புதன், 6 மார்ச், 2013

400 ஆண்டுகளுக்கு த் தடையில்லா மின்சாரம்: கைவயம் இருக்கிறது சுடரிமம்









தேனி: ""நம்நாட்டில், 400 ஆண்டுக்கு மின்சாரம் தயாரிக்க தேவையான தோரியம், தமிழக, கேரள கடலோரங்களில் குவிந்து உள்ளன,'' என, பாபா அணு ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி, டேனியல் செல்லப்பா தெரிவித்தார்.
தேனி கம்மவார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுடன், கலந்துரையாடலில் ஈடுபட்ட அவர் கூறியதாவது: நீர், அனல் மின்நிலையங்கள் சில ஆண்டுகளுக்கு மட்டுமே பலன் தரக்கூடியவை. இன்னும் சில ஆண்டுகளில், இந்த மின்நிலையங்களை செயல்படுத்த முடியாது; அணு மின்நிலையம், அப்படியல்ல. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல், நமக்கு தேவையான அளவு மின்சாரத்தை அணு சக்தி மூலம் பெற முடியும். அமெரிக்காவில், சராசரியாக ஒரு நபர், ஆண்டிற்கு 12 ஆயிரம் யூனிட் மின்சாரம் பயன்படுத்துகிறார்; ஐரோப்பிய நாடுகளில், 6,000 யூனிட் பயன்படுத்துகின்றனர்; நம் நாட்டில், ஒரு நபர் 660 யூனிட் மட்டுமே பயன்படுத்துகிறார். இந்த தேவைக்கு கூட, மின்சாரம் உற்பத்தி செய்ய முடியவில்லை. அனல், நீர் மின்நிலையங்கள் மூலம், தமிழகத்திற்கு தினமும் 5500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது; மத்திய தொகுப்பில் இருந்து 3000 மெகாவாட் கிடைக்கிறது. தினமும் 3500 மெகாவாட்டிற்கு மேல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண, அணுமின்சாரமே எளிதானது. கன்னியாகுமரி மணவாளக்குறிச்சி கடற்கரை பகுதிகளிலும், கேரளா ஜாராகுஷா கடற்கரையிலும், ஜார்கண்ட் மாநிலத்திலும் தோரியம் அதிகம் உள்ளது. தோரியத்தை, யுரேனியமாக மாற்றி மின்சாரம் தயாரிக்கலாம்.
வரும் 400 ஆண்டுகளுக்கு, நம் நாட்டின் தேவைக்கு ஏற்ப மின்சாரம் தயாரிக்கும் அளவில், தோரியம் இருப்பு உள்ளது. அதிக மின்சாரம் தயாரிக்கப்படும் போது, பெட்ரோல், டீசல் தேவையை குறைத்துக் கொள்ள முடியும். மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும். அணுமின் சக்தி மூலம் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு எளிதான தீர்வு காண முடியும். உணவுப்பதப்படுத்தும் தொழிலில் அணு, சிறந்த தொழில்நுட்பமாக மாறி வருகிறது. அணு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சுற்றுச்சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்த முடியும். எதிர்காலத்தில், ஆக்சிஜன் சிலிண்டர்களை முதுகில் கட்டிக்கொண்டு அலைய நேரிடலாம். இவ்வாறு பேசினார். கல்லூரி செயலாளர் தாமோதரன், முதல்வர் ராஜாமணி, துணை முதல்வர் துரைக்கண்ணன் பங்கேற்றனர்.

1 கருத்து:

  1. ஐயா உங்கள் கருத்து என்ன? இதனை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா?

    பதிலளிநீக்கு