ஞாயிறு, 2 டிசம்பர், 2012

மீண்டும் ஆங்கில த் தலைப்புகளின் ஆதிக்கம்: சிறப்புச்செய்தி

இத்தகைய செய்தியை வெளியிட்ட தினமலருக்குப் பாராட்டுகள். தமிழ்ப் பெயர்  இல்லாப் படங்களையும் தொடர்புடைய கலைஞர்களையும் புறக்கணிக்கும் முடிவிற்குத் தமிழக மக்கள் முன்வரவேண்டும். திரைத்துறை தொடர்பான சங்கங்கள் கூடி இதற்கென ஒரு  முடி வெடுத்துத் தமிழ்ப் பெயர்களையே தமிழ்ப்படங்களுக்கும் புதுமுகக் கலைஞர்களுக்கும் சூட்ட வேண்டும்.  தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மீண்டும் ஆங்கில த் தலைப்புகளின் ஆதிக்கம்:  சிறப்புச்செய்தி

Again english title in tamil cinema: Special reportஆங்கிலத்தில் தலைப்பு வைப்பது என்பது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. அந்தக் காலத்திலேயே அதாவது 1940 களுக்கு முன்பே பாம்பே மெயில், டாக்டர் பங்காரு, டுபான் குயின், ஐ.சி.எஸ் மாப்பிள்ளை என ஆங்கிலத்தில் பெயர் வைத்திருக்கிறார்கள். அதன் பிறகு ஆண்டுக்கு பத்து படங்களாவது ஆங்கில பெயர்களோடு வெளிவந்தன. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. திரைப்படத் துறைக்கு பல்வேறு சலுகைகளை அவர் வாரி வழங்கிய போது, தூய தமிழில் பெயர் வைத்தால் அதற்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்பதும் ஒன்று. அதனால் அவர் ஆட்சி செய்த 5 வருடங்களும் எந்த படத்துக்கும் ஆங்கில பெயர் வைக்கப்படவில்லை. ரோபோ என வைக்கப்பட்ட பெயர் எந்திரன் ஆனது. காட்பாதர் என வைக்கப்பட்ட பெயர் வரலாறு ஆனது. இப்படி பல நடந்தது. தமிழ் கலர்சசாரத்துக்கு விரோதமான கருத்தைக் கொண்ட சிந்து சமவெளி போன்ற படங்களும், முழுக்க முழுக்க வன்முறை, ஆபாசம் நிறைந்த படங்களும் தமிழில் பெயர் வைத்து விட்டு வரிச்சலுகையை பெற்று வந்தது.

அதனால் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா இந்த சலுகையில் ஒரு திருத்தத்தை அறிவித்தார். அதாவது தமிழில் பெயர் வைத்தால் மட்டும்போதாது, அது நல்ல கருத்துள்ள படமாக இருக்க வேண்டும், தணிக்கை குழுவின் யூ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், அப்போதுதான் வரிவிலக்கு கிடைக்கும் என்று அறிவித்தார். இதற்கென தனி குழுவையும் அறிவித்தார். இதனால் பல படங்கள் தங்கள் கதைக்கும், காட்சிக்கும் நிச்சயம் யூ சான்றிதழ் கிடைக்காது என்பதை முன்பே புரிந்து கொண்டு ஆங்கில பெயர்களை வைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

அந்த வரிசையில் வந்த முதல் படம் பீட்சா. இது குழந்தைகள் பார்க்க முடியாத திகில் படம் என்பதை முன்பே உணர்ந்து ஆங்கிலத்தில் பெயர் வைத்தார்கள். சிம்கார்டு என்ற படம் தயாரிப்பில் உள்ளது. இது செல்போனால் வரும் சிக்கல்களை சொல்லும் படம். பாலாவும் சமுத்திரக்கனியும் நடிக்கும் படத்திற்கு ஹிட்லிஸ்ட் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இது போலீஸ் என்கவுண்டர் பற்றிய கதை. கெஸ்ட் என்று ஒரு படம். வேண்டாத விருந்தாளி ஒருவன் ஒரு குடுமபத்திற்குள் புகுந்து செய்யும் வில்லத்தனங்கள் பற்றிய கதை. காதலர்களுக்குள் நடக்கும் சின்ன சின்ன சண்டைகளை மையமாக வைத்து தயாராகும் படத்துக்கு ஈகோ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதுதவிர டீல் என்ற பெயரிலும் ஒரு படம் தயாராகி வருகிறது.

தயாரிப்பாளர் சங்கம், தயாரிப்பாளர் கில்டு, தென்னிந்திய திரைப்பட வர்த்த சபை ஆகியவற்றிலும் தற்போது ஆங்கில தலைப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. 2013ம் ஆண்டு 20 படங்கள் வரை ஆங்கிலத் தலைப்பில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக