வெள்ளி, 8 ஜனவரி, 2021

வாழ்ந்திடுமோ தமிழ்தான்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல



வாழ்ந்திடுமோ தமிழ்தான்!

 

 நற்றமிழில் பேசுவது மில்லை

அருந்தமிழில் எழுதுவது மில்லை

பைந்தமிழில் பாடுவது மில்லை

செந்தமிழில் பெயரிடுவது மில்லை

கன்னித்தமிழில் கற்பது மில்லை

இன்றமிழில் பூசிப்பது மில்லை

மூவாத்தமிழில் முழங்குவதுமில்லை

தமிழ்நெறியைப் போற்றுவது மில்லை

தமிழனென்று எண்ணுவது மில்லை

தமிழ் வாழ்க வெல்க  என்றால்

வளர்ந்திடுமோ வாழ்ந்திடுமோ தமிழ்தான்!

 இலக்குவனார் திருவள்ளுவன்

குவிகம் அளவளாவல், 10.01.2021

 அகரமுதல


மார்கழி 26, 2051 / 10.01.2021

ஞாயிறு மாலை 6.30

குவிகம் இணைய அளவளாவல்

ம.வே.சிவகுமார்

எனும்

நண்பனும் படைப்பாளிகள்

கூட்ட எண் : 619 157 9931

கடவுச் சொல் : kuvikam 123

அல்லது  
 https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09

இணைப்பைப் பயன்படுத்தலாம்  

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்      
 




புதன், 6 ஜனவரி, 2021

இலக்கிய இளைப்பாறுதல் நிகழ்ச்சி, சனவரி 07

 அகரமுதல




சென்னையில் ஃபகீமிய்யா  பதிப்பகம் நடத்தும்

இலக்கிய இளைப்பாறுதல் நிகழ்ச்சி

 முகிப்புல் உலமா முகம்மது மஃரூபு பங்கேற்பு
சென்னையில் ஃபகீமிய்யா  பதிப்பகம் சார்பில் இலக்கிய இளைப்பாறுதல் நிகழ்ச்சி

மார்கழி 23, 2051 / 07.01.2020  வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு எழும்பூர் தே.ப.ச.(இக்குசா) மையஅரங்கில் நடக்க இருக்கிறது.

இந்த அரங்கம் கன்னிமாரா நூலகம் –  அரசு அருங்காட்சியகம் எதிரில் அமைந்துள்ளது.

நிகழ்ச்சிக்கு இசுலாமிய இலக்கியக் கழகத் தலைவர் பேராசிரியர் முனைவர் சேமுமு. முகமதலி தலைமை வகிக்கிறார்.

உரூமியின் கவிதை நவீன நோக்கில் என்ற தலைப்பில் அசுவத்து சரீஅத்தி சீருரை நிகழ்த்துகிறார்.

இலக்கிய வானில்  உரூமியின் மசுனவி என்ற தலைப்பில் முகிப்பில் உலமா கவிஞர் ஏ. முகம்மது  மஃரூபு ( துபாய்) சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.

முகம்மது இரிழ்வான்  தீன் இசை வழங்குகிறார்.

உரூமியின் நேயர்கள், இலக்கிய ஆர்வலர்கள்,  ஆளுமைகள் அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்கக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

தொடர்புக்கு : 98 415 67213 /  97 909 67 213

மார்கழி 23, 2051 / 07.01.21 வியாழன்

சிலம்பப்போட்டிப் பரிசளிப்பு விழா

 அகரமுதல




தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின்

மாவட்ட அளவிலான போட்டிகளில் வென்றவர்களுக்குப்

பரிசளிப்பு விழா

     சேத்துப்பட்டு. சன.04. தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் சேத்துப்பட்டு திவ்வியா கல்விக்குழும வளாகத்தில் நடைபெற்றது. 

       திருவண்ணாமலை முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவரும் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக மாநிலத் தலைவருமான முனைவர் மு.இராசேந்திரன், இ.ஆ.ப. தலைமையின் கீழ்ச் செயல்படும் திருவண்ணாமலை மாவட்டச் சிலம்பாட்டக் கழகத்தின் மாவட்ட அளவிலான போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

     இவ்விழாவிற்கு, திருவண்ணாமலை மாவட்டச் சிலம்பாட்டக் கழகத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார். மாவட்டச் செயலாளர் பெ.பெரியசாமி வரவேற்புரையாற்றினார்.

    இந்த மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் சேத்துப்பட்டு, வந்தவாசி, ஆரணி, பெரணமல்லூர், தண்டராம்பட்டு, போளூர் ஆகிய ஊர்களிலிருந்து சிலம்பாட்ட வீரர்கள் பங்கேற்றனர். போட்டியின் நடுவர்களாக விழுப்புரம் மாவட்டச் சிலம்பாட்டக் கழகச் செயலாளர் க.குணசேகரன், உடற்கல்வி ஆசிரியர் மகேசுவரி ஆகியோர் இருந்தனர்.

    சார் இளையோர் பிரிவில் ஆரணி கோட்டைச் சிலம்பக் குழுவின் செயரேவன், பெரணமல்லூர் புத்தா சிலம்பக் குழுவின் பிரவீன் ஆகியோர் முதலிடத்தையும், இளையோர் பிரிவில் ஆவணியாபுரம் புத்தா சிலம்பக் குழுவின் முரசொலி முதலிடத்தையும், முதுவர் பிரிவில் வந்தவாசி அகிலாண்டேசுவரி கல்லூரி மாணவி விட்ணுப்ரியா, சேத்துப்பட்டு  புத்தா சிலம்பக் குழுவின் இ.காமேசு ஆகியோர் முதலிடத்தையும், மீ முதுவர் பிரிவில் தண்டராம்பட்டு முனியப்பன், சேத்துப்பட்டு பூபாலன் ஆகியோர் முதலிடத்தையும் வென்றனர். போட்டிகளில் வென்றவர்களுக்குத்  திருவண்ணாமலை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கா.முத்துவேல் பரிசுகளை வழங்கினார்.

    இந்தப் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றிபெற்ற சிலம்பாட்ட வீரர்கள், வரும் சனவரி இறுதி வாரத்தில் சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் பங்கேற்க விருக்கிறார்கள்.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ந.பார்த்திபன், கவி.விசய், ச.சத்தீசு, இரா.பாலாசி,  ச.சந்தோசு, ஏ.காமேசு, மு.பாலாசி, ச.சரண்யா ஆகியோர் செய்திருந்தனர். 

திங்கள், 4 ஜனவரி, 2021

புதுச்சேரியில் பறையிசை ஆட்ட பயிற்சிப் பட்டறையும் அரங்கேற்றமும்

     04 January 2021      No Comment



புதுச்சேரியில் பறையிசை ஆட்ட பயிற்சிப்

பட்டறையும் அரங்கேற்றமும்!

புதுச்சேரியில் பள்ளி மாணவ மாணவியருக்கான இரண்டு நாள் பறை இசைப் பயிற்சி முகாம், மார்கழி 18, 2051 / 02.01.2021 அன்று  அரங்கேற்றத்துடன் நிறைவு பெற்றது.

பெண்ணாடம் – திருவள்ளுவர் கலைக்குழு, புதுச்சேரி திருக்குறள் மன்றம் ஆகிய இரு அமைப்புகளின் சார்பில். தமிழ்த்தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளர் திரு. இரா.வேல்சாமி தலைமையில் புதுச்சேரி வேலுராம்பட்டு அறிவர் பள்ளியில்  நடைபெற்ற இந்த இரண்டு நாள் முகாமை பெண்ணாடம் – திருவள்ளுவர் கலைக்குழு தோழர்கள் இரண்டு நாட்கள் இங்கேயே தங்கி நடத்தி வைத்தனர்.

திருவள்ளுவர் கலைக்குழு தலைவர் தோழர் தே. இளநிலா தலைமையில் கடந்த 01.01.2020 அன்று காலை தொடங்கிய பயிற்சியைத் திருவாட்டி தெய்சி, திருவாட்டி செல்வி காமராசு ஆகியோர் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தனர்.

 தொடர்ந்து நேற்று (02.01.2020) இரண்டாம் நாளாகப் பயிற்சி தொடர்ந்து நிலையில், மாலையில் அரங்கேற்ற விழாவுடன் பயிற்சி முகாம் நிறைவுற்றது.

அரங்கேற்ற விழாவில், தமிழ்த்தேசியப்  பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன், தொழில் முனைவர் ப. தமிழ்முத்து பராங்குசம், இலட்சுமி உணவளிப்புப் பணியக உரிமையாளர் திரு. முத்துராமன், “குரலற்றவர்களின் குரல்” நிருவாகி திரு. அசோக்குராசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று, பறை இசைப் பயிற்சி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினர்.

 இரு நாட்கள் பயிற்சி பெற்ற மாணவர்களின் அரங்கேற்றப் பறையிசை ஆட்டத்தைக் கண்டு சிறப்பு விருந்தினர்களும் பொதுமக்களும் பெற்றோர்களும் வியந்து பாராட்டினார்கள். சிறப்பான பயிற்சி அளித்த திருவள்ளுவர் கலைக்குழுவின் தலைவர் தே.இளநிலா, செயலாளர் தி.சின்னமணி, பொருளாளர் சி. பிரபாகரன், செ. செந்தமிழ், எ. ஆதித்தியன் முதலான கலைக்குழு உறுப்பினர்களுக்குச் சிறப்பு விருந்தினர்கள் நூலாடைப் போர்த்திப் பாராட்டினர்.

 பயிற்சிக்கு இடமளித்து உதவிய அறிவர் பள்ளி முதல்வர்  சரோ சா பாபு அவர்களுக்கு நூலாடைப் போர்த்தியும், திருவள்ளுவர் படம் பதித்த நினைவுப்பரிசு  வழங்கியும் திருவள்ளுவர் கலைக்குழு தோழர்கள் பாராட்டினர். நிறைவில், திருவள்ளுவர் கலைக்குழுவின் செயலாளர் திரு. தி. சின்னமணி நன்றி கூறினார்.

 இப்பயிற்சி தொடக்கம்தான் என்றும், தொடர்ந்து புதுச்சேரியில் வாரம் ஒருமுறை பறை இசைப் பயிற்சி வழங்கும் வகையில் தொடர் பயிலரங்கம் நடத்தத் திட்டமிடப்படும் எனறும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திரு. இரா. வேல்சாமி தெரிவித்துள்ளார்

(பேச – 93454 85214).

 

திருவள்ளுவர் கலைக்குழு=

தொடர்புக்கு : 9629206998 புலனம் : 7639573579

முகநூல் : www.fb.com/Thiruvalluvarkalaikuzhu

காணொலிகள் : youtube.com/ Thiruvalluvarkalaikuzhu