குழு அறிக்கை வழங்கியுள்ளது.ஸ்காட்லாண்ட், வடக்கு அயர்லாந்து, வேல்ஸ் உட்பட பிரிட்டனின் அனைத்துப் பகுதிகளிலும் தமிழ் ஈழக் கொடியை பயன்படுத்தலாம் என்றும், அக்கொடியை வைத்திருப்பவர்களை கைது செய்து தண்டனை வழங்க முடியாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.பிரிட்டனின் தேசிய ஊடகமான பிபிசி தமிழ் ஈழக் கொடியை தமிழர்கள் ஏந்தி நிற்கும் காட்சிகளை ஒளிபரப்பியுள்ளது. கொடிக்கு தடை இருந்தால் அத்தகைய காட்சி ஒளிபரப்பாகி இருக்காது என்றும் வழக்கறிஞர்கள் தங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் சிங்களர் ஆதரவு நபர்கள், தமிழ் ஈழக் கொடி என்பது தமிழர்களின் கொடி அல்ல என்ற தவறான கருத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் இலங்கைத் தமிழ் இணையதளங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

கச்சத்தீவு வழக்கில் தமிழக வருவாய்த் துறையையும் சேர்க்க பேரவையில் தீர்மானம்


பாராட்டப்பட வேண்டிய தீர்மானம். ஆனால், இது போன்ற தீர்மானம் நிறைவேற்றப்படும் பொழுது தி.மு.க. வெளிநடப்பு செய்வது வருந்தத்தக்கது. வெளிநடப்பை உடன் முடித்துக் கொண்டு உடன் தீர்மான நிறைவேற்றத்திற்கு வந்திருக்க வேண்டும். காங்கிரசின் மீது அச்சமா எனத் தெரியவில்லை. எவ்வாறிருப்பினும் இனி, பொதுவான தமிழர் நலன் குறித்த தீர்மானங்கள் நிறைவேறும் பொழுது தி.மு.க.வும் பங்கேற்க வேண்டும். முதல்வருக்கும் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் பாராட்டுகள்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

கச்சத்தீவு வழக்கில் தமிழக வருவாய்த் துறையையும் சேர்க்க பேரவையில் தீர்மானம்

First Published : 09 Jun 2011 11:58:30 AM IST

Last Updated : 09 Jun 2011 12:10:16 PM IST

சென்னை, ஜூன்.9: கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலர் என்ற முறையில் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த வழக்குக்கு வலுசேர்க்கும் விதமாக தமிழக அரசின் வருவாய்த் துறையையும் இவ்வழக்கில் சேர்த்துக்கொள்ளும்படி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதற்கான தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்தார்.சட்டப்பேரவையில் தீர்மானத்தைக் கொண்டுவந்து அவர் ஆற்றிய உரை:தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கச்சத்தீவினை, 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தங்களின் மூலம் இலங்கைக்கு தாரை வார்த்ததை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில், அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் என்னால் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் பின்வரும் தீர்மானத்தினை இன்று இப்பேரவையில் முன்மொழிகிறேன்.தீர்மானம்:இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு, இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது.  இந்த ஒப்பந்தங்கள், சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என 2008-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா அவர்களால் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, கச்சத்தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழக அரசின் வருவாய்த் துறை தன்னை இவ்வழக்கில் சேர்த்துக் கொள்ளும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டப் பேரவை தீர்மானிக்கிறது.  டெல்ஃப் தீவிற்கு தெற்கே 9 மைல் தொலைவிலும், ராமேஸ்வரத்திற்கு வடகிழக்கே 10 மைல் தொலைவிலும் உள்ள பாக் ஜலசந்தி என்ற பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது. ஓய்வெடுப்பதற்கும், வலைகளை உலர வைப்பதற்கும், பிடிபட்ட மீன்களை இன வாரியாக வகைப்படுத்துவதற்கும், மக்கள் வசிக்காத வறண்ட கச்சத்தீவை, பரம்பரை பரம்பரையாக, தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். மீனவர்களின் புண்ணிய புரவலராக கருதப்படும் புனித அந்தோணியாருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட கத்தோலிக்க தேவாலயம் இந்தத் தீவில் தான் உள்ளது.  இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ராமேஸ்வரத்தை சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் இந்த தேவாலயத்தை கட்டினார்.  ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாத இறுதியில்,  வாரக் கணக்கில் நடக்கும் சமய விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தத் தீவிற்கு தமிழக மீனவர்கள் செல்வது வழக்கம். இது போன்ற விழாக் காலத்தில், தொழுகை நடத்துவதற்காக ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த கத்தோலிக்க மதகுரு கச்சத்தீவிற்கு செல்வது வழக்கம் என்று வரலாற்று பதிவேடுகள் தெரிவிக்கின்றன. 1972-ல் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி, அதற்கு முன் ராஜா ராமராவ் வெளியிட்ட ராமநாதபுர மாவட்ட மானுவல்,  1915, 1929 மற்றும் 1933-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ராமநாதபுர மாவட்டத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு, 1899-ல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை ராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது. அதில், ராமேசுவரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும்; ஜமீன் ஒழிப்புக்கு முன்னர், ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும்; இந்தத் தீவின் சர்வே எண் 1250; பரப்பளவு 285.20 ஏக்கர் என்றும்; இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்று கச்சத்தீவை அது குறிக்கிறது.இவையெல்லாம், கச்சத்தீவு மீது இந்தியாவிற்கு உள்ள பறிக்க முடியாத உரிமைகளுக்கு சான்றாக விளங்குகின்றன.இந்த விவரச் சுவடி வெளியிடப்பட்ட போது கருணாநிதி,  முதல்வராக இருந்தார். அந்த விவரச் சுவடியில், கச்சத்தீவு பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதில் இருந்த வரைபடத்தில் கச்சத்தீவு இந்தியாவின் பகுதி என காண்பிக்கப்படவில்லை. ஆனாலும், இந்த விவரச் சுவடிக்கு 14.6.1972ல் முகவுரை எழுதிய அப்போதைய முதல்வர் கருணாநிதி, அதைப் பற்றி விவரச் சுவடி தயாரித்த அதிகாரிகளிடம் எடுத்துக் கூறாமல் முகவுரை எழுதிக் கொடுத்து விட்டார். இது தான் கச்சத் தீவு மீது கருணாநிதிக்கு இருந்த பற்று.ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய கடலோர மாவட்டங்களில் வாழும் தமிழக மீனவர்கள், தொன்றுதொட்டு கச்சத்தீவின் அருகில் மீன்பிடித்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். 1974-ஆம் ஆண்டு, முதல்வராக கருணாநிதி பதவி வகித்த போது, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின்படி, இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்தந்த உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது.நான் முதல்வராக இருந்த போது, கச்சத் தீவை திரும்பப் பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். 15.8.1991, சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை புனித ஜார்ஜ் கோட்டையில் ஏற்றி வைத்து கச்சத்தீவை மீட்போம் என்று அறிவித்ததோடு மட்டுமல்லாமல், இது குறித்து பல முறை மத்திய அரசையும், பிரதமரையும் நேரிலும், கடிதம் மூலமாகவும் வற்புறுத்தி இருக்கிறேன். 16.9.2004 அன்று, நிரந்தரமான குத்தகை என்ற முறையில், தமிழக மீனவர்கள் கச்சத் தீவிற்குச் சென்று மீன்பிடிக்கும் உரிமையை, மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும் என்று பிரதமரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தி இருக்கிறேன். இருப்பினும், தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் எந்தவித நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை.2006-ஆம்  ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலையடுத்து தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றுக் கொண்டார். மத்தியிலும், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. எந்த மத்திய அரசும், மாநில தி.மு.க. அரசும், 1974-ஆம் ஆண்டு கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்ததோ, அதே அரசுகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பை வகித்தன. ஆனால், கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.  மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி, மத்தியில் தி.மு.க. தயவில் காங்கிரஸ் ஆட்சி என்ற நிலை இருந்த போதும் கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கையையோ அல்லது தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதலை தடுப்பதற்கான நடவடிக்கையையோ, அப்போதைய தி.மு.க. அரசின் முதல்வர் கருணாநிதி எடுக்கவில்லை.  கச்சத்தீவு, இலங்கை அரசுக்கு தாரை வார்க்கப்பட்டதன் விளைவாக, இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இதுவரை நூற்றுக்கணக்கான மீனவர்கள் பலியாகி இருக்கிறார்கள்.1960-ஆம்  ஆண்டுக்கு முன்பு, 1950-களில், மேற்கு வங்காளத்தில் உள்ள பெருபாரி என்ற பகுதியை அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு கொடுக்க மத்திய அரசு முயன்ற போது, அதை மேற்கு வங்க மாநில அரசு எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.  அப்போதைய மேற்கு வங்க மாநில முதல்வர் பி.சி.ராய், இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.  இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.  மேற்கு வங்க அரசின் இந்த சமயோசித நடவடிக்கை காரணமாக, அதாவது, அன்றைய மேற்கு வங்க முதல்வர் பி.சி. ராய் அவர்களின் சமயோசித நடவடிக்கை காரணமாக, பெருபாரி பகுதி இன்றும் இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.  உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினை மேற்கோள் காட்டி 1974 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு செய்திருந்தால், கச்சத்தீவு இன்றும் கூட, இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும். 1974-ல் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவது குறித்து அன்றைய முதல்வர்  கருணாநிதிக்கு தெரியும் என்றும், அதை அவர் ஏன் எதிர்க்கவில்லை என்றும், நான் பல முறை கேள்வி எழுப்பி உள்ளேன். ஆனால், கருணாநிதியோ 1974-ல் ஒப்பந்தம் போடுவதற்கு முன்னால் தனக்கு இது பற்றி தெரியாது என்று தான் கூறிக்கொண்டு வருகிறார். 23.7.1974-ல் மாநிலங்களவையில் திரு கே.ஏ.கிருஷ்ணசாமி அவர்கள் பேசும் போது, “… I would like to get a clarification in this regard from the Hon. Minister.  Just now I heard the views expressed by my Hon’ble friend,  Mr. S.S. Mariswamy, D.M.K.,that on the agreement reached between the government of India and the Sri Lanka government the government of Tamil Nadu was not properly informed.      … There are two news items which appeared in the Hindu.  One was on June 27.    “When pressmen asked the Tamil Nadu Chief Minister      Mr. Karunanidhi, for his reaction to the agreement on Kachatheevu, he said he would prefer to wait until after the details had been announced. Mr. Karunanidhi said that Foreign Secretary,     Mr. Kewal Singh, had met him last week during his visit to Madras and apprised him on the situation. Mr. Kewal Singh had told him that a favourable condition existed for agreement on Kachatheevu.”      On the 29th June, the Chief Minister stated the following to the Press:-    “It was regrettable that before signing the agreement, the Centre had not invited him or any representative of the State Government for consultation.  The Prime Minister had not even chosen to ascertain the views of the leaders of parliament on this vital question”,என்று தெரிவித்து, இதில் எது சரி என்று கேட்கிறார்.      இதற்கு பூபேஷ் குப்தா அவர்கள் we know it for a fact that the State was consulted என்று கூறி உள்ளார்.இது குறித்து 21.8.1974 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கச்சத்தீவு குறித்து கொண்டு வரப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது, “மத்திய அரசு உங்களோடு ஆலோசனை நடத்தியதா?” என்று ஆலடி அருணா, முன்னாள் முதல்வர் திரு. கருணாநிதி அவர்களை கேட்ட போது, கருணாநிதி, “வெளியுறவுத் துறைச் செயலாளர் கேவல் சிங் அவர்களை நான் டெல்லியில் சந்தித்த போது இதைப் பற்றி அவர் என்னிடம் பேசினார். இதை ஆலோசனை என்று வைத்துக் கொண்டாலும் கூட நான் அவரிடம் சொன்னது, தமிழ் மக்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், தமிழக அரசு இதை ஏற்றுக்கொள்ளாது.  கச்சத்தீவு இந்தியாவுக்கே தமிழகத்திற்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்று எடுத்துச் சொல்லி மறு நாள் பிரதமரை சந்தித்த போது, இதைப் பற்றி குறிப்பிட்டு சொன்னேன்” என்று கூறியுள்ளார். அப்போது, ஆலடி அருணா நாடாளுமன்றத்தில் ஸ்வரண் சிங் அவர்கள் பேசியதை எடுத்து சொல்கிறார்.       “… The External Affairs Minister, Shri Swaran Singh said in the Rajya Sabha today that very detailed consultations had been held with Chief Minister of Tamil Nadu Mr. Karunanidhi by the Government of India on the issue of Kachatheevu. The consultations were held at least twice”      அதற்கு விளக்கம் அளித்து, மு. கருணாநிதி, ஸ்வரண் சிங் மேலும் என்ன சொன்னார் என்று குறிப்பிடும் போது, “May I say, because others might pick up –  I would like to say categorically, that we had very detailed consultations with the Chief Minister Shri Karunanidhi of Tamil Nadu, not once, but at least two times.” உடனே ரபிராய் என்ற உறுப்பினர் எழுந்து, “Had he agreed?” என்று சொல்லி, தந்திரமாக தப்பித்துக் கொள்கிறார்.தந்திரமாக தப்பித்துக் கொண்டது ஸ்வரண் சிங்கோ, மத்திய அரசோ அல்ல. கச்சத்தீவை தாரைவார்க்க துணை போன கருணாநிதி தான் தந்திரமாக தப்பித்துக் கொண்டார்.முதலில் “கன்சல்டேஷன்” இல்லை, அதாவது ஆலோசனை கேட்கவில்லை என்று சொன்னவர், பின்னர் “கன்சென்ட்” கொடுக்கவில்லை, அதாவது ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறி தப்பித்துக் கொண்டுவிட்டார். கச்சத்தீவை இலங்கையிடம் இந்தியா ஒப்படைக்கும் முன்பு, மத்திய அரசு தமிழக அரசிடம் பல முறை விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது, என்பது தெரிகிறது. உண்மையிலேயே, கருணாநிதிக்கு தமிழக மீனவர்கள் மீது, அக்கறை இருந்திருந்தால் இந்திய –- இலங்கை உடன்பாடு கையெழுத்தாவதற்கு முன்பே, சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டார் கருணாநிதி.  சட்டமன்ற தீர்மானத்தில் கூட மத்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்தம், "வருத்தம் அளிக்கிறது" என்று தான்  கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறாரே தவிர, "எதிர்க்கிறோம்" என்ற சொல் எங்கேயும் இடம் பெறவில்லை. நான் ஏற்கெனவே சுட்டிக் காட்டியபடி, நான் எடுத்த பல்வேறு முயற்சிகளின் காரணமாக, கச்சத்தீவில் மீன் பிடிக்கும் உரிமை நமது மீனவர்களுக்கு கிடைக்காத நிலையில், 2008 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த 1974 மற்றும் 1976 ஆண்டைய ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லத் தக்கவை அல்ல என்று உத்தரவிட வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்திருந்தேன். இந்த வழக்கில், மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசையும் ஒரு பிரதிவாதியாக சேர்த்திருந்தேன். இந்த வழக்கு 6.5.2009 அன்று உச்ச நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்காக பட்டியல் இடப்பட்ட போது, மீன்வளத் துறை ஆணையரால் தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்ட அறிக்கையில் பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதில் ஒரு கருத்தாக, “… uniform stand has to be taken both by the Central and State Governments” என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, மத்திய அரசும், மாநில அரசும் ஒரே நிலையை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கிற்கு பத்திவாரி குறிப்புகள் வைத்து, அதற்கு ஒப்புதல் கேட்டு, 10.6.2009 அன்று அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு கோப்பு அனுப்பப்பட்டது. இந்தக் கோப்பினை சட்டத் துறை மூலமாக அனுப்பும்படி முதல்வரின் செயலாளர் 13.7.2009 அன்று திருப்பி விடுகிறார். சட்டத் துறை தனது குறிப்பில் தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எந்தவித வேண்டுகோளும் வைக்கப்படவில்லை என்றும், தமிழக அரசை ஒரு proforma respondent என்ற அளவில் தான் சேர்க்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்து, மத்திய அரசின் எதிர் உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட்ட பின் அதையே பின்பற்றலாமா? அல்லது நம்முடைய நிலைப்பாடு பற்றி உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கலாமா? என்பது குறித்து உரிய நேரத்தில், முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. இந்தக் கருத்தை உள்ளடக்கி இந்த நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத்தில் உள்ள தமிழக அரசின் Advocate on Record--க்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுற்றோட்டக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்தக் குறிப்பிற்கு 14.8.2009-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒப்புதல் அளித்துள்ளார்.இந்த வழக்கிற்கான பத்திவாரி அறிக்கையில், 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் ஷரத்து எண். 8-ன்படி, நாடாளுமன்றத்தின் பின்னேற்பு ஆணை பெறப்படாதது; சட்டத்திற்கு சட்டத் திருத்தம் செய்யப்படாதது குறித்து வாதி எழுப்பிய வினாக்களுக்கு மத்திய அரசு தான் தெளிவுரை வழங்கிட இயலும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஒப்பந்தம் செல்லத்தக்கது என்பதே முந்தைய தி.மு.க. அரசின் நிலைப்பாடாக இருந்தது. கச்சத்தீவை மீட்க வேண்டும்; தமிழக மீனவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்று, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு உண்மையிலேயே, அக்கறை இருந்திருக்குமானால், என்னுடைய கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் உடனே எதிர் உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு அவர் செய்யவில்லை. தமிழக மீனவர்களின் நலன் காக்க நடவடிக்கை எடுக்க மனம் இல்லாததால் தான், மத்திய அரசு எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்த பின் மாநில அரசு தாக்கல் செய்யலாம் என்று முடிவெடுத்து விட்டார் கருணாநிதி.1.4.2011 அன்று, 2 மாதங்களுக்கு முன், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்தது. அதில், 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டியது இல்லை என்றும், என்னுடைய ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.கச்சத்தீவு குறித்த வழக்கில், தமிழக மீனவர்களுக்கு சாதகமான தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் அளிக்க வகை செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இத்தீர்மானத்துக்கு ஆதரவளித்து ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர்களை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.
கருத்துகள்

நல்ல திர்மானம். அடுத்து அடுத்து வரும் இப்படியான செய்திகள் மனதை குளிர வைக்கிறது. ஒரு மாநில சட்டசபையில் கொண்டு வரும் தீர்மானங்கள் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும். கருணாநிதி ஆட்சி செய்யாததை,செய்ய நினைக்காததை செய்து காட்டிய முதல்வருக்கு நன்றியை தெரிவிக்கிறோம்.
By sakthy
6/9/2011 1:37:00 PM
எதற்காக இந்த வேண்டாத வேலை. எங்களை தொடர்ந்து ஏமாற்ற வேண்டாம். எப்பொழுதோ தாரை வார்த்து கொடுத்தாச்சி. இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது. சும்மா ஸ்டன்ட் அடிக்க வேண்டாம். மீனவர்களே ஏமாறாதீர்கள்.
By manoharan
6/9/2011 12:45:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

Dinamani article by Nedumaran: கெட்டபின் ஞானி!

கெட்டபின் ஞானி!

First Published : 09 Jun 2011 04:23:22 AM IST


கூடா நட்பு கேடாய் முடியும்' என்பது தோல்வியில் பிறந்த ஞானோதயமாகும். கூடா நட்பு என திமுக தலைவர் கருணாநிதி கருதியதும் சுட்டிக்காட்டியதும் யாரை என்பது குறித்து அவரது கட்சிக்குள்ளும் வெளியிலும் விவாதங்கள் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளன.  காங்கிரஸ் கட்சியோடு திமுக கொண்டிருக்கும் உறவைக் கூடா நட்பாக அவர் கருதி இருப்பாரேயானால் அந்தத் தவறை உணருவதற்கு நாற்பது ஆண்டு காலத்துக்கு மேலாக அவருக்கு ஆகியிருக்கிறது.  காங்கிரஸ் எதிர்ப்பில் வளர்ந்த கட்சி திமுக ஆகும். அண்ணா, காங்கிரஸ் எதிர்ப்புக் கட்சிகளை ஒன்றிணைத்து 1967-ம் ஆண்டில் காங்கிரûஸ வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தார்.  ஆனால், அண்ணா மறைந்த உடனேயே காங்கிரஸ் எதிர்ப்புக் கொள்கையையும் அவருடனேயே புதைத்தார் கருணாநிதி.  1969-ம் ஆண்டில் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றபோது காங்கிரஸின் அதிகாரப்பூர்வமான வேட்பாளரான சஞ்சீவ ரெட்டியை எதிர்த்துப் பிரதமர் இந்திராவால் போட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்ட வி.வி.கிரியை ஆதரித்து வெற்றிபெற வைத்ததில் கருணாநிதிக்கு முக்கியப் பங்கு உண்டு.  இத்தேர்தலில் சஞ்சீவ ரெட்டிக்கு ஆதரவு தருமாறு பெரியார் விடுத்த வேண்டுகோளை கருணாநிதி புறக்கணித்தபோது இந்திராவின் நட்பு கூடா நட்பாகத் தெரியவில்லை.  அந்தத் தேர்தலில் திமுகவின் நிலைப்பாடு மாறி இருக்குமேயானால் இந்தியாவின் அரசியலே மாறி இருக்கும். பின்னாளில் நேர்ந்த நெருக்கடிநிலைப் பிரகடனம்,"மிசா' கொடுமைகள் போன்றவை நடந்திராது.  ஆனாலும், கருணாநிதி தனது தவறைப் பிடிவாதமாகத் தொடர்ந்தார். 1971-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்திராவின் காங்கிரúஸôடு கூட்டுச்சேர்ந்து வெற்றியும் பெற்றார். ஆனால், அதன் பின் விளைவுகள் மிக மோசமாக இருந்தன.  1975-ம் ஆண்டு நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டு சர்வாதிகாரத்தின் சாயல் படர்ந்தது. முரசொலி மாறன், ஸ்டாலின் உள்பட ஏராளமான திமுகவினர் "மிசா' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைக் கொடுமைகளுக்கு ஆளாயினர்.  முன்னாள் சென்னை மேயர் சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருட்டிணன் போன்றவர்கள் உயிரிழந்தனர். நாடெங்கும் பல கொடுமைகள் அரங்கேறின. இதெல்லாம் தனது கூடாநட்பினால் விளைந்த கொடுமைகள் என்பதை உணர்ந்து கருணாநிதி திருந்தினாரா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.  1980-ம் ஆண்டில், ""நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக'' என்ற பதாகையைத் துôக்கிப் பிடித்து மீண்டும் காங்கிரúஸôடு கூட்டுச் சேர்ந்தவர் கருணாநிதி. சிட்டிபாபு போன்றவர்களின் மரணத்துக்குக் காரணமான காங்கிரúஸôடு கூடாநட்புக் கொள்ளலாமா என்பது குறித்து அவர் கொஞ்சமும் கவலைப்படவில்லை.  கடந்த முப்பதாண்டு காலத்துக்கு மேலாக காவிரிப் பிரச்னையால் தமிழக விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். குறிப்பாக, கர்நாடக முதலமைச்சராக இருந்த தேவகௌடா தமிழர்களுக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு நின்றவர்.  காவிரி நடுவர் குழுவின் தலைவராக இருந்த சித்ததோஷ் முகர்ஜி மீது தவறான வழக்குத் தொடர்ந்து அவர் தானாக பதவி விலகும்படி செய்தவர் தேவகௌடா.  நேர்மையானவரான முகர்ஜி பதவி விலக நேர்ந்ததால் காவிரிப் பிரச்னையில் தமிழகத்துக்கு நீதி கிடைக்கவில்லை. ஆனால், இவற்றைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் அதே தேவகௌடாவை இந்தியாவின் பிரதமராக்குவதில் முன் நின்றவர் கருணாநிதி.  தேவகௌடாவுடன் தனது கூடாநட்பு தமிழக விவசாயிகளுக்குக் கேடாய் முடிந்ததைக் குறித்து கொஞ்சமும் கவலைப்படவில்லை கருணாநிதி.  2003-ம் ஆண்டு காங்கிரúஸôடு இவர் கொண்ட கூடாநட்பு ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு அடிப்படையாக அமைந்தது.  இலங்கை ராணுவத்தினரில் 63 சதவிகித அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் இந்தியாவில் ராணுவப் பயிற்சி கொடுக்கப்பட்டது, ஆயுதங்களும் அள்ளித் தரப்பட்டன. ஆனால், இவற்றைத் தடுத்து நிறுத்த கருணாநிதி சுண்டுவிரலைக்கூட அசைக்கவில்லை.  2009-ம் ஆண்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது அதைத் தடுத்து நிறுத்த இவர் முன்வரவில்லை.  திமுக-வின் ஆதரவோடு மட்டுமே மன்மோகன் அரசு பதவியில் நீடித்த காலம் அது, இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்படாவிடில் ஆதரவைத் திரும்பப் பெறுவது என இவர் உறுதியான முடிவு எடுத்திருந்தால் ஒரு லட்சம் தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்றி இருக்க முடியும்.  ஆனால், அதைவிட கூடா நட்பே மேலானது என இவர் நினைத்தது தமிழ் இனத்துக்கே கேடாய் முடிந்தது.  2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கிற்று. தங்கள் ஆட்சியைத் தொடர திமுக-வின் தயவு காங்கிரஸ் கட்சிக்குத் தேவைப்படும் நிலை இல்லை.  எனவேதான் மகனுக்கும், மகளுக்கும் பேரனுக்கும் பதவி கேட்டு தில்லியில் மண்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. கூடாநட்பினால் விளைந்த கேடு இது என்பதை அவர் அப்போதும் உணரவில்லை.  தமிழர்களின் ரத்தத்தால் சிவந்து கறை படிந்த ராசபட்சவின் கரங்களைக் குலுக்குவதற்குத் தனது மகள் உள்படத் தூதுக்குழுவை அனுப்புவதற்கு அவர் கொஞ்சமும் வெட்கப்பட்டதில்லை. இதன் விளைவாக, உலகத் தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாக நேர்ந்ததற்கு ராசபட்சவுடன் தான் கொண்ட கூடா நட்பு தானே காரணம் என அவர் இன்னமும் உணரவில்லை.  காங்கிரúஸôடு தனது கூடா நட்பினால் ஈழத்தமிழர்கள் அழிக்கப்பட்டபோது கொஞ்சமும் கவலைப்படாதவர், அதே காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் தனது மகள் ஊழல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்டபோது கூடா நட்பின் விளைவு எனப் புலம்புவதில் பயன் என்ன?  நாற்பதாண்டுக் காலத்துக்கு மேலாக காங்கிரஸ் கட்சியோடு ஒட்டி உறவாடிப் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதில் கருத்தாக இருந்தாரே தவிர, தமிழர்களுக்கு அதனால் விளைந்த கேடுகளைக் குறித்துக் கொஞ்மும் கவலைப்படவில்லை.  தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகளான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற நதிநீர்ப் பிரச்னைகளையோ, மேற்கு நதிகளின் நீரை கிழக்கே திருப்புதல், சேதுக்கால்வாய் போன்றவற்றையோ, ஈழத்தமிர் பிரச்னையையோ தீர்ப்பதற்கு கடந்த நாற்பது ஆண்டு காலத்தில் எதுவும் செய்ய அவரால் இயலவில்லை.  இந்த நாற்பதாண்டு காலத்தில் காங்கிரஸ் கட்சியோடு இவருக்கு இருந்த நெருக்கமான நட்பும் மத்திய ஆட்சியில் இருந்த செல்வாக்கும் மேற்கண்ட பிரச்னைகளைத் தீர்க்க கொஞ்சமும் உதவவில்லை. மாறாக, ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாகத் தனது குடும்பத்தை உயர்த்திக் கொள்ள முடிந்தது. கூடா நட்பின் விளைந்த பயன் இது ஒன்றுதான்.  கவியரசர் கண்ணதாசன் எழுதியதைப்போல கெட்டபின் ஞானி ஆவது அவருக்கும் பயன் தராது குடும்பத்துக்கும் பயன் தராது, நாட்டுக்கும் பயன் தராது.    

Changing thamizh schools as kannada shcols: கன்னடப் பள்ளிகளாக மாற்றப்படும் தமிழ்ப் பள்ளிகள்!

தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துத் தமிழ்ப்பள்ளிகள் காப்பாற்றப்படவும் பெருகவும் ஆவன செய்ய வேண்டும். மக்கள் கவனத்திற்கு இச் செய்தியைக் கொணர்ந்த தினமணிக்குப் பாராட்டுகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

கன்னடப் பள்ளிகளாக மாற்றப்படும் தமிழ்ப் பள்ளிகள்!

First Published : 09 Jun 2011 03:37:07 AM IST


பெங்களூர், ஜூன் 8: கர்நாடகத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகள் படிப்படியாக கன்னடப் பள்ளிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.  தமிழ் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.  கர்நாடக மாநிலம் பெங்களூர், மைசூர், கோலார், ஷிமோகா, தாவணகெரே, ஹூப்ளி, சாமராஜ் நகர் உள்பட மாநிலம் முழுவதும் சுமார் 60 லட்சம் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.  இந்தியா விடுதலையானபிறகு, கர்நாடகத்தின் பல இடங்களில் தமிழர்களுக்காக தமிழ் பயிற்றுமொழி பள்ளிகள் தொடங்கப்பட்டன.  1980-ல் நடைபெற்ற கோகக் போராட்டத்தின் விளைவாக கட்டாய கன்னடம் நடைமுறைக்கு வந்தது.  இதன்பிறகு, தமிழ்ப்பள்ளிகள் கன்னடப் பள்ளிகளாக நிறம்மாறத் தொடங்கின.  குறிப்பாக 1990-ல் நடந்த காவிரி கலவரத்துக்கு பிறகு, கன்னடம் படிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தமிழர்கள் ஆட்பட்டனர். கர்நாடகத்தில் மும்மொழித் திட்டம் அமலில் இருப்பதால், தமிழ், கன்னடம், ஆங்கிலம் படிக்க தமிழ் மக்களை தமிழார்வலர்கள் ஊக்குவிக்கத் தொடங்கினர்.  ஆனால், தமிழ்ப் பள்ளிகளை படிப்படியாக கன்னடப் பள்ளிகளாக மாற்றும் திட்டத்தை கர்நாடக அரசு இலைமறைவு காயாக செயல்படுத்தி வந்துள்ளது. இதற்கு அரசு தெரிவிக்கும் காரணம், தமிழ் படிக்கும் மாணவர்கள் இல்லை என்பதுதான்.  இதே காரணத்தை சுட்டிக்காட்டி ஓய்வுபெறும் தமிழாசிரியர்கள் இடத்துக்கு புதிய தமிழாசிரியர்கள் நியமனத்தையும் நிறுத்திவைத்து எழுதப்படாத சட்டத்தை கர்நாடக அரசு செயல்படுத்தி வருகிறது.  இப்பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து கர்நாடக தமிழாசிரியர் சங்கத் தலைவர் க.சுப்பிரமணியம், தினமணி நிருபரிடம் கூறியது:  பெங்களூரைத் தவிர கர்நாடகம் முழுவதும் அரசு, அரசு மானியம்பெறும், பெங்களூர் மாநகராட்சி, தனியார் பள்ளிகளில் 10 ஆண்டுகளுக்கு முன் சுமார் 3 ஆயிரம் தமிழ் ஆசிரியர்கள் பணியாற்றினர். மாணவர்களும் அதிக அளவில் படித்து வந்தனர்.  மாணவர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவிட்டதை சுட்டிக்காட்டி, தமிழாசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவில்லை.  இப்போது கர்நாடகம் முழுவதும் ஆயிரம் தமிழாசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.  அடுத்த 10 ஆண்டுகளில் இது 200 ஆக குறையும் ஆபத்து உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண தமிழர்கள், தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலம், கன்னடத்துடன் தமிழ் பாடத்தையும் அளிக்கத் தவறக்கூடாது என்றார்.  செயின்ட் அல்போன்சஸ் பள்ளி தமிழாசிரியர் கார்த்தியாயினி கூறியது:  10 ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் 250 அரசு தமிழ் பள்ளிகள் செயல்பட்டன. இப்போது, 101 தமிழ் பள்ளிகள் மட்டுமே உள்ளன. இவற்றிலும் தமிழ் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.  இதை காரணம்காட்டி தமிழ் பள்ளிகள், கன்னடப் பள்ளிகளாக உருமாறி வருகின்றன.  சில பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமிக்கப்படாததால், தமிழ் மாணவர்கள் தமிழ் கல்வியை கைவிடும் நிலை உள்ளது.  அரசு மானியம் பெறும் பள்ளிகளோ தமிழ் மாணவர்களை கட்டாயப்படுத்தி கன்னட வகுப்புகளுக்கு மாற்றிவருகின்றன.  தமிழர்கள் தாய்மொழி கற்கும் உரிமை மறைமுகமாக பறிக்கப்படுவதைக் கண்டுகொள்ளாமல் இருந்தால், நாம் நமது அடையாளத்தை இழக்க நேரிடும்.  தமிழ்க்கல்வியின் நலிவைத் தடுக்க கர்நாடக தமிழர்கள் ஒன்றுசேர்ந்து குரல் எனழுப்ப வேண்டும் என்றார். 

kanimozhi bail rejected - D.M.K. take an important decision :கனிமொழி பிணை மனு தள்ளுபடி: உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் திமுக நாளை முக்கிய முடிவு?

குடும்ப நலன்களுக்காகக் கழகத்தைக் குழி தோண்டி புதைக்காமல் விட மாட்டார்களா? தன் வழக்கைத்  தயாநிதி மாறனே பார்த்துக் கொள்வது போல் இதனையும் கனிமொழியின் பொறுப்பில் விட்டு விடவேண்டும். கட்சியை வழக்கில் திணிக்கக்கூடாது. கனிமொழிக்கு இருக்கும் நம்பிக்கை  தந்தைக்கு இல்லையா? இப்பொருண்மையில் இருந்துகட்சியை ஒதுக்கி வைக்க ஒதுக்கி வைக்கக் கட்சி வலுப்படும். இல்லையேல் குடும்பம் இரண்டுபடும்; கட்சி சிதைவுறும். உலகத்தமிழ் மக்கள் நலனுக்காகத தம் குடும்ப மக்கள் நலனில் இருந்து விடுபடுவாராக! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


கனிமொழி ஜாமீன் மனு தள்ளுபடி: உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் திமுக நாளை முக்கிய முடிவு?

First Published : 09 Jun 2011 05:03:53 AM IST


சென்னை ஜூன் 8: தில்லி உயர் நீதிமன்றத்திலும் கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ள நிலையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் கருணாநிதி தலைமையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) மாலை கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் திமுக முக்கிய முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.  2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் கருணாநிதி மகள் கனிமொழி கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் உள்ளார். சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவருடைய ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ததை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.  தில்லி உயர் நீதிமன்றமும் அவரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது.  இந்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுவின் அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் நடைபெறுகிறது.  பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன்,பரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன், தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.  கூடா நட்பு: கருணாநிதி தனது பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசும்போது, "கூடா நட்பு, கேடாய் முடியும் என்பதைப் புரிந்துகொண்டு பயணத்தை மேற்கொள்ள வேண்டும்' என்று தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.  கூடா நட்பு என்று காங்கிரûஸத்தான் குறிப்பிட்டுச் சொன்னார் என்று சொல்லப்பட்டது.  இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் "இதைத்தான் சகவாசதோஷம் என்று அப்போதிலிருந்தே கூறி வருகிறேன்' என்று பதிலடி கொடுத்திருந்தார்.  காங்கிரஸ் "கூடா நட்பு' என்று கருணாநிதி முன்பே கோடிட்டுக் காட்டிவிட்டார். அதைச் செயல்படுத்துகிற வகையில்தான் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் முடிவு இருக்கும் என்று கூறப்படுகிறது.  சமச்சீர் கல்வி: கூட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் மாற்றப்பட்டது, சமச்சீர் கல்வி நிறுத்தி வைக்கப்பட்டதைக் கண்டித்து திமுக சார்பில் போராட்டம் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

Assembly resolution on Ilangai issue: இலங்கை மீது தடை கோரி பேரவை ஒரு மனதாக தீர்மானம்

சிங்கள அரசின் முதன்மைக் கூட்டாளியான காங்கிரசின் உறுப்பினர்களே வாக்களித்து இருக்கும் பொழுது மறைமுகத் துணைக்கூட்டாளியாக அமைதி காத்த தி.மு.க.உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் மறைமுக எதிர்ப்பைக்  காட்டி உள்ளது வருந்தத்தக்கது. வெளிநடப்பு செய்த உடன் மீண்டும் அவைக்கு வந்து வாக்கெடுப்பில் கலந்திருக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இலங்கை மீது தடை கோரி பேரவை ஒரு மனதாக தீர்மானம்

First Published : 09 Jun 2011 05:09:02 AM IST


சென்னை, ஜூன் 8: இலங்கைக்கு எதிராக மற்ற நாடுகளுடன் சேர்ந்து இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை ஒத்திவைத்துவிட்டு இந்தத் தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார்.  தீர்மான விவரம்:  ""இலங்கையில் சம உரிமை கோரி போராடிய தமிழர்களின் நியாயத்தை உணர்ந்து, அரசமைப்பு சட்ட திருத்தம் செய்து தமிழர்கள் கெüரவத்துடனும், சம உரிமையுடனும், சுய மரியாதையுடனும் வாழ்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்காமல் அவர்களை முற்றிலும் ஒழிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது.  குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களைக் கொல்வது, மனிதர்கள் வாழும் இடங்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது குண்டுகள் வீசுவது, மனிதாபிமான உதவிகளை மறுப்பது ஆகியவற்றை இலங்கை அரசு செய்தது.  உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் விடுதலைப் புலிகள் என சந்தேகப்படக் கூடியவர்கள் உள்பட இந்தச் சண்டையில் பலியானவர்கள் மற்றும் எஞ்சியுள்ளவர்கள் மீது மனித உரிமை மீறல்களை அந்த அரசு நிகழ்த்தியது.  இலங்கை அரசை விமர்சிப்பவர்கள், ஊடகங்கள் உள்பட போர்ப் பகுதிக்கு வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது.  இவை போன்ற கடுமையான, நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளை உள்நாட்டுப் போரின்போது இலங்கை அரசு நிகழ்த்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட குழு கண்டறிந்து உள்ளது.  எனவே இத்தகைய போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.  இப்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் வலியுறுத்தியது.  விஜயகாந்த் (தேமுதிக), துரைமுருகன் (திமுக), என்.ஆர். ரங்கராஜன் (காங்கிரஸ்), ஏ. சவுந்திரராஜன் (மார்க்சிஸ்ட்), நஞ்சப்பன் (இந்திய கம்யூனிஸ்ட்), கலையரசன் (பா.ம.க.), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), செ.கு. தமிழரசன் (இந்திய குடியரசுக் கட்சி) ஆகியோர் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர்.  இடையில் விஜயகாந்த் பேசும்போது, 1972-ல் இருந்து காவிரிப் பிரச்னை உள்பட பல வகைகளில் திமுக ஆட்சியால் தமிழக மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறினார். அதை ஆட்சேபித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.  அதன்பிறகு முதல்வரின் பதிலுரையைத் தொடர்ந்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுகவினர் வெளிநடப்பு செய்து வாக்கெடுப்பின்போது பேரவையில் இல்லாதது துரதிருஷ்டவசமானது என்று பேரவைத் தலைவர் டி. ஜெயகுமார் கூறினார்.  இன ஒழிப்பு குற்றத்துக்காக இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குணசேகரன் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.  அதைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதன், 8 ஜூன், 2011

ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பதவிக்கு பான் கீ மூன் மீண்டும் போட்டி

ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பதவிக்கு பான் கீ மூன் மீண்டும் போட்டி
வாஷிங்டன், ஜூன்.7-
 
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக பான் கீ மூன் இருக்கிறார். இவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். கடந்த 4 1/2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதியுடன் முடிகிறது. இதை தொடர்ந்து புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக பான் கீ மூன் அறிவித்து இருக்கிறார்.


கருத்து :

Wednesday, June 08,2011 01:50 PM, Ilakkuvanar Thiruvalluvan said:
ஈழத்தமிழர் படுகொலைகளுக்குத் துணைபுரிந்த பேசத்தெரிந்த ஊமையான, பார்க்கத் தெரிந்த குருடரான கேட்கத் தெரிந்த செவிடரான இவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது. மனித நேயம் மிக்க ஒருவர் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
Wednesday, June 08,2011 11:11 AM, சால்னா said:
இவரும் நம்ம பிரதமர் மாதிரிதான் அமெரிக்கா என்ன சொல்லுதோ அதை அப்படியே செய்வார்...
Tuesday, June 07,2011 09:53 PM, செழி said:
இவர் சாதனைகள் நான்கு ஆண்டுகளில்தான் என்னவாம்? பெஞ்ச் தேச்சது போதாதா?