திங்கள், 25 செப்டம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 221 : அவலமான கல்விச் சூழல் 2/2

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 220 : அவலமான கல்விச் சூழல் 1/2 – தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார்

அவலமான கல்விச் சூழல் 2/2

வருங்காலங்களில் அரசுக் கல்லூரிகள் புதிய பாடத்திட்டங்களுடன் தமிழ்நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட வேண்டும்.

தனியார் தன்நிதிக் கல்லூரிகள் தொடங்குவதற்கான அனுமதி நிறுத்தப்பட வேண்டும்.

பள்ளி / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் போதிய உள் கட்டமைப்பு வசதியை மேம்படுத்தவும், தகுதிவாய்ந்த ஆசிரியர்களை நியமிக்கவும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். கூடவே உயர் கல்வித்துறையில் நடக்கும் இலஞ்ச–ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்துவதோடு, அவற்றைத் தடுத்து நிறுத்தக் கல்வியாளர்கள் தலைமையிலான கண்காணிப்புக் குழுக்களை அமைக்கவும் அரசை வலியுறுத்த வேண்டும்.

NAAC, NBA, NIRF போன்ற தரக் குறியீடுகள் தற்போது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன. இது தேசியக் கல்விக் கொள்கையிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் நோக்கமே தனியார் உயர்கல்வி நிறுவனங்களை முன்னிலைப் படுத்துவதும், உயர்கல்வியில் தனியார்மயத்தை உறுதியாக்குவதும் ஆகும். NAAC, NBA, NIRF ல் அதிக மதிப்பெண்களைப் பெறும் கல்லூரிகள், அரசின் நேரடிக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்குப் பெறுவதுடன், அவற்றுக்கு நிதி உதவியும் கிடைக்கிறது. இதனால் தனியார் கல்லூரிகள், NAAC, NBA, NIRF தரவரிசை பெறுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. கடந்த எட்டு ஆண்டுத் தரவுகளைத் தொகுத்துப் பார்த்தால் இத்தரக்குறியீடுகளில் தனியார் கல்லூரிகளே முன்னிலையில் உள்ளதோடு பெரும்பான்மையாகவும் இருப்பதை அறிய முடியும். இதற்காகத் தனியார் கல்வி நிறுவனங்கள் பல முறைகேடுகள் செய்வது, தவறான தரவுகளைத் தருவது என்ற போக்கில் செயல்படுகின்றன.

இந்தத் தர வரிசை முறை, கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளையும், கல்வியின் தரத்தையும் பெருமளவில் பாதித்துள்ளது. கற்றல் -கற்பித்தல் செயல்பாடுகளை வெறும் தரவுகள் பதிவேற்றும் வேலையாகவும், தரவுகளை அலங்கரித்து அதிகாரிகளைக் கவரும் வேலையாகவும் மாற்றியுள்ளது. எனவே இது போன்ற தர மதிப்பீட்டு முறைகளின் உள்நோக்கத்தையும் அதில் உள்ள முறைகேடுகளையும் இக்குழு கடுமையாக எதிர்க்கிறது.

Outcome based education (OBE), மாணவர்களை மையப்படுத்திய திறன் மேம்பாட்டுக் கல்வி (Student centric education, Skill development) நான் முதல்வன் போன்றவை கற்றல்-கற்பித்தலில் தற்போது முதன்மைப் பொருளாகியுள்ளது. இத்திட்டங்களின் வாயிலாகக் கல்வியின் உள்ளடக்கத்தினைத் தீர்மானிக்கும் பணி, நேரடியாகத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

மத்திய-மாநில அரசுகளும், பல்கலைக்கழக நிருவாகமும். இந்நிறுவனங்களும் தங்களது மூலதனப் பெருக்கத்திற்கு மாணவர்களுக்கு எது தேவையோ அதையே பாடத்திட்டமாக மாற்ற முயல்கின்றனர். மேலும் Skill development, Naan Mudhalvan போன்ற திட்டங்கள், மாணவர்களைத் தொழிற்சாலை இயந்திரத்தின் துணை உறுப்புகளாக ( நட் & போல்ட் ஆக) மாற்ற முயல்கின்றன. சமுதாய வளர்ச்சிக்குத் தொழிற்கல்வி அவசியமே. ஆனால் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய முழுமையான கல்வியை ஒதுக்கிவிட்டு ஓர் இயந்திரத்தின் துணை உறுப்புகளாக மாற்றக்கூடியக் கல்வியை ஏற்க முடியாது.

NEET, CUET, NeXT இன்னும் பல போட்டித்தேர்வுகளைத் தடைசெய்ய இக்குழு குரல் கொடுக்க வேண்டும். பள்ளிக் கல்வியில் NGO, Edutech நிறுவனங்களின் பங்களிப்பைத் தமிழக அரசு அனுமதித்துள்ளது. இது பள்ளிக் கல்வியை Edutech மற்றும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கான தொடக்கமாகும். மேலும் அரசுப் பள்ளிகளில் அனைவருக்குமான இலவச – தரமான கல்வியை வழங்குவதற்கு மாற்றாகப் படிப்பதற்கும், கூட்டல்-கழித்தல் போடவும், போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயாரிப்பதற்கும் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகின்றனர். அனைவருக்கும் இலவச – கட்டாயக் கல்வி, அறிவியல் பூர்வமான தாய்மொழி வழிக்கல்வி ஆகியவற்றைச் செயல்படுத்தவும், கல்வியில் உள்ள ஏற்றத்தாழ்வை ஒழிக்கப் பொதுப்பள்ளி, அருகமைப்பள்ளி முறையைச் செயல்படுத்தவும் அரசு திட்டமிட்டுப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

தேசியக் கல்விக் கொள்கையின் பரிந்துரையான பள்ளிகள் இணைப்பு (School merger) என்பதை அடியொற்றித் தமிழ்நாட்டிலும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், கள்ளர்-சீர்மரபினர் நலப்பள்ளிகள், பழங்குடியின நலத்துறைப் பள்ளிகள், வனத்துறைப்பள்ளிகள் மற்றும் இந்து அறநிலையத்துறைப் பள்ளிகளை அரசுப் பள்ளிகளோடு இணைப்பதற்கான கொள்கை முடிவைத் தமிழக அரசு எடுத்துள்ளது. இக்கொள்கை முடிவைக் கைவிடுவதற்குத் தமிழக அரசை இக்குழு வலியுறுத்துவதோடு இப்பள்ளிகளின் மேம்பாட்டிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும்.

தேசியக் கல்விக் கொள்கை 2020 படிப்படியாக ஒன்றிய – மாநில அரசுகளால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தப் பரிந்துரைகளைச் செயல்படுத்தச் சொல்லி வாரம் ஒரு சுற்றறிக்கை பல்கலைக்கழக நல்கைக் குழுவிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஆனால் மாநில அரசோ இந்தி – சமற்கிருதத்தைத் தாண்டி மற்ற பரிந்துரைகளுக்குப் பெரிய அளவில் எதிர்ப்புக் காட்டுவதில்லை. மாநிலக் கல்வி அதிகாரிகளோ, பேராசிரியர்களோ, பல்கலைக்கழக நல்கைக் குழு சொல்லுவதைக், குற்றாய்வே(விமரிசனமே) இன்றி, அப்படியே செயல்படுத்துகின்றனர். இதற்கான விவாதங்களும் இல்லை. இந்தக் கூட்டுதான் அரசுப் பள்ளிகள்/கல்லூரிகளின் சீரழிவிற்கான காரணங்களில் ஒன்றாகும். எனவே கல்வியில் பெரும்பான்மை மக்கள் நலன்களைப் பாதிக்கும் ஒன்றிய – மாநில அரசின் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்துப் பரவலாக அம்பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப் படும்.

மாணவர்கள் உரிமை பாதுகாக்கப்பட மாணவர் பேரவைகள் கல்லூரிகளில் தேர்தல் மூலம் அமைக்கப்பட வேண்டும். உயர் கல்வி நிறுவனங்களின் சனநாயக மீறல், செயல்பாடுகள் கண்காணிக்கப்பட வேண்டும். ஏதிலிகள், மாற்றுப் பாலினத்தவர்கள், என்று அனைவருக்குமான நலன்களைப் பாதுகாக்கும் கல்விக் கொள்கை தேவை.

மாணவர் அமைப்புகளின் போராட்டங்கள், ஒப்பந்த ஆசிரியர்களின் போராட்டங்கள், அரசு பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் போராட்டங்கள், அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டங்கள், தனியார் பள்ளி மற்றும் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டங்கள், சனநாயக அமைப்புகளின் போராட்டங்கள் எனத் தனித்தனியே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றிற்கு மக்கள் கல்விக் கூட்டியக்கம் கோரிக்கைகளின் அடிப்படையில் ஆதரவை நல்கும்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 249

ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 220 : அவலமான கல்விச் சூழல் 1/2

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 219 : உரிமைத் தொகை உண்டு! உரிமைக் கல்வி கிடையாதா? – தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார்
அவலமான கல்விச் சூழல் 1/2

இனிய அன்பர்களே!

தமிழ்நாட்டின் கல்விநிலை குறித்துக் கவலைப்படுவதில் இளைஞர் அரண் தனித்து விடப்படவில்லை. சவகர் நேசன் போன்ற கல்விச் சிந்தனையாளர்கள் இந்நிலை குறித்து மிக ஆழ்ந்த கவலை கொண்டிருக்கின்றார்கள் என்பதைக் கண்டு வருகின்றோம்.

மாநிலக் கல்விக் கொள்கையில் என்ன எதிர்பார்க்கிறோம் எனபது குறித்து சூன் 10ஆம் நாள் மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கல்வியாளர்களும் பேராசிரியர்களும் புதிய கல்விக் கொள்கையில் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதைப் பொதுவில் தெளிவாக்கியுள்ளனர்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பிலிருந்து தெரிய வரும் சில உண்மைகளை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்: முதன் முதலாக 1968ஆம் ஆண்டில் ஒரு கல்விக் கொள்கை அறிவிக்கப்பட்டது. இது அவ்வளவாகப் பேசப்படவில்லை. பிறகு 1986ஆம் ஆண்டிலும் 1992ஆம் ஆண்டிலும் கல்விக் கொள்கைகள் அறிவிக்கப்பட்ட பின் நிறைய குற்றாய்வுகள் எழுந்தன. இந்தக் கொள்கைகளின் சிலபல கூறுகள் குறை கூறப்பட்ட போதிலும் முழுமையாக மறுதலிக்கப்படவில்லை. ஆனால் மோதியரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கை – 2020தான் முற்போக்குக் கல்வியாளர்களால் அறவே மறுதலிக்கப்பட்டுள்ளது. தேசியக் கல்விக் கொள்கை – 2020 எனப்படும் இந்தப் புதிய கல்விக் கொள்கைக்குத் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அனைத்திந்திய அளவிலும் பேராசிரியர்களும் மாணவர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

புதிய தேசியக் கல்விக் கொள்கையின் செயல்பாடு தற்சார்பான, புறஞ்சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு இடம் கொடுக்காது. அரசின் நோக்கங்களுக்காக ஆராய்ச்சிகள் வளைக்கப்படும்.

புதிய தேசிய கல்விக் கொள்கை இப்போதிருக்கும் ஆண்டுப் பகுப்பை உரிய காரணமே இல்லாமல் உடைத்து, பள்ளிக் கட்டமைப்பை அடியோடு சிதைத்து விடும்.

புதிய தேசிய கல்விக் கொள்கை பல்கலைக்கழகச் சேர்க்கைக்குப் பொது நுழைவுத் தேர்வை நுழைக்கிறது. இதற்குத்தான் கியூட் (COMMON UNIVERSITY ENTRANCE TEST) என்று பேர்! இது பள்ளிப் படிப்பை மதிப்பற்றதாக்கி விடும்.

ஆகவே ‘நீட்டும்’ கூடாது, ‘கியூட்டும்’ கூடாது என்பது தமிழ்நாட்டின் கோரிக்கையாக இருக்க வேண்டும்.

மக்கள் கல்விக் கூட்டியக்கம் தமிழ்நாட்டின் கல்விச் சூழலை இப்படிப் படம் பிடித்துக்காட்டுகிறது:

மாணவர்கள் மீதான ஒடுக்கு முறைகளும், ஆசிரியர்கள் மீதான சுரண்டல்களும், அடக்குமுறைகளும், தனியார் கல்வி நிறுவனங்களின் விதிமீறல்களும், பகற் கொள்ளைகளும், கல்வி வளாகங்களில் சாதிய ஒடுக்கு முறைகளும் இன்றைய சூழலில் மேலோங்கி வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கல்வித் திட்டங்களும், செயல்பாடுகளும் மக்கள் நலனுக்குப் பகையாக உள்ளதை மிகவும் கவலையுடன் கவனிக்கும் தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து, இதுகுறித்து நுணுக்கமான உரையாடல்களை மேற்கொள்ளவும், கல்வி குறித்த பல்வேறு சிக்கல்கள், அவற்றுக்கான நடைமுறைத் தீர்வுகள் பற்றி அரசுக்கு வலியுறுத்தவும் “மக்கள் கல்விக் கூட்டியக்கம்” எனும் பெயரில் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன.

தமிழகத்திலுள்ள பல்வேறு சனநாயக இயக்கங்கள், கல்வியாளர்கள், ஆர்வலர்கள் இக்கூட்டமைப்பில் இணைந்துள்ளனர். சூலை எட்டாம் நாள் சென்னை சேப்பாக்கம் செய்தியாளர்கள் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற ஒரு நாள் கலந்துரையாடல் மூலமாகக் கீழ்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

நடுவண் அரசின் தேசிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும். வெவ்வேறு பெயர்களை வைத்துக் கொண்டு ஒன்றிய அரசுக் கொள்கையின் முக்கிய அம்சங்களை நடைமுறைக்குக் கொண்டு வருவதைத் தமிழக அரசு தவிர்க்க வேண்டும்.

தமிழகத்திற்கான மாநிலக் கல்விக் கொள்கை, மக்கள் நலனை முன்னிறுத்திச் சமத்துவத்தை வலியுறுத்தும் கல்விக் கொள்கையாக இருக்க வேண்டும். பேராசிரியர் சவகர் நேசன் அவர்கள் தயாரித்து வரும் மக்களுக்கான கல்விக் கொள்கை நூலை வெளிக் கொண்டுவந்து, அதன் சிறப்பம்சங்களை மக்களிடம் எடுத்துச் செல்லலாம் எனவும் தீர்மானிக்கப் பட்டது.

பல ஆண்டுகளாகப் பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் நியமனத்திற்காகப் பெறப்பட்டுள்ள பல கோடி உரூபாய் இலஞ்ச ஊழலை விசாரிக்கத் தனிப்படை அமைத்து, ஊழல் புரிந்தவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி ஆசிரியர் நியமனத்தில் தமிழ்நாட்டில் எந்தவித இலஞ்சமும் பெறப்படாமல் தடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

மாணவர்களுக்கான கல்விக் கட்டண விகிதத்தை வெளிப்படையாக மக்கள் அறியும் வண்ணம் பல ஊடகங்களில் அறிவித்து, அதை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கத் தனிப்பட்ட சட்டபூர்வ அதிகாரம் கொண்ட குறை தீர்க்கும் அமைப்பை உருவாக்க வேண்டும்.

சாதி மதப் பாகுபாடுகளை நீக்கக் கூடிய பாடதிட்டங்களை எல்லா நிலையிலும் அறிமுகப்படுத்த வேண்டும். ஏற்கெனவே திணிக்கப்பட்டுள்ள சாதிய மற்றும் மத கருத்துக்களைக் கண்டறிந்து அவற்றைப் பாடத்திட்டங்களிலிருந்து முற்றிலுமாக நீக்க வேண்டும். அறிவியல் சிந்தனையையும் பகுத்தறிவு கொண்ட பார்வையையும் உருவாக்கும் பாடத்திட்டங்கள் அதிக அளவில் இடம்பெற வேண்டும்.

ஒப்பந்த ஆசிரியர் என்ற நியமன முறையை முற்றிலுமாக ஒழித்து விட்டு முழு நேரப் பணியாளர்களாக ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும். சுயநிதி கல்லூரிகளில் மிகக் குறைந்த ஊதியத்திற்கு எந்தவித பணிப் பாதுகாப்பு உறுதியும் இன்றிப் பணியில் அமர்த்தப்பட்டு, உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகி வரும் பல்லாயிரக்கணக்கான பேராசிரியர்களின் நிலை மேம்பட உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்குக் கண்டிப்பான ஆசிரியர் பாதுகாப்புச் சட்டங்களை உருவாக்குவதுடன், அவற்றைத் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும். பல்கலைக் கழக மானியக் குழு பரிந்துரைத்துள்ள ஊதிய விகிதத்தைச் சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். அரசு விதிகளை மீறும் சுயநிதிக் கல்லூரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட வேண்டும்.

அதே போல், பள்ளிக் கல்வியில் காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தனியார் மழலைப் பள்ளிகள் அனைத்தும் அரசுப் பள்ளிகளாக மாற்றப்பட வேண்டும். மழலையர் பள்ளியில் தமிழ் மட்டுமே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும். அதேபோல் தாய்த் தமிழ்ப் பள்ளிகள் அனைத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளகளாக மாற்றப்பட வேண்டும்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 249

சனி, 23 செப்டம்பர், 2023

சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டி

 


தமிழ்ப் புத்தகத் திருவிழா, பெங்களூரு
சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டி

1.11.2022 முதல் 31.10.2023 வரை வெளியிடப்பட்ட அனைத்து வகையான நூல்களும் விண்ணப்பிக்கத் தகுதிக்குரியன.
பின்வரும் பரிசுகள் வழங்கப் பெறும்.
முதல் பரிசு உரூ.5,000/-
இரண்டாம் பரிசு உரூ. 3,000/-
மூன்றாம் பரிசு உரூ. 2,000/-
3 ஊக்குவிப்புப் பரிசுகள் – ஒவ்வொன்றும் உரூ.1,000/-

தொடர்பிற்கு : 6363118988 ; tamilbookfestivalblr@gmail.com

விண்ணப்பிப்போர் 2 நூல்கள், நூலாசிரியர் ஒளிப்படம், நூலாசிரியர் குறிப்பு, பதிவுக்கட்டணம் நூலொன்றுக்கு உரூ.500இற்கான கேட்போலை அளிக்க வேண்டும்.
நூலோ பதிவுக்கட்டணமோ திருப்பியளிக்கப்படமாட்டா.
விண்ணப்பங்கள் முழு விவரங்களுடன் வர வேண்டிய இறுதி நாள் 15.11.2023

முத்துமணி நன்னன்
தலைவர்
கருநாடகத் தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கம்
பெங்களூரு







தொல்காப்பிய மன்றம், கனடா, ஆண்டு விழா

 


புரட்டாசி 06, 2054 சனி 23.09.2023 மாலை 6.00

கனடா, தொல்காப்பிய மன்றத்தின் 8 ஆம் ஆண்டு நிறைவு விழா

தமிழிசைக் கலைமன்றம், இசுகார்பரோ

அழைப்பிதழ் காண்க.

முனைவர் செல்வநாயகி சிரீதாசு



தோழர் தியாகு எழுதுகிறார் 219 : உரிமைத் தொகை உண்டு! உரிமைக் கல்வி கிடையாதா?

 


தோழர் தியாகு எழுதுகிறார்
உரிமைத் தொகை உண்டு! உரிமைக் கல்வி கிடையாதா?

இனிய அன்பர்களே!

கல்வி பெறுவது மக்கள் உரிமை! கல்வி தருவது அரசின் கடமை! என்பது கல்வி உரிமையை வலியுறுத்துகிற நாம் தரும் முழக்கம். ஒரு சிலர் கேட்கின்றனர்: அரசினால் அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி தர முடியுமா? இது கட்டுப்படியாகுமா? என்று சிலர் கேட்கின்றனர்: அரசின் நிதி நிலைக்கு இது சரிப்படுமா? வரவுக்கு மேல் எப்படிச் செலவு செய்ய முடியும்?

ஏழைபாழைகளுக்கு இலவயக் கல்வி (கட்டணமில்லாக் கல்வி) கேட்பதில் தவறில்லை. எல்லாருக்கும் கேட்டால் எப்படி? வசதியுள்ளவன் பணம் கட்டிப் படிக்கட்டுமே? என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர். சிலர் வாய்விட்டுக் கேட்கா விட்டாலும் மனத்திற்குள் இந்தக் கேள்விகளை வைத்துள்ளனர்.

இந்த வகைக் கேள்வி கேட்பவர்களின் பார்வையில் கல்வி என்பது ஓர் உடைமை, ஒரு வணிகப் பண்டம். கல்வி உடைமை என்றால் அஃது ஒருவரிடம் இருக்கும், ஒருவரிடம் இருக்காது, ஒருவரிடம் கூடுதலாக இருக்கும், ஒருவரிடம் குறைவாக இருக்கும். வணிகப் பண்டம் என்றால் விற்கலாம். விற்கப்பட்ட பின் அது அயன்மைப்பட்டு விடும். வாங்கியவர் அதனைக் கைவயமாக்கிக் கொள்ளலாம்.

உண்மையிலேயே கல்வி இப்படிப்பட்டதுதானா? ஒவ்வொரு மனிதர்க்கும் கல்வி இன்றியமையாதது என்கிறோம். கல்வி இல்லாத மாந்தர் மாந்தரே அல்லர். கல்விதான் தனிமனிதரைக் குமுக மனிதராக்கும். யார் குமுக மனிதர் இல்லையோ அவர் மனிதராக இருப்பது உயிரியல் நோக்கில் மட்டுந்தானே தவிர குமுகியல் நோக்கில் உண்மையில்லை. நல்ல தேசம் என்றால், நல்ல சமூகம் என்றால், அதில் உரிய அகவை அடைந்த ஒவ்வொருவரும் கல்வி கற்றவராக இருக்க வேண்டும். சமூகம் தனிமாந்தரைப் படைக்கிறது. தனிமாந்தர்கள் சேர்ந்து சமூகத்தைப் படைக்கிறார்கள். ஒவ்வொரு தனிமாந்தரும் ஒரு சமூக விளச்சல்தான்.

ஒவ்வொரு குழந்தையையும் படிக்க வைப்பது பெற்றோரின் கடமை என்பதன் பொருள். பெற்றோர் வழியாகச் சமூகம் அந்தக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதே. தாய்தந்தையைச் சமூகத்தை விட்டு விலக்கிப் பாருங்கள், அவர்களால் குழந்தையைப் படிக்க வைக்க முடியாது என்பது மட்டுமல்ல, உணவூட்டி வளர்க்கக் கூட முடியாது.

மாதா பிதா குரு தெய்வம் நான்கில் முதல் மூன்றும் எளிதில் விளங்கும். நான்காவதாக வரும் தெய்வம் என்பது விளங்காப் புதிராக உள்ளது. சமூகம் என்பதன் குறியீட்டுத் தொன்மம்தான் அது. தெய்வத்தை விடவும் சமூகம் பெரிய புதிர் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
குழந்தை வளர்ப்பில், குறிப்பாகக் குழந்தைக் கல்வியில் சமூகத்திற்கு உள்ள இந்தக் கடமையை நிறைவேற்றும் பொறுப்பு அரசுக்குள்ளது. மருத்துவத்தையும் கல்வியையும் கடைச் சரக்காக்கி விட்டு மக்கள்நல அரசு என்று சொல்லிக் கொள்வதில் பொருளில்லை.
அரசு உண்மையிலேயே மக்கள்நல அரசாக இருக்கிறதா? என்று கேட்கலாம். மக்கள்நல அரசாக இயங்கும் படிக் கோரும் கடமை நமக்குள்ளது. கல்வி தருவது அரசின் கடமை என்று நாம் முழங்குவதன் பொருள் இதுவே.
இந்திய அரசமைப்புச் சட்ட முகப்புரை “உரிமை, நிகர்மை, தோழமை” (LIBERTY, EQUALITY AND FRATERNITY) என்று முழங்குகிறது. குமுக அறத்தை (சமூகநீதி) குறிக்கோளாக அறிவிக்கிறது. இந்த விழுமியங்களின் படிச் சமூகம் அமையக் கல்வி இல்லாமல் எப்படிக் கூடும்? அந்தக் கல்வி ஏதோ ஒரு கல்வியாக இல்லாமல் இந்த விழுமியங்களை உள்ளடக்கமாகக் கொண்ட கல்வியாக இருத்தல் வேண்டும் அல்லவா?
கல்வி என்ற அமுதம் பருக ஒவ்வொரு குடிமகனுக்கும் குடிமகளுக்கும் உரித்துள்ளது. அதற்குச் சமூகம் பொறுப்பேற்க வேண்டும். இந்தப் பொறுப்பேற்றலின் தனியொருவருக்குக் கல்வி இல்லையேல் இந்த செகத்தினை அழித்திடுவோம்! என்ற புது முழக்கம் ஓங்கட்டும்.

உணவும் உடையும் உறைவிடமும் போல் – இன்று குடிநீரும் நல்ல காற்றும் போல் – நல்ல கல்வியும் நலவாழ்வும் சமூகத்தின் சார்பில் அரசு நிறைவேற்றித்தர வேண்டிய அடிப்படைத் தேவைகள் என்ற தெளிவு நம் சமூகத்தில் படரச் செய்வோம். அரசுக்குள்ள இந்தப் பொறுப்பின் ஆவணமாக அதன் கல்விக் கொள்கை அமைதல் வேண்டும்.

குடிமக்கள் வறுமையில் உழன்று நெருக்கடியில் தவிக்கும் போது மக்கள்நல அரசு அவர்தம் துயர்தணிக்கத் தன்னாலியன்றதைச் செய்ய வேண்டியதுதான். இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும் தமிழ்நாட்டரசின் திட்டத்தை இப்படித்தான் புரிந்து கொள்கிறோம். அதே போது இந்தத் தொகையில் ஒரு பெரும் பகுதி கல்வி வணிகர்களுக்கும் சாராய வணிகர்களுக்கும் போய் விடுமோ? என்ற அச்சம் நமக்குள்ளது. அரசுச் சாராய(டாசுமாக்) வணிகம் பெருகியுள்ளது என்று வேண்டுமானால் அரசு மகிழ்ந்து கொள்ளலாம்.

கல்வி உரிமை பெற்றோரின் பெருஞ்சுமையைக் குறைக்கப் பயன்படும், மக்களிடையே விழிப்பூட்டி போதைப் பழக்கத்தையும் குறையச் செய்யும். குடி குடியைக் கெடுக்கும், அரசையும் கெடுக்கும்! மிகையான குடிப் பழக்கத்தால் ஈரல் கெட்டு அரசு மருத்துவமனைகளின் நோய்ப் படுக்கைகளில் கிடப்பவர்களுக்கான மருத்துவச் செலவு குறைந்தால் அரசுக்கு நன்மைதானே?

இளைஞர் அரண் கேட்பது – தமிழ்நாட்டின் கல்வி உரிமை ஆர்வலர்கள் கேட்பது – கல்வி உரிமை! முழுமையான கல்வி உரிமை! இதை உறுதி செய்தால் – கல்விக்குக் கட்டணமில்லை என்ற நிலை ஏற்படச் செய்தால், உரிமைத் தொகைக்கான தேவை குறையும், முடிவில் அற்றும் போகும்.

உரிமைத் தொகை கூடாது என்று நாம் சொல்லவில்லை. உரிமைக் கல்வி வேண்டும் என்றுதான் கேட்கிறோம்.

இன்றைய இந்திய அரசும் அரசமைப்பும் இருக்கும் நிலையில் தமிழக அரசினால் தனித்தன்மை வாய்ந்த கல்விக் கொள்கை வகுக்க இயலுமா? வகுத்தாலும் அதனைச் செயலாக்க இயலுமா? என்று கேட்கின்றனர். இருக்கும் நிலையைச் சொல்வது அதனை மாற்றுவதற்காக இருக்க வேண்டுமே தவிர அத்தோடு ஓய்ந்து விடுவதற்காக இருக்கலாகாது.

இன்றைய நிலையில் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று தமிழக அரசு சொல்கிறதா? அது தமிழ்நாட்டுக்கு ஒரு கல்விக் கொள்கை வகுக்க முடியும் என்று நம்பித்தானே அதற்கான ஒரு குழுவையும் அமைத்தது? அந்தக் குழு ஒரு கொள்கையை வகுக்கட்டும், அதனைச் செயலாக்குவதில் என்ன தடை வரினும் எப்படிக் கடப்பது என்று பேசுவோம். குடியாட்சியத்தில் வெளிப்படைத் தன்மை இன்றியமையாத ஒன்று. எதுவானாலும் தமிழக மக்களுக்குத் தெரிய வேண்டும்.

ஒவ்வொரு தமிழரின் கல்வி உரிமையும் தமிழ்த் தேசத்தின் கல்வி இறைமையைச் சார்ந்துள்ளது என்பதை நன்கறிவோம். இந்த உரிமைக்கும் இறைமைக்கும் தடையாக நிற்பது இந்திய அரசுதான். எனவே நமது போராட்டம் இந்திய அரசுக்கு எதிராகத்தான். இந்தப் போராட்டத்தில் தமிழக அரசு இயல்பாகவே நம் பக்கம் நிற்க வேண்டும் என்று விரும்பி எதிர்பார்க்கிறோம். தமிழக அரசே இந்தப் போராட்டத்தில் தமிழ்நாட்டு மக்களுக்குத் தலைமையேற்றால் மகிழ்வோம். ஆனால் தமிழக அரசு இந்தப் போராட்டத்தைத் தனக்கெதிரானதாக நினைத்துக் கொண்டு குறுக்கிட்டுத் தடுக்கவோ ஒடுக்கவோ முயலாதிருக்கட்டும்.

தூக்க வரும் பருந்திடமிருந்து குஞ்சுகளைக் காக்கும் கடமை தாய்க் கோழிக்குண்டு. பருந்தின் வலிமை கோழிக்கு இல்லை என்பதால் இந்தக் கடமையைப் புறக்கணிக்க இயலாது. குஞ்சுகளைத் தன் சிறகில் அரவணைத்துக் கொண்டு சிலிர்த்துச் சீறிப் பருந்தை விரட்டியடித்தால் அதுதான் தாய்க் கோழி. என்ன செய்யப் போகிறது தமிழ்நாட்டரசு?

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 248

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 218 : அறிவும் அறமும் மக்கள் பக்கம் நிற்பதற்கே!



(தோழர் தியாகு எழுதுகிறார் 217 : குடியாட்சியமும் கல்வியும் – தொடர்ச்சி)

அறிவும் அறமும் மக்கள் பக்கம் நிற்பதற்கே!

இனிய அன்பர்களே!

“மிகினும் குறையினும் நோய் செய்யும்” என்ற வள்ளுவர் வாக்கு மருந்து அதிகாரத்தில் சொல்லப்பட்டிருப்பினும் பொதுவாக எல்லா நிலைமைகளுக்கும் பொருந்தும் படியானதே.!
அந்தத் திருக்குறள் முழுவதையும் பார்த்தோமானால் மேலும் சுவையான முடிவுகள் பெறப்படும்.
“மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று
.” திருக்குறள் 941.
மு. வரதராசனார் உரை: மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும். வளி என்பதை வாதம் என்று பொருள் கொள்கிறார் மு.வ.
இது அக்காலத்தியப் பட்டறிவு சார்ந்த மருத்துவ அறிவியல். இக்காலத்தில் அறிவியல் மருத்துவம் அப்படியே ஏற்றுக் கொள்ளுமா என்பது ஐயத்திற்குரியதே.

வாதம் அளவோடிருக்க வேண்டும், மிகையாகவோ குறையாகவோ இருக்கலாகாது என்பதை வேறொரு பொருளில் எடுத்துக் கொள்கிறேன். அரசியல் கருத்தியல் வாதங்களைச் சொல்கிறேன். வாதுரைப்பதும் எதிர்வாதுரைப்பதும் உண்மையைக் கண்டறியவோ நெருங்கிச் செல்லவோ உதவுவதாக இருக்க வேண்டும். வாதத்துக்ககவே வாதம் என்பது மிகைவாதமாகி விடும். வாதமே செய்யாமல் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்வது குறைவாதமாகி விடும்.

கீல்வாதம், பக்கவாதம் எல்லாமே மிகைவாத, குறைவாத நோய்களே! வளி மிகுதல் அல்லது குறைதல் வலிமிகச் செய்யும்.

நான் சொல்லாடுவதாக உங்களுக்குத் தோன்றினால் அது மிகை இல்லை. குறையும் இல்லை. மிகைப்படுதலின் தீய விளைவுகளைப் பேசத்தான் நினைக்கிறேன். சிறைக்குள் நடந்த கருத்துப் போராட்டங்களில் தனிநலன், அமைப்பு நலன், அரசியல் நலன் இவற்றுக்கிடைப்பட்ட முரண்பாடுகளைக் கையாள்வதில் கண்ட இடர்ப்பாடு குறித்து சுவருக்குள் சித்திரங்களில் எழுதியிருந்தேன் (உழக்கில் ஒரு புயல்).

தனிநலனா? அமைப்பு நலனா? என்ற கேள்வி எழும் போதெல்லாம் ஒரு பொதுமையர் – எந்தப் புரட்சியாளரும் – அமைப்பு நலன் என்றுதான் முடிவு செய்வார். இதில் பெரிய சிக்கல் இல்லை. தன்னலங்கருதாப் பொதுநோக்கு இருந்தால் போதும், இந்த முடிவுக்கு.

ஆனால் அமைப்பு நலனா? அரசியல் நலனா? என்ற வினாவிற்கு விடை காண்பது அவ்வளவு எளிதன்று. அமைப்பு சரியான அரசியலில் சென்று கொண்டிருக்கும் வரை இரண்டையும் வேறுபடுத்திக் காண வேண்டிய தேவையே எழாது. சிற்சில வேறுபாடுகள் எழும் போதும் அமைப்புக்குட்பட்டு அவற்றுக்குத் தீர்வு கண்டு தொடர்வதுதான் முதிர்ச்சியான அணுகுமுறை.

ஆனால் அமைப்பு தவறுக்கு மேல் தவறு செய்து, அவற்றைத் திருத்தும் வழிகளையும் அடைத்து விடும் போது அமைப்புக்கடங்கி நடப்பதற்காகச் சரியான அரசியலைக் கைவிடுவது, ஒருமுறை மட்டுமல்ல, தொடர்ந்து கைவிடுவது கொள்கைக்கு இரண்டகம் செய்வதாகும். கொள்கை சரியாக இருக்க வேண்டும் என்றால் என்ன பொருள்? தருக்க அடிப்படையில் சரியாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டிலும் மக்களின் அடிப்படை நலனுக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.


ஆக, சரியான அரசியல் கொள்கைக்கு இரண்டகம் என்பது அருவமான ஏதோ ஒன்றுக்குச் செய்யும் இரண்டகம் என்பதை விடவும் மக்கள் நலனுக்குச் செய்யும் இரண்டகம் ஆகும்.

பொதுமை அமைப்பாயினும், வேறு போராடுகிற அமைப்பாயினும் அமைப்பு நலனை மக்கள் நலனுக்கு மேலாக நிறுத்துவது அந்த அமைப்பை மதமாக்கி விடும், அதிலும் மூட மதமாக்கி விடும். அறிவியலும் அறவியலும் ஆளுக்கு மட்டுமல்ல, அமைப்புக்கும் வேண்டும். அறிவனைத்திலும் மேலானது, அறமனைத்திலும் உயர்வானது மக்கள் பக்கம் நிற்கச் செய்யும் அறிவும் அறமுமே ஆகும்.

நானா அமைப்பா? அமைப்பு என்பதே சரியான விடை. அமைப்பா மக்களா? மக்கள் என்பதே சரியான விடை. இது அடிப்படைப் பார்வை. இலையேல் அமைப்புப் பற்று என்பது குறுங்குழு வெறியாகச் சீரழியும்.

இப்போது ஏன் இந்த விளக்கம்? என்ற கேள்வி எழக் கூடும். ஏப்பிரல் 14 அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் குறித்துத் தோழர் மதியவன் இரும்பொறை எழுதியுள்ள பெரியகுளம் அறிக்கையின் வரிகளிலும் வரிகளுக்கிடையிலும் உய்த்துணரப்படும் சில செய்திகள் என்னை இந்த விளக்கம் எழுதத் தூண்டின. தொடர்ந்து பேசுவோம்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 245

வியாழன், 21 செப்டம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 217 : குடியாட்சியமும் கல்வியும்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 216 : கலைமகள் எனும் தொன்மம்-தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார்
குடியாட்சியமும் கல்வியும்

இனிய அன்பர்களே!

படிக்க வேண்டும்! ஏன் படிக்க வேண்டும்? நல்ல வேலைக்குப் போய்ப் பொருளீட்டுவதற்காகப் படிக்க வேண்டும். படிக்கா விட்டால் மற்றவர்களோடு போட்டியிட்டு முன்னேற முடியாதல்லவா? சுருங்கச் சொல்லின் வாழ்க்கைக்கு அணியமாக வேண்டும் என்பதற்காகவே கல்வி!

இதுதான் கல்வி பற்றிப் பரவலாக நிலவும் நம்பிக்கை. இதை மறுத்த கல்வியாளர் அமெரிக்காவைச் சேர்ந்த அறிஞர் சான் தெவி. இவர் அம்பேத்துகரின் ஆசிரியர். “கல்வி என்பது வாழ்க்கைக்கு அணியமாதல் அன்று. கல்வி என்பது வாழ்க்கையே ஆகும்.” [“Education is not preparation for life; education is life itself.”]

குடியாட்சியமும் கல்வியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்றார் தெவி. இரண்டுமே தன்-தீர்வுக்கும் தன்-வளர்ச்சிக்கும், பொது நன்மையில் பங்கேற்பதற்கும் இன்றியமையாதவை. அறிவுக் கூர்மையுடனும் அறிவியல் உணர்வுடனும் பொது நன்மையில் பங்கேற்பதற்குக் கல்வி இல்லாமல் முடியாது.

சான் தெவியின் முற்போக்குக் கல்விச் சிந்தனைகளுக்கு நேர் எதிரானதுதான் இந்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கை. அது மாணவர்களைச் செயற்கை அறிவு எந்திரங்களாகப் பயிற்றுவிக்க விரும்புகிறது. தனியொரு மாணவர் ஆனாலும், அந்த மாணவரை உறுப்பினராகக் கொண்ட தமிழ்க் குமுகமானாலும் தன்-தீர்வோ தன்-வளர்ச்சியோ பொது நன்மையில் அறிவார்ந்த பங்கோ பெற அது உதவாது. பார்க்கப் போனால் இதற்கு நேரெதிரான விளைவையே அது ஏற்படுத்தும்.

இந்திய அரசின் பிற்போக்கான புதிய தேசியக் கல்விக் கொள்கையை அடியோடு எதிர்ப்பது தவிர தமிழ்மக்களுக்கு வேறு வழியே இல்லை. தமிழகத் திமுக அரசு இந்தக் கொள்கையை எதிர்ப்பது சரியானது. ஆனால் அடியோடு எதிர்க்க வேண்டும், முழுமையாக எதிர்க்க வேண்டும். கொஞ்சம் இப்படி கொஞ்சம் அப்படி என்ற அணுகுமுறை உதவாது. கொஞ்சம் உணவு கொஞ்சம் நஞ்சு என்பது உயிர்க்கிறுதியாகி விடும்.

பிற்போக்கை எதிர்க்க வெறுங்கையால் முடியாது. முற்போக்கை முன்னிறுத்தித்தான் பிற்போக்கை முறியடிக்க முடியும். இந்தியாவுக்கு ஒரு கல்விக் கொள்கை என்பது தன்னளவிலேயே தமிழ்நாட்டின் தன்னாட்சிக்கு எதிரானது. இதற்கு மாற்றாகத் தமிழ்நாட்டுக்கான தனித்தன்மை வாய்ந்த கல்விக் கொள்கை என்பது தமிழ் மாணாக்கருக்கும் தமிழ்நாட்டுக்கும் தன்னாட்சி முன்னேற்றத்தைக் குறிக்கும்.

தமிழக அரசு தமிழ்நாட்டு மக்களுக்குத் தனித்துவமான கல்விக் கொள்கை வகுப்பதில் உறுதியாக இல்லை என்றால், அது உறுதி மீறுகிறது என்று பொருள்.

அரசைச் செய்தவர்கள் மக்களே என்பது உண்மையானால் அரசு செய்யாததைச் செய்ய வைக்கும் பொறுப்பு மக்களுக்குள்ளது. இந்தப் பொறுப்பை நிறைவேற்றும் ஒரு தொடக்க முயற்சிதான் இளைஞர் அரண் நடத்திய கல்வி உரிமை மாநாடு. இப்படிப் பல முயற்சிகள் தேவை என்பதை உணர்ந்திருக்கிறோம். ஒரு விளக்கை ஏற்றினோம்! அதைக் கொண்டு பல விளக்குகள் ஏற்றலாம்!

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 244

புதன், 20 செப்டம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 216 : கலைமகள் எனும் தொன்மம்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 215 : காலுடுவெல் கலைவண்ணம்-தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார்
கலைமகள் எனும் தொன்மம்

இனிய அன்பர்களே!

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் கொள்கை அறிக்கையில் தமிழ்த் தேசியத்துக்கும் சமூக நீதிக்குமான இடையுறவை விளக்கப்படுத்தப் பாவலர் பாரதிதாசனிடமிருந்து நான் எடுத்துக்காட்டிய கவிதை வரிகள் –
“சாதி ஒழித்தல் ஒன்று – நல்ல
தமிழ் வளர்த்தல் மற்றொன்று
பாதியை நாடு மறந்தால் – மற்றப்
பாதி துலங்குவதில்லை.”

பாரதிதாசனின் இந்த வரிகள் “பாரதி உள்ளம்” என்ற கவிதையில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க செய்தி.


இந்த வரிகளின் அடிப்படையில் பாரதியைச் சாதி ஒழிப்புக் கொள்கை கொண்டவர் என்று நான் கருதியதுண்டு. ஆனால் சாதிமறுப்பும் சாதிஒழிப்பும் ஒன்றல்ல என்ற புரிதல் ஏற்பட்ட பின் பாரதியைப் பற்றிய மதிப்பில் ஒரு மாற்றுக் குறைந்துதான் போயிற்று. பாரதியை அவரது பார்ப்பனப் பிறப்பின் அடிப்படையில் தூற்றுவதை நான் ஏற்பதில்லை. ஆனால் புறஞ்சார்ந்த ஆய்வு நோக்கில் பாரதியிடம் குறைகாண்பதில் எவ்விதப் பிழையும் இல்லை. இந்தியத் தேசியத்தின் இந்துத்துவ உள்ளடக்கம் பாரதியிடமும் தாக்கம் செலுத்திற்று என்பதில் ஐயமில்லை.

உணர்வுகளை வெளிப்படுத்த பாரதி துணைக்கழைத்த தொன்மங்களில் இந்துத் தெய்வங்களே ஆட்சி செலுத்தின. உருசியப் புரட்சியை மாகாளியின் கடைக்கண் பார்வையாகக் காட்டிய பாரதி பாரதத் தாயை தேவியாகவே வழிபட்டார்.
“கல்வி சிறந்த தமிழ்நாடு” என்று பெருமிதம் கொண்ட பாரதி… கல்வியைக் கலைமகள் அல்லது சரசுவதியாகவே உருவகித்தார். சரசுவதியை அவர் கல்விக் கடவுளாகக் கண்டதிலும் காட்டியதிலும் வியப்பில்லை. அதுதான் தொன்றுதொட்டு வரும் மரபு. ஆனால் அந்தத் தொன்மத்தை முன்னிறுத்தி பாரதி வெளிப்படுத்திய கல்விச் சிந்தனைகள் செறிவானவை, குமுக அறம் (சமூக நீதி) என்பதன் பாற்பட்டவை.

அனைவர்க்கும் கல்வி என்பதுதான் பாரதியின் கொள்கை. இதற்கு மாறானது வருண தருமம், மனு நீதி. பாரதி எந்தப் பக்கம்?

“வஞ்ச மற்ற தொழில் புரிந்துண்டு
வாழும் மாந்தர் குல தெய்வ மாவாள்,
வெஞ்சமர்க்குயிராகிய கொலலர்,
வித்தையோர்ந்திடு சிற்பியர், தச்சர்
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ்செய்வோர்
வீரமன்னர் வேதியர் யாரும்
தஞ்சமென்று வணங்கிடுந் தெய்வம்
தரணி மீதறிவாகிய தெய்வம்.”

சரசுவதி – கலைமகள் – கல்வியின் தெய்வம். அவளே உழைக்கும் மக்களின் குலதெய்வம், அவர்கள் அனைவர்க்கும் கல்வி உரிமை உண்டு என்று பொருள். அனைவர்க்கும் கல்வி என்ற உரிமையை மறுக்கும் மனுதருமத்தை மறுத்துக் கொல்லர், தச்சர், வாணியர், சத்திரியர், வேதியர் என்று கீழிருந்து மேலாக இந்துச் சமூகத் தட்டுகளை வரிசையாகச் சொல்லி அனைவருக்குமான கல்வியை வலியுறுத்துகின்றார் முண்டாசுப் பாவலர். .

சரசுவதி துதி, கலைமகள் வழிபாடு என்றால் என்னவாம்?

“மந்திரத்தை முணுமுணுத்து ஏட்டை
வரிசையாக அடுக்கி அதன் மேல்
சந்தனத்தை மலரை இடுவோர்
சாத்திரம் இவள் பூசனையன்றாம்.”

வேறென்ன செய்வதாம்?

வீடு தோறும் கலையின் விளக்கம்,

வீதிதோறும் இரண்டொரு பள்ளி,

நாடு முற்றிலும் உள்ளனவூர்கள்,

நகர்கெளுங்கும் பலபல பள்ளி,

தேடு கல்வியிலாத தொரூரைத்

தீயினுக் கிரையாக மடுத்தல்

கேடுதீர்க்கும் அமுதமென் அன்னை

கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்.”

கல்வியைக் “கேடில் விழுச்செல்வம்” என்றார் திருவள்ளுவர்.
“கேடுதீர்க்கும் அமுதம்” என்கிறார் பாரதியார்.
திருக்குறளைப் படித்தாரோ இல்லையோ, தெரியாது, கல்வியைக் குறளின்
குரலாகவே போற்றுகின்றார். கல்விக்காகப் பணி செய்ய மறந்த அரசினரைச்
சாடுகின்றார்:
ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்!
மான மற்று விலங்குக ளொப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?”

“விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்”

என்ற குறள்தான் நினைவுக்கு வரும். மானமிழந்து விலங்குகள் போல் வாழ்வதும் ஒரு வாழ்வாமோ? எப்படி ஆற்றித் தேற்றுகிறார் பாருங்கள்:

“போன தற்கு வருந்துதல் வேண்டா,
புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்!”

செய்ய வேண்டியது என்னவாம்?

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல்.”

ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்றால் ஏழைத் தமிழ்நாட்டின் கல்வியுரிமை காத்தல் என்று பொருள் கொள்வோம்
.
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 24
3