ஞாயிறு, 26 மே, 2013

வழக்கு, சாகித்ய அகடமி எதிர்ப்பை மீறி மத்திய அரசு தாராளம்

 வழக்கு, சாகித்ய அகடமி எதிர்ப்பை மீறி மத்திய அரசு தாராளம்
 கோர்ட்டில், வழக்கு நிலுவையில் இருந்த போதும், சாகித்ய அகடமியே பலமாக எதிர்த்த போதும், அத்தனையையும் மீறி, மலையாள மொழிக்கு, செம்மொழி அந்தஸ்தை, மத்திய அரசு தந்துள்ளது. இதன்மூலம், செம்மொழி வரிசையில், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளோடு, தற்போதுமலையாளமும் சேர்ந்துள்ளது.

"ஒரு மொழியை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் எனில், குறிப்பிட்ட நிபந்தனைகளையும் விதிமுறைகளையும் உள்ளடக்கிய தாக, அந்த மொழி இருக்கவேண்டும்' என, "யுனெஸ்கோ' அமைப்பு தெரிவித்துள்ளது.

இலக்கண தொன்மை:அதன்படி, ஒரு மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் எனில், அந்த மொழியானது, குறைந்தது, 2,000ஆண்டுகள் பழமையானதாக இருக்க வேண்டும். அதே கால அளவுக்கு, பேச்சுவழக்கிலும், அந்த மொழி இருந்திருக்கவேண்டும். வேற்று மொழி சொற்கள் கலந்திருக்காமல், தனக்கே உரிய இலக்கண தொன்மையுடன், அந்த மொழி உயரிய பழம்பெருமை வாய்ந்ததாக இருக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளை எல்லாம், பூர்த்தி செய்த மொழிகள் என்பதால், சமஸ்கிருதம், ரோமன், கிரேக்கம், சைனீஷ் போன்ற மொழிகள் செம்மொழி அந்தஸ்தை பெற்றன. இந்த மொழிகள் அனைத்திற்கும், எந்த வகையிலும், குறைச்சல் இல்லாத பழமையும், பெருமையும் வாய்ந்த மொழி தமிழ் என்பதால்,அதையும் செம்மொழியாகஅறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

கடந்த, 2004ல், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின், முதல் ஆட்சிக் காலத்தில், இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. தி.மு.க., செல்வாக்குடன் திகழ்ந்த அந்த ஆட்சியில், தமிழை செம்மொழியாக்கும் நடவடிக்கைகள் துவங்கப் பெற்று, அமைச்சரவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.அப்போது, மத்திய கலாசார துறை அமைச்சராக இருந்த, ஆந்திராவைச் சேர்ந்த ஜெய்பால் ரெட்டி, தெலுங்கையும் செம்மொழியாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஒரு தந்திரம் செய்தார். அதாவது, "செம்மொழியாக அறிவிக்கப்படுவதற்கு, 2,000 ஆண்டுகள் பழமையாக இருக்க வேண்டும் என்ற விதியை, 1,500 ஆண்டுகள், பழமையானதாக இருந்தால் போதும்' என, மாற்றினார்.

இந்த திருத்தம், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வந்த போது, அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த தி.மு.க., அமைச்சர்கள் யாரும் எதிர்க்கவில்லை.இந்த வரலாற்று பிழை காரணமாக, தமிழுக்கு நிகரான அந்தஸ்தை, பிற மொழிகள் பெற வழி ஏற்பட்டது. தொன்மை குறித்த நிபந்தனை, 2,000 ஆண்டுகளாகவே இருந்திருக்க வேண்டும் என, தி.மு.க., உறுதியாக எதிர்த்து இருக்க வேண்டும். அதைச் செய்ய தவறி விட்டதாக, தமிழறிஞர்கள் குறைபட்டனர்.அதனால், செம்மொழிஅந்தஸ்தை, தமிழின் பெருமைக்கும், தொன்மைக்கும் சற்றும் நெருக்கத்தில் வர முடியாத, பிற மொழிகளும் பெற நேர்ந்தது.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதற்காக, பெரிய விழாக்கள் எடுக்கப்பட்டன. ஆனால், செம்மொழியான
தமிழ்மொழி, பத்தோடு பதினொன்றாக ஆன கதை, பெரிதாக பேசப்படவில்லை.தமிழுக்கு பிறகு, ஜெய்பால் ரெட்டி நினைத்தபடியே, தெலுங்கும் செம்மொழி ஆக்கப்பட்டது. பின், கன்னடமும் செம்மொழியானது. தென் மாநில மொழிகளில், மலையாளம் மட்டுமே பாக்கி இருந்தது. இது கேரள மக்களுக்கு, பெரும், "ஈகோ'பிரச்னையாக உருவெடுக்கவே, மலையாள மொழிக்கு, செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கான நடவடிக்கைகளை,மளமளவென துவக்கினர்.

மத்திய அரசிடம், இந்த கோரிக்கை தீவிரமாக வைக்கப்பட்டது. அப்போது, நாட்டின் மிகப்பெரிய அமைப்பான, சாகித்ய அகடமியின் மொழிகள் பிரிவு பரிசீலனைக்கு, இந்த கோரிக்கை எடுத்துச் செல்லப்பட்டது. "மலையாளத்திற்கு, செம்மொழி அந்தஸ்து பெற தகுதி இல்லை' என்ற, கடுமையான எதிர்ப்பை, சாகித்ய அகடமி பதிவு செய்தது.

மலையாள செல்வாக்கு:ஆனாலும், கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் தலைமையில், இதற்கென குழு அமைக்கப்பட்டு, மத்திய அரசில் உள்ள மலையாள செல்வாக்கை, பயன்படுத்தும் பணிகள் ஆரம்பமாகின.இதற்கிடையில், "மலையாள மொழியை செம்மொழி ஆக்கக் கூடாது. அதற்கான தகுதி அந்த மொழிக்கு இல்லை' என்று வலியுறுத்தி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்த சூழ்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், டில்லியில் நேற்று முன்தினம் கூடிய, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மலையாள மொழிக்கு, செம்மொழி அந்தஸ்து வழங்குவது என, முடிவெடுக்கப்பட்டது. இருந்தாலும், இது, சென்னை ஐகோர்ட்டில் தொடரப் பட்டுள்ள வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்புக்கு உட்பட்டது என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- நமது  தில்லிச் செய்தியாளர்  -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக