nunkalaichelcar-ragavan01

முற்காலத் தமிழர்கள்,

ஆயிரக்கணக்கான கல்தொலைவில்

கடல் வணிகம் மேற்கொண்டிருந்தனர்

–  நுண்கலைச் செல்வர் இராகவன்

நுண்ணறிவும், திறனும், உறுதியான உள்ளமும் வாய்ந்த முற்காலத் தமிழர்கள் கலங்கள் கட்டி ஆயிரக்கணக்கான கல்தொலைவிற்கு அப்பாலுள்ள தீவுகளுக்கெல்லாம் போந்து தம் வணிகப்பண்டங்களை அங்கு விற்று அஃதாவது பண்டமாற்றுச் செய்து வந்தனர். ஐம்பெருந் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றாகப் புகழ்ந்து கூறப்பெறும் மணி மேகலையில் சாவ நாட்டிலுள்ள நாகபுரம் என்னும் பட்டினம் குறிப்பிடப்பட்டுள்ளது .மேலும் பூமிசந்திரன், புண்ணியராசன் போன்ற அந்நாட்டு அரசர்கள் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழகத்திற்கும் சாவகத்திற்கும் நீர்வழிப் போக்குவரத்துக்கள் நிகழ்ந்து வந்துள்ளன.
இதனை ஆதரித்து அறிஞர் சி.இராசநாயகம் அவர்கள் பண்டைய யாழ்ப்பாணம் என்னும் நூலில், “கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் தென் இந்தியாவில் உள்ள பாண்டிய நாட்டினின்று கப்பல்கள் சாவகம் சுமத்திரா முதலிய நாடுகளுக்கு யாழ்ப்பாணத்தி­லுள்ள துறைமுகத்தின் வழியாகச் சென்றன. இதற்குச் சான்று மணிமேகலை போன்ற தமிழ் நூல்களிலும் காணக்கிடைக்கின்றது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
-நுண்கலைச் செல்வர் இராகவன்:
தமிழ்ச் சங்கக் கலைத் தொடர்பு: பக்கம்.18