வெள்ளி, 1 டிசம்பர், 2023

தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 2/4 – குலோத்துங்கன்

 





(தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 1/4 – குலோத்துங்கன்-தெ்ாடர்ச்சி)

உதிரும் தமிழ் மலர்கள் 2/4


பக்தி இயக்கம் எழுந்தபோது சமயக் காழ்ப்பின் காரணமாகப் பல ஏடுகள் எரிக்கப்பட்டன என்ற வரலாறு உண்டு. ஆனால் சமண சமயத்தைத் தழுவிய மக்களின் வீடுகளில் அத்தகைய ஏடுகள் பாதுகாக்கப்பட்டு வந்தன. பிற்காலத்தில் ஆதீன மடங்களிலும், சமண சமயத்தின் மீது இருந்த காழ்புணர்ச்சி நீங்கிச் சமண சமய இலக்கிய ஏடுகளையும் பாதுகாத்தார்கள் என்பது வரலாறு..

ஐரோப்பியர் ஆட்சிக் காலத்தில் பல ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த ஓலைச் சுவடிகளைச் சேகரித்துப் பாதுகாத்தார்கள் என்பதும் தனி வரலாறு. இவர்களுள் முக்கியமானவர் காலின் மெக்கன்சி ஆவார். தற்காலத்திலும் சுவடிகள் திரட்டும் பணியினைப் பல்வேறு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. தமிழ்ப் பல்கலைக்கழகம் பல இடங்களில் உள்ள ஓலைச் சுவடிகளைப் பெற்றுப் பாதுகாத்து வருவதுடன் தனி நபர்களிடமிருந்தும் விலை கொடுத்தும் ஓலைச்சுவடிகளை வாங்கிச் சேகரித்து வருகின்றார்கள். சென்னையில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், ஆசியவியல் ஆய்வு நிறுவனம் போன்ற பல்வேறு அமைப்புகளும் ஓலைச்சுவடிகள் திரட்டும் பணியில் தற்போது ஈடுபட்டுப் பல அரிய தமிழ்ச் சுவடிகளை அழிவிலிருந்து காத்து வருகின்றன.

ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கும் நிறுவனங்களில் ஆசியவியல் ஆய்வு நிறுவனம் மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனமே ஓலைச் சுவடிகளை சேகரித்து நூலாகப் பதிப்பிக்கும் போற்றுதலுக்குரிய பணியைச் செய்து வருகிறது.

முனைவர் சி. சான் சாமுவேல் 1982இல் ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தை ஏற்படுத்தினார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யூர் என்ற சிற்றூரில் பிறந்தார். குமரி மாவட்டத்தில் உள்ள ஊர்களில் மேற்கத்திய நாட்டு மொழி, கலாச்சாரம் அதிகமாகப் பாதித்த ஊர்களில் நெய்யூர் முதன்மையான இடத்தைப் பிடித்தது. தமிழ் மொழியின் தொன்மையான கலை இலக்கியம் பண்பாடு அனைத்தும் ஊர் மக்களின் நினைவுத் திரையில் சீரழிந்த சிறப்பிலந்த ஓவியங்களாக முடங்கி விட்டன. ஆங்கிலம் பேசத் தெரிந்தவன் மட்டுமே அறிஞன், மேற்கத்திய கலாச்சாரத்தில் வளர்ந்தவன் மட்டுமே உயர்ந்த நாகரிக மதிப்பீடுகளைக் கொண்டவன் என்ற நெய்யூர் மக்களின் மனப்போக்கு மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டு நின்றவர் திரு சி. சான் சாமுவேல் என்பது வியக்கத்தக்கது..

பள்ளிப் படிப்பை முடித்து நாகர்கோவிலில் உள்ள இசுகாட்டு கிறித்தவக் கல்லூரியில் சேர்ந்தார். தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தார். அதனால் மற்றக் கல்லூரி மாணவர்களை விட அதிகமாகத் தமிழை பகிரும் வாய்ப்பு கிட்டியது. தமிழ்ப் பேராசிரியர் திரு சேது இராமு ஐயர் வகுப்பில் பாடம் நடத்தும் போது உ. வே. சாமிநாத ஐயர் எழுதிய ”உதிர்ந்த மலர்கள்” என்ற கட்டுரையைப் பாடமாக நடத்தி இருக்கிறார். அந்தக் கட்டுரையில் பத்துப் பாட்டுள் ஒன்றான குறிஞ்சிப் பாட்டினை ஓலைச் சுவடியிலிருந்து பதிப்பிக்க முனைவர் உ வே சாமிநாதையர் அவர்கள் மேற்கொண்ட கடினமான முயற்சிகளை மாணவர்களது உள்ளங்கள் கவரும் வண்ணம் விளக்கி இருந்தார். ஆனால் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஆங்கிலக் கலாசார மோகம் ஆட்டிப்படைத்து இருந்தது. பேராசிரியர் திரு சேது இராமு ஐயர் வேட்டியுடனும் சிப்பாவும் குடுமியமாக கல்லூரிக்கு வந்தது மாணவர்களின் கலாட்டா கேலி பேச்சுகளுக்கு உள்ளானார். அதனால் பேராசிரியரைப் பற்றிய கேலிப் பேச்சுகளை வெறுத்து ஒதுக்கிய திரு சான் சாமுவேல் அவர்கள் பேராசிரியரின் பாடத்திற்கு உள்ளே கவனத்தை செலுத்தினார்.. பேராசிரியரின் பாடம் பச்சை மரத்தில் பதிந்த பசுமரத்தாணி போல் மாணவர் சான் சாமுவேலின் மனதில் ஆழமாகப் பதிந்தது. குறிஞ்சிப் பாட்டில் 99 மலர்கள் பற்றிய பட்டியல் இசையோடும் அருமையான பெயர் அடைகளோடும் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் 99 மலர்களைக் குறிப்பிட்ட ஏடுகள் முதல் முயற்சியில் கிடைக்கவில்லை. இதில் நான்கு மலர்களின் பெயர்கள் ஏடுகளில் இல்லை. இந்த நான்கு மலர்களின் பெயர்களை அறிந்து கொள்ள அந்த ஏடுகளைத் தேடி உ.வே.சா. அலைந்தார். அயராத முயற்சியில் அந்த நான்கு மலர்களின் பெயர்களைத் தாங்கிய ஏடுகளும் கிடைத்தன. ஆனால் குறிஞ்சிப்பாட்டில் இந்த நான்கு மலர்களும் சேர்த்து மொத்தம் 99 மலர்களின் பெயர்கள் மட்டுமா உள்ளன? மேற்கொண்டு மலர்கள் பெயர் உள்ளதா? என்று ஆய்விற்காக மீண்டும் ஏடுகளைத் தேடி அலைந்தார். தமிழ்த் தாத்தா உவேசா ஓலைச்சுவடிகளைத் தேடி அலைந்து கிடைத்த ஓலைச்சுவடிகளைப் பாதுகாத்து அச்சுப் படியாக நூலாகப் பதிப்பித்து வெளியிட்டது போன்ற பணிகள் பச்சை மரத்தில் பதித்த பசுமரத்தாணி போல் மாணவர் சான் சாமுவேலின் மனத்தில் ஆழமாகப் பதிந்தது.

நாமும் ஓலைச்சுவடிகளைத் தேடி சேகரித்தால் என்ன? என்ற ஆர்வம் திரு சி. சான் சாமிவேல் என்ற அந்த மாணவருக்குத் தலைதூக்கியது. பின்னர் பி.ஏ இளங்கலை பட்டத்தை நாகர்கோவில் இந்து கல்லூரியில் முடித்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ தமிழ் இலக்கியம் சேர்ந்து படித்துக் கொண்டிருந்த காலத்தில் தான் ஓலைச்சுவடிகளை தேடிச் சேகரிக்க வேண்டும் என்ற தனது எண்ணங்களுக்கு வடிவத்தை திரு. சான் சாமுவேல் உண்டாக்கினார். மேலும் இதே காலகட்டத்தில் தான் உ.வே. சாமிநாதையருக்கு எந்த வகையிலும் குறையாமல் விளம்பரம் இன்றி யாழ்ப்பாணத்து தமிழ்ப் புலவர்களின் ஓலைச்சுவடிகளைத் தேடி சேகரித்து பாதுகாக்கும் அளப்பரிய பணி என் பார்வைக்கு வெளிப்பட்டது என்று திரு. சான் சாமுவேல் தனது நூலில் பதிவு செய்கிறார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ படித்து முடித்தவுடன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

மதுரையில் அமெரிக்கன் கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில் நான்காம் தமிழ்ச் சங்கம் செயல்படுகின்ற செந்தமிழ்க் கல்லூரிக்குச் சென்றும், ஓலைச் சுவடிகளைப் பார்வையிட்டார்.

ஆனால் தொடர்ச்சியான ஓலைச் சுவடிகளைச் சேகரித்துப் பாதுகாக்கும் தனது தலையாய கனவை மெய்பிக்கும் முயற்சியிலிருந்து பின்வாங்கத் தொடங்கினார். இவரது பார்வை ஆங்கில இலக்கியம் கற்பதில் சென்றது. பெரும்பகுதி நேரத்தை முதுகலை ஆங்கில இலக்கியம் படிப்பதில் செலவிட்டார்.

இவர் தனது மனத்தில் தேக்கி வைத்திருந்த கனவுகள் இவரை ஊக்கப்படுத்தி சென்னையில் உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் பணியில் சேரத் தூண்டுகோலாக இருந்தன. சுவடி பதிப்பித்தல், சுவடியியல். தொடர்பான வகுப்புகள் நடத்துதல் ஆகிய முயற்சிகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் செயல் வடிவம் பெறத் தொடங்கின.

இங்கே பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில்தான் “ஆசியவியல் ஆய்வு“ நிறுவனம் என்ற ஓர் ஆராய்ச்சி நிறுவனத்தை அமைப்பதற்குரிய திட்டங்கள் அவரது மனத்தில் செயல் வடிவம் கொண்டன. தமிழ் ஓலைச் சுவடிகளின் ஆய்வில் ஈடுபட்டு வியத்தகு சாதனைகள் புரிந்து உலக நாடுகளின் பாராட்டுதலைப் பெற வேண்டும் என்ற மிகையான கனவு “ஆசியவியல் ஆய்வு” நிறுவனத்திற்கான திட்டமிடுதலைத் தூண்டினாலும், ஓலைச் சுவடிகள் ஆய்வு பற்றிய துறையில் திரு சான் சாமுவேல் அவர்களுக்குத் தெளிவு ஏற்படவில்லை. உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த திரு மு.கோ. இராமன், பேராசிரியர் மு.சண்முகம் பிள்ளை ஆகியோர் இவருக்குத் தெளிவு ஏற்படுத்தி நெறிப்படுத்தினார்கள்.

முனைவர் உ.வே.சாமிநாதையர் நூலகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமிக்க திரு.மு.கோ. இராமன் என்ற தமிழ் அறிஞர் தமிழ் ஓலைச் சுவடிகள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் தெரிந்து வைத்திருந்தார். ஓலைச் சுவடிகள் அச்சு நூல்களாகப் பதிப்பிக்கப்படாமல் கரையானின் கொடிய வாய்க்கும், இயற்கையின் சீற்றத்திற்கும், மனிதனின் மூட நம்பிக்கைக்கும் நாள்தோறும் இரையாகிக் கொண்டிருக்கும் அவலநிலையைத் திரு மு.கோ.இராமன் அவர்கள் திரு சான் சாமுவேல் அவர்களிடம் பேசித் தமிழ் மொழியின் அறிவுச் செல்வங்கள் அழிவதைப் பற்றிய அவலநிலையை உணர்த்தினார்.

திரு சான் சாமுவேல் அவர்களது மனத்தில் விதைத்த விதையானது விருட்சமாகத் தொடங்கியது. தமிழ் ஓலைச் சுவடிகளைப் “பாதுகாத்தல்” , “படியெடுத்தல்” , “பதிப்பித்தல்”, ”மொழிபெயர்த்தல்”, மூல ஏடுகளை ஒப்புநோக்கி ஆய்தல் என்ற நிலையில் பன்முக ஆய்வுத் திட்டமொன்றை மிக விரிவாகத் திரு சான் சாமுவேல் தயாரித்தார். இதன் பின்னர் 1982ஆம் ஆண்டு “ஆசியவியல் ஆய்வு” நிறுவனம் பிறப்பெடுத்தது.

(தொடரும்)
குலோத்துங்கன்தோழர் தியாகு
தாழி மடல் 304


வியாழன், 30 நவம்பர், 2023

திருக்குறள்மாநாடு – நூற்பதிவு நாள் நீட்டிப்பு

 




ந்தாவது திருக்குறள் மாநாடு

பங்குனி 23 -25, 2055 **** 5-7/04/2024

சிகாகோ

நூற்பதிவு நாள் நீட்டிப்பு

அன்பு கெழுமிய திருக்குறள் ஆய்வுப்படைப்பாளர்களுக்கு

வணக்கம்.

மேற்குறித்தவாறான திருக்குறள் மாநாட்டில் புதியதாகத் திருக்குறள் நூல் படைப்பாளர்களுக்கு வெளியீட்டு நிகழ்ச்சியும் முன்னரே திருக்குறள் தொடர்பான நூல் வெளியிட்டர்களுக்கு நூலறிமுக நிகழ்ச்சியும் நடைபெறும் என்றும் உரிய பதிவை 30.11.23 ஆம் நாளுக்குள் மேற்கொள்ளுமாறு தெரிவித்திருந்தோம்.

தத்தம் பெயர், நூற்பெயர் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். மாநாட்டுச் செய்திகளுக்கான தளம் : https://thirukkuralconference.org

எனவும் தெரிவித்துஇருந்தோம்.

பலரும் ஆர்வத்துடன் பங்கேற்பதாகத் தெரிவித்தும் சிலர்தான் பதிவிற்கான விவரங்களைத் தெரிவித்துள்ளனர். பங்கேற்பு ஆர்வலர்கள்

நவமபருக்குள் நூலை அச்சிடமுடியவில்லை எனத் தெரிவிக்கின்றனர். அறிக்கையைத் தவறாகப் புரிந்து கொண்டதால் இங்ஙனம் கருதுகின்றனர்.

பழைய நூல்களாயின் வரும்    மாசி 29, 2055 / மார்ச்சு 12, 2024 ஆம் நாளுக்குள்ளும்

புதிய நூல்களாயின்  வரும் பங்குனி 13, 2055 / மார்ச்சு 26, 2024  ஆம் நாளுக்குள்ளும்   கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்

எனப் போதிய கால வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பதிவுதான் நவம்பர் 30 ஆம் நாளுக்குள் மேற்கொள்ள வேண்டும்.

எனவே, பதிவு நாளை கார்த்திகை 29, 2054 / 15.12.2023 வரை நீட்டித்துள்ளோம். நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.

thirunool50@gmail.com மின்வரிக்கு நூல் பெயர், நூலாசிரியர் பெயர் தொடர்பான விவரங்களைத் தெரிவிக்க வேண்டுகிறோம்.

அன்புடன்

இலக்குவனார் திருவள்ளுவன்

பொறுப்பாளர் , நூலரங்கம்

ஐந்தாவது திருக்குறள் மாநாடு

‘குறள்நெறி ஓங்கின் குடியரசு ஓங்கும்!



இரண்டாம் தமிழ்ப் புத்தகத் திருவிழா 2023, பெங்களூரு, சிறந்தநூல் போட்டி முடிவுகள்

 




இரண்டாம் தமிழ்ப் புத்தகத் திருவிழா 2023

பெங்களூரு

சிறந்தநூல் போட்டி முடிவுகள்

இரண்டாம் தமிழ்ப் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கருநாடக மற்றும் தமிழக தமிழ் இலக்கியவாதிகள், பதிப்பாளர்களுக்காக நடத்தப்பட்ட சிறந்த தமிழ்நூல் போட்டியில் சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் வருமாறு:

முதல் பரிசு: உரூ.5,000

சங்க இலக்கியம் ஒரு புதிய கண்ணோட்டம்

-பேரா.பாலசுந்தரம் இளையதம்பி

இரண்டாம் பரிசு: உரூ.3,000

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேரா.முனை.ப.மருதநாயகம்

-இலக்குவனார் திருவள்ளுவன்

மூன்றாம் பரிசு: உரூ.2,000

அலைவீசும் நிலாவெளிச்சங்கள்

-கவிஞர் கே.சி.இராசேந்திரபாபு

சிறப்புப்பரிசு: உரூ.2,000

கனவொளியில் ஒரு பயணம்

-செய்சக்தி

ஊக்கப்பரிசு:  உரூ.1000 வீதம்

1. 100 சிறுவர் கதைகள்-எம்.சி.ஞானபிரகாசம்

2. நிலாச்சோறு இலட்சுமி-குமரேசன்

3. வண்ணமுகங்கள்-விட்டல்ராவு

4. தெய்வீக ஆறுகளும் பெருமைகளும்-பேரா.சொ.மீ.சுந்தரம்

5. புலம்பெயர் தமிழர்கள் வாழ்வு-இருப்பு-படைப்பு-பேரா.ச.சீனிவாசன்

6. தமிழ் இலக்கியங்களில் பயனுள்ள சமூகச் சிந்தனைகள்-பேரா.முனை.பெ.கணேசு

7. புத்தரின் அற்புதமான அறிவுரைகள்-பேரா.முனை.பெ.கணேசு

8. தவசு-இளங்கோ. கண்ணன்

9. உலகின் முதல்மொழியான தமிழ் மேலும் செழிக்க வழிகள்-பேரா.பெ.சுப்பிரமணியனார்

10. கவியரசர் ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி-செய்சக்தி

11. எழு ஞாயிறு எழுகவே-பா.மூர்த்தி

12. நீங்கள் நிராகரித்த நான்-ஆர்க்காடு இராசா முகம்மது

13. காலத்தைச் செதுக்கிய உளிகள்-ஆ.பிரமநாயகம்

14. சொல்லழகு-தங்கவயல் தமிழ்மறவன்

15. திருவள்ளுவமாலை-எசு.(உ)லூகாசு

வெற்றி பெற்றவர்களுக்கு நல்வாழ்த்துகள்!

சிறந்தநூல் போட்டிக்கான பரிசுகள் திச.2ஆம் நாள்  மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.

பேராசியர், முனைவர் கு.வணங்காமுடி
மதிப்புறு தலைவர்

திரு. ந.முத்துமணி
தலைவர்

திரு.ஆ.வி.மதியழகன்
செயலாளர்

க.தினகரன்வேலு
பொருளாளர்

தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 1/4 – குலோத்துங்கன்

 





(தோழர் தியாகு எழுதுகிறார் : கல்லூரியில் சாதி விளையாட்டு-தொடர்ச்சி)

உதிரும் தமிழ் மலர்கள் (ஓலைச் சுவடிகள்)

உதிரும் தமிழ் மலர்கள் 2/4


பக்தி இயக்கம் எழுந்தபோது சமயக் காழ்ப்பின் காரணமாகப் பல ஏடுகள் எரிக்கப்பட்டன என்ற வரலாறு உண்டு. ஆனால் சமண சமயத்தைத் தழுவிய மக்களின் வீடுகளில் அத்தகைய ஏடுகள் பாதுகாக்கப்பட்டு வந்தன. பிற்காலத்தில் ஆதீன மடங்களிலும், சமண சமயத்தின் மீது இருந்த காழ்புணர்ச்சி நீங்கி சமண சமய இலக்கிய ஏடுகளையும் பாதுகாத்தார்கள் என்பது வரலாறு..

ஐரோப்பியர் ஆட்சி காலத்தில் பல ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த ஓலைச் சுவடிகளை சேகரித்துப் பாதுகாத்தார்கள் என்பதும் தனி வரலாறு. இவர்களுள் முக்கியமானவர் காலின் மெக்கன்ஷி ஆவார். தற்காலத்திலும் சுவடிகள் திரட்டும் பணியினை பல்வேறு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. தமிழ்ப் பல்கலைக்கழகம் பல இடங்களில் உள்ள ஓலைச் சுவடிகளைப் பெற்றுப் பாதுகாத்து வருவதுடன் தனி நபர்களிடமிருந்தும் விலை கொடுத்தும் ஓலைச்சுவடிகளை வாங்கி சேகரித்து வருகின்றார்கள். சென்னையில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், ஆசியவியல் ஆய்வு நிறுவனம் போன்ற பல்வேறு அமைப்புகளும் ஓலைச்சுவடிகள் திரட்டும் பணியில் தற்போது ஈடுபட்டுப் பல அரிய தமிழ்ச் சுவடிகளை அழிவிலிருந்து காத்து வருகின்றன.

ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கும் நிறுவனங்களில் ஆசியவியல் ஆய்வு நிறுவனம் மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனமே ஓலைச் சுவடிகளை சேகரித்து நூலாகப் பதிப்பிக்கும் போற்றுதலுக்குரிய பணியைச் செய்து வருகிறது.

முனைவர் ஜி. ஜான் சாமுவேல் 1982இல் ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தை ஏற்படுத்தினார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யூர் என்ற சிற்றூரில் பிறந்தார் குமரி மாவட்டத்தில் உள்ள ஊர்களில் மேற்கத்திய நாட்டு மொழி, கலாச்சாரம் அதிகமாகப் பாதித்த ஊர்களில் நெய்யூர் முதன்மையான இடத்தைப் பிடித்தது. தமிழ் மொழியின் தொன்மையான கலை இலக்கியம் பண்பாடு அனைத்தும் ஊர் மக்களின் நினைவுத் திரையில் சீரழிந்த சிறப்பிலந்த ஓவியங்களாக முடங்கி விட்டன. ஆங்கிலம் பேசத் தெரிந்தவன் மட்டுமே அறிஞன், மேற்கத்திய கலாச்சாரத்தில் வளர்ந்தவன் மட்டுமே உயர்ந்த நாகரிக மதிப்பீடுகளைக் கொண்டவன் என்ற நெய்யூர் மக்களின் மனப்போக்கு மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டு நின்றவர் திரு ஜி. ஜான் சாமிவேல் என்பது வியக்கத்தக்கது..

பள்ளிப் படிப்பை முடித்து நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்தார். தமிழை சிறப்பு பாடமாக எடுத்துப் படித்தார். அதனால் மற்றக் கல்லூரி மாணவர்களை விட அதிகமாகத் தமிழை பகிரும் வாய்ப்பு கிட்டியது. தமிழ்ப் பேராசிரியர் திரு சேது ராமு ஐயர் வகுப்பில் பாடம் நடத்தும் போது உ. வே. சாமிநாத ஐயர் எழுதிய ”உதிர்ந்த மலர்கள்” என்ற கட்டுரையைப் பாடமாக நடத்தி இருக்கிறார். அந்தக் கட்டுரையில் பத்துப் பாட்டுள் ஒன்றான குறிஞ்சிப் பாட்டினை ஓலைச் சுவடியிலிருந்து பதிப்பிக்க டாக்டர் உ வே சாமிநாதையர் அவர்கள் மேற்கொண்ட கடினமான முயற்சிகளை மாணவர்களது உள்ளங்கள் கவரும் வண்ணம் விளக்கி இருந்தார். ஆனால் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஆங்கிலக் கலாசார மோகம் ஆட்டிப்படைத்து இருந்தது. பேராசிரியர் திரு சேது ராமு ஐயர் வேட்டியுடனும் ஜிப்பாவும் குடுமியமாக கல்லூரிக்கு வந்தது மாணவர்களின் கலாட்டா கேலி பேச்சுகளுக்கு உள்ளானார். அதனால் பேராசிரியரைப் பற்றிய கேலிப் பேச்சுகளை வெறுத்து ஒதுக்கிய திரு ஜான் சாமுவேல் அவர்கள் பேராசிரியரின் பாடத்திற்கு உள்ளே கவனத்தை செலுத்தினார்.. பேராசிரியரின் பாடம் பச்சை மரத்தில் பதிந்த பசுமரத்தாணி போல் மாணவர் ஜான் சாமுவேலின் மனதில் ஆழமாகப் பதிந்தது. குறிஞ்சிப் பாட்டில் 99 மலர்கள் பற்றிய பட்டியல் இசையோடும் அருமையான பெயர் அடைகளோடும் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் 99 மலர்களைக் குறிப்பிட்ட ஏடுகள் முதல் முயற்சியில் கிடைக்கவில்லை. இதில் நான்கு மலர்களின் பெயர்கள் ஏடுகளில் இல்லை. இந்த நான்கு மலர்களின் பெயர்களை அறிந்து கொள்ள அந்த ஏடுகளைத் தேடி உ.வே.சா. அலைந்தார். அயராத முயற்சியில் அந்த நான்கு மலர்களின் பெயர்களைத் தாங்கிய ஏடுகளும் கிடைத்தன. ஆனால் குறிஞ்சிப்பாட்டில் இந்த நான்கு மலர்களும் சேர்த்து மொத்தம் 99 மலர்களின் பெயர்கள் மட்டுமா உள்ளன? மேற்கொண்டு மலர்கள் பெயர் உள்ளதா? என்று ஆய்விற்காக மீண்டும் ஏடுகளைத் தேடி அலைந்தார். தமிழ்த் தாத்தா உவேசா ஓலைச்சுவடிகளைத் தேடி அலைந்து கிடைத்த ஓலைச்சுவடிகளைப் பாதுகாத்து அச்சுப் பிரதியாக நூலாக பதிப்பித்து வெளியிட்டது போன்ற பணிகள் பச்சை மரத்தில் பதித்த பசுமரத்தாணி போல் மாணவர் ஜான் சாமுவேலின் மனதில் ஆழமாக பதிந்தது.

நாமும் ஓலைச்சுவடிகளைத் தேடி சேகரித்தால் என்ன? என்ற ஆர்வம் திரு ஜி. ஜான் சாமிவேல் என்ற அந்த மாணவருக்குத் தலைதூக்கியது. பின்னர் பி.ஏ இளங்கலை பட்டத்தை நாகர்கோவில் இந்து கல்லூரியில் முடித்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ தமிழ் இலக்கியம் சேர்ந்து படித்துக் கொண்டிருந்த காலத்தில் தான் ஓலைச்சுவடிகளை தேடி சேகரிக்க வேண்டும் என்ற தனது எண்ணங்களுக்கு வடிவத்தை திரு. ஜான் சாமுவேல் உண்டாக்கினார். மேலும் இதே காலகட்டத்தில் தான் உ.வே. சாமிநாதையருக்கு எந்த வகையிலும் குறையாமல் விளம்பரம் இன்றி யாழ்ப்பாணத்து தமிழ் புலவர்களின் ஓலைச்சுவடிகளை தேடி சேகரித்து பாதுகாக்கும் அளப்பரிய பணி என் பார்வைக்கு வெளிப்பட்டது என்று திரு. ஜான் சாமுவேல் தனது நூலில் பதிவு செய்கிறார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ படித்து முடித்தவுடன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றினார்.

மதுரையில் அமெரிக்கன் கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில் நான்காம் தமிழ்ச் சங்கம் செயல்படுகின்ற செந்தமிழ்க் கல்லூரிக்குச் சென்றும், ஓலைச் சுவடிகளைப் பார்வையிட்டார்.

ஆனால் தொடர்ச்சியான ஓலைச் சுவடிகளைச் சேகரித்துப் பாதுகாக்கும் தனது தலையாய கனவை மெய்பிக்கும் முயற்சியிலிருந்து பின்வாங்கத் தொடங்கினார். இவரது பார்வை ஆங்கில இலக்கியம் கற்பதில் சென்றது. பெரும்பகுதி நேரத்தை முதுகலை ஆங்கில இலக்கியம் படிப்பதில் செலவிட்டார்.

இவர் தனது மனதில் தேக்கி வைத்திருந்த கனவுகள் இவரை ஊக்கப்படுத்தி சென்னையில் உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் பணியில் சேரத் தூண்டுகோலாக இருந்தன. சுவடி பதிப்பித்தல், சுவடியியல். தொடர்பான வகுப்புகள் நடத்துதல் ஆகிய முயற்சிகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் செயல் வடிவம் பெறத் தொடங்கின.

இங்கே பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில்தான் “ஆசியவியல் ஆய்வு“ நிறுவனம் என்ற ஓர் ஆராய்ச்சி நிறுவனத்தை அமைப்பதற்குரிய திட்டங்கள் அவரது மனத்தில் செயல் வடிவம் கொண்டன. தமிழ் ஓலைச் சுவடிகளின் ஆய்வில் ஈடுபட்டு வியத்தகு சாதனைகள் புரிந்து உலக நாடுகளின் பாராட்டுதலைப் பெற வேண்டும் என்ற மிகையான கனவு “ஆசியவியல் ஆய்வு” நிறுவனத்திற்கான திட்டமிடுதலைத் தூண்டினாலும், ஓலைச் சுவடிகள் ஆய்வு பற்றிய துறையில் திரு ஜான் சாமுவேல் அவர்களுக்குத் தெளிவு ஏற்படவில்லை. உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த திரு மு.கோ. இராமன், பேராசிரியர் மு.சண்முகம் பிள்ளை ஆகியோர் இவருக்குத் தெளிவு ஏற்படுத்தி நெறிப்படுத்தினார்கள்.

டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூலகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமிக்க திரு.மு.கோ. இராமன் என்ற தமிழ் அறிஞர் தமிழ் ஓலைச் சுவடிகள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் தெரிந்து வைத்திருந்தார். ஓலைச் சுவடிகள் அச்சு நூல்களாகப் பதிப்பிக்கப்படாமல் கரையானின் கொடிய வாய்க்கும், இயற்கையின் சீற்றத்திற்கும், மனிதனின் மூட நம்பிக்கைக்கும் நாள்தோறும் இரையாகிக் கொண்டிருக்கும் அவலநிலையை திரு மு.கோ.இராமன் அவர்கள் திரு ஜான் சாமுவேல் அவர்களிடம் பேசித் தமிழ் மொழியின் அறிவுச் செல்வங்கள் அழிவதைப் பற்றிய அவலநிலையை உணர்த்தினார்.

திரு ஜான் சாமுவேல் அவர்களது மனத்தில் விதைத்த விதையானது விருட்சமாகத் தொடங்கியது. தமிழ் ஓலைச் சுவடிகளைப் “பாதுகாத்தல்” , “படியெடுத்தல்” , “பதிப்பித்தல்”, ”மொழிபெயர்த்தல்”, மூல ஏடுகளை ஒப்புநோக்கி ஆய்தல் என்ற நிலையில் பன்முக ஆய்வுத் திட்டமொன்றை மிக விரிவாக திரு ஜான் சாமுவேல் தயாரித்தார். இதன் பின்னர் 1982ஆம் ஆண்டு “ஆசியவியல் ஆய்வு” நிறுவனம் பிறப்பெடுத்தது.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 304

புதன், 29 நவம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : கல்லூரியில் சாதி விளையாட்டு

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : திராவிடம் – தமிழீழம் – தமிழ்த் தேசியம்- தொடர்ச்சி)

கல்லூரியில் சாதி விளையாட்டு

இனிய அன்பர்களே!
தாழி (292) மடலில் நான் படித்த குடந்தை அரசினர் ஆடவர் கலை அறிவியல் கல்லூரியைப் பற்றி தேம்சு கரையில் கேம்பிரிட்சு போலக் காவிரிக் கரையில் எங்கள் கல்லூரி என்ற தலைப்பில் எழுதியிருந்தேன்.

இந்த மடலின் முடிவில் இப்படி எழுதினேன்: “எப்படி இருந்த குடந்தைக் கல்லூரி இப்போது இப்படி ஆகி விட்டதே! என்ற ஆதங்கத்தால்தான் இவ்வளவு கதையும் சொன்னேன். அன்று பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதவர் என்று பிரிந்து நின்ற கல்லூரியில் இப்போது மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் சாதியால் பிரிந்து நிற்பதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.”

அக்காலத்தில் கல்லூரி மாணவர்களிடையே கட்சி அரசியல், பார்ப்பனர்-பார்ப்பனரல்லதார் அரசியல் இருந்தனவே தவிர சாதி மத அரசியல் என்று எதுவும் கண்டதில்லை. குடந்தை என்பதால் பார்ப்பன மாணவர்கள் ஒப்பளவில் கூடுதலாக இருந்தனர். அக்காலத்தில் அவர்களிடையே இராசகோபாலாச்சாரியாரின் சுதந்திராக் கட்சிக்கு ஓரளவு ஆதரவு காணப்பட்டது. அவர்களிலும் பலர் காங்கிரசு ஆதரவாளர்களாக இருந்தார்கள். ஆசிரியர்களிடையே கூடக் கிட்டத்தட்ட இதே நிலைதான். எப்படியும் சாதி அரசியலோ மத அரசியலோ காணப்படவில்லை. ஆர்எசுஎசு சார்புடையவர் என்று மாணவர்களிடையிலோ ஆசிரியர்களிடையிலோ யாரையும் கண்டதில்லை. முசுலிம் மாணவர்களும் இருந்த போதிலும் அவர்கள் எந்த இசுலாமியக் கட்சியையும் சார்ந்திருக்கவில்லை. காங்கிரசுக்கோ திமுகவிற்கோ ஆதரவாக இருந்தார்கள். இடதுசாரி அரசியல் என்றால் அப்போதுதான் துளிர் விட்டுக் கொண்டிருந்தோம்.

அக்கால நிலையுடன் ஒப்பிட்டால் இப்போது என்ன நடக்கிறது? அண்மையில் ஒரு வகுப்பறையில் நடந்ததாக அங்கு பயிலும் மாணவர் ஒருவரிடமிருந்து தெரிந்து கொண்டதைச் சொல்கிறேன்.

அது புவியியல் வகுப்பு. முது அறிவியல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களைப் பார்த்து உதவிப் பேராசிரியர் சொல்கிறார்:

“உலகில் முசுலிம்களுக்கென்று நாடுகள் உள்ளன. கிறித்தவர்களுக்கும் நாடுகள் உள்ளன. இந்துக்களுக்குத்தான் நாடே இல்லை. இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும்.”

இந்து மதத்தின் பெருமைகளைப் பற்றி விரிவுரை ஆற்றி விட்டு, சாதியத்தின் தேவையைச் சொல்கிறார்: “சொந்த சாதிக்குள்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். சாதி விட்டுச் சாதி திருமணம் செய்வது நல்ல நீருடன் சாக்கடையைக் கலப்பது போன்றதாகும்.”

மாணவர்களில் தணிந்தவர்(தலித்துகள்) யார் என்று அந்த உதவிப் பேராசிரியருக்கு நன்கு தெரியும். அவர்களைப் பார்த்துப் பேசுகிறார்: “நீங்கள் எல்லாம் ஏன் படிக்க வருகின்றீர்கள்? பணம் இருந்தால் படிக்கலாம். நீங்கள் ஊரில் விவசாய வேலை பார்க்க வேண்டியதுதான்.”

அந்த உதவிப் பேராசிரியர் வகுப்பறையில் மட்டுமல்ல, தொடர்ந்து பொதுவெளியில் இந்தக் கருத்துகளைப் பரப்பி வந்தார். அவர் பார்ப்பனரல்ல. சாதிப் பெருமை பேசும் இடைச்சாதிக்காரர்.

இந்த உதவிப் பேராசிரியரின் மதவாத, சாதியப் பரப்புரை தணிந்த(தலித்து) மாணவர்களிடையே கடும் எதிர்ப்பை ஈட்டியது. அவர்களும் இடதுசாரி மாணவர்களும் இந்த உதவிப் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிப் போராடினார்கள். அவர் குடந்தையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். அங்கேயும் அதே மதவாத, சாதியக் கருத்துகளைப் பேசப் போய் மாணவர்களிடையே எதிர்ப்பு எழுந்தது. மீண்டும் அவரை மாற்றினார்கள் – பழைய இடத்துக்கே!

அவரும் அவர் சாதியத்துக்குத் துணை போகும் அதே துறையைச் சேர்ந்த ஆசிரியர்களும் இதை வெற்றியாகக் கொண்டு, தணிந்த(தலித்து) மாணவர்களை மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஆதரவாக நின்ற ஆசிரியர்களையும் பழிவாங்க முற்பட்டார்கள். மீண்டும் மாணவர் போராட்டம் வெடித்தது. உதவிப் பேராசிரியர் மீண்டும் மாற்றப்பட்டார்.

பேராசிரியர்களின் இந்தச் சாதி விளையாட்டுக்குக் கல்லூரிக் கல்வி இயக்ககமும் உடந்தையோ? என்ற ஐயம் எழுகிறது. ஏனென்றால் சாதியப் பேராசிரியரை மாற்றினால் அவர் விரும்பும் வசதியான ஊருக்கு மாற்றுவது, அதே நேரம் தணிந்த சாதியினராகவோ(தலித்தாகவோ) தணிந்தோர்க்கு (தலித்துக்கு) ஆதரவாகவோ இருக்கக் கூடிய பேராசிரியரைத் ‘தண்ணியில்லாக் காட்டுக்கு’த் தூக்கியடிப்பது என்ற நடைமுறைதான் காணப்படுவதாகச் சொல்லப்படுகிறது. குடந்தைக் கல்லூரி ஆசிரியர்கள் தொடர்பான பணியிட மாற்றல்கள் ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றும், தமிழ்நாடு முழுக்க இதே நிலைதான் என்றும் சொல்லப்படுகிறது.

இந்துதேசப் பக்தராகிய சாதியப் பேராசிரியர் குறித்து மாணவர் இளந்தென்றல் தமிழக அரசுக்கும் மாநில எசுசி எசுடி ஆணையத்துக்கும் முறைப்பாடு செய்தார்.

எசுசி எசுடி ஆணையம் அவரை நேரில் அழைத்தும் விசாரித்தது. சாதியப் பேராசிரியர் வகுப்பறையிலும் வெளியிலும் செய்துவரும் இந்துத்துவ, சாதியப் பரப்புரை பற்றி இளந்தென்றல் விரிவாக எடுத்துரைத்தார். ஆனால் ஆணையத்தின் தலைவர் ‘நீதியரசர்’ பொ. சிவக்குமார் தமது ஆணையில் இளந்தென்றலின் முறைபாடுகளைப் பதிவு செய்து விட்டு, முடிவில் கூறுகிறார்:

“மேற்சொன்ன ஆசிரியர் மாணவர்களிடம் பிற்போக்குக் கருத்துகளைப் பரப்பி வருகிறார் என்பதைத் தவிர வேறு எந்த வகையில் இவ்வாணையத்தினால் மனுதாரரது மனு பரிசீலிக்கத்தக்கது? என்பதை மனுதாரரால் தெளிவுபடுத்த இயலவில்லை.”

ஆக, எசுசி எசுடி ஆணையத்துக்கு மேற்சொன்ன ஆசிரியரின் பிற்போக்குப் பேச்சு பரிசீலனைக்குரிய ஒரு முறைப்பாடாகவே தெரியவில்லை.

எசுசி எசுடி ஆணையத்தின் இந்த அணுகுமுறை கல்விக் கூடங்களில் மதவாதத்துக்கும் சாதிவெறிக்கும் உரிமம் வழங்குவதாகவே புரிந்து கொள்ளப்படும்.

இதே குடந்தை கல்லூரியில் தணிந்த(தலித்து) மாணவர்களும் அவர்களுக்கு ஆதரவான ஆசிரியர்களும் சாதிய ஆசிரியர்கள் சிலரால் குறிவைத்துப் பழிவாங்கப்படுகிறார்கள் என்பதற்குச் சான்றாகப் பல நிகழ்வுகள் எடுத்துக் காட்டப்படுகினறன. தமிழ்க் குமுக ஓர்மையைச் சிதைக்கும் மாணவர்களின் கல்வியைச் சிதைத்து கல்விச் சூழலை நஞ்சாக்கியும் வருகிறது.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 302

செவ்வாய், 28 நவம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : திராவிடம் – தமிழீழம் – தமிழ்த் தேசியம்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : பா.ச.க. போன்ற மதவாத இயக்கங்கள்-தொடர்ச்சி)

கீற்று) நேர்காணல் (3)(இ

திராவிடம் – தமிழீழம் – தமிழ்த் தேசியம்: தியாகு

நேர்காணல்: மினர்வா & நந்தன்

திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகளோடு உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

கோரிக்கைகள், செயல்பாடுகள் அடிப்படையில் பெரியார் திராவிடர் கழகத்தோடு எங்களுக்கு நெருக்கமான தொடர்பு இருக்கிறது. ஈழப் போராட்டம், தமிழ்த்தேசிய கோரிக்கைகள் போன்றவற்றில் அவர்கள் எங்களோடு உடன்படுகிறார்கள். 65இல் பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரிக்க மறுத்தது போன்ற பெரியாரின் மொழிக்கொள்கைகளோடு நாங்கள் வேறுபடுகிறோம். அவர்களுக்கு அது தெரிந்தாலும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனாலும் தமிழ்வழிக்கல்வி, இடஒதுக்கீடு போன்ற போராட்டங்களில் அவர்கள் தீவிரமாகவே இயங்கி வருகிறார்கள்.

திராவிடர் கழகத்தோடு எங்களுக்குச் சிக்கல் எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் எங்களைத் தீவிரவாதிகளாகவே பார்க்கிறார்கள். அவர்களின் தொண்டர்களோடு நாங்கள் பேசக் கூடாது என எதிர்பார்க்கிறார்கள்.

ஈழத்தில் போராட்டம் மூலமே விடுதலை சாத்தியம் என்பது உங்களைப் போன்றவர்களின் கருத்து. அரசியல் முறையாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்று சிலரும், ஒருங்கிணைந்த இலங்கைதான் சரி என்று சிலரும் பேசி வருகின்றனர். இதற்கான அடிப்படை எது?

குறிப்பிட்ட மக்கள் இனத்தினுடைய சிக்கல் அந்த மக்கள் இனத்தால் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என்பதுதான் உண்மையான சனநாயகம். தங்கள் கொள்கை என்ன, இந்தியாவுக்கு எது பொருந்தும் என்பதை வைத்துக் கொண்டு ஈழச் சிக்கலைப் பார்க்கக் கூடாது. தமிழீழ மக்கள் ஒன்றுபட்ட இலங்கையைத் தான் விரும்புகிறார்கள் என்று இவர்களால் மெய்ப்பிக்க முடிந்தால் அதற்கு ஆதரவாகப் போராடலாம்.

ஈழ மக்களின் வரலாறு, அவர்களின் சிக்கல்கள், நடத்திய போராட்டங்கள் எதைப் பற்றியும் பேசாமல் வெறுமனே ஒன்றுபட்ட இலங்கை என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். இங்குப் பரிசூதியம் 12 விழுக்காடா, 13 விழுக்காடா என்று போராட்டம் நடத்தி விட்டுத் தங்கள் உயிருக்காகவும், உரிமைக்காகவும் போராட்டம் நடத்தும் மக்களைப் பார்த்து ‘பேசித்தீர்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்வது எப்படி சரியாக முடியும்?

புலிகளுக்குச் சரியான அரசியல் சித்தாந்தமோ, அமையப் போகிற ஈழம் குறித்த தெளிவான பார்வையோ இல்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. ‘புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கிற பகுதிகளில் சாதி ஆதிக்கமும், பெண்ணடிமைத்தனமும் அதிகமாக இருக்கிறது. அதுகுறித்த பார்வை அவர்களிடம் இல்லை’ என்ற கருத்தும் ஈழ எழுத்தாளர்கள் சோபாசக்தி போன்றவர்களால் முன்வைக்கப்படுகிறது. இது குறித்து?

புலிகள் வெளியிட்டிருக்கிற ஆவணங்கள், அறிக்கைகள் எதையும் படிக்காமல் மேம்போக்காக கூறும் குற்றச்சாட்டு இது. சாதி ஒழிப்புப் போராட்டத்தில், வருக்கப் போராட்டத்தில் உண்மையான ஆர்வத்தோடு இயங்குபவர்கள் அனைவரும் புலிகள் இயக்கத்தில்தான் இருக்கிறார்கள். சாதி குறித்துத் தெளிவான பார்வை இருந்தால் அதை ஒரே நாளில் சட்டம் போட்டு தடுத்து விட முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்பு, சாதி ஒழிப்பில் முக்கியக் கவனம் செலுத்திய பின்னாலும் அது பண்பாட்டுத் தளத்தில் வெகுகாலம் நீடிக்கும். புலிகள் சாதிமறுப்பைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறார்கள். சொந்த சாதிக்குள் வரன் தேடுவதை அமைப்புக்குள் தடை செய்திருக்கிறார்கள்.

அகநிலையில் திட்டமிட்டு அந்த அமைப்பு சாதி ஒழிப்புக்கு போராடுவது ஒருவகை, புறநிலையில் அவர்கள் நடத்தும் போராட்டமே சாதி ஒழிப்புக்கு வகை செய்வது இன்னொரு வகை. புரட்சிகரமான போராட்டம் என்பது பகைவனுக்குள் இருக்கும் நஞ்சை அழிப்பது மட்டுமல்ல, நமக்குள் இருக்கும் நஞ்சையும் அழிப்பது என்று மாவோ குறிப்பிடுவார்.

ஒரு பதுங்கு குழிக்குள் இருந்து போராடுபவன் பதுங்கு குழிக்குள் தீண்டாமையைக் கடைப்பிடிக்க முடியாது. இந்தியப் படை இலங்கைக்குள் நுழைவது வரை பெண்கள் படை என்ற ஒன்று அங்கு இல்லை. காயத்திற்கு மருந்து போடுவது, சமைப்பது, உதவி செய்வது போன்றவற்றைத்தான் பெண்கள் செய்து வந்தார்கள். இந்தியப் படையிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்குத்தான் அவர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். செயசிக்குறு எதிர்ப்புப் போரை பெண்கள்தான் தலைமை தாங்கி நடத்தினார்கள். அதற்கு மரியாதை தரும் விதத்தில் கிளிநொச்சியில் வெற்றிக்கொடியை விதூசாதான் ஏற்றினார். பெண்ணை அடிமையாக நடத்துகிற இயக்கத்தினால் இதைச் சாதிக்க முடியுமா? ஒரு பெரிய மாற்றம் ஈழச்சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கிறது. சாதி ஆதிக்கமும், ஆணாதிக்கமும் உடைந்து நொறுங்கியுள்ளன.

போர்த் தாக்குதலால் வீடுகளை விட்டு வேறு நாடுகளுக்குக் குடியேறிய உயர்சாதி மக்களின் வீடுகளைப் புலிகள் தங்கள் வசம் எடுத்துக் கொண்டார்கள். அங்கிருந்த பொருட்களை குறிப்பெடுத்து, அவர்கள் என்றாவது வந்தால் திருப்பிக் கொடுப்பதற்காகப் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்கள். அதே நேரத்தில் அந்த வீடுகளை வசிக்க இடமில்லாதவர்களுக்குக் கொடுத்து விடுகிறார்கள்.

ஈழப் படையில் இருந்து வெளியேறி வேறு நாடுகளில் குடியேறியவர்களும், இலங்கை உளவுத் துறையும் அந்த மக்களிடம் பரப்புகிற முக்கியமான செய்தியே இதுதான், ‘உங்கள் வீடுகளில் கீழ்ச் சாதியினரைக் கொண்டுவந்து குடியமர்த்தியுள்ளார்கள்’. எனவே விடுதலைப் புலிகள் சாதியைப் பாதுகாக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் அவதூறுதான்.

என்னைப் பொறுத்த வரை சோபா சக்தி போன்றவர்கள், புலிகளுக்கு எதிராகத் தொடர்ந்து அவதூறு செய்பவர்கள் பைத்தியங்கள், அல்லது அரசின் கைக்கூலிகளாகக் கூட இருக்கலாம், அவர்கள் மீது எனக்கு எந்த மரியாதையும் கிடையாது.

சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் குறித்துப் பேசுவதால் இந்தக் கேள்வி. சாதி, பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக தீவிரமாகப் போராடியவர் பெரியார். அவரை உங்கள் அமைப்புக்கு எந்த அளவுக்கு அணுக்கமானவராகப் பார்க்கிறீர்கள்?

அவரைத் தமிழ்த் தேசியத்தின் தந்தை என்ற இடத்தில்தான் வைத்திருக்கிறோம். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கம் என்பது பெரியாரின் சுயமரியாதை இயக்கம்தான். ஓர் இனம் தன்னைத்தானே அடையாளம் காண்கிற போராட்டத்தின் தொடக்கமாக அஃது இருந்தது. அதே நேரத்தில் ஒரு தேசிய இனத்தின் பார்வையாக மட்டும் இல்லாமல், அதற்குள் இருக்கிற சாதியத்தையும் அது எதிர்த்தது.

சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கம் என்பதே பார்ப்பன எதிர்ப்பும், இந்தி எதிர்ப்பும்தான். கடைசி வரையில் அவர் அதில் உறுதியாக இருந்தார். ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற அரசியல் கோரிக்கையை முன்வைத்தாலும் அரசியல் இயக்கம் எதையும் அவர் கட்டவில்லை. அமைப்புக்குள் சனநாயகத் தன்மையைக் கட்டமைக்காதது, ஒரு பெரிய குறை. தான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்ற நிலையை அவர் கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாகத்தான் வீரமணி போன்றவர்கள் இப்படிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தெளிவான கருத்தியலோ, அறிவியல் கண்ணோட்டமோ இல்லாததால்தான், அவர் பெயரைச் சொல்லிச் செயலலிதாவால் அரசியல் நடத்த முடிகிறது. இவ்வளவு குறைகள் இருந்தாலும், அந்தக் குறைகளை வரலாற்று, சமூகப் பின்னணியோடு நாம் புரிந்து கொள்கிறோம். அவரோடு நாம் நிறுத்திக்கொள்ளப் போவதும் இல்லை. பெரியார் தந்த புத்தி போதும், சொந்தப் புத்தி வேண்டா என்பதில் நமக்கு உடன்பாடு இல்லை. பெரியாரிடம் பக்தி எதுவும் நமக்குக் கிடையாது. அவரையும் நாம் கூர்மையாக விமர்சிக்கிறோம்.

ஆனால் நாம் விரும்பக் கூடிய சமூகநீதித் தமிழ்த்தேசத்தை முன்வைத்தவர் அவர்தான். அவரிடமிருந்துதான் நாம் அதை விரிவாக்குகிறோம், உள்ளடக்கத்தை எடுத்துக் கொண்டு அரசியல் இயக்கமாக மாற்றுகிறோம். அந்த அருத்தத்தில்தான் அவரைத் தந்தை என்கிறோம்.

அதே நேரத்தில் தந்தை, அண்ணா போன்ற பட்டப் பெயர்கள் எல்லாம் தங்களை யாரும் எதிர்த்து விடக் கூடாது என்பதற்காகத் திராவிட இயக்கம் கைக் கொண்ட சூழ்ச்சி என்பதையும் உணர்ந்திருக்கிறோம். அண்ணா சொல்கிறேன், அப்பா சொல்கிறேன் என்றால் யாரும் எதிர்த்துப் பேசிவிட மாட்டார்கள். சனநாயக மறுப்புக்காக தரப்பட்ட பட்டங்கள் தான் தந்தையும், அண்ணாவும். நாம் அந்தக் கோணத்தில் அவரைத் தந்தையாகப் பார்க்கவில்லை.

இப்போதைய சூழ்நிலையில் தமிழ்த் தேசியம் எந்த அளவுக்குச் சாத்தியம்? அதன் செயல்திட்டங்கள் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றன?

சாத்தியம், சாத்தியமில்லை என்ற கோணங்களில் அதை அணுகுவது தவறு. பழக்கத்தில் ஊறியவர்களாக மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் மாற்றத்தை எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆளுகிற வருக்கங்கள், அரசுகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதைத்தான் பிரித்தானிய அரசும் செய்தது. ‘உங்களுக்கு ஆளுகிற தகுதி வரவில்லை, இந்தப் பிரித்தானியப் பேரரசு உங்களை ஆளும் பொறுப்பைச் சரியாக செய்யும், இதுதான் நிரந்தரம்’ என்று கூறி மக்களை நம்ப வைத்து விட்டார்கள்.

இந்தியாதான் இறுதி என்ற கருத்து இந்திய வல்லாதிக்க ஆளும் வருக்கத்தின் கருத்து. ஆனால் இந்தக் கருத்தைப் புரட்சியாளர்களையும் நம்ப வைத்து விட்டார்கள். இந்தியா என்ற ஒன்று இல்லாமற்போவதை அவர்களால் கற்பனை செய்யவே முடியவில்லை. அதனால்தான் அன்புக்குரிய இந்தியா, பெருமைக்குரிய பாரத தேசம் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் ஆளும் வருக்கத்தின் வெற்றி.

தமிழ்த் தேசியம் சாத்தியமா, இல்லையா என்பதை விட தேவையா, இல்லையா என்பதுதான் முக்கியமான கேள்வி. சாத்தியமற்றதாகத் தோன்றுகிற ஒன்று தேவையென்றால் அதைச் சாத்தியமுள்ளதாக மாற்றுவதற்குப் போராடுவதுதான் நம்முடைய வேலை. தமிழ்த்தேசிய இனம் அடிமைப்பட்டிருக்கிறதா, இல்லையா? அடிமைப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு விடுதலை வேண்டும். விடுதலை தேவை என்றால் சாத்தியமில்லாமல் இருக்கிற அதை சாத்தியமுள்ளதாக்குவதற்குத் தேவையான உழைப்பை நாம் செலுத்த வேண்டும்.

தேவை என்பதில் நாம் தெளிவாக இருந்து விட்டால், அந்தத் தேவையை மக்களுக்கு உணர்த்துவதன் மூலமாக இந்தக் கருத்தியலை ஒரு பொருண்மிய ஆற்றலாக நாம் மாற்ற முடியும். வெகுமக்கள் சக்தியை கொண்டு சாத்தியமற்றதை சாத்தியமாக்க வேண்டும்.


(கீற்று நேர்காணல் முற்றும்)

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 301