வெள்ளி, 7 டிசம்பர், 2012

எல்லைப் பகுதியில் அச்சுறுத்தல்: பாதுகாப்புக் கோரி மடல்

எல்லைப் பகுதியில் அச்சுறுத்தல்: பாதுகாப்புக் கோரி க் கருநாடக முதல்வருக்கு த் தமிழ்ச் சங்கம் கடிதம்

எல்லைப்பகுதியில் வாழ்ந்துவரும் தமிழர்களை வன அதிகாரிகள் அச்சுறுத்தியுள்ள நிலையில், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டருக்கு பெங்களூர் தமிழ்ச் சங்கத்தலைவர் கோ.தாமோதரன் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து தமிழ்ச்சங்கத்தலைவர் கோ.தாமோதரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடகமாநிலம், சாமராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் வட்டத்தை சேர்ந்த ஆலம்பாடி, ஜம்புருட்டி, மாருகொட்டாய், பாலாறு எல்லைகிராமங்களை சேர்ந்த 600 தமிழ் குடும்பங்களை,அப்பகுதியில் வெளியேறுமாறு வன அதிகாரிகள் சிலர் மிரட்டியுள்ளனர். அப்பகுதியில் இருந்து காலி செய்யாவிட்டால், மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று தமிழர்களை வன அதிகாரிகள் அச்சுறுத்தியுள்ளனர். இதை தொடர்ந்து, அங்குள்ள நிலையை நேரில் அறிந்துவர தமிழ்ச்சங்க வாழ்நாள் உறுப்பினரும், கன்னடர்-தமிழர் நல்லிணக்கசமூகநல அறக்கட்டளையின் தலைவருமான ராமசந்திரன் தலைமையில் குழு ஒன்று கொள்ளேகால் பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அங்குள்ள தமிழர்கள் 100 ஆண்டுகளுக்கு மேலாக 3 தலைமுறைகளாக வாழ்ந்துவருவதாகவும், அம்மக்களுக்கு கர்நாடக அரசும் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, பட்டாநிலங்களை வழங்கியுள்ளது. மேலும் அக்கிராமங்களில் சாலைகள், கோயில், பள்ளிக்கூடம், அங்கன்வாடி வசதிகள், சூரியஒளி மின்விளக்குகள் உள்ளன. இந்நிலையில், அப்பகுதி தமிழர்கள் விதிகளுக்கு முரணாக வனத்துறை நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்துவருவதாக கூறி வன அதிகாரிகள் பொய்வழக்குகளை தொடர்ந்துள்ளனர். இதில் அப்பகுதி மக்களுக்கு ஆதரவாக தீர்ப்பும் வந்துள்ளது.
இதை பொருள்படுத்தாத துணைவனபாதுகாப்பு அதிகாரி ஒருவர், கடந்தவாரம் இப்பகுதி மக்களை மிரட்டி, இங்கிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அக்கிராமங்களில் எடுத்த புகைப்படங்களை இணைத்து, தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி கர்நாடக முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர், வனத்துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், காவல்துறை டிஜிபி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம். தமிழர்களை தாக்கி, அச்சுறுத்திய வன அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, அப்பகுதி மக்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ வழிவகைசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக