புதன், 4 நவம்பர், 2009

ஒப்பறேசன் தமிழீழம்: பாகம் 1 – கீர்த்திகன்

எழுதியவர்பகலவன் on October 17, 2009
பிரிவு: கட்டுரைகள்

அன்பானவர்களே! ஒவ்வொரு சராசரி மனிதனிற்கும் தன் மொழி மீதும் தன் இனம் மீதும் இருக்கும் கடமையும் உரிமையும் எனக்கும் இருப்பதாலேயே நான் ஒரு தமிழனாய் என் தாய்மொழியும் தாய் நாடும் தமிழ் மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கும் சவால்களை மையமாக வைத்து காலத் தேவை கருதி மிக அவசரமாகவும் தெளிவாகவும் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன்.

தினம் தினம் வெளிவரும் செய்திகள் முழுமையான புரிதலையும் தெளிதலையும் வலியுறுத்தி நிற்கின்றது. அந்தவகையில் சில விடயங்கள் பற்றி கொஞ்சம் விரிவாகவே பேசவேண்டியிருக்கின்றது.

“ஒப்பறேசன் தமிழீழம்”

எப்பொழுது சிங்கள தேசத்துடன் சேர்ந்து வாழமுடியாதென்று தமிழர்கள் தீர்மானித்தார்களோ அல்லது எப்பொழுது சிங்களதேசம் தமிழர்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆழவும் அழிக்கவும் ஆரம்பித்ததோ அப்பொழுதிலிருந்தே இந்த நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டது. அன்றிலிருந்து இன்றுவரை ஈழவிடுதலையை நேசிக்கும் ஒவ்வொரு தமிழனினதும் இதயங்கள் சுதந்திர தாகத்தோடுதான் துடித்துக்கொண்டிருக்கின்றன. இதை ஆரம்பித்து வைத்தது தமிழர்கள் அல்ல சிங்களவர்கள். இப்போது சுமார் அறுபது வருடங்களைத்தாண்டி முழுமையான அறவளி அரசியல் போராட்டத்தையும் ஆயுதப்போராட்டத்தையும் கண்டு தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

எல்லாப் பாதைகளும் றோமுக்கே என்றது போல எல்லாச் செயற்பாடுகளும் சுதந்திர தமிழீழம் நோக்கிய தாக அமையவேண்டியிருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது தனிய ஒரு தேசத்தின் விடுதலைக்காண போராட்டம் மட்டுமல்ல. ஒரு தொண்மை மிக்க இனத்தின் கௌரவத்திற்கான போராட்டம். மூத்த மொழிகளில் ஒன்றினது இருப்பிற்கான போராட்டம். ஐனநாயக முகமூடி தரித்திருக்கும் பல அரச பயங்கரவாதங்களை அம்பலப்படுத்தும் போராட்டம். சட்டம் மனிதவுரிமை மனிதநேயம் சிறுவர் உரிமையென முழக்கமிடுவோரின் மனச்சாட்சிகளை தட்டிக்கேட்கும் போராட்டம் என பல பரிமாணம் பெற்றுத் தொடர்கின்றது.

ஈழவிடுதலைப் போராட்டத்தின் முக்கிய பங்காளிகள் தாயகத்திலும் புலம்பெயர்ந்தும் வாழும் ஈழத்தமிழர்களே ஆனாலும் இதில் உலகின் எல்லாத்திசைகளிலும் வாழும் தமிழர்களிற்கும் பொறுப்பு உண்டு. உண்மையான பல்லின மனித உரிமை ஆர்வலர்களிற்கு கரிசனை உண்டு.

சிக்கலடைந்திருக்கும் உலக பொருளாதார நலன்களிலும் பன்முகப்பட்டுவரும் சமூக கலாச்சார பின்னணியிலும் தமிழின எதிரிகளின் திட்டமிட்ட நடவடிக்கைகளினாலும் தமிழினம் விடுதலைப்பயணத்தில் உலகில் எந்தவொரு இனமும் சந்தித்திராத சவாலை சந்திக்கவேண்டியிருக்கின்றது. உலகிற்கு புதியதொரு வராலாற்றையும் பல பாடங்களையும் கற்பிக்கவேண்டிய பொறுப்பை காலம் தமிழர் கைகளில் நம்பி ஒப்படைத்திருக்கின்றது.

“ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு பூர்வாங்கத்திட்டமோ குறிப்பிட்ட கால எல்லையோ இருக்கமுடியாது”. துளிநிலம் கூட இல்லாத யூத இனம் சுமார் முன்னூறு வருடங்கள் போராடி தங்களுக்கான தாயகத்தை உருவாக்கினார்கள் என்பது வரலாறு. ஆனால் தேவையேற்படின் ஐந்நூறு வருடங்கள் வேண்டுமானாலும் போராடி தமது தாயகத்தை மீட்பார்கள் என்பது, தமிழ் இனம் இந்த உலகத்திற்கு சொல்லவேண்டிய அவசியமான அவசரமான செய்தி.

இங்கு ஐநூறு வருடங்கள் வேண்டுமானாலும் என்று சொல்வது அத்தகைய மனவலிமையையும் தூரநோக்கையும் குறிப்பிடுவதற்கேயாகும். ஏனெனில் இலக்கு தெளிவாகத் தெரியும் விடுதலைப்பயணத்தில் இருள் என்று ஒன்று இருக்கவே முடியாது. இருப்பின் அதன் பெயர் குறைந்த வெளிச்சமே.

ஒரு வியட்னாமிய இராணுவத்தளபதியம் அமெரிக்க இராணுவத்தளபதியும் போரிற்குப் பின்னர் ஒருமுறை சந்தித்துக்கொண்டபொழுது “நடைபெற்ற யுத்தத்தில் எல்லாம் நாங்கள் தான் வென்றோம்” என கொஞ்சம் ஆணவத்தோடு கூறினார் அந்த அமெரிக்கத் தளபதி. அப்போது “யுத்தங்களில் நீங்கள் வென்றது உண்மை ஆனால் வியட்னாம் அமெரிக்கா யுத்தத்தில் வியட்னாம் தானே வென்றது” என்று நிதானமாக கூறினார் அந்த வியட்னாமிய இராணுவத்தளபதி.

இன்றைய நிலையில் இந்த உரையாடல் முக்கியமான பல செய்திகளைத் தமிழினத்திற்குச் சொல்லி நிற்கின்றது. எத்தனை யுத்தங்களில் எங்களைத் தோற்கடித்தாலும் தமிழீழத்திற்கான யுத்தத்தில் இறுதியில் வெல்லவேண்டியது விடுதலைக்காகாப் போராடும் நாங்களே. அதற்கு ஆட்பலத்திற்கும் ஆயுத பலத்திற்கும் அப்பால் நிறைந்த மனவலிமை எமக்கு வேண்டும். ஒவ்வொரு தமிழனும் தன்னளவில் தன் தேசத்திற்கு தான் என்ன செய்யப்போகின்றான் என்ற தெளிந்த சிந்தனை வேண்டும்.

இன்னுமொரு சந்தர்ப்பத்தில் ஒரு அமெரிக்க இராணுவத்தளபதி பதிவு செய்கின்றார். ஒரு வியட்னாமிய போராளியை கைது செய்து கட்டி வைத்து சித்திரவதை செய்து கொண்டிருக்கின்றார். முகத்தில் பலமாக அடித்து விட்டுக் கேட்கின்றார் “இப்ப எப்படி இருக்கின்றது உன்னுடைய சுதந்திரம்” என்று. அதற்கு “நீ அடித்தது வலிக்கிறது ஆனாலும் சுதந்திரம் இனிப்பாய்தான் இருக்கின்றது” என்கிறான் அந்தப் போராளி. கோபமடைந்த தளபதி மீண்டும் பலமாக முகத்தில் தாக்க பற்கள் எல்லாம் நிலத்தில் விழுந்து இரத்தம் வழிந்தோடும் நிலையில் அதே கேள்வியை மீண்டும் கேட்கின்றான். அதற்கு “இப்போது முன்பைவிட வலிக்கின்றது. ஆனாலும் எனது தாய்நாட்டின் சுதந்திரம் என்பது எனக்கு இனிப்பாய்த்தான் இருக்கின்றது” என்கின்றான் அந்தப் போராளி. இப்போது மிகவும் கோபமடைந்த இராணுவ அதிகாரி அவனை கடுமையாகச் சித்திரவதை செய்துவிட்டு நிறைய பணமும் பொருளும் தருவதாயும் காட்டித்தரும்படியும் கேட்கின்றான். அதற்கு அவன் “இந்த அற்ப ஆசைகளுக்கெல்லாம் ஆசைப்பட்டு என்னுடைய தாய்மண்ணைக் காட்டிக்கொடுக்க மாட்டேன் நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்” என்கின்றான். இப்போது கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற இராணுவ அதிகாரி கெட்டவார்த்தைகளால் திட்டிவிட்டு “இப்போது உண்ணைச் சுடப்போகின்றேன் அநியாயமாகச் சாகப்போகின்றாய் இரகசியத்தை சொல”; எனக்கேட்கின்றான். அப்போது அந்த போராளி “நான் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நீ என்னைச் சுட்டுவிடுவாய் என்பது எனக்கு நன்கு தெரியும் ஆனாலும் உண்ணால் என்னை வெல்ல முடியாது” என உறுதியாகக் கூறினான். கோபமடைந்த இராணுவ அதிகாரி அவனைக்கொன்றுவிடுகின்றான். ஆனாலும் ஒரு போராளியின் மன உறுதியின் முன்னால் தான் தோற்று விட்ட குற்ற உணர்ச்சி அவனைத்தினமும் வாட்டியது. இதையே பின்னாளில் அந்த இராணுவ அதிகாரி பதிவு செய்கின்றார்.

இங்கு நாங்கள் என்ன செய்தாலும் எதிரி எங்களை என்ன செய்வான் என்ற தெளிவும் உயிரைவிட பெரிதான தேசப்பற்றும் ஒவ்வொரு தமிழனிற்கும் அவசியமாகின்றது. ஈழவிடுதலையை நேசிக்கும் ஒவ்வொரு தமிழனும் பணத்திற்கோ பொருளிற்கோ விலைபோகாதவர்களா தாய்நாட்டிற்காக எத்ததைய சவால்களையும் எதிர்கொள்ளும் மனநிலை உள்ளவர்களாக விளங்கவேண்டும். சிங்கள தேசமோ சர்வதேச சுயநலவாதிகளோ தமிழர் மனங்களை வெல்லாத வரை தமிழர்களை தோற்கடிக்கவே முடியாது.

ஈழப்போராட்டத்தின் விரைவான வெற்றி என்பது அதன் தொடர்ச்சியிலும் நாம் சம்பாதிக்கும் நண்பர்களினது எண்ணிக்கையிலும் எதிரியையும் அவன் செய்யும் சூழ்ச்சிகளையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியத்திலும் பிரதானமாக தங்கியுள்ளது.

விடுதலைக்கு முதல்ப்படி விழிப்புத்தான். தமிழீழ விடுதலையை நேசிக்கும் அன்பானவர்களே! இன்றைய நிலையில் தமிழ் இனம் மிகுந்த மனச்சிக்கலுக்குள் சிக்குண்டிருக்கின்றது. இதிலிருந்து விடுபடுவதும் பொய்ப் பரப்புரைகளை முறியடித்தல் என்பதும் எதிர்வரும் ஒவ்வொரு வினாடியிலும் பின்னப்படும் சதிவலைகளை அறுத்தெறிந்து உண்மைகளை பகுத்தறிந்து எதிரிகளை எதிர்கொண்டு பயணிக்கவேண்டியதும் மிகவும் முக்கியத்துவமானது.

இந்நிலையில் சிங்களதேசமும் தமிழ் இனவிரோதிகளும் கூட்டாக இணைந்து தமிழ் இன மொழி மற்றும் கலாச்சார பண்பாட்டு அழிப்பு நடவடிக்கையை மெல்ல மெல்ல அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.

நாம் ஈழத்தமிழர்களாக இருந்தாலும் சரி தமிழ்நாடு, கர்நாடகாத் தமிழர்களாக இருந்தாலும் சரி மலேசியா மற்றும் வேறுநாடுகளைச்சேர்ந்த தமிழர்களாக இருந்தாலும் சரி உலகெங்கிலும் எத்திசையில் வாழ்ந்தாலும் நாமெல்லாம் தமிழரே! சிங்கள தேசமும் தமிழ் இன எதிரிகளும் தமிழினத்திற்கு விடும் சவால்கள் என்ன? அவற்றை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றோம்?

தொடரும்….

அன்புடன்
கீர்த்திகன்
keerththikan@gmail.com

ஒப்பறேசன் தமிழீழம் – பாகம் 2

எழுதியவர்கனி on November 1, 2009
பிரிவு: சிறப்புக்கட்டுரைகள்

eelam_redசிங்கள தேசமும் தமிழ் இன எதிரிகளும் தமிழினத்திற்கு விடும் சவால்கள் என்ன? அவற்றை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றோம்? என்கின்ற கேள்விகளோடும் அவற்றிற்கான பதில்களை, அடுத்தவாரத்திலிருந்து ஆரம்பிக்கும் எண்ணத்துடனேயுமே முதல் கட்டுரை (ஒப்பறேசன் தமிழீழம் – பாகம் 1) நிறைவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் இக்கட்டுரையின் பிறிதொரு பகுதியில் எழுதவிருந்த சில விடயங்கள் பற்றி அதற்கு முதல் பேச வேண்டியுள்ளது. காரணம் முதல் கட்டுரை எழுதி சுமார் இரு வார இடைவெளிக்குள் உலகின் பல்வேறு பாகங்களில் இருந்தும் பல நூறு மின்னஞ்சல்கள் கிடைக்கப்பெற்றன. அவை கூறும் சாராம்சம் இப்பொழுது எழுதப்போகும் விடயத்தோடு ஒன்றிப்போயுள்ளது.

அத்தனை மின்னஞ்சல்களையும் அனுப்பியவர்களில் அநேகமானவர்கள் தமிழீழ மாணவர் மற்றும் இளைஞர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். புலம்பெயர் தேசங்களில் வாழும் ஈழத்தமிழர்கள். மாற்று இயக்கங்களைச் சேர்ந்த சில ஈழத்தமிழர்கள், தமிழகம், கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் மலேசியா சிங்கப்பூர் தென்னாபிரிக்க தேசங்களைச் சேர்ந்தவர்கள். இன்னும் சில முகவரியிடப்படாதவை!

அத்தனை கடிதங்களும் இங்கே கூறப்படும் மூன்று விடயங்களையே தாங்கியிருக்கின்றன. “நாங்கள் தமிழீழ விடுதலைக்காக எங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணிக்கத் தயாராய் உள்ளோம். தனித் தமிழ் அரசுக்காக விதைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரம் மாவீரர்களிற்கு என்றும் உண்மையாயும் விசுவாசமாயும் இருப்போம். எவ்வேளையிலும் எவ்வழியிலும் தமிழரின் தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமைக்காய் போராட தயாராய் உள்ளோம்”

அத்தனை கடிதங்களும் தமிழீழ தேசத்தின் ஆன்மாவின் குரலாக விளங்குகின்றன. தமிழர்களின் ஆழமான அபிலாசைகளை பிரதிபலித்து நிற்கின்றன. அத்துடன் தமிழ் இனம் ஜாதி மதம் கட்சிகள் இயக்கங்கள் பிரதேசங்கள் வாழும் நாடுகள் கடந்து தன்னிலை உணரத் தலைப்பட்டிருப்பதை அல்லது தள்ளப்பட்டிருப்பதை தெளிவாகக் காட்டி நிற்கின்றன.

இந்நிலையில் நின்றபடியே புலி என்ற சொல் பற்றியும் புலிகள் பற்றியும் பேசுவோம். இது இன்னும் பல கேள்விகளிற்கும் குழப்பங்களிற்கும் நிச்சயம் விடைசொல்லும். தமிழ் இனத்தின் விடுதலைப் பயணத்தை உந்தித்தள்ள உதவும்.

முன்பொருமுறை தமிழீழத்தின் வரைபடம் பற்றிய வினா ஒன்றின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் கூறியிருந்தார். “எங்கெல்லாம் இலங்கை இராணுவத்தின் குண்டுகள் வீழ்கின்றனவோ அப்பிரதேசங்கள் எல்லாவற்றையும் அடையாளப்படுத்திப் பார்க்கும் போது தெரியும் நிலப்பரப்பே தமிழீழம்” என்று.

இதை ஒத்த பதில் ஒன்றையே இப்பொழுதும் வேறு கேள்விகளிற்கும் கூறுதல் சாலப்பொருத்தமாகின்றது.

ஒற்றைவரியில் சொல்வதானால் யார் எல்லாம் புலிகள் என்றால் தமிழ் இன எதிரிகளினால் உடல் உள ரீதியாகவும் கல்வி சமூக பொருளாதார கலாச்சார ரீதியாக என ஏதோ ஒரு வகையில் பாதிப்பிற்குள்ளாகும் ஒவ்வொரு தமிழனும் புலிதான். அவன் தமிழீழத்திலும் இருக்கலாம் தென்னிலங்கையிலும் இருக்கலாம் தமிழகத்திலும் இருக்கலாம் கர்நாடகாவிலும் இருக்கலாம் அல்லது மலேசியா சிங்கப்பூரிலோ தென்னாபிரிக்காவிலோ புலம்பெயர் தேசங்களிலோ எங்கும் இருக்கலாம். எந்தக்கட்சிக்குள்ளும் எந்த இயக்கத்துக்குள்ளும் இருக்கலாம் ஏன் எங்கு பிறக்கப்போகின்றான் என்று தெரியாமல் கருவறைகளில் கூட தூங்கிக்கொண்டும் இருக்கலாம்.

காரணம் புலிகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுபவர்கள். ஒரு தேசத்தின் தேசிய இனத்தின் ஆன்மாவோடு ஒன்றிப்போயிருப்பவர்கள். தமிழின எதிரிகள் எவ்வேளையிலும் அஞ்சும் ஆத்திரம் கொள்ளும் உருவகமாகவும் உளவியலாகவும் விஸ்வரூபமெடுத்து நிற்பவர்கள். அவர்கள் எப்போது எங்கு வேண்டுமானாலும் எப்படியும் போராடுவார்கள். அதை தீர்மானிக்கவேண்டியது எதிரிகள் தான்.

ஒரு ஐம்பத்தெட்டும் எண்பத்தி மூன்றும் சில ஆயிரம் புலிகளை ஈழதேசத்தில் உருவாக்கியதென்றால் முள்ளிவாய்க்கால் உலகப்பரப்பெங்கும் பல நூறாயிரம் புலிகளை உருவாக்கியுள்ளதென்பதே யதார்த்தம். ஆனால் நிறையப்பேர் தாங்கள் புலிகள் தான் என்பதை இன்னும் தங்களளவில் அடையாளம் காணவில்லை. இதற்கு சில வேளை சில காலம் எடுக்கலாம்.

புலிகளை அழிப்பதாய் நினைத்து பன்மடங்கு அதிகரித்திருக்கின்றார்கள் என்பதும் ஈழக்கோரிக்கையை இல்லாதொழிப்பதாய் சொல்லி வலுப்பெற வழிசமைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதுமே யதார்த்தம்.

தமிழ் இன எதிரிகளைப் பொறுத்தவரையில் குறிப்பாக சிங்கள தேசத்தைப் பொறுத்தவரையில் புலிகளை அழிப்பதை பற்றி சிந்திப்பதை விட புலிகள் உருவாகாமல் இருக்க ஒவ்வொரு தமிழனையும் உடல் உள ரீதியாகவும் கல்வி சமூக பொருளாதார கலாச்சார ரீதியாகவும் பத்திரப்படுத்துவதே ஆரோக்கியமானது.

ஏனெனில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் புலிகளின் உடல்களை அழித்தலும் அல்லது இனம் காணுதலுமே தமிழின எதிரிகளினால் எக்காலத்திலும் சாதிக்கக்கூடிய அதி உச்ச சாதனையாக இருக்கும். தவிர உலகப்பரப்பெங்கும் காற்றுப்போல் ஊடுருவியிருக்கும் இனவெறியின் விளைவால் உருவாகிக் கொண்டிருக்கும் புலிகளையும் உணர்வுகளையும் முழுமையாக இனம் காணவோ அழித்தொழிக்கவோ சிங்கள இனவெறியர்களால் மட்டுமல்ல இந்த உலகின் அத்தனை வல்லாதிக்க சக்திகளால் கூட முடியாது. இதை எதிர்கொள்ள எந்த வியூகமும் பலனளிக்காது.

இந்நிலையில் குறிப்பிட்டவர்களின் பெயர்களைச் சொல்லி புலிகளை அடையாளம் கண்டுவிட்டோம் என்று நாளுக்கு நாள் அறிக்கை விடுவதெல்லாம் சின்னச்சின்ன உள் நோக்கங்களைக் கொண்டதே தவிர உண்மையில் உருப்படியான காரியம் அல்ல.

ஏனெனில் புலிகள் என்ற சொல் உலகளவில் யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் யார் எதிர்த்தாலும் எதிர்க்காவிட்டாலும் தமிழன் என்ற சொல்லுக்கு ஒத்த சொல்லாக ஆழ வேரூன்றிவிட்டது. அதாவது தமிழன் என்ற சொல்லும் புலிகள் என்ற சொல்லும் இரத்தமும் சதையும் போன்றதாகிவிட்டது.ஆகவே இதை வேறு பிரிக்கும் பகீரத பிரயத்தனங்களால் ஒரு போதும் அவர்கள் எதிரிபார்க்கும் பலனைக் கொடுக்க முடியாது. வருகின்ற வேற்று நாட்டு அகராதிகளில் தமிழன் என்ற சொல் இருக்கும் இடத்தில் நிச்சயம் புலி இருக்கும். ஜாதி மதம் பிரதேசம் கட்சிகள் இயக்கங்கள் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் இந்த உலகில் நீங்கள் எந்த மூலைக்குச்சென்றும் உங்களை தமிழன் என்று அடையாளப்படுத்தும் போதும் அந்த வேற்று நாட்டவன் அல்லது வேற்று இனத்தவன் தமிழனை புலி என்றே அடையாளம் கண்டு கொள்கின்றான்.

அதே போல் சிங்கள தேசமும் அத்தனை தமிழனையும் புலிகளாகவே பார்க்கின்றது. சும்மா பேச்சுக்கும் சுயநலத்திற்காகவும் நண்பர்கள் என்றும் அரச ஆதரவு இயக்கங்கள் என்றும் கட்சிகள் என்றும் கட்டி அணைக்கிறார்களே தவிர உண்மையில் அத்தனை தமிழனையும் ஜாதி மதம் பிரதேசம் கட்சி இயக்கம் கடந்து புலியாகவே பார்க்கிறார்கள். சந்தர்ப்பம் வரும் போது காலைவாரவே காத்திருக்கின்றார்கள். கழுத்தறுக்கவும் கருவறுக்கவுமே காலம் காலமாக திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றார்கள்.

தமிழர்கள் எல்லாம் புலிகள் என்று பார்க்கவும்; தமிழர்களே தமிழர்களின் பாதுகாவலர்கள் என்பதை உறுதி செய்யவும் தமிழ் இன எதிரிகள் பல வரலாற்றுச் சான்றுகளை விட்டபடி பயணிக்கின்றார்கள்.

உதாரணத்திற்கு அண்மையில் நடந்த ஒரு சில சம்பவங்ளை பார்க்கும் போது அவை இன்னும் சில தெளிவுகளையும் தன்னிலை அறிதலையும் தரும்.

இலங்கையில் ஒரு மரண விசாரணை அதிகாரிக்கு வழங்கப்பட்ட சாட்சியம்….

“எனது கணவர் கூலி வேலை செய்பவர். இதனால் எமது மகன் பாடசாலைக்கு சென்றால் தலையில் குட்டுகின்றனர், கேலி செய்கின்றனர், திட்டுகின்றனர். இதனால் அவர் அங்கு தொடர்ந்து கல்வி கற்க மறுப்புத் தெரிவித்து வந்தார்.

இதனால் அந்தப் பாடசாலையில் இருந்து மகனை விலக்கி வேறு பாடசாலையில் சேர்க்க முற்பட்டபோது எந்தவொரு பாடசாலையிலும் எமது மகனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு மாறாக சில பாடசாலை அதிபர்கள் முன்னர் எனது பிள்ளை கல்வி கற்ற பாடசாலையின் அதிபரிடம் மன்னிப்புக் கடிதம் கோரினர். மன்னிப்புக் கடிதம் இல்லாவிட்டால் பாடசாலையில் சேர்க்க முடியாது என்று தெரிவித்து விட்டனர்.

பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், குண்டு வைப்பார் என்ற அச்சம் காரணமாக உங்கள் பிள்ளையினை பாடசாலையில் சேர்த்துக்கொள்ளலாம். தற்போது பிரபாகரனும் உயிருடன் இல்லை. இந்நிலையில் எக்காரணம் கொண்டும் எந்தவொரு பாடசாலையிலும் சேர்க்க அனுமதிக்க மாட்டோம் என அழுத்தமாக கூறினர்.

இதனால் மிகுந்த கவலை கொண்டு எனது கணவர் மகனை கட்டித்தழுவி உச்சி முகர்ந்த பின்னர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

வறக்காபொல தம்பலதெனிய பாடசாலையில் எனது மகன் 2 ஆம் வகுப்பில் கல்வி கற்றான். அங்கு அவனுக்கு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து 2 மாதமாக பல்வேறு துன்பங்களை கொடுத்தனர்.

வகுப்பு ஆசிரியர் தும்புத்தடியால் அடிப்பார், தலையில் குட்டுவார், தடியால் அடிப்பார், கீழ்த்தரமான வார்த்தையால் திட்டுவார். இதனால் எனது மகன் பாடசாலைக்கு செல்ல மறுத்தார்.

இதன் காரணமாக அந்தப் பாடசாலையில் இருந்து எனது பிள்ளையை விலக்கி, அம்பேபுஸ்ஸ வித்தியாலயம், வறக்காபொல காமினி வித்தியாலயம், அல்லியத்த வித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகளின் அனுமதி கேட்டும் உரிய பயன் கிடைக்கவில்லை, சில பாடசாலை அதிபர்களின் காலடியில் வீழ்ந்து மன்றாடியும் பலன் கிடைக்கவில்லை. இதனால் தான் எனது கணவர் தற்கொலை செய்து கொண்டார்.”

தொடரும்..

அன்புடன்
கீர்த்திகன்
keerththikan@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக