வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

ஈழத் தமிழர் மாநாடு :தவறுகளை ஒப்புக்கொள்ளும் கலைஞர்

1/2 <தமிழ் மக்களின் எண்ணங்களைச் சரியாகக் கணிக்க முடியாமல் நான் செய்த தவற்றின் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது> எனக் கலைஞர் கூறுவது உண்மைதான். தான் என்ன செய்தாலும் தம் பக்கம் தமிழர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஈழத்தமிழர்களின் படுகொலைகளுக்குத் துணை நின்ற தவறும் தொடர்பான தவறுகளும் அவரை வீழ்த்தியது. அதை உணர்ந்ததால்தான் இப்பொழுது ஈழத்தமிழர்கள்பால் பரிவு இருப்பதுபோல் நாடகமாடுகிறார். எனினும்  கொலைக்குற்றவாளியைச்  சொக்கத்தங்கம் என மயங்கி இருக்கும் வரை அவரை யாரும் நம்பப்போவதில்லை.  நாட்டு மக்களை மறந்து விட்டு வீட்டு மக்களைப்பற்றியே கவலைப்படும் வரை அவரைப்பற்றி யாரும் பொருட்படுத்தப் போவதில்லை. நூறாயிரக்கணக்கான மக்கள் எரிகுண்டுகளாலும் கொத்துக்குண்டுகளாலும் வஞ்சகத்தாலும் கொல்லப்பட்ட பொழுதும் இறப்பு இயற்கை எனப் பாடல் எழுதியவரை உலகம் என்னவாறாகக் கருதும் என அவருக்குத் தெரியாதா? தேர்தலை முன்னிட்டு நடத்தும் ஈழ நாடகத்தை நிறுத்திவிட்டுத் தான் செய்த குற்றங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு வாக்கு கேட்டார் எனில் தி.மு.க.வின் வாக்கு வங்கியாவது அவருக்குக் கிடைக்கும்.தொடர்ச்சி  2/2 இலக்குவனார் திருவள்ளுவன்

2/2) தம் குடும்பத்தில் ஒருவர்தான் அடுத்துக் கட்சியிலும் அதன் அடிப்படையில் ஆட்சியிலும் வரவேண்டும் எனக்  குழப்பம் விளைவிக்கும் அவரால் நாட்டுக் குழப்பத்தைத் தீர்த்து வைக்க இயலுமா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

ஈழத் தமிழர்களுக்காக விரைவில் மாநாடு: கருணாநிதி








இலங்கைத் தமிழர்களுக்காக மீண்டும் விரைவில் மாநாடு நடத்தப்படும்; அதில் பல நாடுகள் பங்கேற்க உள்ளன என்றார் திமுக தலைவர் மு. கருணாநிதி.
திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற திமுக தேர்தல் நிதியளிப்புப் பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
திமுகவை இல்லாமல் செய்துவிட ஒரு கூட்டம் பின்னால் இருந்து இயக்குகிறது. அதன் ஆலோசனையில் இந்த ஆட்சி நடக்கிறது. சட்டப்பேரவையில் வாய் திறக்க முடியவில்லை. திமுக எம்எல்ஏக்களை வெளியேற்றுகிறார்கள்.
கவலைப்படாதீர்கள்; காலம் மாறும். அதற்காக நாமும் ஆட்சிக்கு வந்து அவர்களைப் பழிவாங்குவோம் என்று சொல்லமாட்டேன். நாம் பழிக்குப் பழிவாங்குபவர்கள் அல்ல.
தொடர்ந்து 50 ஆண்டு காலம் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் கருணாநிதி என்று பேரவை வைரவிழாவில் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். ஆனால், இதைச் சொன்னார் என்பதற்காக அவரது உரை வெளியிடப்படவில்லை.
தமிழ் மக்கள் செய்த தவறின் காரணமாக, தமிழ் மக்களின் எண்ணங்களைச் சரியாக கணிக்க முடியாமல் நான் செய்த தவறின் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
ரூ. 700 கோடியில் கட்டப்பட்ட புதிய சட்டப்பேரவை வளாகத்தை மருத்துவமனையாக மாற்றினார்கள். பழைய சட்டப்பேரவைக் கட்டடத்துக்குள் என்னால் இந்த மூன்று சக்கர வாகனத்தில் செல்ல முடியாது. அதுவும்கூட நல்லதுதான். இவர்களின் அர்ச்சனைகளை கேட்க முடியாமல் செய்திருக்கிறார்கள்.
இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தால் இங்கே இருக்கும் சிலர் எதிர்ப்பு காட்டுகிறார்கள். நம்மை விரோதிகள் என்று சொல்கிறார்கள். தாங்கள் தொடர்ந்து இங்கே பிழைப்பு நடத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறு சொல்கிறார்கள்.
56 ஆண்டு காலமாக தொடர்ந்து இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வாதாரம், சுதந்திரம் வேண்டும் என்பதற்காக கண்டனத்தைத் தெரிவித்து வந்திருக்கிறோம். இவர்கள் என்னவோ, கடற்கரையில் நின்று துப்பாக்கி ஏந்தி போராடியவர்கள் போல நம்மீது பழி சுமத்துகிறார்கள்.
லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றுவிட்டு, இப்போது அங்கே தமிழ் நிலங்களின் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றி வருகிறார்கள். இதுதொடர்பாக தில்லியில், பிரதமரிடம் முறையிட்டால் கவனிக்கிறோம் என்று பதில் வந்திருக்கிறது.
இப்போது பதிலாவது வந்திருக்கிறது. கவனிப்பார்களா என்று கேள்விக்கு விடை கிடைக்கும் என்று நம்புகிறோம். கடந்த காலங்களில் நாம் எடுத்த நிலைப்பாடுகளுக்கு காரணம் உண்டு. கட்டுப்பாடும், ஒற்றுமையும் இழந்த நிலையில் இருந்தோம்.
இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்புக்காக விரைவில் மாநாடு நடத்தப்படும். அந்த மாநாட்டில் பல நாடுகள் பங்கேற்க உள்ளன. ஈழத்தமிழர்கள் குரல் ஒலிக்கும் என்றார் கருணாநிதி.
திருச்சி மாவட்ட திமுக சார்பில் மக்களவைத் தேர்தல் நிதியாக ரூ. 5 கோடி கருணாநிதியிடம் வழங்கப்பட்டது. பொதுக்கூட்டத்துக்கு, மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு தலைமை வகித்தார்.
மத்திய இணை அமைச்சர் எஸ். ஜெகத்ரட்சகன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, கவிஞர் கனிமொழி, முன்னாள் மாநில அமைச்சர்கள் என். செல்வராஜ், எ.வ. வேலு, க. பொன்முடி, வெளியீட்டுச் செயலர் திருச்சி செல்வேந்திரன், டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. உள்ளிட்டோர் பேசினர்.
முன்னதாக, திருச்சியில் வியாழக்கிழமை கருணாநிதி அளித்த பேட்டி: வரும் மக்களவைத் தேர்தல் குறித்து எங்களிடம் யூகமும் இல்லை. இப்பொழுது வியூகமும் கிடையாது.
கூட்டணி குறித்த பெரிய விஷயங்களில் தனிப்பட்ட முடிவு எடுக்க முடியாது. செயற்குழு, பொதுக்குழுவில் பேசித்தான் முடிவு செய்ய முடியும் என்றார்.
தேமுதிக, திமுகவுடன் இணக்கமாக இருக்கிறதே என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, அது உங்களுக்குப் பொறுக்கவில்லையா என்றார். தொல்காப்பியத்தை அடுத்து இலக்கியப் பணியாற்றுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று மற்றொரு கேள்விக்குப் பதிலளித்தார் கருணாநிதி.


இந்த பகுதியில் மேலும்


2 கருத்துகள்:

  1. கருணா எடுத்த அந்த நிலைப்பாடு, திராவிடத்தையே மீள் பார்வை செய்ய வைத்து விட்டது. இன்று திராவிட இயக்கங்களின் ஒவ்வொரு கொள்கை, செயல், சாதனை என்ற எல்லாவற்றிலும் ஐயம் கொள்ளச் செய்து விட்டது. சாதாரண பதவி, பிழைப்பு அரசியல் மட்டுமே தி.மு.கவின் தொண்டர் அளவில் இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களால் கருத்து வேறுபாடுகளைத் தாண்டி, நேசிக்கப் பட்ட கட்சி தி.மு.க. அதன் ஆத்தும நாதமாக தமிழ் இருந்தது. இன்று தி.மு.கவை விட்டு தமிழ் ஆன்மம் பிரிந்து விட்டது. வைத்த நேயத்தில் இருந்து மாறாத நெஞ்சினர் மட்டுமே அதற்கு ஆதரவு. காலப் போக்கில் அதுவும் போய்விடும். இதற்கு மாற்று என்று ஒரு கட்சி, இயக்கம் இன்றில்லை தமிழ்நாட்டில். ஆனால், தி.மு.க நேயம் மெல்லக் குறைந்து நல்ல இயக்கம் தமிழ்நாட்டில் மீண்டும் உருவாகும். அதற்குக் காலமும் ஆகும்.

    பதிலளிநீக்கு
  2. //கொலைக்குற்றவாளியைச் சொக்கத்தங்கம் என மயங்கி இருக்கும் வரை அவரை யாரும் நம்பப்போவதில்லை// - சொல்ல முடியாது ஐயா! இந்தத் தமிழ் மக்கள், அந்தாள் கண்ணில் இரண்டு சொட்டுக் கண்ணீர் வந்தாலே, உடனே "ஆம், தலைவர் பாவம்! எண்ணிக்கை தெரியாமல் பிழை செய்து விட்டார். மீண்டும் ஒரு வாய்ப்பு தந்தால் தமிழீழத்தைத் தங்கத் தட்டில் வாங்கித் தந்து விடுவார்" என நம்பி விடுவார்கள். நாம் தொடர்ந்து எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்! கருணாநிதிக்கு எதிரான இப்போதைய நிலை ஒரு சிறிது கூட மாறாதபடி நாம் தொடர்ந்து பரப்புரை செய்து கொண்டே இருத்தல் வேண்டும்!

    பதிலளிநீக்கு