சனி, 4 ஜனவரி, 2020

வளர்தமிழ் ஆய்வு மன்றம்,17ஆவது பன்னாட்டுக் கருத்தரங்கு, அறிவிப்பு


அகரமுதல

வைகாசி 03-04, 2051   /// 16.05.2020-17.05.2020

நிகழிடம் : உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை

இலக்கிய அமுதம், திங்கள் கூட்டம் சனவரி 2020


அகரமுதல



மார்கழி 20, 2050 / சனி / 05.01.2020
மாலை 5.00 மணி

குவிகம் இல்லம், 6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம்,,24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை
இலக்கிய அமுதம்
பண்டித மா.கோபாலகிருட்டிணன்
சிறப்புரை: திருமதி உசா மகாதேவன்
இதழாளர் முத்துக்குமாரசாமி
சிறப்புரை: ஓவியர் பத்மா வாசன்

வெள்ளி, 3 ஜனவரி, 2020

இன்னும் எத்தனை சொற்களின் ‘சோலியை முடி’ப்பார்கள்? – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

ன்னும் எத்தனை சொற்களின் ‘சோலியை முடி’ப்பார்கள்?

ஒரு சொல்லுக்கான பொருள் என்பது அதனை மற்றவர் புரிந்து கொள்வதன் அடிப்படையில்தான் அமைகிறது. இதனால், சொல்லின் பொருள் இடத்திற்கேற்ப மாறும் நிலையும் ஏற்படுகிறது. அதே நேரம், சொல் அல்லது சொல்லின் தொடரான சொற்றொடர் வெளிப்படையாக உணர்த்தும் பொருள் ஒன்றாக இருக்கும். பயன்படுத்தும் இடத்தில் உணர்த்தும் பொருள் வேறாக இருக்கும். இவ்வாறான தொடரை மரபுத் தொடர் என்கிறோம். சில நேரங்களில் சொலவடை, மொழி மரபு, வட்டார வழக்கு, இலக்கணத் தொடர் என்றெல்லாம் குறிப்பிடுகிறோம். இவ்வாறு மரபுத் தொடர் பயன்படுத்தப்படும் பொழுது அச்சொல்லின் வெளிப்படையான பொருளுக்கு முதன்மை அளிக்காமல் சொல்ல வரும் உண்மைப் பொருளையே நாம் காண வேண்டும்.
இத்தகைய மரபுத்தொடர்கள் எல்லா மொழிகளிலும் உள்ளன. தமிழில் ஆயிரக்கணக்கில் உள்ளன. ஆனால், நூற்றுக்கணக்கில்தான் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
தமிழ் மரபுத்தொடரைப் பார்க்கும் முன்னர் ஆங்கிலத்தில் எடுத்துக்காட்டு ஒன்றைப் பார்ப்போம்.(சிலருக்கு ஆங்கிலத்தில் சொன்னால்தானே புரிகிறது!) Kicked a bucket என்றால் வாளியை உதைத்தான் என்று பொருள் அல்ல. இந்த மரபுத் தொடர் இறந்துவிட்டதைக் குறிக்கிறது. பொருளாக இருந்தால் அப்பொருள் சீர்கெட்டுப் பயனற்றதாகி விட்டது என்பதைக் குறிக்கிறது. இப்படி எல்லா மொழிகளிலும் சூழலுக்கேற்ப வெளிப்படையாகத் தெரிவிக்கும் பொருளும் உணர்த்தும் பொருளும் வெவ்வேறாக இருப்பதே இயற்கை. இனித் தமிழுக்குச் செல்வோம்.
வாலைச்சுருட்டிக் கொண்டு போ’ என்றால் கேட்பவனுக்கு வால் இருப்பதாகவும் அதனைச் சுருட்டிக் கொள்ளச் சொல்வதாகவும் பொருளல்ல. ’எதுவும் பேசாமல் போ’ என்றுதான் பொருள்.
வாயைக் காட்டாதே’ – அவன் முன்பு போய் வாயைக் காட்டாதே என்பதுதான் நேர் பொருள். மருத்துவர் முன் வாயைக்காட்டுவது இயற்கை. இங்கே. வாயிலிருந்து இனி எதிர்ச்சொல் வரக்கூடாது என்பதைக் குறிக்கும் வகையில் எதிர்த்துப் பேசாதே எனப் பொருள்.
பூசி மெழுகுகிறான்’ என்றால் தரையைப் பூசி மெழுகுவதாகப் பொருளல்ல. நிகழ்ந்ததை மறைத்தல் அல்லது குற்றத்தை மறைத்தல் என்றுதான் பொருள்.
‘தேர்வை எப்படி எழுதினாய்’ எனக் கேட்டால் ’வெளுத்து வாங்கி விட்டேன்’ என்றால் துணியை வெளுத்ததாகப் பொருளல்ல. நன்றாக எழுதியுள்ளதாகப் பொருள். நன்றாகச் செய்வதைக் குறிப்பதால் சில இடங்களில் நன்றாக அடித்துவிட்டதாகவும் பொருள் வரும். அடிப்பதை அடி பின்னிவிட்டான் என்றும் சொல்வதுண்டு. இங்கே எதையும் பின்னவில்லை.
‘அரசாங்கம் வாய்ப்பூட்டு போடுகிறது’ என்றால் ஒவ்வொருவர் வாயிலும் பூட்டு போடுவதாகவா பொருள்? பேச்சுரிமையத் தடுக்கும் வகையில் பேசவிடாமல் செய்கிறது என்றுதானே பொருள்!
நாக்கு நீளுகிறது’ என்றால் ஏதோ மாய மந்திர வித்தையில் நாக்கு நீண்டுவிட்டதாகவா பொருள். அதிகமாகப் பேசுவதாகப் பொருள். ‘என்னிடமா காது குத்துகிறாய்?’ என்றால் என்ன பொருள்? ‘என்னை ஏமாற்றப் பார்க்காதே’ எனப் பொருள்.
‘இன்றோடு உனக்குத் தலை முழுகி விட்டேன்’ என்றோ ‘கை கழுவி விட்டேன்’ என்றோ சொன்னால் தொடர்பை விட்டு விட்டதாக அல்லது கை விட்டு விட்டதாகப் பொருள்.
‘அவளையே திருமணம் செய்கிறேன் என்று ஒற்றைக்காலில் நிற்கின்றான்’ என்றால் விடாப்பிடியாக நிற்கிறான் – உறுதியாக இருக்கிறான் எனப் பொருள். ‘பல்லைக்கடித்துக் கொண்டு சமாளித்தேன்’ என்றால் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டதாகப் பொருள்.
‘ஏனடா மென்னியைத் திருகுகிறாய்’ என்பதற்கு என்றைக்காவது, ’மென்னியை நெரித்தது போதும்’ என்றா சொல்கிறார்கள். மென்னி என்றால் குரல் வளை. குரல் வளையையோ குரல் வளை உள்ள கழுத்துப்பகுதியையோ திருகுவதாகவோ நெரிப்பதாகவோ பொருளல்ல. ‘இன்னல் தந்தது போதும். விட்டு விடு’ என்று பொருள்.
‘நேரம் காலம் பார்க்காமல் வந்து என் கழுத்தை அறுக்காதே’ என்கிறோம்.அப்படியானால் நேரம் பார்த்து வந்து கழுத்தை அறுக்கலாமா? ஓய்வில்லாத நேரத்தில் வந்து தொந்தரவு செய்யாதே என்பதைத்தான் இப்படிச் சொல்கின்றனர்.
‘என் தலையை உருட்டியது போதும்’ என்றால் இதுவரை தலையை வெட்டி எடுத்து பந்து விளையாடுவதுபோல உருட்டி விளையாடுவதாகவா பொருள்? குறிப்பிட்ட செய்தி அல்லது பொருண்மையில் அவரைப்பற்றிப் பேசியது போதும் என்கிறார்.
தலை இருக்க வால் ஆடலாமா?’ என்பது எந்த வால் ஆட்டத்தையும் குறிக்கவில்லை. பணியிலோ அகவையிலோ மூத்தவர் இருக்கும் பொழுது தானாக முந்திக்கொண்டு செயலில் இறங்குவதை அல்லது கருத்து சொல்வதைக் குறிப்பிடுவது.
ஈரக்குலையைப் பிடுங்கிடுவேன்’, ‘நெஞ்சில் ஏறி மிதித்து விடுவேன்’, ‘குடலை உருவி மாலையாகப் போடுவேன்’’ என்றெல்லாம் சொல்வதுண்டு. உண்மையிலேயே ஈரக்குலையைப் பிடுங்குவதாகவோ நெஞ்சில் ஏறி மிதிப்பதாகவோ குடலை உருவுவதாகவோ பொருளல்ல. செல்வாக்கை ஒன்றுமில்லாமல் ஆக்கி வெற்றி பெறுவேன் எனப் பொருள்.
வயிற்றில் அடித்துவிட்டான்’ என்றால் உணவு வரும் வழிக்கு முற்றுப்புள்ளி இடும் வகையில் வருவாய் வரும் வழியைத் தடுத்து விட்டான் எனப் பொருள்.
சாட்டையை எடுத்தால்தான் சரி வருவான்’ என்பார்கள். ‘அம்மா இருந்திருந்தால் இந்நேரம் சாட்டையை எடுத்திருப்பார்கள்’, ‘ஆணையர் சாட்டையைச் சுழற்றுவாரா?’ – இவை செய்திகளில் இடம் பெற்றவை. வன விலங்குகளை அடக்கவா அல்லது அடிமையை மிரட்டவா சாட்டையை எடுக்கப் போகிறார்கள். தவறான நடவடிக்கைகள் அல்லது குற்ற நடவடிக்கைகளை அடக்கி ஒடுக்குவதைத்தான் இங்கே குறிக்கிறது.
‘புத்தகத்தைக் கரைத்துக் குடித்து விட்டான்’ என்கிறோம். அப்படிச் செய்தால் வயிற்று வலிதான் வரும். ‘புத்தகத்தை முழுமையாகவும் நன்றாகவும் படித்து முடித்து விட்டான்’ என்றுதான் பொருள்.
நெஞ்சு உடைந்து விட்டான்’ என்றால் இதயம் உடைந்ததாகப் பொருளல்ல. மிதமிஞ்சிய வேதனை அடைந்து விட்டான் என்று பொருள். காரணம் கேட்ட பொழுது மனம் உருகி விட்டது என்றால் மனம் பனியல்ல உருகுவதற்கு அல்லது வெண்ணெய் போல் சூட்டில் உருகும் பொருளுமல்ல. கேட்போர் மனம் இரங்கும் வகையைத்தான் குறிக்கிறது.
தாளம்போடாதே, ஒத்து ஊதாதே’ என்பனவெல்லாம் நடுவுநிலையின்றி தவறு என்று தெரிந்தும் ’ஒருவர் சொன்னதை எல்லாம் சரி என்று சொல்லாதே’ என்பதாகும்.
பொடி வைத்துப் பேசாதே ‘ என்றால் ‘உட்பொருளை மறைத்து வைத்துப் பேசாதே’ எனப் பொருள்.
சோலி என்பது மார்பாடையைக் குறிக்கும் அயற்சொல். எனினும் வேலை என்றும் பொருள் உண்டு. ’உனக்கு வேறு சோலியே இல்லையா?’ என்றால் ‘எனக்குப் பேசித் தொந்தரவு கொடுக்கிறாயே உனக்கு வேறு வேலை இல்லையா?’ எனக் கேட்பதாகப் பொருள்.
‘போதும்! போதும்! உன் சோலியை முடி!’ என்றால் ‘சொன்னது போதும். நிறுத்து’ எனப் பொருள்.
‘இந்தத் தேர்தலுடன் அவன் சோலியை முடித்துவிட வேண்டும்’ என்றால் , ‘அவன் மீண்டு எழாதவாறு இத்தேர்தலில் அவனைத் தோற்கடிக்க வேண்டும்’ எனப் பொருள்.
‘அவன் சோலியை முடித்து விடுவோமா’ என்றால் ’செயல்பாட்டை நிறுத்தி விடுவோமா’ எனக் கேட்பதாகப் பொருள். அதே நேரம், அடியாளிடம் ‘அவன் சோலியை முடித்து விடு’ என்றால் செயல்பாட்டிற்கு அடிப்படையான, ‘உயிரை எடுத்து விடு’ என்றுதான் பொருள். ஆனால், ‘அவன் சோலியை முடித்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும்’ என்றால், தனக்கு எதிரானவனை அல்லது நல்லெண்ணத்திற்கு எதிராகவும் அரச வன்முறையைப் பயன்படுத்தியும் துன்புறுத்துபவனை அல்லது மக்களுக்கு எதிரானவனை அரசியலில் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று பொருள்.
சரி. சரி. நம் சோலியை இத்துடன் முடித்துவிடுவோம்.
இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

புதன், 1 ஜனவரி, 2020

நடைமுறைப் புத்தாண்டு வாழ்த்து! – இலக்குவனார் திருவள்ளுவன்

 நடைமுறைப் புத்தாண்டு வாழ்த்து!

2020 ஆம் ஆண்டு பிறந்து விட்டது. தமிழ்ப்புத்தாண்டிற்கு வாழ்த்து தெரிவிப்பவர்களை விட ஆங்கிலப் புத்தாண்டிற்கு வாழ்த்து தெரிவிப்பவர்களே பெரும்பான்மையர். ஆனால், உண்மையில் இந்த ஆண்டு முறை ஆங்கிலப் புத்தாண்டு அல்ல. அப்படியானால் இந்த ஆண்டு கிறித்துவ ஆண்டு முறை என்கிறார்களே அது சரிதானா என்றால் அதுவும் தவறு. நடை முறைப் பயன்பாட்டில் உள்ள இந்த ஆண்டினை நாம் நடைமுறைப் புத்தாண்டு என்று சொல்வோம்.
கிறித்துப் பிறப்பின் பொழுதே நடைமுறையில் இருந்த ஆண்டைக் கிறித்துவ ஆண்டு என்று சொல்வது தவறாகும். எனினும் வரலாறு அறிந்தவர்களும் அவ்வாறுதான் கூறுகின்றனர். கிறித்து பிறந்த பொழுது ஐரோப்பிய நாடுகளில் ஆண்டிற்குப் பத்து மாதங்கள்தாம் இருந்தன. அப்பொழுது சூலையும் ஆகத்தும் கிடையாது.
கி.மு.45இல் உரோமானியப் பேரரசர் சூலியசு சீசரால் உருவாக்கப்பட்டு அவர் பெயரால் சூலியன் நாட்காட்டி (Julian calendar) என்று அழைக்கப் பெற்றதே முன்பு பயன்பாட்டில் இருந்தது.
அலோசியசு இலிலியசு [Aloysius Lilius (1510 – 1576)] என்னும் இத்தாலிய வானியல் அறிஞர், மெய்யியலாளர், காலக்கணிப்பர், மருத்துவர் எனப் பல்துறை வித்தகராய் விளங்கினார். இவர் உலுயிகி  இலிலியோ(Luigi Lilio) என்றும் உலுயிகி கிகிலியோ(Luigi Giglio) என்றும் அழைக்கப்படுவார். இவரால் மாற்றி யமைக்கப்பட்ட வடிவமே சில திருத்தங்களுடன் இப்பொழுது வழக்கில் உள்ளது.
தாம் வடிவமைத்த ஆண்டுமுறையை உலகம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அலோசியசு கனவு கண்டார். எனினும் அவர் வாழ்நாளில் இக்கனவு நனவாகவில்லை. அலோசியசு மறைந்து 6 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் கனவு நனவாகியது. தொடக்கத்தில் ஆண்டுமுறை மாற்றத்திற்கான கருத்துருவை அவர்தான் அளித்திருந்தார். எனினும் 1575 இல் அவரது தம்பி அந்தோனியோ இலிலியோ (Antonio Lilio) நாட்காட்டிச் சீர்திருத்த ஆணையத்திடம் அதனை அளித்தார். இந்த ஆணையம் நாட்காட்டி மீட்புப் புதுச் செறிவுத் திட்டம்(Compendium novae rationis restituendi kalendarium) என்ற பெயரில் 1577 இல் அச்சிட்டு 1578இல் உலகிலுள்ள உரோமன் கத்தோலிக்கு அமைப்புகளுக்குஅனுப்பியது.

அவற்றின் ஒப்புதலையும் சில திருத்தஙு்களையும் ஏற்று, இவ்வாண்டு முறையைத் திருத்தந்தை பதின்மூன்றாம்கிரகோரி [Pope Gregory XIII,  07.01.1502 – 10.04.1585] 24.02.1582 இல் நடைமுறைப் படுத்தினார். எனவே, இதனைக் கிரகோரியன் ஆண்டு அல்லது கிரிகோரியன் நாட்காட்டி என அவர் பெயரால் அழைக்கின்றனர்.
தொடக்கத்தில் 8 நாடுகள் மட்டுமே இந்த ஆண்டுமுறையைப் பின்பற்றின. இப்பொழுது பெரும்பாலான உலக நாடுகள் இம்முறையையே பயன்படுத்துகின்றன.
இயேசுநாதர் பிறந்ததாகக் கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் குறிக்கப் பெற்றமையால் கிறித்துவ ஆண்டு அல்லது ஆண்டவரின் ஆண்டு அல்லது  பொதுமுறை ஆண்டு என்றும் இதனை அழைக்கின்றனர்.
பூமி சூரியனைச் சுற்றுவதற்காகும் காலம் என்பது 365 நாள் 5 மணி நேரம் 49 நிமையம் 12நொடி ஆகும். கணக்கிடுவதற்கு  எளிமையாக இருக்கும் பொருட்டு 365 நாள் என்பதையே ஆண்டுக் காலமாகக் கொள்கிறோம். ஏறத்தாழக் கால் நாள் குறைவதால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை 366 நாள் எனக் கணக்கிடுகிறோம். இதுதான் மிகைநாள் ஆண்டு(leapyear). எனினும் 400 ஆல் வகுபடாத நூற்றாண்டுகளில் மிகை நாள் இருக்காது. அஃதாவது 1900, 2100, 2200, 2300 ஆகியன மிகைநாள் ஆண்டுகளன்று. ஆனால் 2000, 2400, 2800 முதலான ஆண்டுகள் மிகைநாள்ஆண்டுகள்.
இந்த ஆண்டுப் பகுப்பு அறிமுகமாகிய காலக்கட்டத்திலும் அதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் நாள், வாரம், மாதம், ஆண்டு என்ற காலப்பகுப்பும், கோள்களுக்கான அறிவியல் அடிப்படையிலான பெயர்களும் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டு வந்து இன்றளவில் தொடர்கின்றன. பொதுமுறை ஆண்டு  அல்லது நடைமுறை ஆண்டு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே இருந்த தமிழ் ஆண்டுப் பகுப்புச் சிறப்பை நாம் மறந்துவிட்டோம். கோயில்களில் வழிபாடு, ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தல், கணக்கு தொடக்கம், முதலான பலவற்றையும் ஆங்கில ஆண்டு எனச் சொல்லப்பட்டு வரும் நடைமுறை ஆண்டுத் தொடக்கத்தை அடிப்படையாகக் கொண்டுதான் செயல்படுத்துகிறோம்.
பழஞ்சிறப்பு வாய்ந்த .தமிழ் ஆண்டு முறையைத்தா்ன புறக்கணிக்கிறோமே! வாழ்த்துகளையாவது தமிழில் தெரிவிக்கின்றோமா என்றால் அதுவும் இல்லை. இனிமேலாவது, நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொழுதும் புத்தாண்டு முதலான சிறப்பு நாள்களின் பொழுதும் ஆங்கிலத்தில் வாழ்த்துவதைக் கைவிடுவோம். உதடுகள் உதிர்க்கும்  அவற்றை விட உள்ளத்தில் இருந்து தமிழில் வாழ்த்தினால் எண்ணங்கள் கைகூடி மகிழலாம். நம் சங்கப்புலவர்கள் வாழத்திய வாழ்த்து வரிகளை நாம் புத்தாண்டுகளில் தெரிவிக்கலாம். அவை இவைதாம்.
1.) நெல்பல பொலிக!
    பொன்பெரிது சிறக்க!
2.) பால் பல ஊறுக! பகடு பல சிறக்க!
3.) நன்றுபெரிது சிறக்க! தீதில் ஆகுக!
4.) அறம் நனி சிறக்க! அல்லது கெடுக!
5.) அரசு முறை செய்க! களவு இல்லாகுக!
6.) பசி இல்லாகுக! பிணி சேண் நீங்குக!
7.) மாரி வாய்க்க! வளம் நனி சிறக்க!
8.) பசியும் பிணியும் பகையும் நீங்கி
   வசியும் வளனும் சுரக்க! ..
9.) மண் உயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் “
கிடைத்திடுக!
10.) நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புக!
11.) ஒன்றே செய்க; ஒன்றும் நன்றே செய்க;
 நன்றும் இன்றே செய்க; இன்றும் இன்னே செய்க!
12.) நல்லன இனியன சொல்லி அறம் பெருக்குக!
13.) வையை மணலினும் பல்லாண்டு வாழ்க!
இவையெல்லாம் உலக நலனுக்கான பொதுவான வாழ்த்துகளாகும். இதனால் நாடும் நலம் பெறும். நாமும் நலமுறுவோம்.
இந்த நடைமுறைப் புத்தாண்டில் இருந்தாவது, “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என எண்ணி நாம் ஒற்றுமை உணர்வுடன் வாழ்வோம்! தமிழ்நலன் மறவாது பொதுநலம் பேண உறுதி கொள்வோம்!
அவரவர் காணும் புத்தாண்டுக்கனவுகள் நனவாகட்டும்! நானிலம் சிறக்கட்டும்!
இலக்குவனார் திருவள்ளுவன்
தொடர்பிற்கு: thiru2050@gmail.com
தினச்செய்தி

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! -இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!


 திருவள்ளுவர்
திருக்குறள்
காமத்துப்பால்
முப்பால் எனப்பெறும் திருக்குறளின் மூன்றாவது பால் காமத்துப்பால். காமம் என்றால் நிறைந்த அன்பு என்று பொருள். எனவே, இஃது இன்பத்துப்பால் என்றும் அழைக்கப் பெறுகிறது.
திருக்குறளில் 109 ஆவது அதிகாரம் முதல் 133 ஆவது இறுதி அதிகாரம் முடிய 25 அதிகாரங்கள் – 250 பாக்கள் – இன்பத்துப்பாலில் உள்ளன. திருக்குறளை மொழிபெயர்க்க முயன்ற பொழுது அறிஞர் போப்பு, துறவியான தாம், இன்பத்துப்பாலைப் படித்து மொழி பெயர்ப்பதா எனப் பன்முறை தயங்கினாராம். பின்னர்த் துணிந்து படிக்கத் தொடங்கிய பொழுதுதான் இப்பிரிவும் ஒப்புயர்வற்ற இலக்கியச் சுவை உடையது என்பதை உணர்ந்தாராம். அதன் பின்னரே அவர் முழுமையும் மொழிபெயர்த்தார்.
குறள்நெறி அறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார், “திருக்குறள் இன்பத்துப்பால் பால்(Sex) பற்றிய நூலாயினும் ஆணும் பெண்ணும் ஒன்றாகக் கூடியுள்ள அவையில் கூறுவதற்குக் கூசும் ஒரு சொல் கூட அதில் இடம் பெறவில்லை” எனச் சிறப்பித்துக் கூறுவார்.
தலைவன் தலைவி அல்லது கணவன் மனைவி இடையே உள்ள உள்ளன்பின் வெளிப்பாடாக இவை உள்ளனவே தவிர எதுவும் கொச்சையாக இல்லை.
திருக்குறளுக்கு 500 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த காமச்சூத்திரா என்னும் நூலைப் பார்த்துக் காமத்துப்பால் எழுதியதாக ஆரிய அன்பர் தவறாகக் கூறுவர். ஆனால், திருக்குறளின் காமத்துப்பால் போல் எந்த இலக்கியத்திலும் அன்பின் உறவு நயமாகக் கூறப்படவில்லை. எனவே, இவற்றை நாம்  இச் சிறு தொடரில், ஒவ்வொரு வரியில்  உணரலாம்.
 அதிகாரம் 109 தகை அணங்கு உறுத்தல்

  1. அணங்கோ? மயிலோ? பெண்ணோ? அறியாமல் நெஞ்சம் மயங்குகிறது. (குறள் 1081)
  2. படைகொண்டு தாக்குதல் போல் பார்க்கின்றாளே! (1082)
  3. முன்பு அறியா எமனைப் பெண்ணின் விழிகளால் அறிந்தேன். (1083)
  4. அழகாக இருந்தாலும் இவள் கண்கள் பார்த்தவர் உயிரை உண்ணுகிறதே!(1084)
  5. எமனோ? கண்ணோ? மானோ? பார்வை மூன்றையும் காட்டுகிறதே! (1085)
  6. புருவம் கண்ணை மறைத்திருந்தால், எனக்கேது நடுக்கம்?(1086)
  7. மார்புத் துகில் மதயானையின் முக மறைப்பு போன்றதே!(1087)
  8. பகைவர் அஞ்சும் என் வலிமை இவள் நெற்றி முன் தோற்றதே!(1088)
  9. மான்விழியும் நாணமும் உடைய இவ்வழகிக்கு அணிகலன் எதற்கு?(1089)
  10. உண்டால்தான் கள்ளால் மகிழ்ச்சி. காதலோ கண்டாலே மகிழ்ச்சி!(1090)

அதிகாரம் 110. குறிப்பு அறிதல்

  1. காதல் நோய் தரும் பார்வையே மருந்தைத் தருகிறதே! (1091)
  2. கடைக்கண்பார்வையோ சிறிது! தரும் காதலோ பெரிது! (1092)
  3. பார்த்ததும் தலை தாழ்த்தினாள் அதுவே காதல் பயிருக்கு நீராகும். (1093)
  4. பார்த்தால், நிலம் பார்க்கிறாள். பார்க்காவிட்டால் பார்த்துப் புன்னகைக்கிறாள்.(1094)
  5. பார்க்காததுபோல் பார்த்துத் தலைசாய்த்து நகுவாள்.(1095)
  6. உதடு சுடுமொழி பேசும். உள்ளம் காதலை உணர்த்தும்.(1096)
  7. கடுஞ்சொல்லும் பகைப்பார்வையும் அன்பை உணர்த்தும் குறிப்பே! (1097)
  8. பரிவுப் பார்வையுடன் நகுவது அவளுக்கு அழகு தரும்.(1098)
  9. அயலார் போன்ற பார்வை காதலரிடமே உள்ளன.(1099)
  10. கண்ணும் கண்ணும் பேசுகையில் வாய்ச்சொல் எதற்கு?(1100)

அதிகாரம் 111.புணர்ச்சி மகிழ்தல்


  1. காணுதல், தீண்டுதல் என்ற வகையில் ஐம்புல நுகர்வு இன்பங்களும் இவளிடம் உள்ளன. (1101)
  2. இவள் தரும் காம நோய்க்கு இவளே மருந்து.(1102)
  3. திருமால் உலகம் தலைவி தரும் இன்பத்தினும் இனியதோ? (1103)
  4. விலகினால் சுடும், அணுகினால் குளிரும் தீயை எங்கே பெற்றாள்? (1104)
  5. விரும்பும் பொழுது கிடைக்கும் இன்பத்தைத் தலைவியின் தோள்கள் தருகின்றனவே! (1105)
  6. சேரும்பொழுதெல்லாம் உயிர் தழைக்கச்செய்யும் இவள் தோள்கள் அமிழ்தத்தால் ஆயின. (1106)
  7. தலைவியைத் தழுவும் இன்பம் உழைத்துப் பகிர்ந்து உண்ணும் இன்பம் போன்றது. (1107)
  8. காற்றிடைப் புகாத் தழுவல் இருவர்க்கும் இனிதே! (1108)
  9. ஊடல், உணர்தல், புணர்தல் இல்வாழ்வின் பயன்களாம். (1109)
  10. அறிதோறும் புலப்படும் அறியாமைபோல் கூடுந்தோறும் இன்பம் புலப்படுகிறது. (1110)

அதிகாரம் 112 நலம் புனைந்து உரைத்தல்

  1. அனிச்ச மலரே! நின்னினும் மெல்லியள் என் தலைவி. (1111)
  2. தலைவியின் கண் பூவைப்போன்றதால் பூக்களைக் கண்டுமயங்குகிறாயே நெஞ்சே! (1112)
  3. மூங்கில் தோளினளுக்குத் தளிர் மேனி, முத்துப்பல், இயற்கை மணம், வேல் கண். (1113)
  4. குவளைப்பூக்கள் இவள் கண்களுக்கு இணையில்லை என முகம் தாழ்த்தி நிலம் பார்க்கும். (1114)
  5. காம்பினைக் கிள்ளாமல் அனிச்சப்பூவைச் சூடினால் இவள் இடை ஒடியும்.(1115)
  6. தலைவியின் முகமா? நிலவா? என அறியாமல் விண்மீன்கள் கலங்குகின்றன.(1116)
  7. நிலவின் களங்கம் தலைவியின் முகத்திற்கு இல்லையே! (1117)
  8. நிலவே! தலைவி முகம்போல் ஒளிவீசினால் நீயும் விரும்பப்படுவாய்! (1118)
  9. தலைவியின் முகம்போல் இருக்க விரும்பினால் நிலவே, பலரறியத் தோன்றாதே! (1119)
  10. அனிச்சப் பூவும் அன்னச்சிறகும் தலைவியின் மென்பாதத்தை வருத்தும். (1120)

அதிகாரம் 113. காதல் சிறப்பு உரைத்தல்

  1. தலைவியின் வாயமுதம், பாலும் தேனும் கலந்த சுவையானது.(1121)
  2. உடலும் உயிரும் போன்றது தலைவிக்கும் எனக்கும் உள்ள உறவு.(1122)
  3. கண்ணின்பாவையே விலகி விடு! அங்கே தலைவி வருகிறாள்! (1123)
  4. உயிர் சேர்தலும் நீங்கலும் போன்றன தலைவியின் கூடலும் பிரிதலும். (1114)
  5. தலைவியை நான் மறந்ததில்லை! எனவே நினைத்ததும் இல்லை! (1115)
  6. நுட்பமான காதலர் கண்ணிலிருந்து நீங்கார் இமைத்தால் வருந்தார். (1126)
  7. கண் மை தீட்டும் பொழுது தலைவர் மறைவார் என்பதால் கண்ணுக்கு மை இடேன். (1127)
  8. நெஞ்சில் காதலர் உள்ளதால் சுடுபொருள் உண்ண மாட்டேன். (1128)
  9. இமைத்தால் மறைவார் என விழித்திருக்கிறேன். தலைவரைப் பழிக்கின்றனரே! (1129)
  10. உள்ளத்துள் உள்ள தலைவரைப் பிரிந்துள்ளதாக ஊரார் இகழ்கின்றனரே! (1130)

-இலக்குவனார் திருவள்ளுவன்
(தொடரும்)

இராமகிருட்டிணனின் ‘சொற்களின் புதிர்ப்பாதை’ : எளிய கவித்துவமான படைப்பு – பாரதிபாலன் 1/3

இராமகிருட்டிணனின் ‘சொற்களின் புதிர்ப்பாதை’ 

எளிய கவித்துவமான படைப்பு – பாரதிபாலன்

1/3

மார்கழி 09, 2050  / 25.12.2019 அன்று இரசியப் பண்பாட்டு மையத்தில் எசு.இராமகிருட்டிணனின் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இராமகிருட்டிணனின் “சொற்களின் புதிர்ப்பாதை ” என்ற நூல் குறித்து முனைவர் பாரதிபாலன் ஆய்வுரை ஆற்றினார். இதன் எழுத்து வடிவம் வருமாறு
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் இலக்கியம் என்ற மாபெரும் கடலில் இறங்குகிறார்கள்,  நுழைகிறார்கள். இந்த இலக்கியத்துக்குள் நுழைவதற்கு எத்தனையோ வாயில்கள்  திறந்திருக்கின்றன. அவரவர் சூழலுக்கு ஏற்ப அவரவர் வாயில்களை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார்கள்!
எசு. இராமகிருட்டிணன் தேர்ந்தெடுத்துக் கொண்ட வாயில் ‘இரசிய இலக்கியங்கள்’.
இளம் வயதில் தனக்கு ஏற்பட்ட இரசிய இலக்கியத்தின் தாக்கத்தால், ஆற்றுப்படுத்துதலால் உந்தப்பட்டு எழுத வந்தவர் எசு. இராமகிருட்டிணன்!
பின்னர்ப் பழந்தமிழ் இலக்கியம் தொட்டு தமிழில் இலக்கிய வளமைகளை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு தன் திசைகளை விரிவுபடுத்திக் கொண்டவர்.
இடையறாத வாசிப்பு, தொடர் சந்திப்புகள் முடிவுறாப் பயணங்கள் என்று கற்ற பாடங்களைப், பெற்ற பட்டறிவுகளைத் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளும் விரிந்த மனம்! இதுவே எசு. இராமகிருட்டிணனின் இலக்கியத்தின் அடித்தளமாக அமைகிறது! இதனை இவர் மனம் விரும்பிச் செய்கிறது.
“செல்லும் இடமெல்லாம் எனக்கு நண்பர்கள் உண்டு; பேச்சும் எழுத்தும், ஊர் சுற்றுவதும் தான் என் வாழ்வு! என்பது அவரிகன் பிரகடனம்!
 “நான் வாசித்த எல்லாவற்றையும் சேர்ந்த ஒரு பகுதியே நான்”  என்பார் தியோடர் உரூசுவெலட்டு!  இதேபோன்று, , “இதுவரை நான் உண்ட உணவின் ஒரு பகுதியாக என் உடலும், என் வாசிப்பின் ஊடாக உருவான என் மனமும் சேர்ந்த வைதான் நான்”    என்று குறிப்பிடுகிறார் எசு.இராமகிருட்டிணன்!
ஆழ்ந்த வாசிபிப்பின் வழியாக அடையும் உன்னதம்!
 ஒரு புத்தகத்தை வாசிப்பதன் மூலமே நாம் பார்க்காத, புது உலகத்தைப் பார்க்க முடியும்! புத்தக வாசிப்பு என்பது நம்மை வேறொரு மனநிலைக்கு, வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்றுவிடுகிறது!
“இந்த உலகத்தில் நாம் இருக்கிறோம்! நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் உலகம் இருக்கிறது! அந்த உலகத்தைப் பார்க்கத்தான் தனிக் கண்கள் வேண்டும்! ”
அப்படியான தனிக் கண்கொண்டு பார்த்த பார்வை தான்  “சொற்களின் புதிர் பாதை”  என்ற இந்த நூல்! இந்தப் பாதை செல்லும் தொலைவு என்னவோ சிறிதுதான்! என்றாலும் அது தரும் அனுபவமும் சுகமும் விரிவானது
எசு. இராமகிருட்டிணன் படைப்புகளுக்கு கிடைத்த வெளிச்சம் அவருடைய இலக்கிய உரைகளுக்கும் கிடைத்துள்ளது! இப்படி அமைவது அபூர்வம்! தமிழில் செயயகாந்தனுக்கு  அப்படி வாய்த்தது!
 “சொற்களின் புதிர் பாதை”  என்ற இந்த நூல்! 26 கட்டுரைகளின் தொகுப்பு நூல்!  புற வடிவ நிலையில் வேண்டுமானால் இது கட்டுரையாக இருக்கலாம், ஆனால் அது ஏற்படுத்தும் மன உணர்வு  என்பது ஒரு கவிதையைப் போல, ஒரு சிறுகதையைப் போல, ஒரு புதினத்தைப் போல வாசிப்பு இன்பத்தைத் தந்து விடுகிறது. நம் மனநிலையை வெவ்வேறு நிலைக்கு அப்படியே உயர்த்திச் சென்று விடுகிறது. 
இந்தக் கட்டுரைகள் வெறும் தரவுகளால் மட்டும்  எழுதப்பட்டவையல்ல மனத்தால் எழுதப்பட்டவை.  காலத்தின் குரலாக ஒலிக்கிறது!
“இவர் துல்லியமாகக் கவிதைக் கண்கொண்டு பார்க்கிறார்”  என்று இரசிய எழுத்தாளர் இவான் துர்கனேவு பற்றி ஓர் உரையில் எசு. இராமகிருட்டிணன் குறிப்பிடுகிறார்.
      அப்படியான கவிதைக்  கண்பார்வையில் தான் இந்தச் சொற்களின் பாதை விரிகிறது. பல முகங்களையும், பல புதிய திசைகளையும் இந்தப்  பாதை நமக்குக் காட்டுகிறது !. இந்தப் பாதையில் நடக்கின்ற சுகமும், நடக்கின்ற போது நாம் காண்கின்ற காட்சிகளும் அந்தக் காட்சிகள் வழியாக விரிகின்ற உலகங்களும்  நமக்கு தனி அனுபவமாக வாய்த்து விடுகிறது.
சிறுகதைகள் குறித்தும் கவிதைகள் குறித்தும் குறிப்பாக நவீனக் கவிதைகளின் நுட்பங்கள் குறித்தும் குறும்புதினங்கள் குறித்தும் பல்வேறு கட்டுரைகள் குறித்தும் சில நிகழ்வுகளைக் குறித்தும் அவர் சந்தித்த எழுத்தாளர்களைப்பற்றியும் அறிஞர்களைப் பற்றியும் வாசித்த,  பழந்தமிழ் இலக்கியங்களைப் பற்றியும், இத்துடன் தன் தனிப்பட்டறிவுநலன்கள் குறித்த மனப் பதிவாகவும் இந்த நூல் அமைகிறது!  இந்திய எழுத்தாளர்களைப்பற்றி குறிப்பாக,  மலையாள படைப்பாளிகள் குறித்து மிக நுட்பமாக,  அவர்களுடைய தனித்தன்மைகளைத் தனித்த பண்புகளை அவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தைக் குறித்தும், ஒரு படைப்பாளனுக்கு கிடைத்திருக்கும் பரந்த வெளிகளைக் குறித்தும் பரவசத்தோடு பேசுகிறார்.
இதேபோன்று அவர் மேற்கொண்ட பயணங்கள் மூலம் கற்றவைகளையும் ஆழ்ந்த வாசிப்பின் மூலம் பெற்றவைகளையும் நமக்குத் தருகிறார்.   மிக சுருக்கமாகச் சொல்வதென்றால்,  “சொற்களின் புதிர் பாதை“  என்ற  இந்த நூல் ஓர் எளிமையான நேர்மையான உரையாடல்!.
இந்த உரையாடல் நமக்குப் பல புதிய சொற்களைத் தருகிறது. அந்தச் சொற்கள் பல புதிய பொருள்களைத் தருகிறது. அந்தப் பொருள்கள் வாழ்வனுபவத்தால் பெற்றவை!
இங்கே நான் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்.எசு. இராமகிருட்டிணனின் மொழி அலாதியானது! தனித்துவம் மிக்கது! இந்தக் கட்டுரையில் அவர் வகைப்படுத்தி, வரிசைக்கிரமமாக அமைக்கப்பட்ட வாக்கிய அடுக்குகளில் வீசும் ஒளியும், மனத்தை ஈர்க்கும் மொழிகட்கும் முதன்மையானதாகிறது. அந்த மொழி தரும் சுவை தான் இந்த நூலின் சிறப்பு! ஒருவிதமான வசீகர மொழி!
(தொடரும்)