புதன், 29 ஜூலை, 2015

பேரறிவாளன், சாந்தன், முருகன் மரணத் தண்டனை நீக்கம் சரியே: உச்சநீதி மன்றம்



பேரறிவாளன், சாந்தன், முருகன் மரணத் தண்டனை  நீக்கம் சரியே: உச்சநீதி மன்றம்

மத்திய அரசு இனியும் குறுக்கிடாமல் தமிழக அரசின் விடுதலை ஆணையை ஏற்க வேண்டும்
 

இராசீவு காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு கடந்த ஆண்டு பிப்பிரவரி 18 அன்று நீக்கி,  வாணாள் தண்டனையாகக் குறைத்தது.

இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு  முறையிட்டது.  இதனைக் கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்பிரல் 1 அன்று  உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.

பின்னர், நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பைத் திருத்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மே மாதம் மத்திய அரசு  மேலும் முறையிட்டது.

இதனை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தத்து தலைமையிலான நீதிபதிகள் டி. எசு.தாகூர், அனில் ஆர்.தவே,  இரஞ்சன் கோகேய், சிவகீர்த்திசிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று  கேட்பிற்கு வந்தது.

அப்போது, தீர்ப்பில் திருத்தம் கோரும் மத்திய அரசின்  விண்ணப்பம் விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறிய நீதிபதிகள்,  பேரறிவாளன்,  சாந்தன், முருகன்  ஆகிய மூவரின் மரணத் தண்டனையை  நீக்கியது சரியே என்று கூறி, மத்திய அரசின்  விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்தனர்.

எனினும் வாணாள் தண்டனை குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு இவர்களின் விடுதலைக்குத் தடையாக இருக்கக்கூடாது.  இவர்கள் விடுதலை தொடர்பாக மத்தியப்புலனாய்வுத்துறை தடை விதிக்கக்கூடாது.
செய்யாக் குற்றத்திற்காகக்கொலைப்பழி சுமந்து வாணாளைச் சிறையில் கழிக்கும் இவர்களையும் பிற வாணாள்  தண்டனைவாசிகளையும் விரைவில் விடுலை செய்யத் தமிழக அரசு உடன்நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக