வியாழன், 6 டிசம்பர், 2012

தமிழர்களை வெளியேற்ற கெடு விதித்த வனத் துறை

தமிழர்களை வெளியேற்ற கெடு விதித்த வனத் துறை : கருநாடக ச் சட்டசபையில் கேள்வி எழுப்ப த் திட்டம்
பெங்களூரு: தமிழக - கர்நாடக எல்லை பகுதியில், வசிக்கும் தமிழர்களை வெளியேற்ற, வனத் துறை கெடு விதித்துள்ளது குறித்து, கர்நாடகா சட்டசபையில் கேள்வி எழுப்ப, ம.ஜ.த., மற்றும் எடியூரப்பாவின், கே.ஜே.பி., உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழக - கர்நாடகா எல்லைப் பகுதியிலுள்ள, சாம்ராஜ் நகர் மாவட்டம், கொள்ளேகால் பகுதியில், கோபிநத்தம் அருகில், காவிரி கரையோரம் ஆலம்பாடி, ஜம்ருட்டிபட்டி, மாரிகொட்டாய், பாலார், கோட்டையூர் புதுக்காடு, தேங்காய் கோம்பு, பூங்கொம்பு, அப்புகாம்பட்டி ஆகிய ஒன்பது கிராமங்களில், 600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில், 1,500 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். மஞ்சள், துவரை, வேர்க்கடலை பயிர்களை, பயிரிட்டு வருகின்றனர்.அரசின் வாக்காளர் அடையாள அட்டை, சோலார் மின்சாரம், ரேஷன் கார்டுகள், மீன் பிடி லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளன. ரேஷன் கடைகள், போஸ்ட் ஆபீஸ்கள், அங்கன்வாடிகள், பள்ளிகள் உள்ளன.பல ஆண்டுகளாக வீட்டு வரி, நில வரி செலுத்தி, ரசீது பெற்றுள்ளனர். சிலருக்கு, நிபந்தனையின் அடிப்படையில், படகு போக்குவரத்து நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதுவரை, எவ்வித பிரச்னையுமின்றி வாழ்ந்து வந்த இக்குடும்பத்தினருக்கு, அரசின் புதிய உத்தரவால், புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.மத்திய அரசு கொண்டு வந்துள்ள, வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி, வனத்துறை நிலத்தில் வசிப்பவர்கள், வீடு, ரிசார்ட் எழுப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, கொள்ளேகால் பகுதியில், மூன்று, நான்கு தலைமுறைகளாக வசித்து வரும், ஒன்பது கிராமங்களை சேர்ந்த, 600 குடும்பத்தினரிடம், இடத்தை காலி செய்யுமாறும், இல்லாவிட்டால் நடப்பது வேறு என்றும், கர்நாடகா வனத் துறையினர் மிரட்டிச் சென்றுள்ளனர்.இதையறிந்த, கர்நாடக தமிழ் சங்க கூட்டமைப்பு தலைவர் புகழேந்தி தலைமையில், பல்வேறு தமிழ் சங்க நிர்வாகிகள், கன்னடர் தமிழர் நல்லிணக்க சமூக நற்பணி அறக்கட்டளை நிறுவன தலைவர், ராமச்சந்திரன், ம.ஜ.த., தலைவர் விஷ்ணு குமார் ஆகியோர், அப்பகுதியில் ஆய்வு செய்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.பின்னர், நம் நிருபரிடம் அவர்கள் கூறியதாவது:ம.ஜ.த., சட்டசபை தலைவர் ரேவண்ணா, எடியூரப்பாவின் ஆதரவு, எம்.எல்.ஏ., க்கள் மூலமும், தமிழர்களின் நிலைமையை, பெல்காமில் நடந்து வரும் சட்டசபை கூட்டத் தொடரில் கேள்வி எழுப்ப, கேட்டுக் கொண்டுள்ளோம்.முதல்வர் ஷெட்டரின் பதிலுக்கு பின், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், பாதுகாப்பு வசதி செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக