சனி, 5 ஆகஸ்ட், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 170 : பார்ப்பனப் பெருவாழ்வு! 6/8

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 169 : பார்ப்பனப் பெருவாழ்வு! 5/8 தொடர்ச்சி)

பொருளியல் நலிவு என்ற பெயரில்

பார்ப்பனப் பெருவாழ்வு! 6/8

இந்திய அரசு வங்கியில் தேர்வு வைத்து எடுக்கிறார்கள். தேர்வில் வெற்றி பெற்றாலும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கொடுக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் சுசி எசுடி பிசிக்கு எல்லாம் 80 மதிப்பெண் 90 மதிப்பெண் வந்தால் இந்த பொ.ந.பி (E.W.S.) யில் பார்ப்பனர்களுக்கு 28 மதிப்பெண் வருகிறது

 ஒரே ஒரு கேள்விதான் நண்பர்களே இந்த இட ஒதுக்கீடு என்கிற பேச்சு எழுந்தாலே பார்ப்பனர்கள் அவர்களுடைய அறிவாளர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? தகுதி திறமை போய்விட்டது என்பார்கள். இட ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டவன் மருத்துவரானால் எப்படி சிகிச்சை செய்வான்? இட ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டவன் பேராசிரியர் ஆனால் எப்படிப் பாடம் நடத்துவான்? இட ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டவன் ஓட்டுனரானால் எப்படி விபத்தில் இல்லாமல் தொடர்வண்டி ஓடும்? அவர்கள் எதை மறைத்தார்கள் தெரியுமா? இட ஒதுக்கீட்டில் தகுதியுள்ளவன் மட்டும்தான் தேர்ந்தெடுக்கப்பட முடியும். பொறியியல்   படிக்காமல் இட ஒதுக்கீட்டால் மட்டும் ஒருவன் பொறியாளர் ஆக முடியாது தகுதி திறமை எல்லாம் இருக்கிறது. ஆனாலும் அவன் அப்படி வாதம் செய்வான்

 எழுத்தாளர் சுசாதா விகடன் பத்திரிக்கையில் ஒரு கேள்வி பதிலில் இப்படி எழுதினார்; ஒருவர் வந்து சொல்வார்: “மாமா ஒரு இடத்திற்கு நான் சென்றிருந்தேன், சென்ற இடத்தில் எல்லா கேள்விகளுக்கும் நான் நன்றாக தான் பதில் சொல்லி இருந்தேன், ஆனால் என்னை சேர்த்துக் கொள்ளவில்லை” என்பார்

 உடனே  சுசாதா கேட்பார்: “பாச்சா நீ என்ன முன்னேறிய வகுப்பா? என்று.” முன்னேறிய வகுப்பாக இருந்தால் நீ ஒழுங்காகவே பதில் சொன்னாலும் வேலை கிடைக்காதாம்! அதாவது அவர் முன்னேறிய வகுப்பாக இருந்தால் அவர் சரியாகப் பதில் சொல்லி இருந்தாலும் அவருக்கு வேலை கிடைக்காது என்கிறார் சுசாதா.

 அப்போது பார்ப்பனர்கள் இந்த நாட்டில் வேலை இல்லாமல் தெருவில் அலைந்து கொண்டிருக்கிறார்கள், மணி அடித்துக் கொண்டு! உண்மையா இது? ஆனால் இப்போது ஒரே ஒரு கேள்விதான்:

 சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கினால் தகுதி திறமை குலையும் என்றால் பிசி என்றால் தகுதி இல்லாதவன் வந்து விடுவான், எசுசி எசுடி என்றால் தகுதி இல்லாதவன் வந்து விடுவான் என்றாய். ஆனால் இந்த முற்படுத்தப்பட்டவனுக்கு, ஏனைய சாதிகளுக்கு, ஏனைய வகுப்புகளுக்கு, பணக்காரர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால், அப்போது தகுதி திறமை பாதிக்குமா பாதிக்காதா? தகுதிதிறமைதான் உங்களுக்கு இட ஒதுக்கீட்டில் பாதிப்பு என்றால் யாருக்குமே இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது என்று கேள். அதை நாடு ஏற்றுக் கொண்டால் ஏற்றுக் கொள்ளட்டும்

 உண்மையிலேயே நம்முடைய சமூகத்தில் யார் வேண்டுமானாலும் படிக்கக் கூடிய வாய்ப்பு, அனைவருக்கும் ஆன வேலை உரிமை, எல்லோருக்கும் சம வாய்ப்பு வந்து விட்டால் ஏன் இட ஒதுக்கீடு தேவைப்படப் போகிறது? அது தானாகவே மறைந்து விடும். அது இருக்க வேண்டும் என்ற தேவையே இல்லை. யாரும் அது இருக்க வேண்டும் என்று கேட்கவே மாட்டார்கள். ஆனால் இப்போது ஏன் தேவைப்படுகிறது?  உரிமை ஏற்றத்தாழ்வாக இருக்கிறது வாய்ப்பில் சமத்துவம் இல்லை. அதனால்தான் நண்பர்களே, இந்த இட ஒதுக்கீட்டை பார்ப்பனர்களுக்கு கொடுத்தால் மட்டும் தகுதிதிறமை பாதிக்காது, அதுவே மற்றவர்களுக்கு என்றால் தகுதியும் திறமையும் போய் விடும் என்றால் என்ன நியாயம்?

மிகவும் தந்திரமாக ஒன்றைச் செய்கிறார்கள். அது என்னவென்று  தெரியுமா? சண்டைக்குப் போகிறவன் சுற்றிலும் நான்கு பேரை சேர்த்துக் கொண்டு போவான். காரணம் அங்கிருந்து விழுகிற கல் ஒன்று நம் மீது விழுந்து விடக் கூடாது என்பதற்காக! அது போல் இந்த பார்ப்பனர்கள் இட ஒதுக்கீட்டிற்காக நாங்கள் யாருக்கெல்லாம் கொடுத்திருக்கிறோம் தெரியுமா? என்கிறார்கள் முசுலிம்கள் இருக்கிறார்கள்! கிறித்தவர்கள் இருக்கிறார்கள்! பல சாதிகாரர்கள் இருக்கிறார்கள்! இந்தப் பல சாதிகள் இவ்வளவு காலமும் பிசியில் இல்லை  எசுசி யில் இல்லை. பிறகு எப்படி இங்கே வந்தார்கள்?

 சரி யாருடா அது என்று எடுத்துப் பார்த்தோம் என்றால் முசுலிம்களில்  யார் தெரியுமா? நவாபுகள்! யார் அது நவாபு குடும்பம்? ஆற்காடு நவாபு குடும்பத்திற்கு இட ஒதுக்கீடு! இந்த இராயப்பேட்டையில் அவர்களுக்கு  இருக்கின்ற  அரண்மனையிலேயே நான்கு கல்லூரிகள் வைத்து நடத்திக் கொள்ளலாமே! அவர்களுக்கு எதற்கு இட ஒதுக்கீடு? அவர்களுக்குப் போய் இவர்கள் வாங்கிக் கொடுக்கிறார்களாம்! எனவே இவை அனைத்தும் மோசடி, நண்பர்களே! இது முறியடிக்கப்பட வேண்டும்   

தமிழ்நாட்டில் மட்டும்தான் ஆளுங்கட்சி இதை எதிர்க்கிறது விடுதலைச் சிறுத்தைகள் இதை எதிர்க்கிறார்கள். ஆனால் பொதுவுடைமைக் கட்சியினர் பார்ப்பனர்களுக்கு சாதகமாக பேசுகிறார்கள். அது ஏன் என்று அவர்கள்தான் விளக்க வேண்டும். மாநிலங்கள் அவையில் இந்த சட்டத் திருத்தத் தீர்மானம் கொண்டுவருகிற போது டி கே இரங்கராசன் அதை ஆதரித்துப் பேசினார். கனிமொழி அவர்கள் ஓடோடிப் போய், “என்ன தோழரே நீங்கள் போய் இதை ஆதரிக்கிறீர்களே?” என்று கேட்டார். “இல்லை இல்லை. நீங்கள் அமைதியாக இருங்கள், எங்கள் கட்சியின் உத்தரவுப்படி நாங்கள் ஆதரித்தோம்” என்றார். நான்  அவரைப் பார்ப்பனர் என்று சொன்னால் கோபித்துக் கொள்வார்கள். நான் அதனால் அப்படிச் சொல்லவில்லை. ஆனால் இந்தத் தீர்மானம் யாருக்கான தீர்மானம்? பார்ப்பனர்களுக்கான தீர்மானத்தை ஆதரிக்கிறாரே! இன்னும் சொல்லப் போனால் பார்ப்பனர்களுக்கு ஒதுக்கீடு கொடுக்கின்ற யோசனையை முதன்முதலாகச் சொன்னவர்களே நாங்கள்தான் என்று பெருமையோடு அறிவித்துக் கொள்கிறார்கள்! தாலின் பேசிய கூட்டத்தில் அவர்களும் இருந்தார்கள்! தோழர் பாலகிருட்டிணன் அங்கேதான் இருந்தார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்காக மண்டல் குழுவின் பரிந்துரையை ஆதரித்து, சாதிக்கு மண்டல் வைத்த நெருப்பு என்ற புத்தகத்தை எழுதியவர் தோழர் ஞானைய்யா!

 இன்றைக்கு அது என்னாயிற்று? இப்போது வந்திருப்பது ஒரு புதிய இட ஒதுக்கீடு மட்டுமல்ல, இட ஒதுக்கீட்டின் அடிப்படையைத் தகர்ப்பதற்கான ஒரு திட்டம்! அரசமைப்புச் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்து அவர்களால் பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்றால் அதை காங்கிரசு பொதுவுடைமைக் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்கும் என்றால், நாளைக்கு இட ஒதுக்கீடு தேவையற்றது என்கிற சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தாலும் அவர்களால் நிறைவேற்ற முடியும்

-தெருமுனைக் கூட்டம்கீழ்க்கட்டளை, 2022 நவம்பர் 22

 தொடரும்
தோழர் தியாகு

தாழி மடல் 153

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 169 : பார்ப்பனப் பெருவாழ்வு! 5/8

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 168 : பார்ப்பனப் பெருவாழ்வு! 4/8 தொடர்ச்சி)

பொருளியல் நலிவு என்ற பெயரில்

பார்ப்பனப் பெருவாழ்வு! 5/8

 ஆனால் விபிசிங்கு அவர்கள் பதவி போனால் போகட்டும் என்று இதைச் செயல்படுத்துவதில் உறுதியாக இருந்தார். அப்படி அவர் உறுதியாக இருந்ததால் மண்டல்குழு பரிந்துரை செயலுக்கு வந்தது. நீதிமன்றத்தில் போய் வழக்குப் போட்டார்கள். அதுதான் இந்திரா சாகுனி வழக்கு. அதில் பெரும்பான்மை நீதிபதிகள் செல்லும் என்றார்கள். ஒரு சிறுபான்மையினர் செல்லாது என்றார்கள். விபிசிங்கு அரசைக் கவிழ்த்து விட்டு நரசிம்மராவு  வந்தார். ஆந்திரத்தின் சூழ்ச்சிமிக்க பார்ப்பன நரி! அவர் ஆட்சிக்கு வந்த உடனேயே என்ன செய்தார் தெரியுமா?

 ஏற்கெனவே நம் சிபிஎம் தோழர்கள் அங்கே இருக்கிறார்கள். “ஏழைப் பார்ப்பனர்களைக் கொஞ்சம் கவனிக்க மாட்டீர்களா? அவர்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டுமே” என்று பேசினார்கள். உடனே அவர் பார்த்தார், “10 விழுக்காடு இந்தா எடுத்துக் கொள்” என்றார்.

ஏழைப் பார்ப்பனர்களுக்கு ஓடு வைத்திருந்தால் சோறு போடு! வங்கிக் கணக்கில் பணம் போடு! கடை வைத்துக் கொடு! அல்லது வேதம் கற்றுக் கொடு! மந்திரம் சொல்லிப் பிழைத்துக் கொள்ளட்டும்! இட ஒதுக்கீடு எதற்கு? வேலைவாய்ப்பில் அவர்களுக்கு இடம் இல்லையா? கல்லூரியில் அவர்களுக்கு இடம் இல்லையா? பொறியியல் கல்லூரி,  மருத்துவக் கல்லூரி என அனைத்துக் கல்லூரிகளிலும் அவர்கள்தான் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் மருத்துவர் என்றாலே அவர்கள் மருத்துவ சாதிதான். ஏன்?  அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டப்படாத மக்கள்! ஆனால் பார்ப்பனர்கள் அங்கே போக மாட்டார்கள். ஏன் போக மாட்டார்கள் என்றால், மருத்துவன் என்றால் நோயாளியைத் தொட்டுப் பார்க்க வேண்டும், கட்டி இருக்கும்  சீழ் துடைக்க வேண்டும், இந்த வேலைக்கு நாம் எப்படிப் போவது? எனவே  பார்ப்பனர்கள் போக மாட்டார்கள். ஆனால் இப்போது என்ன செய்கிறார்கள்? மருத்துவர் என்றால் நோய்  போக்குவது அல்ல காசு குவிப்பதே நோக்கம். எனவே இப்போது எல்லாம் அதை விட்டு விட்டார்கள். அந்தத் தீண்டாமை எல்லாம் வேண்டா, நானே தொட்டு வைத்தியம் செய்கிறேன், இதய அறுவை சிகிச்சையா? நானே செய்கிறேன் என்று வந்து விட்டார்கள். இப்போது மருத்துவக் கல்லூரியில் போட்டி! ஒரு காலத்தில் என்ன செய்தார்கள்? நீங்கள் சமற்கிருதம் படித்தால்தான் மருத்துவத்தில் சேர முடியும் என்றார்கள். சமற்கிருதத்தை யார் படிப்பார்கள் யார் வீட்டுக் குழந்தை படிக்கும்? காயத்திரி மந்திரம் சொன்னால்தான் உனக்குக் கல்வி என்றால், யார் போய்ச்சொல்வது? 

 முதலில் மண்டல் குழுவிலும் வெறும் வேலைவாய்ப்புதான்! 2006ஆம் ஆண்டு அருசுன் சிங்கு கல்வி அமைச்சராக இருக்கிற போதுதான் புதிதாக ஒரு தீர்மானம் கொண்டுவந்து 2008இல் இருந்து கல்வியிலான இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது இந்திய உச்ச நீதிமன்றத்தில் உட்கார்ந்திருக்கிற நீதிபதிகள் உயரமான நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டு என்ன கேள்வி கேட்டார்கள் தெரியுமா? இதற்கு என்ன அவசரம்? எதற்கு? இட ஒதுக்கீட்டிற்கு என்ன அவசரம்? என்று கேட்டார்கள். பொறுத்துக் கொள்ளக் கூடாதா? பிறகு பார்ப்போமே? ஏன் இந்த இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதற்கு முன்பு சாதிவாரிக்  கணக்கெடுப்பு நடத்தி விட்டீர்களா? பிற்படுத்தப்பட்டவர்கள் எத்தனை விழுக்காடு? என்ற கணக்கு இருக்கிறதா?  அரசு வழக்குரைஞர் சொல்வீர்களா? என்று கேட்டார்கள். அதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு பிறகு பார்ப்போம் என்றார்கள். 

 ஐயா, இந்தக் கணக்கை எல்லாம் மண்டல் எடுத்தார், கணக்கெடுப்பு செய்தார். அப்படியானால் இந்தக் கணக்கே எடுக்காமல் நீங்கள் எப்படி முடிவுக்கு வருகிறீர்கள்? நீதிபதிகள் எந்த ஆய்வுமே இல்லாமல் நிறுத்தி வைத்தார்கள். பிறகுதான் வெற்றி பெற்று அந்த வழக்கு வந்தது கல்விக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்கிற போது மருத்துவக் கல்விகளில் ஒரு பொது ஒதுக்கீட்டை உருவாக்கினார்கள். ஏன்? இந்தியா முழுவதும் மருத்துவக் கல்லூரிகள் இல்லை, எனவே தொடங்கு என்று சொல்வதற்குப் பதிலாக இருக்கின்ற இடங்களில் இந்தியா முழுவதிலிருந்தும் ஆட்களைச் சேர்த்துக் கொள். நீ இந்திக்காரரா குசராத்தியரா மராட்டியரா இவர்கள் அனைவருக்கும் தமிழ்நாட்டில் இடம் கொடு. இது அனைத்திந்திய ஒதுக்கீடு!

 சரி, கொடுப்போம். அடுத்த கேள்வி என்ன தெரியுமா? அதில் இட ஒதுக்கீடு உண்டா?

 எசுசி எசுடிக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் அல்லவா? நீதிபதிகள் சொன்னார்கள் – அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் போய்ச் சேர்த்துக் கொள் என்றார்கள். அதற்குப் பிறகும் பத்து ஆண்டுகள் கழித்துப் போராடித்தான் அதற்குள்ளே இட ஒதுக்கீடு பெற முடிந்தது நம்மால்! இவ்வளவு வரலாற்றுப் பின்னணிகள் இந்த இடஒதுக்கீட்டிற்குப் பின் இருக்கிறது.

நண்பர்களே! இது நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்தது. நம்முடைய எதிர்காலக் குழந்தைகள் பேரன் பேத்திகள் மகன் மகள் என அவர்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்த செய்தி இது நம் மூதாதையர்கள் போராடிப் பெற்றுக் கொடுத்த உரிமையை ஒரு மோதியும் அமித்துசாவும் சட்டென்று பறித்துக் கொண்டுசெல்ல முயல்கிறார்கள் மொத்தத்தில் அவர்களுடைய திட்டம் இவ்வளவுதான்! பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு என்பதுதான்!

 பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு என்றால் என்ன பொருள் தெரியுமா? இட ஒதுக்கீட்டிற்கு சமாதி கட்டுவது என்று பொருள்.

நீங்கள் நோயற்றவனுக்கு மருந்து கொடுக்க வேண்டும் என்று சட்டம் போட்டால் நோயுள்ளவனுக்கு மருந்து கிடைக்காது என்று பொருள். புளிச்ச ஏப்பக்காரனுக்குத்தான் விருந்து என்றால் பசி ஏப்பகாரனுக்குப் பட்டினி போகாது என்று பொருள். இதுதான் உண்மை. இந்தத் திட்டம்தான் பார்ப்பனர்களுக்கான இந்த இட ஒதுக்கீடு. சமூக வழியில், கல்வி வழியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் இட ஒதுக்கீடு என்று தீர்ப்பு இருப்பதால் நரசிம்மராவு கொண்டு வந்த திட்டத்தை நீதிமன்றம் நிராகரித்து விட்டதால், அப்போது என்ன செய்தார்கள்பெயரை மாற்றிக் கொண்டார்கள் மிகத் திறமையாக மாற்றி விட்டார்கள். பொருளாதரத்தில் பின் தங்கியோர் (‘Economically Backward‘) என்ற வார்த்தையே இல்லை. அப்படி இருந்தால் செல்லாது. வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு வழக்கில் தீர்ப்பு வந்து விட்டது அப்படியெல்லாம் கொடுக்கவே முடியாது. ஒரு சாதிக்குத் தனியாகக் கொடுக்க முடியாது சமூகத்திலும் பொருளாதரத்திலும் பின் தங்கியோர் (Socially and ecomomically backward‘)’க்குக் கொடுக்க முடியாது என்று எல்லாம் தெளிவாகி விட்டது நீதிமன்றத்தில். எனவே இந்த வார்த்தையை அப்படியே மாற்றி பொ.ந.பி.- பொருளாதரத்தில் நலிந்த பிரிவு (E.W.S – Economically weaker section)– என்று புதுக் கதை எழுதுகிறார்கள். யார் அவர்கள்? ஆண்டு ஒன்றுக்கு எட்டு இலட்சம் உரூபாய் சம்பாதிப்பவர்கள்! தினமும் 2,200 கல்லா கட்டுபவர்கள்! இவர்கள்தான் ‘எக்கனாமிக்கலி வீக்கர் செக்சன்’ அப்போது உண்மை என்ன? பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதுதான்!

தெருமுனைக் கூட்டம், கீழ்க்கட்டளை, 2022 நவம்பர் 22

 தொடரும்
தோழர் தியாகு

தாழி மடல் 153

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 168 : பார்ப்பனப் பெருவாழ்வு! 4/8

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 167 : பார்ப்பனப் பெருவாழ்வு! 3/8 தொடர்ச்சி)

பொருளியல் நலிவு என்ற பெயரில்

பார்ப்பனப் பெருவாழ்வு! 4/8

சரி, இந்தச் சமூக மற்றும் கல்வி வழியில் பிற்படுத்தப்பட்டவர்கள் யார் என்று எப்படிக் கண்டுபிடிப்பது? எந்த ஊரில் அளவுகோல் வைத்திருக்கிறார்கள்? அப்போதுதான் அவர்கள் என்ன செய்தார்கள் என்றால் பின்தங்கிய வகுப்புகள் –  இதுதான் அம்பேத்துகர் பயன்படுத்திய வார்த்தை – சமூக வழியில் கல்வி வழியில் பிற்பட்ட வகுப்புகள் என்றனர். ‘கிளாசு’ என்றால் என்ன? அந்த ‘கிளாசு’க்குள் மறைந்திருப்பது ‘காசுட்டு’. நீங்கள்  ‘பிசி’ என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? என்ன சாதி என்பதைக் கேட்டால்தான் நீங்கள் ‘பிசி’யா இல்லையா என்பதை கண்டுபிடிக்க முடியும். என்ன சாதி என்று கேட்டால்தான் ‘எசுசி’ அல்லது ‘எசுடி’ என்பதைக் கண்டுபிடிக்க முடியும். அப்போது இந்தச் சாதி என்பதை வைத்து அந்த சாதிச் சான்றிதழ் வைத்துத் தான் உங்களை ‘பிசி’யில் சேர்க்கிறார்கள். இட ஒதுக்கீட்டிற்காக நாம் போய் நின்றோம் என்றால் சாதியைச் சொல்லிச் சாதிக்குக் கொடுக்கவில்லை இட ஒதுக்கீடு! ஆனால் அந்தச் சாதி என்பதை வைத்து என்ன ‘கிளாசு’ என்று பார்த்து இட ஒதுக்கீடு கொடுக்கிறார்கள்.

 அப்போது இந்த அளவுகோல் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றது. அதாவது சுருக்கமாகச் சொன்னால், இட ஒதுக்கீடு என்பது சாதிக்குத்தான்! தாழ்த்தப்பட்ட சாதிக்குத்தான் இட ஒதுக்கீடு! பிற்படுத்தப்பட்ட சாதிக்குத்தான் இட ஒதுக்கீடு! மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிக்குத்தான் இட ஒதுக்கீடு! இதைக் கேட்டுக் கொண்டிருக்கிற நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் குடும்பத்தைப் பற்றி அவரவர் நண்பர்களின் குடும்பத்தைப் பற்றி அவரவர் உறவுக்காரர்களை பற்றி அவரவர் வீட்டுப் பிள்ளைகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். நம் குழந்தைகள் படிக்கிறார்கள். நம் பிள்ளைகள் வேலைக்குப் போகிறார்கள். வடநாட்டைப் போல் இங்கு இல்லை, வங்காளத்தைப் போல் இல்லை, ஏன் இந்த இட ஒதுக்கீட்டினால்தான்! 

இந்த இட ஒதுக்கீடு மட்டும் இல்லை என்றால் தமிழ்நாட்டில் இவ்வளவு படிப்பறிவு வந்திருக்காது. இவ்வளவு வேலைவாய்ப்பைப் பெற்றிருக்க முடியாது. இது போதும் என்று நாம் நிறைவடையவில்லை. ஆனால் இதுவாவது வந்தது என்றால் அது இந்த இட ஒதுக்கீட்டினால்தான்! இதனால் என்ன பார்ப்பனர்களுக்குப் பங்கு குறைந்து போய் விட்டதா? அவர்களுக்கு உரிய பங்கு கிடைக்காமல் போய் விட்டதா? எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். எல்லா உயர் பதவிகளிலும் இருக்கிறார்கள்‘இரயில்வே’யில் மேலாளர்கள் யார்? வங்கிகளில் யார் உட்கார்ந்திருப்பது? ஒன்று, பார்ப்பனர்களாக இருப்பார்கள். இல்லையென்றால் இட ஒதுக்கீட்டின் மூலமாக வந்த எசுசி எசுடியாக இருப்பார்கள். மண்டல் குழுவின் பரிந்துரையால் வந்தவர்கள் இன்னும் போதிய எண்ணிக்கையில் வரவில்லை. இவையெல்லாம் கருதித்தான் இந்தப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எசுசி எசுடி அல்லாத ஏனைய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், அதாவது ஓபிசி-க்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது அந்தக் கோரிக்கைக்கு உருவம் கொடுப்பதற்காக ஓர் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று சட்டத்திலே அம்பேத்துகர் எழுதி வைத்தார். ஆனால் நேருவும் வல்லபாய் பட்டேலும் அந்த ஆணையத்தை அமைக்காமல் ஏமாற்றிக் கொண்டே இருந்தார்கள் அம்பேத்துகர் பொறுத்துப் பொறுத்து பார்த்தார், இந்தப் பதவி வேண்டா என்று பதவியை விட்டு விலகி விட்டார். பிற்படுத்தப்பட்டவர்களுக்காகத்தான் அம்பேத்துகர் பதவி விலகினார். இரண்டு காரணம்: ஒன்று பெண்களுக்காக! இன்னொன்று பிற்படுத்தப்பட்டவர்களுக்காக! அவர் பதவியை விட்டு விலகி வந்தார் அதற்குப் பிறகு காக்கா கலேல்கர் ஆணையம் போட்டார்கள். அதைச் செயல்படுத்தவில்லை, அப்படியே கிடப்பில் கிடந்தது.

 1977ஆம் ஆண்டு நெருக்கடி நிலை ஓய்ந்து, ஒரு புதிய சனதா அரசாங்கம் வந்தது.  அந்த கட்சியில் பல பேர் சோசலிசுட்கள் இருந்தார்கள் அவர்களுடைய முயற்சியினால் முதன்முதலாக மண்டல் குழு என்ற ஒரு குழு அமைக்கப்பட்டது. யாரெல்லாம் ஏனைய பிற்படுத்தப்பட்டவர்கள்? இந்திய அளவில்? தமிழ்நாட்டில் ஏற்கெனவே இருக்கிறது. அந்தக்குழு தான் இந்தப் பரிந்துரையை வழங்கியது: 27 விழுக்காடு! ஏன் வழங்கியது? தெளிவாக அந்தக் குழு கணக்கெடுத்தது. வெறுமனே தெருவில் போகிறவர் வருபவர்களைக் கொண்டு எல்லாம் முடிவு செய்யவில்லை. இந்திய அரசுப் பணிகளில் என்ன சாதிக்கு என்ன இடம் இருக்கிறது? என்று கணக்கெடுத்து அவர்கள் என்ன முடிவு செய்தார்கள் என்றால், 60%ஆவது இருக்கக் கூடிய பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசுப் பணிகளில் நாலு விழுக்காடுதான் இடம் இருக்கிறது. நூற்றுக்கு 15 பேர் எசுசி எசுடியாக இருக்கிறார்கள் நூற்றுக்கு நான்கு பேர் எம்பிசியாக இருக்கிறார்கள். ஆனால் எஞ்சிய அத்தனை பேரும் யாராக இருக்கிறார்கள்? பார்ப்பனரும் உயர் சாதியினருமாக இருக்கிறார்கள் 

இவர்களுடைய வாழ்க்கை எப்போது முன்னேறும்? காலமெல்லாம் நிலத்தில் பாடுபட்டுக் கொண்டே இருப்பார்கள். காலமெல்லாம் பரம்பரைத் தொழிலைச் செய்து கொண்டே இருப்பார்கள். சாதி வீராப்பு பேசி மீசையை முறுக்கிக் கொண்டு ஊருக்குள் வம்பு வளர்த்துக் கொண்டிருப்பார்கள். குடிசையைக்  கொளுத்திக் கொண்டு இருப்பார்கள். ஆனால் இவனுக்குக் கல்வி வேலை வாய்ப்பு கிடைக்காமல் இந்த நாட்டில் எந்த முன்னேற்றமும் வராது என்று, அவர்களுக்கு 27 விழுக்காடு வழங்கியது, வேலைவாய்ப்பில் வழங்கியது மண்டல் குழு. ஆனால் 27 விழுக்காடு கொடுத்தாகி விட்டது என்றால் அது நடைமுறைக்கு வந்த உடனேயே, கொடுக்கத் தொடங்கி விட்டால் 25 விழுக்காடு அவர்கள் அந்த இடத்திற்குப் போய்ச் சேர்வதற்கு இன்னும் 25 ஆண்டுகள் அவர்களுக்கு ஆகும் என்று மண்டல் கணக்குப் போட்டார் உடனடியாகப் போக முடியாது, கொஞ்சம் கொஞ்சமாக ஆண்டுக்குக் கொஞ்சம், ஆண்டுக்கு கொஞ்சமாகக் கொண்டு போக வேண்டும். இதை அப்படியே கிடப்பில் போட்டார்கள். சனதா ஆட்சி போனது, காங்கிரசு ஆட்சி திரும்பி வந்தது, யாரும் எதுவுமே செய்யவில்லை.

 1991இல் விபி சிங்கு அறிவித்தார்,  நான் மண்டல் குழுவைச் செயல்படுத்துகிறேன் என்று. எங்கே மண்டல் குழு அறிக்கை என்றார். பாராளுமன்றத்தின் பரணில் கிடந்தது, ஒட்டடை படிந்து கிடந்தது. எடுத்துக் கொண்டு வாருங்கள் என்றார். இதை நான் செயல்படுத்துகிறேன் என்று அறிவித்தார். மண்டல் குழுவைச் செயல்படுத்தக் கூடாது என்று இரண்டு கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு நின்றன. ஒன்று காங்கிரசு கட்சி. இராசீவு காந்தி நாடாளுமன்றத்தில் 8 மணி நேரம் பேசுகிறார். மண்டல் குழு கூடவே கூடாது என்று. மண்டலை எதிர்த்துத் தெருவில் இறங்கிப் போராடியது ஆர்எசுஎசு-ம் பாசகவும். கொளுத்தினார்கள் மற்றவர்களை! தங்களைத் தாங்களே கொளுத்திக் கொண்டார்கள். மக்களைத் தூண்டி விட்டார்கள். இதற்கு எதிராக ஊருக்கு ஒரு சாதியைக் கிளப்பி விட்டார்கள். மண்டல் குழு கூடவே கூடாது என்று!

தெருமுனைக் கூட்டம், கீழ்க்கட்டளை, 2022 நவம்பர் 22

 தொடரும்
தோழர் தியாகு

தாழி மடல் 153

புதன், 2 ஆகஸ்ட், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 167 : பார்ப்பனப் பெருவாழ்வு! 3/8

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 166 : பார்ப்பனப் பெருவாழ்வு! 2/8 தொடர்ச்சி)

பொருளியல் நலிவு என்ற பெயரில்

பார்ப்பனப் பெருவாழ்வு! 3/8

உயர்நீதிமன்றத்தில் யார் உட்கார்ந்திருந்தார்கள்? 

வெள்ளைக்காரர்கள் ஆட்சி நடத்துகிற வரை வெள்ளைக்காரர் நீதிபதியாக இருந்தார்கள். வெள்ளைக்காரர்களுக்கு உதவியாக இன்னொருவர் நீதிபதியாக இருந்தார்கள். அவர்கள் பார்ப்பனர்கள். பெரும்பாலும் பார்ப்பனர்கள்தான். வேறு யாரவது ஒரிருவர் இருந்திருக்கலாம்.

இந்த இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று முடிவு செய்து அந்த கம்யூனல் அரசாணையோ செல்லாது என்று சொல்லி விட்டார்கள். திரும்பவும் உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்தார்கள் உச்ச நீதிமன்றத்திலும் உச்சிக் குடுமி இது செல்லாது என்று சொல்லி விட்டார்கள்

30 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மை மக்கள், ஒடுக்குண்ட மக்கள் அனுபவித்து வந்த ஒரு சிறிய சலுகை பறிக்கப்படுகிறது. அதை உரிமையாக அனுபவித்தார்கள், இனி அது கிடையாது என்ற உடனே தந்தை பெரியார் கொதித்து எழுந்தார். போராட்டம் அறிவித்தார். இதைத் திரும்பப் பெறாமல் விட மாட்டோம் வகுப்பு உரிமை எங்களிடம் திருபிக் கொடுத்தே ஆக வேண்டும் என்று போராடினார் அன்றைக்கு அண்ணல் அம்பேத்துகர் அவர்கள் நாடாளுமன்றத்தில் இந்திய அரசின் சட்டத் துறை அமைச்சராக இருந்தார். அந்த நேரத்தில்தான் சவகர்லால் நேரு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவந்தார்.  செண்பகம் துரைராசு வழக்கின் விளைவை முறியடிப்பதற்குத் தான் முதல் திருத்தம் (First Amendment).

கேட்டார்கள் நாடாளுமன்றத்தில், ஐயா எதற்கு இந்தத் திருத்தம் என்று.  நேரு என்ன சொன்னார்?  சென்னையில் என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? சென்னையில் நடைபெறுகிற போராட்டங்களைக் கருதித்தான் இந்த திருத்தத்தை கொண்டு வருகிறோம் என்றார். அந்த நியாயத்தை ஏற்றுக் கொண்டு சட்டத்தைத் திருத்தினார்கள்

அந்தத் திருத்தம் கொண்டுவருகிற போது ஐந்து ஆறு பேர் தனியாக ஒரு தீர்மானம் கொடுத்தார்கள். என்ன தீர்மானம் தெரியுமா? 

இந்த கம்யூனல் அரசாணையில் சாதி பார்க்கிறீர்கள், மதம் பார்க்கிறீர்கள், என்ன சமூகம் என்று பார்க்கிறீர்கள்,  கம்யூனிட்டி பார்க்கிறீர்கள்; அப்படிப் பார்க்காமல் பொருளாதாரத்தைப் பார்க்க வேண்டும். ஏழையா பணக்காரரா என்று பார்க்க வேண்டும் என்று ஒரு திருத்தம் கொண்டுவந்தார்கள். அன்றைக்கு நாடாளுமன்றத்தில் இருந்த 250 பேரில் ஆறு பேர் கொண்டுவந்த திருத்தத்தை 244 பேர் எதிர்த்து வாக்களித்துத் தோற்கடித்தார்கள். அன்றைக்குத் தோற்றுப் போன அந்தத் திருத்தத்தைதான் இப்போது  மோடியும் அமித்துசாவும் கொண்டுவந்திருக்கிறார்கள் 

அப்போதிலிருந்து இவர்களுக்கு ஒரு கனவு! இதை எப்படியாவது திரும்பக் கொண்டுவந்து விட வேண்டும் என்று! ஏன்? ஒருவர் படிப்பதற்கும் படிக்காமல் இருப்பதற்கும், கல்லூரி வாய்ப்பைப் பெறுவதற்கும் பெறாமல் இருப்பதற்கும் ஏழை பணக்காரன் என்பதுதான் காரணமா? அவன் பிறந்த சாதியினுடைய கல்வித் தகுநிலை காரணமா? அவனுடைய சமூகத் தகுநிலை (SOCIAL STATUS) காரணமா?

 ஒரு ஏழை பிராமணன் கூட கல்வியில் விழிப்புற்று தன் பிள்ளைகளைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை, நன்றாகப் படிக்கட்டும், யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் பாம்பு பிடிக்கிற மூப்பனார் ஆகவும் இருக்கலாம். பண்ணை நடத்துகிற மூப்பனராகவும் இருக்கலாம். இந்த இருவர் குழந்தைகளும் ஐஐடி பக்கம் போக முடியாது – இன்றைய வரை!

 நம் கிண்டியில் ஐஐடி இருக்கிறது. அதில் எத்தனை பேர் பிற்படுத்தப்பட்டவர்கள் வந்திருக்கிறார்கள்? எத்தனை பேர் தாழ்த்தப்பட்டவர்கள் வந்திருக்கிறார்கள்? யாருக்கு அங்கே இருக்கிறது இடம்? நூற்றிற்கு 50க்கும் மேல் அங்கே பார்ப்பனர்கள்தான். அவர்கள்தான் அனைத்தையும் கைகளில் வைத்திருக்கிறார்கள் ஆசிரியர் பொறுப்பா, மேலாளர் பொறுப்பா என எல்லாம் அவர்கள் கைகளில்தான் இருக்கிறது. இன்றைக்கும் மாவட்ட ஆட்சியர்கள், அரசுச் செயலர்கள், தணிக்கையாளர்கள், நூறு விழுக்காடு அவர்கள் கைகளில் இருக்கிறது. எப்படி இலஞ்சம் வாங்கினால் ஏமாற்றலாம் என்று கற்றுக் கொடுப்பதற்கான ஒரு வேலைதான் தணிக்கையாளர் வேலை. பொறுப்புகளில் அனைவரும் அவர்கள்தான் நிறுவனச்செயலாளர்கள், த.செ.(சிஎசு) அவர்கள்தான். எப்படி வந்தார்கள்? இது ஏழை பணக்காரன் என்கிற பிரச்சனையா? சாதிப் பிரச்சினையா?

 இப்போது சாதி தாழ்த்தப்பட்ட சாதி என்றால் அவன் ஏழை இல்லையா? அவன் குடிசையில் இருக்கிறானே? சேரியில் இருக்கிறானே? சேரியில் என்ன இரும்புப் பெட்டிக்குள் பணத்தைப் பூட்டிப் வைத்து இருக்கிறானா? அவனும் ஏழைதான்! சாதிக்குள்ளே ஏழை பணக்காரன் என்பது மறைந்திருக்கிறது. பணக்காரன் என்றால் அது ஒரு பணக்கார சாதி. நடுத்தர வர்க்கம் என்றால் அது ஒரு நடுத்தர சாதி. ஒடுக்கப்பட்டவன் தாழ்த்தப்பட்டவன் என்றால் அவன் பரம ஏழை. இதுதான் உண்மை. ஊ்ர்ப்புறத்தில் விவசாயத் தொழிலாளிதான் பறையன் பள்ளன் சக்கிலியனாக இருக்கிறான். கள்ளர் முதலியார் வன்னியராக இருப்பவர்கள் நடுத்தர விவசாயிகள். சிறு நில விவசாயிகள். நிலக் கிழார்கள் உயர் சாதிக்காரர்கள். இதுதானே உண்மை? அப்போது சமூக வழியில் பிற்படுத்தப்பட்டோர் என்றால் அதற்குள்ளே பொருளாதாரம் இல்லையா? இருக்கிறது.

 சமூகம் என்றால் ஒன்று பொருளாதாரத்தைப் பார்க்க வேண்டும், இரண்டாவது பழக்க வழக்கங்களைப் பார்க்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டாமைக்கு ஆளாகிறார்கள். இந்திய அரசமைப்புச் சட்டமே தீண்டாமையை ஒழித்து விட்டதாக சொல்கிறது. ஆனால் இன்றைக்கும் எசுசி எசுடி சட்டம் இருக்கிறதா இல்லையா? இன்றைக்கும் கோகுல்ராசு போன்ற ஒரு வழக்கு நடைபெறுகிறதா இல்லையா? இன்றைக்கும் ஆணவப் படுகொலை நடைபெறுகிறதா இல்லையா? அப்படி என்றால் சாதி ஒழிந்து விட்டதா? தீண்டாமை ஒழிந்து விட்டதா? ஆனால் தீண்டாமை ஒழிந்து விட்டது என்று சொன்னார்கள். என்ன சொல்லவில்லை? சாதியை ஒழித்து விட்டோம் என்று சொல்லவில்லை.  அப்போது என்ன அருத்தம் நச்சுச் செடி அப்படியே இருக்கிறது, அதன் இலைதழைகள் வெட்டப்பட்டுள்ளன. அது திரும்பத் திரும்பத் துளிர்க்கிறது 

அம்பேத்துகர் சொன்னார்: சாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்க முடியாது. அவரால் முடிந்தது இவ்வளவுதான் சரி தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்று எழுதிக் கொள். அதனால் என்ன செய்தார்கள் என்றால், சமூக வழியிலும் கல்வி வழியிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் இட ஒதுக்கீடு என்று தீர்மானித்தார்கள்.

தெருமுனைக் கூட்டம், கீழ்க்கட்டளை, 2022 நவம்பர் 22

 தொடரும்
தோழர் தியாகு

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 166 : பார்ப்பனப் பெருவாழ்வு! 2/8

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 165: பொருளியல் நலிவு என்ற பெயரில் பார்ப்பனப் பெருவாழ்வு! 1/8 தொடர்ச்சி)

பொருளியல் நலிவு என்ற பெயரில்

பார்ப்பனப் பெருவாழ்வு! 2/8

இப்போது இந்தக் கூட்டத்தைக் கேட்டுக்  கொண்டு தெருவில்  நின்று கொண்டிருக்கும் உங்கள் அனைவரையும் ஒரு கணக்கெடுத்துப் பார்ப்போம் எவருக்காவது 8 இலட்சம் உரூபாய் வருமானம் இருக்கிறதா? இல்லை, 8 இலட்சத்திற்குக் கீழே இருந்தால் நீங்கள் எல்லாம் ஏழைகளாம்! எட்டு இலட்சம் வந்தால்தான் நீங்கள் ஏழை இல்லை. அதற்கு மேலே போக வேண்டும்.

நம்முடைய முதலமைச்சர் மாண்புமிகு தாலின் அவர்கள் இந்த நவம்பர் 12ஆம் நாள் கோட்டையில் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி வைத்து இந்த இடஒதுக்கீடு குறித்துப் பேசினார். அவர் கேட்டார்: ஐயா, 8 இலட்சம் உரூபாய் ஆண்டு வருமானம் என்றால், மாத வருமானம் எவ்வளவு? 66 ஆயிரம் உரூபாய்! ஒரு நாளைக்கு எவ்வளவு? 2,200 ரூபாய்! இந்த 2,200 வரவில்லை, 2,100தான் வருகிறது என்றால் அவர் ஏழை! மாதம் 66 ஆயிரம் இல்லை, 65 ஆயிரம்தான் வருகிறது என்றால் அவர் ஏழை! என்ன நியாயம் இது? எந்த ஊர் நியாயம் இது? இதைத்தான் மோதியும் அமித்துசாவும் நமக்குச் சொல்கிறார்கள்! இதற்குத்தான் அண்ணாமலை இங்கே சால்ரா அடிக்கிறார். எங்கள் மோதி ஆட்சி ஏழைகளுக்கு எல்லாம் நன்மை செய்கிறது. எந்த ஏழைகளுக்கு எல்லாம்? வருடத்தில் 8 இலட்சம் உரூபாய்க்கு கீழே வருபவர்களுக்கு

சரி, இந்த எட்டு இலட்சம் உரூபாய்க்குக் கீழே வருகிறார்கள், இவர்கள்தான் ஏழை என்று வைத்துக் கொள்வோம். இந்த ஏழை எந்தச் சாதியில் இருந்தாலும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டுமா, இல்லையா? இல்லை, எட்டு இலட்சத்திற்கும் கீழே இருப்பவர் எசுசி-யாக இருந்தால் கிடையாது, எசுடி-யாக இருந்தால் கிடையாது, பிசி-யாக இருந்தால் கிடையாது எம்பிசி- யாக இருந்தால் கிடையாது. ஓபிசி-யாக இருந்தால் கிடையாது. அவர் எஃப்சி-யாக இருந்தால் மட்டும்தான் உண்டு. இதுதான் இந்த ஈ.டபிள்யூ.எசு. இட ஒதுக்கீடு! அவர்களுக்கு மட்டும்தான் இந்த இட ஒதுக்கீடு!

முக தாலின் நன்றாகச் சொன்னார்: அப்படியானால் இது முன்னேறிய சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு என்பது உண்மை அல்ல. ஏதோ குருக்களுக்குக் கொடுக்கிறார்கள், சவுண்டிப் பார்ப்பனர்களுக்குக் கொடுக்கிறார்கள், உஞ்சவிருத்திப் பார்ப்பனர்களுக்குக் கொடுக்கிறார்கள் என்பதெல்லாம் கிடையாது. இது எந்த மாதிரிப் பார்ப்பனர்களுக்கு? பணக்காரப்  பார்ப்பனர்களுக்கு! அவர்கள் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, பணக்காரப் பார்ப்பனர்கள்! அவர்களுக்குத்தான் இந்த இட ஒதுக்கீடு!

அப்போது வெளிப்படையாக நீங்கள் ஒன்றைச் சொல்ல வேண்டும். என்ன சொல்ல வேண்டும்? பாரதிய சனதாக் கட்சி பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க விரும்புகிறது. பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்குத்தான் நாங்கள் இடபிள்யுஎசு என்ற பெயரில் அரசமைப்புச் சட்டத்திற்கு 103ஆவது திருத்தம் கொண்டுவந்திருக்கிறோம். வாருங்கள், அப்படி வெளிப்படையாக! இது நியாயமா இல்லையா என்று பேசுவோம்

சரி, பார்ப்பனர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தால் உங்களுக்கு என்ன? என்று கேட்கலாம். எங்கள் இடத்தை எடுத்துக் கொண்டுதான் அவர்களுக்குக் கொடுக்க முடிகிறது.

ஒரு தந்தி அலுவலகத்தில் 100 பேர் வேலை செய்கிறார்கள். இட ஒதுக்கீடு எசுசி, பிசி என எல்லோருக்கும் சேர்த்து 69 விழுக்காடு என்றால் மிச்சம் 31 விழுக்காட்டில் எல்லோரும் போட்டி போடலாம். ஆனால் அதில் பத்து விழுக்காட்டை அவர்களுக்குத் தூக்கிக் கொடுக்கிறீர்கள். மக்கள்தொகையில் 69 விழுக்காடு இருக்கக் கூடிய பிசிக்கு 27 விழுக்காடுதான் மண்டலக் குழு ஒதுக்கீடு! 29 விழுக்காடு இருக்கக் கூடிய எசுடி, எசுசி-க்கு 19 விழுக்காடுதான் ஒதுக்கீடு! ஆனால் மூன்று விழுக்காட்டுப் பார்ப்பனர்களுக்கு 10% ஒதுக்கீடு! இது நியாயமா? 

இட ஒதுக்கீட்டில் வரலாறு படைத்த நாடு நம் தமிழ்நாடு. 1909ஆம் ஆண்டு இங்கே ஒரு மாகாண ஆட்சி உருவாகியது அதற்கு இரட்டை ஆட்சி என்று பெயர். ஆளுநர் ஆட்சி செய்வார், அவரோடு கொஞ்சம் பேர் மற்றவர்களும் உட்கார்ந்து ஆட்சி செய்வார்கள். அப்போதுதான் முதன்முதலாகத் தேர்தல் தொகுதிகளில் முசுலிம்களுக்கு இட ஒதுக்கீடு வந்தது. இதுதான் முதல் இட ஒதுக்கீடு 1920ஆம் ஆண்டு இதே இரட்டை ஆட்சியில் நீதி கட்சி அமைச்சர்கள் இருந்த போது. அவர்கள் ஒரு ஆணை பிறப்பித்தார்கள் அதற்குப் பெயர் ‘கம்யூனல் அரசாணை’! வகுப்புவாரி உரிமைக்கான அரசாணை! அவர்கள் என்ன செய்தார்கள்? கல்வி, பதவி, வேலைவாய்ப்பு எதுவாக இருந்தாலும் இன்னின்ன வகுப்பினருக்கு இன்னின்ன இடம் என்று ஒதுக்கி விட்டார்கள். அவர்கள் ஒன்றும் பார்ப்பனர்களை விட்டு விடவில்லை அவர்களுக்கும் கொடுத்தார்கள். எல்லாச் சாதியினருக்கும் இட ஒதுக்கீடு. இது 1920 முதல் 1950 வரை செல்லுபடி ஆனது. இதை வைத்துத்தான் மருத்துவக் கல்லூரிக்குப் போனார்கள். இதை வைத்துத்தான் தலைமைச் செயலகத்திற்குப்  போனார்கள். இதை வைத்துத்தான் அரசு வேலைவாய்ப்புகளுக்குப் போனார்கள். பிரித்தானியர் காலத்திலும் சரி, 1947 நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் சரி இதுதான் வேலையை, கல்வியைப் பிரித்துக் கொடுக்கிற வாய்ப்பு

ஆனால் 1950ஆம் வருடம் செண்பகம் துரைராசு என்கிற ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார். கம்யூனல் அரசாணை செல்லாது என்று! ஏன்? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் – அம்பேத்துகர் வரைந்த அரசமைப்புச் சட்டத்தில் – 14ஆவது உறுப்பு எல்லோரும் சமம் என்று சொல்லி விட்டது. 15ஆவது உறுப்பு யாரையும் சாதி பார்த்து, மதம் பார்த்து, பிறந்த இடம் பார்த்துப் பாகுபாடு செய்யக் கூடாது என்று சொல்லிவிட்டது இதற்கு மாறாக இந்த கம்யூனல் அரசாணை இருக்கிறது, எனவே இது செல்லாது என்று வழக்கு போட்டார்கள். சமம் அல்லாதவர்களைச் சமமாக மதிக்க முடியாது, ஊனமுற்றவரையும் நல்ல கால்களோடு இருப்பவரையும் ஒரே பந்தயத்தில் ஓட விட முடியாது இளவருக்கும்(சூனியருக்கும்)முதுவருக்கும் (சீனியருக்கும்) சேர்த்து ஒரே அணியா  வைத்திருக்கிறோம்? எல்லாமே வித்தியாசப்படும். பார்வை இழந்தவருக்கு பேருந்தில் உட்காருவதற்கு இடம் கொடுத்தால் அவருக்கு மட்டும் ஏன் கொடுக்கிறாய்? எனக்கும் கொடு என்று கேட்க முடியுமா? எனவே சமூக ஊனங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். இது நியாயம். உலகமெங்கும் இருக்கிற நியாயம். மைக்ரோசாஃப்ட்டில் கருப்பர்களுக்கும் பெண்களுக்கும் இட ஒதுக்கீடு இருக்கிறது. பெரிய பெரிய குழுமங்களில் கொடுக்கிறார்கள். ஏன்? எல்லா இடங்களிலும் திறமைசாலிகள் இருப்பார்கள். எல்லோரையும் வேலையில் சேர்த்து எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். எல்லோரையும் சுரண்ட வேண்டும். இல்லை என்றால் எப்படி இட ஒதுக்கீடு கொடுப்பார்கள்? அன்று 30 வருடங்களாக இயங்கி வந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு போட்டார்கள்

தெருமுனைக் கூட்டம், கீழ்க்கட்டளை, 2022 நவம்பர் 22

  தொடரும்
தோழர் தியாகு

தாழி மடல் 153

திங்கள், 31 ஜூலை, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 165: பொருளியல் நலிவு என்ற பெயரில் பார்ப்பனப் பெருவாழ்வு! 1/8

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 164 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 4. தொடர்ச்சி)

பொருளியல் நலிவு என்ற பெயரில்

பார்ப்பனப் பெருவாழ்வு! 1/8

இது போன்ற ஒரு தெருமுனைக் கூட்டத்தை இப்போது நடத்த வேண்டிய தேவை என்ன?  இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் அரசியல் இலாவணிகளுக்கு நடுவே, யார் பெரியவர்? யார் உயர்ந்தவர்? என்ற வாதப் பிரதிவாதங்களுக்கு நடுவே, கொள்கை சார்ந்த இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்தத் தெருமுனைக் கூட்டத்தை நாங்கள் நடத்துகிறோம்.

ஒன்று, இந்தித் திணிப்பை எதிர்ப்போம், தமிழ் மொழி காப்போம்! இரண்டு, பணக்காரர்களுக்கும் பார்ப்பனர்களுக்குமான இட ஒதுக்கீட்டை எதிர்ப்போம், சமூக நீதி காப்போம்! என்ற இரண்டு முழக்கங்களையும் அடிப்படையாக வைத்துத் தமிழ்நாட்டு மக்களிடம் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்  ஒரு கருத்துப் பரப்புரையை  மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில்தான் இந்தத் தெருமுனைக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

நமக்கு முன்னால் இன்றைக்கு இரண்டு ஆபத்துகள் வந்திருக்கின்றன. இந்த இரண்டு ஆபத்துகளுக்கும் மூல ஊற்றாக இருப்பது மத்தியில் ஆளுகிற நரேந்திர மோதியின் தலைமையிலான பாசக ஆட்சி. இந்த பாசக ஆட்சியினுடைய ஒரு பெரிய வேலைத்திட்டம், அந்தத் திட்டத்தின் இரண்டு முனைகள்தான் இந்த இரண்டும்.  ஒரு ஆபத்து வருகிறது, அதை எதிர்த்து நாம் போராடிக் கொண்டிருக்கிற போதே இன்னொரு ஆபத்தும் வருகிறது. கடைசியாக வந்திருக்கிற ஆபத்துதான் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டிருக்கிற ஒரு தீர்ப்பு.

இந்திய அரசமைப்புச் சட்டம் 1949 நவம்பர் 26இல் இயற்றப்பட்டு 1950 சனவரி 26 முதல் நடைமுறையில் இருக்கிறது. இந்த அரசமைப்புச் சட்டத்தில் பல திருத்தங்கள் வந்து விட்டன. 2019ஆம் ஆண்டு ஒரு திருத்தம் வந்தது. அதுதான் 103ஆவது திருத்தம். இந்தத் திருத்தம் செல்லுமா செல்லாதா என்று மூன்றாண்டுகளாக ஒரு சர்ச்சை இருந்தது. அதற்கு ஒரு முடிவு கட்டி இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள்

அந்தத் தீர்ப்பு என்ன  சொல்கிறது?

பொருளியலில் நலிந்த பிரிவினருக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அரசு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று சொல்கிறது. இது ஒரு புதிய திட்டம். சுருக்கமாகச் சொன்னால், ஏழைகளுக்கு வழங்கலாம். யார் அந்த ஏழைகள்? அட்டவணைச் சாதி எனப்படுகிற பறையர் பள்ளர் சக்கிலியர் அல்லது பிற்படுத்தப்பட்ட சாதிகள் எனப்படுகிற வன்னியர் முக்குலத்தோர் மற்றச்  சாதிகள் அல்ல. வேறு யார் இப்படி வந்திருக்கிறார்கள்? இந்த இட ஒதுக்கீட்டின் பலனைப் பெறாத, எசுசி, எசுடி அல்லாத, ஓபிசி அல்லாத, அதாவது பிசி, எம்பிசி அல்லாத மற்றவர்கள்! அவர்கள் எஃப்.சி. (forward communities) அல்லது ஓசி (other communities). 

இதில் யார் யார் இருக்கிறார்கள்? தமிழ்நாட்டில் மிக முக்கியமாக இருப்பவர்கள் பார்ப்பனர்கள். ஐயர்கள், ஐயங்கார்கள், இவர்களைத் தவிர சின்னச் சின்னப் பிரிவினர்கள் இருக்கிறார்கள். சைவ முதலியார், சைவ வேளாளர் இன்னும் சில சாதியினர் இருக்கிறார்கள். மக்கள்தொகையில் இவர்கள் மொத்தத்தில் தமிழ்நாட்டைப் பொறுத்த வரை 10%க்குக் குறைவு, 100 சதவீதத்தில் பத்திற்கும் குறைவு. அட்டவணைச் சாதிகள், அட்டவணைப் பழங்குடிகள் 20 விழுக்காட்டிற்கு மேல். பிற்படுத்தப்பட்டவர்கள் 60%க்கு மேலே ஆனால் முன்னேறிய சாதியினர் இருப்பது வெறும் பத்து விழுக்காடு. இவர்களுக்கு இந்திய அரசு ஒரு இட ஒதுக்கீடுத் திட்டம் கொண்டுவருகிறது. என்ன சொல்லிக் கொண்டுவருகிறது? ஏழைகளுக்கு என்று சொல்லி!

சரி, அது ஏழைகளுக்கு என்றால், அவர்கள் எந்த வகையில் ஏழைகள்?

வீடில்லாதவர்கள், அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாதவர்கள், வேலை இல்லாதவர்கள், மாற்று உடையில்லாதவர்கள், வங்கிக் கணக்கில்லாதவர்கள்… இவர்களெல்லாம் ஏழைகளாக இருக்கலாம் அரசாங்கத்திலேயே ஒரு கணக்குச் சொல்லியிருக்கிறார்கள். வறுமைக் கோடு என்று ஒரு கோடு இருக்கிறது நிலநடுக்கோடு போல் வறுமைக் கோடு, அந்த வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பவர்களுக்காகச் சிலபல திட்டங்கள்!

வறுமைக்கோடு என்றால் என்ன? ஒரு நாள் வருமானம் ஊர்ப்புறம் என்றால் 27 உரூபாய், நகர்ப்புறம் என்றால் 33 உரூபாய்… இதுதான் அரசாங்கக் கணக்கு. 33 உரூபாய்க்கு மேலே சென்றால் அவர்கள் பணக்காரர்கள் என்று பொருளில்லை. ஆனால் அவர்கள் பரம ஏழை இல்லை. வறுமைக் கோட்டிற்குக் கீழே இல்லை என்று பொருள். இந்த 33 உரூபாயை வைத்துக் கொண்டு நகரத்தில் யார் வாழ்கிறார்களோ அவர்கள் வறுமைக் கோட்டில் இருக்கிறார்கள். ஊர்ப்புறத்தில் 27 உரூபாய்க்கு உள்ளேதான் வருமானம் என்றால் அவர்கள் வறுமைக்கோடு.

இவர்களுக்கு அரசு பார்த்து ஒரு நன்மை செய்தால் யார் வேண்டா என்று சொல்லப் போகிறோம்? தாராளமாகச் செய்யலாம்? எந்தச் சாதியாக இருந்தாலும் செய்யலாம். பசியோடு இருப்பதில் சாதி இருக்கிறதா? தாகம் தவிப்பதில் சாதி இருக்கிறதா? இல்லை, என்ன சாதியாக இருந்தாலும் ஏழைச் சாதி, அவ்வளவுதான். இவர்களுக்குத்தான் இந்த இடஒதுக்கீட்டுத் திட்டமா என்று கேட்டால் இல்லை.

அல்லது, அடுத்தாற் போல் வருமான வரி என்று ஒரு வரி இருக்கிறது. நாம் யாரும் வருமான வரி கட்டுவதில்லை, அவ்வளவு வருமானமே இல்லை. இருந்தால் வந்து எடுத்துக் கொண்டு போகலாம். அவ்வளவு வருமானம் நமக்கில்லை. இந்திய அரசாங்கம் வருமான வரிக்கு என்று ஒரு எல்லை வைத்திருக்கிறார்கள். 27 ஆயிரம் உரூபாய்க்கு மேல் மாத வருமானம் இருக்க வேண்டும் நீங்கள் கல்லூரிப் பேராசிரியராக இருக்கலாம் அல்லது வணிக நிறுவனம் வைத்து இருக்கலாம். 27 ஆயிரம் உரூபாய்க்கு மேலே இருந்தால் அவர்கள் வருமான வரி கட்டுகிறார்கள். வருமான வரி கட்டுபவர்களுக்கு ஏழை என்று பெயர் உண்டா? அரசாங்கம் சலுகை கொடுத்துக் காப்பாற்ற வேண்டிய ஏழைகளா அவர்கள்?

நம் நடிகர்கள் எல்லாம் வருமான வரி கட்டுகிறார்கள் அல்லது கட்டாமல் ஏய்க்கிறார்கள். திரைப்படம் எடுப்பவர்கள் கட்டுகிறார்கள் அல்லது ஏய்க்கிறார்கள். தொலைக்காட்சி நடத்துபவர்கள் கட்டுகிறார்கள் அல்லது ஏய்க்கிறார்கள். அவர்களெல்லாம் ஏழை இல்லை. அவர்களெல்லாம் வருமான வரி கட்டுபவர்கள், அதற்கு வரம்பு என்ன? 27 ஆயிரம் உரூபாய். சரி, வருமான வரி கட்டாதவர்களையெல்லாம் அரசாங்கம் ஏழைகளாகக் கருதுகிறது. அவர்களுக்கு ஒரு சலுகை கொடுக்கிறது என்றால் அதைப் புரிந்து கொள்ளலாம். ஏன் கொடுக்க வேண்டும் என்று கூட நாம் கேட்கவில்லை.

ஆனால் இந்த ஏழைகளுக்கு இடஒதுக்கீடு, பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு என்று அரசாங்கம் கொண்டுவந்திருக்கிற திட்டம் இருக்கிறதே… இந்தத் திட்டம்  வருடம் 8 இலட்சம் உரூபாய், அதற்குக் கீழே இருந்தால் ஏழைகளாம்!

  • தெருமுனைக் கூட்டம், கீழ்க்கட்டளை, 2022 நவம்பர் 22

 தொடரும்
தோழர் தியாகு

தாழி மடல் 153