ஞாயிறு, 28 ஜூன், 2015

தகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் 3

83tha.uri.sa._thalaippu  

3

  நாம் கேட்கும் தகவல்களை முறையாகத் தகவல் தராமல் அலைக்கழிப்பு செய்வதற்காக அரசு அதிகார்கள் மூன்றாமவர் பற்றிய தகவலைத் தரமுடியாது என ஒரே வரியில் கூறிவிடுவார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்தில் அப்துல் மசீத்து என்பவர் தன்னுடைய குடும்ப அட்டையில் முத்துப்பேட்டையில் வசிக்கும் நபர்களின் பெயரைச் சேர்த்துக் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படக்கூடிய பொருட்களை வாங்கி வருகிறார். அவர் குறிப்பிட்டுள்ள இருநபர்களுக்கு திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள முத்துப்பேட்டையிலும் குடும்ப அட்டை உள்ளது. இதன் தொடர்பாகக் கேட்கப்பட்ட தகவலுக்கு விடை கூறமால் மூன்றாமவர் தொடர்புடைய பதில் கூறஇயலாது என மனுவில் பதில் கூறியுள்ளார் நாகப்பட்டினம் தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர்.
மூன்றாமவர் விளக்கம்
  யார் தகவல் கேட்டு மனுச்செய்கிறாரோ அவர் முதலாமவராவார். இதற்கு யார் பதில் தரவேண்டுமோ அவர் அந்த பொதுத் தகவல் அலுவலர் இரண்டாமவராவர். .யாரைப்பற்றி கேட்கிறோமோ அவர் மூன்றாமவர் ஆவார்.
  பிரிவு 8(1)(ஆ):எந்தத் தகவலை வெளியிட நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் வெளிப்படையாகத் தடை செய்துள்ளதோ, அவற்றை வெளியிடுவது நீதிமன்ற அவமதிப்பாக அமையுமோ அந்தத் தகவலையும் நாம் பெற இயலாது.
  பிரிவு 8(1)(ஈ):வணிகத்தின் நம்பகத்தன்மை வணிக மறைபொருள் அல்லது அறிவுசார் சொத்து முதலான எந்தத் தகவலையும் தொடர்புடைய மூன்றாமவரின் இசைவின்றிப் பொதுத்தகவல் அலுவலர் வெளியிடககூடாது. ஏனென்றால் வணிக மறைபொருளைப் பிறருக்கு வெளியிடுவதன் மூலம் அவருடைய தொழில் பாதிக்கப்பட்டு விடும் என்பதுதான்.
  ஒரு வேளை அவ்வாறு வெளியிடுவதால் தொடர்புடையவரின் வணிகத்திற்கு ஏற்படும் பாதிப்பை விடப் பொதுநலன் அதிகமாக இருக்குமானால் பொது தகவல் அலுவலர் அந்தத் தகவலை வெளியிடவேண்டும்.
  பிரிவு 8(1)(உ):ஒருவருக்குப் பொறுப்பின் தொடர்பான உறவால், நம்பத்தகுந்த தொடர்பு நிலையில் உள்ள மற்றவர்களிடமிருந்து நம்பிக்கையின் அடிப்படையில் கிடைக்கும் தகவல்களைப் பொதுத்தகவல் அலுவலர் வெளியிடக்கூடாது.
  ஆனால் அந்தத் தகவலை வெளியிடுவதால் பொதுநலன் அதிகமாக இருக்குமெனில் அந்தத் தகவலை பொதுத்தகவல் அலுவலர் வெளியிடலாம்;.
  பிரிவு 8(1)(எ) ஒரு தகவலை வழங்கினால் அது அத்தகவல் தொடர்புடையவரின் உயிருக்கு அல்லது உடல் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்கும் என்றாலும், சட்டத்தைச் செயல்படுத்துவதற்கு அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக கமுக்கமாகக் கொடுக்கப்பட்டதற்கு ஆபத்து விளைவிக்கும் என்றாலும் அல்லது தகவலின் மூலத்தை அடையாளம் காண்பதற்கு ஆபத்து விளைவிக்கும் என்றாலும் அத்தகவலை வெளியிட இப்பிரிவு தடை செய்கிறது.
  பிரிவு 8(1)(ஐ) தனிப்பட்ட ஒருவரைக் குறித்து நாம் கேட்கும் தகவல், பொதுச் செயல்பாடு அல்லது பொதுநலனுக்காக எந்தவிதத் தொடர்பும் இல்லாத நிலையில் உள்ள தகவலாக இருப்பின் அல்லது தனிப்பட்ட ஒருவரின் அந்தரங்கத்தில் தேவையின்றிக் குறுக்கிடுவதாக இருந்தாலோ அப்படிப்பட்ட தகவல்களை வழங்குவதற்கு இப்பிரிவு தடை செய்கிறது.
  ஆனால் மேற்கண்ட அந்தத் தனிப்பட்டவர் குறித்த தகவலை வெளியிடுவதால் அதில் பொதுநலன் அதிகமாக உள்ளது எனத் தொடர்புடைய பொதுத்தகவல் அலுவலர் அல்லது மேல்முறையீட்டு அலுவலர் கருதினால் அல்லது மன நிறைவடைந்தால் அத்தகவலை வெளியிடலாம்.
  நாம் கேட்கும் பெரும்பாலான தகவல்களை அலுவலக மறைபொருள் பாதுகாப்புச்சட்டம் என்ற பெயரிலும், இந்த விதிவிலக்கான முதல் பிரிவான, நாம் மேலே கண்ட பிரிவு 8(1)(ஏ) யைக் காரணம் காட்டித் தேசப் பாதுகாப்பு என்று கூறி காவல்துறையினரும் அரசுத்துறைகளும் நமக்குத் தகவல் தரமறுக்கின்றனர். சில அதிகாரிகள் கேட்கக்கூடிய தகவல்களை ஆங்கிலத்தில் தகவல் தருகிறார்கள். எந்த ஒரு வழக்கிலும் நியாயம் கிடைப்பதில் மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று குற்ற விசாரணை முறைச்சட்டம் 272 ஆம் பிரிவில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதே போன்ற ஒரு நீதிமன்றத்தின் மொழி என்ன என்பதை அந்த மாநில அரசே தீர்மானிக்கவேண்டும் என்று குற்றவிசாரணை முறைச்சட்டம் 272இல் விதி உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரையில் சட்;டப்படி தமிழில்தான் நீதிமன்ற நடவடிக்கைகள் இருக்கவேண்டும் என்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் சாசன கோட்பாடு 350- இன்படி ஆங்கிலம் தெரியாத ஒருவர் தமிழிலேயே தம் வழக்கு அனைத்தையும் நடத்திச் செல்ல முடியும்.
மூன்றாமவருக்குச் சான்றாதாரம் தர மறுக்கும் மடல்
மூன்றாமவருக்குச் சான்றாதாரம் தர மறுக்கும் மடல்
(தொடரும்)
83vaigaianeesu_name

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக