சனி, 18 நவம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : இந்தியச் சூழலை உள்வாங்காமல் நக்குசலைட்டுகள் செயல்படுகிறார்கள்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : மா.இலெ.தான் சரி-தொடர்ச்சி)

கீற்று நேர்காணல் (2)(அ.1.)

நேர்காணல்: மினர்வா & நந்தன்

இந்தியச் சூழலை உள்வாங்காமல் நக்குசலைட்டுகள் செயல்படுகிறார்கள்


அழித்தொழிப்புக்காக ஓரிடத்திற்குச் செல்லும் போது முன்பின் தெரியாதவர்களை எப்படி அணிதிரட்டினீர்கள்? அவர்கள் எந்த அரசியல் கொள்கையும் இல்லாதவர்களாகத்தானே இருந்திருப்பார்கள்?

அஃது ஒரு கடினமான வேலைதான். எந்த அறிமுகமும் இல்லாமல் ஒரு சிற்றூருக்குச் சென்று தங்கி விட முடியாது. ஊரில் ஏற்கெனவே அறிமுகமான ஒருவர் எங்களை வேறு ஒரு பெயரில் அறிமுகப்படுத்தித்தான் ஊருக்குள் தங்க வைப்பார். பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள்தான் எங்களை அவர்களது ஊருக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவார்கள். அங்குச் சென்று ஏதாவது வேலை செய்வது போல் தங்கிக் கொள்வோம். கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருப்பவர்களுடன் பழகி, அதில் சிலரைத் தேர்ந்தெடுத்து, அழித்தொழிப்புச் செயலுக்குத் தயார்படுத்துவோம்.

நீங்கள் அழித்தொழிப்புக்குத் தேர்வு செய்யும் இடங்களில் ஏற்கெனவே இருக்கும் மார்க்சிய, இந்தியப் பொதுவுடைமை இயக்கங்களின் தோழர்களோடு உங்களது உறவு எப்படி இருந்தது?

எங்கள் பார்வை இதில் மோசமானதாக இருந்தது. அவர்களை விரோதிகளாகக் கருதிக்கொண்டுதான் நாங்கள் அந்த ஊருக்குள் நுழைவோம். தஞ்சைப் பகுதியில் பொதுவுடைமை இயக்க நிருவாகிகளாக இருப்பவர்கள் கட்சிக்காக நன்கு உழைக்கக்கூடிய நேர்மையான தோழர்களாக இருந்தாலும் எங்களது பார்வையில் அவர்கள் அனைவருமே விரோதிகள். எனவே அவர்களுக்குத் தெரியாமல் அவர்களை ஒதுக்கி விட்டுத்தான் வேலை செய்ய வேண்டியிருந்தது. அந்தக் கட்சிகளே நுழையாத புதிய சிற்றூர்கள்தான் எங்களது முதல் தேர்வாக இருந்தது.

உங்களது முதல் அழித்தொழிப்பு பற்றிக் கூற முடியுமா?

அழித்தொழிப்பு என்பது ஒரு போராட்ட வடிவம். அதுதான் சரியானது என்பது சாரு மசூம்தாரின் கருத்து. அந்த வகையில் நான் முதலில் வேலை செய்த சிற்றூர் திருவாரூர் அருகில் உள்ள பெரும்பண்ணையூர். அங்கிருந்து கொண்டு, முதல் அழித்தொழிப்புக்கு நாங்கள் தேர்வு செய்தது குடவாசல் அருகிலுள்ள பெருமங்கலம் ஊரைச் சேர்ந்த, முனுசாமி சோழகர் என்கிற நிலச்சுவான்தார். அவர்தான் அந்த ஊர் மணியக்காரர். சுற்றியுள்ள எல்லாச் சிற்றூரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அவர்மீது விரோதம் இருந்தது. அந்த ஊரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இளைஞன் நாகப்பனின் சகோதரியைச் சோளகரின் மகன் பாலியல் பலாத்காரம் செய்ய முயல, அதைத் தட்டிக் கேட்கப் போன நாகப்பனை சோளகரின் மகன் கத்தியால் குத்தி விட்டான். இதுதொடர்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் காவல் நிலையத்தில் புகார் செய்யப் போகும்போது, அங்கு அதிகாரியின் நாற்காலியில் சோழகர் உட்கார்ந்திருந்தார். வழக்குப் பதிவு செய்ய முடியாது என்று கூறித் தாழ்த்தப்பட்ட மக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதே போல் பல நிகழ்வுகள் அவர்களுக்குள் முரண்பாடு வருவதற்குக் காரணமாக இருந்தது.

இந்த நேரத்தில்தான் நாங்கள் சோழகரை அழித்தொழிப்பு செய்ய வேண்டும் என்ற
முடிவுக்கு வந்தோம். தோழர் ஏ.எம்.கே.தான் இதற்கு வழிகாட்டியாக இருந்தார். அவர் தலைமையில் அந்த ஊரில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்தப் பகுதி மக்கள் சோழகர் மீது கோபமாக இருந்த போதும் திட்டமிட்டு அவர் மீது தாக்குதல் நடத்த அவர்கள் தயாராக இல்லை. கூட்டத்தின் முடிவில் ஏ.எம்.கே. எங்களிடம், ‘இந்த ஊரில் யாரும் உங்களுடன் வரா விட்டாலும் பரவாயில்லை, வேறு ஊரிலுள்ள யாரையாவது சேர்த்துக் கொண்டாவது சோழகரை அழித்து விடுங்கள்’ என்று கூறி விட்டுச் சென்று விட்டார்.

ஏற்கெனவே நான் குடவாசல் அருகிலுள்ள கண்டியூர் என்ற கிராமத்தில் வேலை செய்து அங்குள்ள இளைஞர்களை அழித்தொழிப்புக்குத் தயார் செய்து வைத்திருந்தேன். நான், தோழர் மாணிக்கத்தின் மகன் பாலு, இன்னும் இரண்டு இளைஞர்களை சேர்த்துக் கொண்டு அழித்தொழிப்புக்குத் தயாரானோம். உண்மையில் நானும் பாலுவும்தான் தாக்குதலில் ஈடுபட்டோம். சோழகர் திருப்பித் தாக்கியதும் மற்ற இருவரும் பயந்து ஓடி விட்டார்கள். பல இடங்களில் ஆழமான கத்துக் குத்துகள் விழுந்தும் சோழகர் பிழைத்து விட்டார். அதுதான் எங்களது முதல் அழித்தொழிப்பு முயற்சி.

ஆனால் இதில் எங்கள் மீது வழக்குப் பதிவு எதுவும் இல்லாமல் தப்பித்து விட்டோம். சோழகரிடம் மருத்துவமனையில் வாக்குமூலம் கேட்கும்போது தனக்குப் பகையாக அந்த ஊரில் இருந்த அனைவரது பெயரையும் அவர் குறிப்பிட்டார். காவல்துறையினரும் அவர்களைக் கைது செய்தனர். தாக்குதல் நடைபெற்ற இடத்தில் கொடி, துண்டறிக்கை எல்லாவற்றையும் விட்டு வந்திருந்தும் யாரும் எங்கள் மீது சந்தேகப்படவில்லை. இது எங்களுக்கு ரொம்பவும் வருத்தமாக இருந்தது.

தமிழகச் சூழலில் அழித்தொழிப்பு என்பது எந்தளவுக்கு செயல்பாட்டுக்கு உகந்ததாக இருந்தது?

அழித்தொழிப்பு என்கிற ஒரே ஒரு போராட்ட வடிவம்தான் சரி என்கிற சாரு மசூம்தாரின் அணுகுமுறையே மிகச் செயற்கையானதாகும். இதை என்னுடைய சிறை வாழ்க்கையின்போதுதான் உணர முடிந்தது. தமிழகத்திற்கு வரும்போது, எங்களைப் பார்த்ததும் சாரு கேட்கும் முதல் கேள்வியே, ‘அழித்தொழிப்பிற்குத்(annihilation) தயாராக எத்தனை பேர் இருக்கிறார்கள்’ என்பது தான். ‘அடுத்து யாரை அழித்தொழிக்கப் போகிறீர்கள், எத்தனை நாட்கள் தேவைப்படும், சரி உடனடியாகத் தயாராகி விடுங்கள். தமிழ்நாட்டில் இருந்து கிளம்பும் முன் எனக்கு நல்ல செய்தி கிடைக்க வேண்டும்’ என்று கூறிவிட்டுப் போய் விடுவார். இதுதான் அவரது உரையாடல் பாணி.

அந்தப் பகுதியின் நிலைமை என்ன, அந்தப் பகுதி மக்களின் உடனடித் தேவை என்ன, இப்படி ஒரு போராட்டம் எடுபடுமா என்பது பற்றியெல்லாம் அவருக்குக் கவலையே கிடையாது. அவரது வழியில்தான் அழித்தொழிப்புக்கு நாங்கள் ஆட்களைத் தயார் செய்ய வேண்டியிருந்தது. அது பெரும்பாலும் தோல்வியில்தான் முடிந்தது. கல்லூரியில் இருந்து நான் வரும் போது என்னைப் போல் வந்த தோழர்கள் பலரும் நடைமுறைச் சிக்கல்களைத் தாக்குப் பிடித்து நிற்க முடியாமல் வெளியேறி விட்டார்கள். ‘அழித்தொழிப்பின் விளைவாகப் புரட்சி வரும், சமூகம் மாற்றம் பெறும்’ என்ற போதனையைக் கேட்டு ஒரு வேகத்தில் கிளம்பி வந்தவர்கள், அது நடக்காமல் போனதால் ஏற்பட்ட விரக்தியில் சோர்ந்து போனார்கள்; வேறு வேலைகளுக்குப் போய் விட்டார்கள்.

பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் இயக்கத்தில் ஆர்வம் கொண்டு எங்களுக்கு நிறைய உதவிகள் செய்து வந்தார். எத்தனைத் தோழர்கள் வந்தாலும் அவர்களைக் கல்லூரி விடுதியில் தங்கவைப்பது, அவரது ஊருக்கு வரும் தோழர்களைத் தங்க வைப்பது எனப் பல உதவிகள் செய்வார். அவரை இயக்கத் தலைமை ‘படிப்பை விட்டு விட்டு முழுநேர வேலைக்கு வா’ என்றழைத்தது. அவரும் வந்தவுடனே ‘அழித்தொழிப்பு செய்து விடலாம்’ என்ற நம்பிக்கையில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தார். மிக ஏழ்மையான குடும்பம் அவருடையது, பால் வியாபாரம் செய்துதான் அவர் தந்தை அவரைப் படிக்க வைத்தார்.

அந்தத் தோழரை ஏதாவது சிற்றூருக்கு அனுப்பினால் போன நான்காவது நாள் திரும்பி விடுவார். அவரால் அங்கு ஆட்களைத் திரட்ட முடியவில்லை. அழித்தொழிப்புக்குப் போகும் தோழர்களுக்குக் கருத்துகள், வழிமுறைகள் சொல்வதைத் தவிர இயக்கம் வேறு எந்த உதவியும் செய்வதில்லை. செலவுக்குப் பணமும் கொடுப்பதில்லை. நாங்களாகவே அங்குச் சென்று வேலை செய்து எங்களது தேவைகளை கவனித்துக் கொண்டு, அழித்தொழிப்புக்கு அங்குள்ள ஆட்களை தயார் செய்து வேலையை முடிக்க வேண்டும்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 296

தோழர் தியாகு எழுதுகிறார் : மா.இலெ.தான் சரி

 



(தோழர் தியாகு எழுதுகிறார் : ஆயுதப் போராட்டமா, உற்பத்திப் பெருக்கமா – தொடர்ச்சி)

கீற்று நேர்காணல் (1.4)


தோழர் தியாகு எழுதுகிறார்
மா.இலெ.தான் சரி

இதன் விளைவாக அப்பாவை மன்னார்குடி தாண்டி பெருகவாழ்ந்தான் ஊருக்கு மாற்றி விட்டார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல் குடும்பம் இடம்பெயரவில்லை. அப்பா அந்த ஊரிலேயே தங்கி வேலை பார்த்து வாரம் ஒருமுறை வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார். இது எனக்கு நல்வாய்ப்பாய் அமைந்தது. அப்பாவிற்குப் பயந்து தினமும் வீட்டிற்கு வர வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. அப்பா திங்கட்கிழமை காலை கிளம்பியதும் வெளியே புறப்படும் நான் அவர் வெள்ளிக்கிழமை வீடு திரும்புவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகத் தான் வீடு திரும்புவேன். அப்பாவிடமிருந்து அம்மா தொடர்ந்து என்னை காப்பாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது பேராசிரியர் இராதாகிருட்டிணனுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. என்னுடைய பெரும்பாலான நேரம் அவர் வீட்டில்தான் கழிந்தது. மாவோவின் அறிக்கைகளை மொழிபெயர்த்துத் துண்டறிக்கைகள் வெளியிடும் வேலையை அப்போது செய்தேன். Liberation பத்திரிகையில் சாரு மசூம்தாரின் பேட்டி வந்தது. அதில் அவர், ‘மாணவர்கள் படிப்பை விட்டுக் குடும்பத்தைத் துறந்து சிற்றூர்களுக்குச் சென்று, ஆயுதப் போராட்டத்தை உருவாக்க வேண்டும். அழித்தொழிப்புதான் நம்முடைய ஒரே போராட்ட வடிவம்” என்று கூறியிருந்தார். அந்தப் பேட்டியை படித்ததும் இதுதான் என்னுடைய வழி என்று நான் தீர்மானித்துக் கொண்டேன்.

அந்த நேரத்தில் உங்களுக்கு மா.பொ.க.(சி.பி.எம்.) கட்சியில் சேர வேண்டும் என்ற எண்ணமும் இருந்ததல்லவா?


67 தேர்தலில் தி.மு.க., சுதந்திரா கட்சிகளோடு மா.பொ.க.(சி.பி.எம்.) கூட்டணி வைத்திருந்தது. இராசாசியின் சுதந்திரா கட்சி மீது எனக்குக் கடுமையான வெறுப்பு இருந்தது. அவர்களோடு கூட்டணி வைத்ததால் மா.பொ.க.(சி.பி.எம்.) மீதும் கடுமையான கோபம் இருந்தது. இ.பொ.க.(சி.பி.ஐ.) இன்னொரு காங்கிரசு என்ற கருத்துதான் எனக்கு அப்போது இருந்தது. ‘உடனடியாக ஆயுதம் எடுத்து புரட்சிக்குத் தயாராக இருக்கும் மா.இலெ.(எம்.எல்.)தான் சரி’ என்று முடிவு செய்திருந்தேன்.

கீழவெண்மணிக் கொடுமை எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்குக் காரணமான ஆதிக்கக் கும்பலை உடனடியாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. அதற்கு அழித்தொழிப்புதான் சரி என்று அந்தப் பாதையை தேர்ந்தெடுத்தேன்.

மா.இலெ.(எம்.எல். கட்சியில் எப்படி இணைந்தீர்கள்?

எனக்கோ, இராதாவுக்கோ மா.இலெ.(எம்.எல்.) கட்சியுடன் நேரடியாகத் தொடர்பு இல்லை. முதலில் புதிய உலகம் என்ற பெயரில் ஒரு பத்திரிகை ஆரம்பிப்பது என முடிவெடுத்தோம். என்னை ஆசிரியராகக் கொண்டு பத்திரிகை தொடங்கலாம் என முடிவெடுத்து விண்ணப்பம் அனுப்பினோம். அதே நேரத்தில் ‘எங்களுக்கு இயக்கத்தோடு நேரடியாகத் தொடர்பு வேண்டும்’ என்று திருச்சியிலுள்ள அசுரன் என்ற தோழரிடம் பேசினோம்.

சில நாட்கள் கழித்து ஒரு நாள் நள்ளிரவில் தோழர்கள் அனந்தரங்கனும், ஏ.எம்.கேவும் எங்களை சந்திக்க வந்தனர். வந்தவுடனேயே ஏ.எம்.கே. அழித்தொழிப்பு குறித்து வகுப்பெடுக்க ஆரம்பித்தார். மறுநாளும் எங்களுடனேயே தங்கினார். எங்களின் அடுத்த வேலை பற்றிக் கேட்ட போது, பத்திரிகை ஆரம்பிக்கவிருப்பதாகக் கூறினோம். ஏ.எம்.கே. உடனே கோபமாகி, ‘நாடே பற்றியெரிந்து கொண்டிருக்கிறது. புரட்சி வந்து கதவைத் தட்டும் நேரத்தில் பத்திரிகை நடத்தப் போகிறீர்களா, அப்படியானால் புரட்சிக்கான தயாரிப்பையே இனிதான் தொடங்கப் போகிறீர்களா?’ என்று கேட்டார்.

‘அதெல்லாம் சரிப்படாது. உடனடியாகச் சிற்றூருக்குச் செல்லுங்கள்’ என்று கூறி ஒரு முகவரியையும் கொடுத்தார். நான் உடனடியாகக் கிளம்பியாக வேண்டும். ‘கடைசியாக ஒருமுறை வீட்டிற்குப் போய் விட்டு வந்து விடுகிறேன்’ எனக் கூறினேன். இராதாவும் அவரது மனைவி இந்திரா அக்காவும் என்னைக் கிண்டலாகப் பார்த்தார்கள். காரணம் அன்று வெள்ளிக்கிழமை. அப்பா ஊரிலிருந்து வந்திருப்பார். இந்திரா அக்கா, ‘இவரை நம்பியா புரட்சி பண்ணப் போகிறீர்கள்? இப்ப இவர் வீட்டுக்குப் போவார், அப்பாவைப் பார்த்ததும் கசாப்புக் கடை ஆடு மாதிரி நிற்பார், புரட்சியெல்லாம் மறந்து போய்விடும்’ என்று கிண்டலாகக் கூறினார்.

‘இல்லை நான் உடனடியாக வந்துவிடுவேன். அழித்தொழிப்புதான் சரி’ என்று உறுதியாகக் கூறினேன். ‘அப்பா வந்ததும் தேடுவார் அதனாலதான் வீட்டுக்குப் போகத் துடிக்கிறீங்க, உண்மையிலேயே அப்பா மேல பயம் இல்லைன்னா இன்னிக்கு வீட்டுக்குப் போகாதீங்க’ என்று ராதா கூற அன்றும் மறுநாள் சனிக்கிழமையும் நான் வீட்டுக்குச் செல்லவில்லை. அப்போது கல்லூரியில் தேர்வு வேறு நடந்து கொண்டிருந்தது. நான் ஒரே ஒரு தேர்வு எழுதியிருந்தேன். அதிலும் தாளை வாங்கி முழுவதும் மாவோவின் மேற்கோள்களை எழுதிக் கொடுத்து விட்டு வந்து விட்டேன். சனி, ஞாயிறு முடிந்து திங்கட்கிழமை காலையில் வீட்டிற்குக் கிளம்பினேன். அம்மா பதற்றமாக இருந்தார். ‘நீ ஏதோ மாவோ கட்சியில் இருக்கிறியாமே, அப்பாவுக்குத் தெரிஞ்சுப் போச்சு, உன்னுடைய நெடும் பேழையை(பீரோவை) உடைச்சிப் பார்த்துட்டார்’ என்று கூறினார். நான் உடனடியாக வீட்டிலிருந்து கிளம்பி பக்கத்து ஊரிலுள்ள என் அக்கா வீட்டிற்குப் போய்க் கொஞ்சம் பணம் வாங்கிக் கொண்டு மறுபடியும் வீட்டிற்கு வந்தேன். அப்பாவிடம் மாட்டிக் கொள்ளாமல் கிளம்பி விட வேண்டும் என்று சொல்லி என்னுடைய பையை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வரவும் அப்பா வந்து விட்டார். என்னுடைய கையை உறுதியாகப் பிடித்து வெளியே அழைத்துக் கொண்டு போனார். ‘உன்னுடையது எந்தக் கட்சி, உன்னுடைய தலைவர் யார்’ எனக் கேட்டார். ‘இருப்பது காங்கிரசு கட்சி, தலைவர் காமராசர்’ என்றேன். ‘பொய் சொல்லாதே , உன்னுடைய தலைவர் மாசேதுங்கு. மதுரை முத்து உள்ளூர் இரவுடி, மாசேதுங்கு உலகத்துக்கே இரவுடிஉன் கட்சியோட பெயரென்ன’ என்று கேட்டார். ‘மார்க்குசிய இலெனினிய கட்சி’ என்றேன்.

‘முதல்ல மார்க்சியக் கட்சி, அப்புறம் மார்க்குசிய இலெலினியக் கட்சி, அடுத்து என்ன மார்க்குசிய இலெனினிய மாவோயிளகா’ என்று கேட்டு விட்டு என்னுடைய தேர்வைப் பற்றி விசாரித்தார். எழுதியிருப்பதாகக் கூறினேன். அதைப் கல்லூரியில் வந்து விசாரிக்க வேண்டும் என்று கூறிவிட்டு என்னுடைய கையை இறுக்கமாகப் பிடித்து கல்லூரி செல்வதற்காக இழுத்துக் கொண்டு போனார். பேருந்திலும் என்னுடைய பிடியை விடவேயில்லை. இவரிடம் இருந்து எப்படியாவது தப்பி ஓடிவிடுவது என்று முடிவு செய்தேன்.

பேருந்தில் இருந்து இறங்கியதும் இரண்டு மிதிவண்டிகளை வாடகைக்கு எடுத்தோம். நான் அப்பாவிடம், ‘என்னுடைய ரிக்கார்டு நோட் நண்பனிடம் இருக்கிறது, அதை வாங்கிட்டு வருகிறேன், நீங்கள் பேராசிரியரிடம் பேசிக் கொண்டிருங்கள்’ என்று கூறிவிட்டு தப்பினேன். மிதிவண்டி நேரே இராதா வீட்டுக்கு போய், ‘இராதா வந்துட்டேன் பாருங்கள்’ என்றேன். அதன்பிறகு அப்பாவைப் பன்னிரண்டு வருடங்கள் கழித்துத்தான் பார்க்க முடிந்தது.

நக்சலைட்டு வாழ்க்கையின் ஆரம்ப கட்டம் எப்படி இருந்தது?

இராதா வீட்டிலிருந்து பெருமண்ணையூர் ஊருக்குச் சென்று தோழர் மாணிக்கத்தை சந்தித்தேன். உடனடியாக வெண்மணி செல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே குறிக்கோளாக இருந்தது. ஊரிலுள்ள ஐந்தாறு இளைஞர்களைத் தயார் செய்து வெண்மணிக்கு அழைத்துச் சென்றேன். அதற்குள் நான் வயல்வேலைகளை கற்றுக் கொண்டேன். சிற்றூர் மக்களுடன் பழகுவதற்கு அது மிகவும் முக்கியமானது. வெண்மணி கொலைக்குக் காரணமான கோபாலகிருட்டிண நாயுடுவின் வயலில் வேலை செய்தேன்.

இராமையாவின் குடும்பத்தினரையும் சந்தித்தேன். இயக்கத் தலைமையும் எனக்கு ஆதரவாக இருந்தது. உங்களால் முடிந்தால் கோபாலகிருட்டிணனை அழித்து விடுங்கள் என்று கூறினார்கள். கீழ வெண்மணியில் இருந்து திரும்பி மாணிக்கத்தைச் சந்தித்து அவரிடம் நான் கீழவெண்மணிக்கு சென்று வந்த விவரத்தைக் கூறினேன். அவர் சுவாரசியமில்லாமல் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேசியதில், அவர் அழித்தொழிப்புக்குத் தயாராக இல்லை என்பது புரிந்தது.

அதோடு, மாணிக்கம் ஊரிலுள்ள பெண்களிடம் ‘இவன் உங்கள் வீட்டு ஆண்களையெல்லாம் சிறைக்கு அனுப்பத் திட்டம் தீட்டுகிறான்’ என்று செய்தி பரப்பி விட்டார். என்னைக் கூப்பிட்டு சாப்பாடு போட்டவர்கள் என்னைக் கண்டதும் ஒதுங்கிப் போக ஆரம்பித்து விட்டார்கள். இவரை மீறி யாரும் வரப் போவதில்லை என்பது தெரிந்ததும் அவரது மகனை அழித்தொழிப்புச் செயலுக்குத் தயார் செய்தேன். இதற்குள் ஒரு வருடம் ஓடி விட்டது. நான் வேறொரு நடவடிக்கையில் சிறைக்குப் போய் விட்டேன் பிற்காலத்தில் கோபாலகிருட்டிணனன வேறொரு குழு அழித்தொழித்தது.

கீழவெண்மணி கோபாலகிருட்டிணனைக் கொலை செய்தது யார்? திராவிடர் கழகத்தினர் என்ற பேச்சும் இருக்கிறதே?

இல்லை. மா.இலெ.(எம்.எல்).கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் அதைச் செய்தவர்கள். அவர்கள் ஒரு காலத்தில் திராவிடக் கட்சிகளில் இருந்தவர்களாக இருக்கலாம். கீழத்தஞ்சையிலிருந்து நாகை செல்லும் சாலையில் ஒருபக்கம் இருப்பவர்கள் பொதுவுடைமைக் கட்சியாகவும், எதிர்ப் பக்கம் இருப்பவர்கள் திராவிடர் கழகத்தினராகவும்தான் பெரும்பாலும் இருப்பார்கள். இரண்டு அமைப்புகளுக்குமே அங்குப் பெயர் பறையன் கட்சி என்பதுதான்.

திராவிடர் கழகத்தினரும் இதே போன்று விவசாயத் தொழிலாளர் போராட்டங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள். திராவிட விவசாயத் தொழிலாளர் அமைப்பும் அந்த நேரத்தில் உதயமானது. அப்போது நாகைக்கு வந்த பெரியாரிடம் இதைப் பற்றிச் செய்தி சொல்லப்பட்டது. அதற்கு அவர் இதுபோன்ற காலித்தனங்களை நான் அனுமதிக்க முடியாது என்று கூறி விட்டார். அதனால் திராவிடர் கழகத்தில் இருந்து பல தோழர்கள் வெளியேறிப் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்தார்கள். தோழர் ஏ.சி..கே.வும் 1964 வரை திராவிடர் கழகத்தில் இருந்தவர்தான்.

(தோழர் தியாகுவின் அழித்தொழிப்பு நடவடிக்கைகள், சிறை வாழ்க்கை அனுபவங்கள் தொடர்பான உரையாடல் அடுத்த பகுதியில்)

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 295

புதன், 15 நவம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : ஆயுதப் போராட்டமா? உற்பத்திப் பெருக்கமா?

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : பொதுவுடைமைப் பாதைக்குத் திரும்பினேன்- தொடர்ச்சி)

கீற்று நேர்காணல் (1.3)

தோழர் தியாகு எழுதுகிறார்

 ஆயுதப் போராட்டமா? உற்பத்திப் பெருக்கமா?


அந்த நேரத்தில் தஞ்சையில் மூப்பனாரின் மாந்தோப்பில் ஒரு பயிலரங்கம் நடைபெற்றது. அதில் சி. சுப்பிரமணியம் பேசினார். உற்பத்திப் பெருக்கம்தான் சோசலிசத்திற்கான வழி என்பதுதான் அதன் சாறம். நிலச் சீர்திருத்தம்தான் முதலில் செய்ய வேண்டியது என நான் அவரிடம் வாதிட்டேன். அவர் சோவியத்து உருசியாவை ஒப்பிட்டுப் பேசினார். சோவியத்து உருசியாவில் எல்லாச் சீர்திருத்தத்திற்கு முன்பும் நிலச்சீர்திருத்தம் நடைபெற்றதாக நான் குறிப்பிட்டேன். நம் ஊரிலும் நிலச்சீர்திருத்தம் இருக்கிறதே என சி.சுப்பிரமணியம் பேசினார். இப்படியாக விவாதம் நீண்டு கொண்டே போனது.

நில உச்சவரம்பு 30 ஏக்கர்தான் ஆனால் ஆயிரம் ஏக்கர் வைத்துள்ளவர்கள் நம் ஊரிலேயே நிறைய பேர் இருக்கிறார்கள் நீங்களெல்லாம் சட்டத்தை ஏய்ப்பவர்கள்’ என்று கடுமையாக வாதிட்டேன். நான்கு சிருந்தும், இரண்டு பங்களாவும் வைத்திருப்பவர்களும் நில உச்சவரம்புச் சட்டத்தை மீறாதவர்கள்தானா என நான் கேட்டேன். (நான் குறிப்பிட்டது மூப்பனாரை, அவரும் அங்குதான் இருந்தார்.) கோபத்தில் சி.சுப்பிரமணியம் கூட்டத்தை விட்டு வெளியேறினார்.

மறுநாள் அந்தப் பயிலரங்கமே இரண்டுபட்டது. ‘ஆயுதப் போராட்டமா, உற்பத்திப் பெருக்கமாஇ எது சோசலிசத்திற்கான வழி?’ என்ற தலைப்பில் பட்டிமன்றமே நடைபெற்றது. அந்த முகாமில்தான் காங்கிரசின் பத்து அம்சத்திட்டம் குறித்து ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டேன். தஞ்சை இராமமூர்த்தி வெளியிட மரு. கோபி பெற்றுக் கொண்டார்.  என்னுடைய முதல் புத்தகம் அது. அன்று மாலை நிறைவாகக் காமராசர் பேச வேண்டும்.


அதற்கு முன்னதாகத் திருப்பூர் வின்செண்டு “கூட்டத்திலிருந்து சி.எசு. அவமானப்பட்டு வெளியேறியிருக்கிறார். காலையில் இருந்து காங்கிரசா, நக்குசலைட்டா என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று வருகிறது. நக்குசலைட்டு என்று சொல்பவரை ஆதரிப்பதற்கு இங்கு ஆட்கள் இருக்கிறார்கள்” என்று காமராசரிடம் போட்டுக் கொடுப்பது போல் பேசினார். காமராசர் என்னை அருகில் அழைத்துப் பேசினார். புத்தகத்தை வாங்கிப் பார்த்தார். அவரது உரையில் என்னைக் குறிப்பிட்டுப் பேசினார்,      

“தியாகு என்ன தப்பா சொல்லிட்டாருன்னேன், ஆயுதப் போராட்டம் வேணுங்கிறாருன்னேன், வேற வழியில்லாட்டி அதுதான் சரின்னேன், வச்சிருக்கவன் குடுக்க மாட்டான்னேன், ஆயுதப் போராட்டம் நடத்தினா நான் முதல்ல ஆயுதம் எடுப்பேன்னேன்’ என்று பேசினார். அங்கு கரவொலி அடங்குவதற்கு வெகுநேரம் ஆனது.

காமராசரிடம் உங்களைக் கவர்ந்த விசயம் எது?

அவருடைய ஆளுமைதான். யாரையும் அடக்கி விடும் அவரைக் கண்டு கட்சியில் அனைவருக்குமே ஒரு பயம் உண்டு. ஒருமுறை காங்கிரசு கூட்டத்தில் கண்ணதாசன் பேசினார், ‘47-67 இந்த இருபது ஆண்டுகளில் காங்கிரசுஎன்ன செய்து விட்டது என்று அண்ணா கேட்கிறார். காங்கிரசு ஆட்சிக்கு வந்தும் இருபது ஆண்டுகள் ஆகி விட்டன. அண்ணா இராணியம்மையை மணந்தும் இருபது ஆண்டுகள் ஆகி விட்டன, குழந்தை இல்லை என்பதற்காகக் கணவரை மாற்றி விடலாமா? என்று பேசினார். மேடையில் இருந்த காமராசருக்குக் கடுங்கோபம் வந்து விட்டது.

கண்ணதாசனிடம் இருந்து ஒலிவாங்கியை வாங்கி, ‘இப்படியெல்லாம் பேசக்கூடாதுன்னேன். பேசினதுக்கு உடனடியாக மன்னிப்புக் கேள், இல்லைன்னா இந்த இடத்தை விட்டு போயிடுன்னேன்’ எனக் கடுமையாக கோபித்துக் கொண்டார். கண்ணதாசன் அந்த இடத்திலேயே மன்னிப்புக் கேட்டார்.

 செயகாந்தனுடைய பேச்சும் காங்கிரசுகாரர்களால் வெகுவாக இரசிக்கப்பட்டது. குடித்து விட்டுத்தான் அவர் மேடையேறுவார். ஏறியதும் தாறுமாறாகப் பேசத் தொடங்குவார். வேலூரில் கோட்டை மைதானத்தில் ஒரு மாநாட்டின் நிறைவாக நடந்த பெரிய கூட்டத்தில் ஈ.வெ.கி. சம்பத்து பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய பேச்சை மேடையிலிருந்து காமராசர் இரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது கூட்டத்திற்குத் தாமதமாகச் செயகாந்தனும், கண்ணதாசனும் வருகிறார்கள்.

வந்தவர்கள் மேடையின் பின்வழியாக மேடையில் ஏறினார்கள். அவர்களைப் பார்த்ததும் கூட்டத்தில் சலசலப்பு கிளம்பியது. காமராசர் திரும்பிப் பார்த்தார். பயத்தில் கண்ணதாசனும், செயகாந்தனும் ஒரே தாவில் மேடையில் இருந்து கீழே குதித்து விட்டனர். காமராசர் கண்ணதாசனை அழைத்து, ‘ஏன் தாமதம்’ என்று கேட்டார்.

இரயில்வே கேட் பூட்டியிருந்தது, அதான்’ என்றார் அவர். ‘இரயில்வே கேட் பூட்ட முன்னாடி வந்திருக்கணும்னேன், இந்தக் கூட்டத்தில் நீங்க இரண்டு பேரும் பேச முடியாது திரும்பிப் போகலாம்னேன்’ என்றார். கூட்டத்தினர் ‘கண்ணதாசனும், செயகாந்தனும் பேச வேண்டும்’ என்று கூச்சலிட்டனர். மேடையில் இருந்த காமராசர் எழுந்து சென்று சம்பத்திடம் இருந்து ஒலிவாங்கியை வாங்கி, ‘அவங்க இரண்டு பேரும் பேச மாட்டாங்கன்னேன், நான் பேசப் போறேன்னேன், கேட்கிறவங்க கேட்கலாம், மத்தவங்க எந்திரிச்சிப் போகலாம்னேன்’ என்று கர்ச்சிக்க கூட்டம் அப்படியே அமைதியானது. செயகாந்தன் பயத்தில் மேடைப் பக்கமே வரவில்லை.


காங்கிரசில் நான் கலந்து கொண்ட கடைசி மாநாடு எடமேலையூரில் நடைபெற்றது. காங்கிரசு சார்பில் நடைபெற்ற சோசலிசக் கருத்தரங்கத்துக்கு பூண்டி வாண்டையார்தான் தலைமை வகித்தார். நான் காங்கிரசு நிருவாகிகளிடம் சோசலிசக் கருத்தரங்கிற்குப் பூண்டி வாண்டையார் வேண்டா எனக் கோரிக்கை வைத்தேன். அது நிராகரிக்கப்பட்டது. ஊரில் பாதிக்கு மேல் நிலங்களை வைத்துக் கொண்டு மக்களை ஆட்டிப் படைத்து வந்த நிலச்சுவான்தார் அவர்.
பேசுவதற்கான என் முறை வந்ததும் நான் எழுந்து, ‘சில பேர் வீட்டில் ஒரு பக்கம் காந்தி படமும், மறு பக்கம் நேரு படமும் வைத்து நடுவிலே இரட்டைச் சவுக்கு  வைத்திருக்கிறார்கள். (பூண்டி வாண்டையார் வீட்டில் அப்படித்தான் வைக்கப்பட்டிருக்கும். இரட்டைச் சவுக்கு என்பது பண்ணையடிமை முறையின் அடையாளம்) அந்த சவுக்குகள் யாருக்காக? இங்கே ஒரு பக்கம் பள்ளமாக இருக்கிறது. மறுபக்கம் மேடாக இருக்கிறது. பள்ளங்களை நிரப்ப வேண்டுமானால் மேடுகளை சரிக்க வேண்டும்’ என்று பூண்டி வாண்டையாரை குறிவைத்துத் தாக்கினேன். என்னுடைய அந்தப் பேச்சு அங்கிருந்த மக்களால் வெகுவாக இரசிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தோடு நான் மனத்தளவில் முழுமையாகக் காங்கிரசில் இருந்து வெளியேறி விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்து என்ன மா.பொ.க வா(சி.பி.எம்-ஆ), மா.இலெ.வா(எம்.எல்-ஆ), என்பதில்தான் எனக்குக் குழப்பம் இருந்தது. நண்பர்களோடு தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றன. மா.இலெ.(எம்.எல்)-இன் ஆயுதப் போராட்டங்களின் மீது எங்களுக்கு ஈர்ப்பு இருந்தது. மா.பொ.க.(சி.பி.எம்.) மக்களைத் திரட்டாமல் ஆயுதப் போராட்டம் சாத்தியமில்லை என்ற கருத்தை வைத்திருந்தது.


மனத்தளவில் இந்தக் குழப்பம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் மாணவர் காங்கிரசு மாவட்ட அமைப்பாளர் தேர்தல் வந்தது. என்னை நிற்கச் சொல்லி நண்பர்கள் வற்புறுத்தினார்கள். மா.பொ.க.(சி.பி.எம்.) தோழர்களும், ‘நீங்க தேர்தலில் நின்று கலகம் பண்ணுங்க’ என்று கூறினார்கள். போட்டியின்றித் தேர்ந்தெடுக்க நடைபெற்ற மாணவர் காங்கிரசு கூட்டத்திற்கு மூப்பனார் தலைமை வகித்தார்.


பட்டுக்கோட்டை இராசேந்திரன், மூர்த்தி, நான் என மூன்று பேர் போட்டியிடுவதாக இருந்தோம். மூப்பனார் ஒவ்வொருவரையும் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார். என்னிடம் பேசும் போது, ‘போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாகப் பட்டுக்கோட்டை இராசேந்திரன் தெரிவித்து விட்டார். கட்சியில் பெரும்பாலானவர்கள் மூர்த்தி வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே நீங்கள் விலகிக் கொண்டு நீங்களாகவே அவர் பெயரை முன்மொழிந்து விடுங்கள்’ என்று கூறினார். நானும் அப்படியே செய்தேன்.

நான் நக்குசலைட்டு ஆதரவாளன் என்பதால் என்னை விலக வைப்பதற்காக மூப்பனார் நிறைய வேலை செய்திருக்கிறார் என்பது பின்னர்தான் தெரிந்தது. அத்தோடு காங்கிரசில் இருந்து முற்றிலுமாக விலகி வெளியே வந்து விட்டேன். அப்போது நான் கல்லூரி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தேன். அந்த வருடம் மொத்தமே நான் ஏழு நாட்கள் தான் வகுப்புக்கு சென்றிருந்தேன். எனவே என்னால் தேர்வு எழுத முடியவில்லை. அடுத்த ஆண்டு தேர்வு எழுதுவதற்காகத் தினமும் கல்லூரிக்கு வந்து பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும் என்று கல்லூரி நிருவாகம் கூறி விட்டது.

இந்த நேரத்தில் நான் வலங்கைமானில் இருப்பது தி.மு.க. கட்சியினருக்குப் பிடிக்கவில்லை. தேர்தலுக்கு முன்பாக உரூபாய்க்கு மூன்று படி அரிசி போன்ற பல திட்டங்களை அவர்கள் பெரிய அளவில் விளம்பரப்படுத்தியிருந்தார்கள். ஆனால் அவை தேர்தலுக்குப் பிறகு நிறைவேற்றப்படவில்லை. ‘அண்ணாத்துரை அண்ணாச்சி மூணு படி என்னாச்சி!’ போன்ற வாசகங்களை தட்டியில் எழுதி ஊர்ப் பொதுவிடத்தில் வைத்து விடுவேன். இது தி.மு.க. கட்சியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

(தொடரும்)

தோழர் தியாகு
தாழி மடல் 295

செவ்வாய், 14 நவம்பர், 2023

இலக்குவனார் பிறந்த நாளும் உலகத்தமிழ் நாளும் : இணைய உரையரங்கம்

 

     14 November 2023      அகரமுதல



நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.(திருவள்ளுவர், திருக்குறள் 28)

கார்த்திகை 03, 2054 * ஞாயிறு காலை 10.00 *19.11.2023

உலகத்தமிழ் நாள்

இலக்குவனார் 114 ஆவது பிறந்த நாள்

பெருமங்கல விழா

இணைய உரையரங்கம்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை:  கவிஞர் தமிழ்க்காதலன்

கவியரங்கம்:

தலைமை:  பாவேந்தர் விருதாளர் கவிஞர் கண்மதியன்

கவிஞர் முருகையன்***கவிஞர் தேனி இளங்குமரன்***

கவிஞர் தமிழ்க்காதலன்

உரைஞர்கள்:

முனைவர் இந்திரா சவகர்   ***  தோழர் மகிழன்

நிறைவுரை: குமுகாயப் போராளி தோழர் தியாகு         

நன்றியுரை : மயிலை இளவரசன்




தோழர் தியாகு எழுதுகிறார் : பொதுவுடைமைப் பாதைக்குத் திரும்பினேன்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : நக்குசலைட்டு பாதைதான் சரி என்று முடிவெடுத்தேன் – தொடர்ச்சி)

கீற்று நேர்காணல் (1.2)

தோழர் தியாகு எழுதுகிறார்

பொதுவுடைமைப் பாதைக்குத் திரும்பினேன்

குத்தூசி குருசாமி போன்றவர்கள் பெரியாரிடமிருந்து பிரிந்து வந்து சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தார்கள். அதன் முதல் மாநாட்டில் விசயவாடா கோரே போன்றவர்களும் கலந்து கொண்டார்கள். அமீர்சானோடு நானும் அதில் கலந்து கொண்டேன். அதில் இலெனின், மார்க்குசு போன்றோரின் புத்தகங்கள் இருபத்தைந்து பைசாவிற்கு விற்கப்பட்டது. மார்க்சியத்தோடான முதல் அனுபவம் அப்படித்தான் ஏற்பட்டது. [அமீர்சான் வீட்டில்தான் காரல் மார்க்குசு படம் பார்த்தேன். “காட்டுக்கு ஒரு சிங்கம், உலகத்துக்கு ஒரு காரல் மார்க்குசு” என்று சான் அவரை எனக்கு அறிமுகம்  செய்தார்.]

அப்போதுதான் நமக்கான அரசியல் எது என்கிற கேள்வி ஏற்பட்டது. அமீர்சான் கம்யூனிசம்தான் சரி என்றார். முழுவதும் அரசியல் கண்ணோட்டத்தோடு செயல்படுவது அவர்கள் மட்டும்தான் என்பார். ஆனாலும் இ.பொ.க.(சி.பி.ஐ.) மீது அவருக்கு வெறுப்பு இருந்தது. காங்கிரசின் வால் போல் அவர்கள் செயல்படுவதாகக் குறை கூறுவார்.

ஆனால் நீங்கள் காங்கிரசில் இணைந்து நீங்கள் பணியாற்றினீர்கள் அல்லவா?

1967 தேர்தல் நெருங்கும் நேரம். அமீர்சான் பணிமாற்றம் காரணமாக வேறு ஊருக்குச் சென்று விட்டார். வேறு பல காங்கிரசு நண்பர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அப்போது காங்கிரசாரை விட, காங்கிரசைப் பெரியார் அதிகமாக ஆதரித்து பேசிக் கொண்டிருந்தார்.

என்னுடைய நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் முதலில் காங்கிரசை ஆதரித்து ஒரு பொதுக் கூட்டத்தில் பேசினேன். தொடர்ச்சியாகப் பொதுக் கூட்டங்களில் பேச அழைப்பு வந்தது. 67 தேர்தல் தோல்விக்குப் பிறகு தேசிய மாணவர் தமிழ் வளர்ச்சிக் குழு என்ற அமைப்பைக் காமராசர் ஆரம்பித்தார். தஞ்சை இராமமூர்த்தி தலைவராகவும், வாழப்பாடி ராமமூர்த்தி பொருளாளராகவும் இருந்தனர்.


அதன் முதல் மாநாட்டில் பேசுவதற்காகத்தான் நான் முதன்முதலாகச் சென்னை வந்தேன். பெருந்தலைவர் காமராசரோடு சம்பத்து, தமிழ்வாணன், கண்ணதாசன், செயகாந்தன், பாலதண்டாயுதம்  போன்ற பலர் அதில் கலந்து கொண்டனர். அப்போது எனக்கென்று தனியாக மொழிக் கொள்கை எதுவும் கிடையாது. ‘இந்தியாவிற்கு இந்தி, தமிழ்நாட்டிற்குத் தமிழ், உலகத்திற்கு ஆங்கிலம்’ என்கிற மும்மொழிக் கொள்கைதான் சரி என்று கருதினேன். அதைத் தாண்டி மொழிப்பற்று என்பது போலியானது’ என்கிற அமீர்சானின் கருத்தை நான் அந்த மாநாட்டில் பேசினேன்.

மொழியின் காரணமாகத் தேர்தலில் காங்கிரசு தோற்று விட்டதாக கருதப்பட்ட நேரமது. எங்களுக்கு மொழிப்பற்று இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக நடைபெற்ற கூட்டத்தில், ‘மொழி என்பது விழி அல்ல, காலில் கிடக்கும் செருப்பு போன்றது. வீட்டிற்குப் போனதும் கழட்டி விடலாம். தேவைப்பட்ட இடத்தில் தேவைப்பட்ட நேரத்தில் மாட்டிக் கொள்ளலாம்’ என நான் பேச, மேடையில் இருந்த காமராசர் உட்பட அனைவரும் அதிர்ந்து போய் விட்டனர்.

1965 மொழிப்போர் காரணமாகத்தான் காங்கிரசு தோற்றுவிட்டது என்று கருதி, நாங்களும் மொழிப் பக்கம்தான் எனக் காட்டுவதற்காக நடத்தப்பட்ட மாநாடு அது. மாநாட்டில் என் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் என்னுடைய பேச்சு இரசிக்கப்பட்டது. அதன்பிறகு எங்கு மாநாடு நடந்தாலும் காமராசர் முதலில் என்னைத்தான் பேசச் சொல்வார். அந்த அளவுக்கு அவர் என் பேச்சை விரும்பிக் கேட்கலானார்.

அதே போல்தான் மூப்பானாரும். என்னைப் பிரசங்கி என்றுதான் அழைப்பார். நான் அவரிடம் வேடிக்கையாகப் பல முறை கேட்டதுண்டு, ‘நாங்கதான் தலைவரா இருப்போம். நீங்க பிரசங்கியா இருங்கன்னு சொல்றீங்க, அப்படித்தானே?’. எனக்கு அப்போதே காங்கிரசு மீது விமர்சனம் இருந்தது. இது ஒரு பணக்காரக் கட்சி, பெயருக்குத்தான்  காமராஜரைப் பயன்படுத்துகிறார்கள் என்று தோன்றியது. ஆனாலும் வாழப்பாடி இராமமூர்த்தி மீது பெரிய மரியாதை இருந்தது.

காங்கிரசில் அவர் ஒருவர்தான் இடதுசாரிச் சிந்தனையோடு செயல்படுபவர். 67 தேர்தலில் பெரியார் காமராசரைத் தீவிரமாக ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். விருதுநகரில் காமராசர் தோற்ற போது காங்கிரசாரை விட அதிகம் அதிர்ச்சி அடைந்தது திராவிடர் கழகத்தினர்தான். தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு பெரியாரைத் திருச்சியில் சந்தித்த அண்ணா, ‘இந்த ஆட்சி உங்களுக்கு சமர்ப்பணம்’ என்று சொன்னவுடன் ‘இப்போதுதான் திராவிட ஆட்சி மலர்ந்திருக்கிறது’ என்று அண்ணாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார் பெரியார்.

பெரியாரின் இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்து திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டவர்தான் வாழப்பாடி இராமமூர்த்தி. அப்போது மாணவர்கள் அதிகம் காங்கிரசில் இணைந்து கொண்டிருந்தனர். அவர்கள் தொடர்ச்சியாக மேடைகளிலும் பேச வைக்கப்பட்டனர். தமிழ்வழிக் கல்வி குறித்து நான் அதிகம் மேடைகளில் பேசிய காலகட்டம் அது. என்னுடைய இந்தப் பேச்சுகளை காமராசர் விரும்பிக் கேட்பார்.

‘வெள்ளி நாக்கு’ (SILVER-TONGUED) சீனிவாச சாத்திரியின் ஊர் வலங்கைமான்தான். நானும் வலங்கைமானைச் சார்ந்தவன் என்பதால் காமராசர் என்னைச் சாத்திரி என்று அழைத்ததுண்டு. காமராசருக்குத் தமிழகத்தில் உள்ள சிற்றூர்கள் குறித்து அவ்வளவு விவரங்கள் தெரியும். எந்த வழியில் போனால் சீக்கிரம் போக முடியும், எந்தெந்த ஊரி்ல் எந்தப் பேருந்து நிற்கும், எங்குத் தொடர் வண்டி போகும் போன்ற அனைத்து விவரங்களும் அவருக்குத் தெரியும். அவருடன் கடைசியாக கொள்ளிடக் கரையில் உள்ள நாயகனைப் பிரியாள் என்ற ஊரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன்.


என்னுடன் கல்லூரி மாணவர் சம்பத்தும் வந்திருந்தார். அன்று காமராசர் வேறு ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் முதலில் பேசிவிட்டுக் கிளம்புவதாகத் திட்டம். அவர் பேசி முடித்ததும் கூட்டத்தைப் பார்த்து, ‘எனக்குப் பிறகு கல்லூரி மாணவர்கள் பேசுவார்கள், அவர்கள் பேச்சைக் கேட்டபிறகு தான் நீங்கள் போக வேண்டும்’ என்று கூறிவிட்டு வண்டியை நோக்கிச் சென்றார். அவருக்குப் பின்னாலேயே மொத்தக் கூட்டமும் கலைய ஆரம்பித்தது.

காமராசருக்குக் கோபம் வந்து விட்டது. வேகமாகத் திரும்பி மேடையேறி ஒலிவாங்கியை வாங்கியதும் கூட்டம் திரும்பி வந்தது. ‘போகக் கூடாதுன்னேன், எல்லாரும் போயிட்டீங்கன்னேன், இப்ப நான் பேச்சை கேட்கப் போறேன்னேன், நீங்க யாரும் கேட்கக் கூடாதுன்னேன்’ என்றபடி மேடையில் அமர்ந்து விட்டார். கூட்டமும் மௌனமாக அமர்ந்தது. நான் பேசிக் கொண்டிருக்கும்போதே காமராசர் எழுந்து போனார். கூட்டம் கலையாமல் அப்படியே அமைதியாக கடைசிவரைக்கும் இருந்தது. அதுதான் நான் அவரை சந்தித்த கடைசிக் கூட்டம்.

நீங்கள் பொதுவுடைமைப் பாதைக்குத் திரும்பியது எப்படி?

அப்போது காங்கிரசு கட்சிக்குள் பல அணிகளாக மோதல் உருவானது. நான், வாழப்பாடி இராமமூர்த்தி, பசுபதி போன்றோர் சோசலிசுட்டு அணி. இதேபோல் பல அணிகள் உருவானது. எனக்கு அப்போதே பொதுவுடைமைக் கட்சி நண்பர்களுடன் தொடர்பு இருந்தது. தஞ்சையில் ஒரு பகுதியில் குடிசைகள் தொடர்ச்சியாக எரிவது ஒரு சிக்கலாக இருந்தது. மதுரையில் இருந்து இலட்சுமிகாந்தன் என்பவர் அந்தப் பகுதியில் ஒரு கூட்டத்தில் பேசினார். பொதுக்கூட்ட மேடைக்கு அருகில் மா.பொ.க.(சி.பி.எம்.) கட்சியினரால் மார்க்குசு, ஏங்கெல்சு, இலெனின், ஃகோசிமின் வாழ்க என்ற சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்த இலட்சுமிகாந்தன் எங்கோ பிறந்த இலெனினுக்கு இங்கென்ன வேலை, குடிசைகளைக் கொளுத்துவது மா.பொ.க.(சி.பி.எம்மின்) வேலை என்று பேசினார்.

அந்தக் கூட்டத்தில் நான் கடைசியாகப் பேசினேன். ‘எங்கோ பிறந்த இலட்சுமிகாந்தன் இங்கு வந்து பேசுகிறார். இங்கு பிறந்த நேரு இசுபெயின் உள்விவகாரத்தில் தலையிடுகிறார் போன்ற பல செய்திகளைக் கூறி விட்டு இதுபோன்ற செய்திகளில் சர்வதேசப் பார்வை வேண்டும். இப்படிக் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்களை வைத்துக் கொண்டு சோசலிசம் காண முடியாது. பொதுவுடைமையர் ஏழைகளின் குடிசைகளைக் கொளுத்துவதாக இலட்சுமிகாந்தன் பேசினார். பொதுவுடைமையர் கொளுத்துவார்கள், பங்களாக்களைக் கொளுத்துவார்கள், தானியப் போர்களைக் கொளுத்துவார்கள். ஒருபோதும் ஏழைகளின் குடிசைகளைக் கொளுத்த மாட்டார்கள்’ என்று பேசினேன்.


கூட்டத்தில் என்னுடைய பேச்சுக்கு நல்ல கரவொலி. கட்சிக் கூட்டத்தைப் பொதுவுடைமைக் கூட்டம் போல் நடத்துவதாக மூப்பனார் என்னிடம் குறிப்பிட்டார். மாணவர் காங்கிரசு சார்பில் மார்க்குசு பிறந்த நாள் கூட்டம் நடத்தினோம். இப்படி கட்சிக்குள் எனக்கு வேறு ஒரு முத்திரை சுலபத்தில் விழுந்தது.

(தொடரும்)

தோழர் தியாகு
தாழி மடல் 295