செவ்வாய், 19 ஜனவரி, 2010

தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை: உச்ச நீதிமன்றம்



புது தில்லி, ஜன. 17: தன்னுடைய உயிருக்கு எதிராளியால் ஆபத்து நேரிடலாம் என்ற சூழலில், தற்காப்புக்காக அந்த எதிராளியைக் கொலை செய்வதற்கு ஒருவருக்கு உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் மீண்டும் தெளிவுபடுத்தியது.தற்காப்புக்காக கொலை செய்வதை சட்டம் அனுமதிக்கிறது என, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, அசோக்குமார் கங்குலி ஆகியோர் அண்மையில் அளித்த தீர்ப்பில் தெரிவித்தனர்.இந்த வழக்கு விவரம்:பஞ்சாப் மாநிலம், லூதியானா மாவட்டத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு, ஜூலை 15 ஆம் தேதி நிலத் தகராறில் தனது மாமா குர்சரண் சிங்கை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததாக தர்ஷன் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார்.தர்ஷன் சிங்கின் தந்தை பக்தவார் சிங்கை பயங்கர ஆயுதத்தால் தலையில் தாக்கிய பிறகு, தர்ஷன் சிங்கையும் தாக்க குர்சரண் சிங் முயன்றார். அப்போது ஏற்பட்ட மோதலில் குர்சரண் சிங்கை தர்ஷன் சிங் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.இந்த வழக்கை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம், தற்காப்புக்காக எதிராளியைக் கொலை செய்வது குற்றமல்ல என இந்திய தண்டனைச் சட்டத்தின் 96, 106}வது பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில், தர்ஷன் சிங்கை விடுதலை செய்து உத்தரவிட்டது.எனினும், பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் தர்ஷன் சிங்குக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தர்ஷன் சிங் மேல்முறையீடு செய்தார்.இந்த மனுவை விசாரித்து, தர்ஷன் சிங்கை விடுதலை செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, அசோக்குமார் கங்குலி ஆகியோர் அளித்த தீர்ப்பு விவரம்:சட்டத்தை மதித்து நடக்கும் குடிமகன் ஒருவரின் உயிருக்கு எதிராளியால் ஆபத்து ஏற்படக் கூடிய சூழலில், அந்த நபர் கோழையாக இருக்க வேண்டியதில்லை.ஒருவரது உயிருக்கு அச்சுறுத்தல் நேரிடும் போது, அச்சத்தில் தப்பிச் செல்வதற்குப் பதிலாக தற்காப்புக்காக அந்த எதிராளியைக் கொலை செய்வது குற்றமாகாது என இந்த நீதிமன்றம் ஏற்கெனவே பல முறை தீர்ப்பளித்துள்ளது.சமூக நீதி அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ள தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தி, தனிநபர் ஒருவர் தன்னைக் காத்துக் கொள்வதை சட்டம் அனுமதிக்கிறது.எதிராளியால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருதுபவர் தற்காப்புக்காக அந்த எதிராளியைக் கொலை செய்யலாம். எதிராளி உண்மையிலேயே தாக்குதல் நடத்தாமல் அல்லது காயம் ஏற்படுத்தாமல் இருந்தாலும்கூட, அவரால் தனது உயிருக்கு ஆபத்து நேரிடும் எனக் கருதுபவர் தனக்குள்ள தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தலாம்.எனினும், தற்காப்பு உரிமையைப் பயன்படுத்துபவர் எந்தச் சூழலில் அதைப் பயன்படுத்தியுள்ளார், அவருக்கு உண்மையிலேயே அச்சுறுத்தல் ஏற்பட்டதா என்பதை ஆய்தறிந்தே தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட கொலை வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்பானது, பிற வழக்குகளுக்கும் பொருந்தும் எனக் கருத முடியாது.சட்டம் அனுமதித்துள்ள இந்தத் தற்காப்பு உரிமையை ஒருவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள மட்டுமே பயன்படுத்தலாம். பதிலடி அல்லது பழிவாங்கும் நோக்கில், மற்றொருவரைக் கொலை செய்வதற்கு தற்காப்பு உரிமையைப் பயன்படுத்த முடியாது என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துக்கள்

எனவே, சிங்கள வன்கொடுமைகளுக்கு எதிராகத் தமிழர்கள் மேற்கொண்ட எந்தஉயிர்ப்பறிப்பும் கொலையாகாது. ஆகவே, யாரும் குற்றவாளிகள் அல்லர் என்பதை உலகிற்கு உணர்த்திய உச்ச மன்ற நீதிபதிகளுக்கு நன்றி.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/19/2010 3:26:00 AM

அப்போ என்னிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி தொல்லை பண்ணும், கொடுக்கவில்லையெனில் பொய்கேஷ் போடுவேன், இல்லையென்றால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டும் போலிஸ்காரனை நான் தற்பாதுகாப்புக்காக கொலை செய்யலாம். சரியான தீர்ப்பு

By Raja
1/18/2010 4:49:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக