செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை மாற்றக் கோரி வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம்



சென்னை, ​​ பிப்.2: சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று மாற்றக் கோரி வழக்கறிஞர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ் மன்றம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.இதுதொடர்பாக,​​ அந்த மன்றத்தின் தலைவர் அய்யாதுரை திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:அப்போதைய மெட்ராஸ் மாகாணத்துக்கு 'மெட்ராஸ் உயர் நீதிமன்றம்' என்று ஆங்கிலேயர்கள் பெயரிட்டனர்.​ இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு 'மெட்ராஸ் மாகாணம்' பிரிக்கப்பட்டு தமிழ்நாடு உருவானது.மெட்ராஸ் மாகாணத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் என்ற பெயர் பொருத்தமானது.​ ஆனால்,​​ தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பிறகு சென்னை உயர் நீதிமன்றம் என்ற பெயர் பொருத்தமற்றதாகும்.எனவே,​​ சென்னை உயர் நீதிமன்றத்துக்கு தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று பெயர்மாற்றம் செய்ய வேண்டும்.உயர் நீதிமன்றத்தின் வழக்கு மொழி...சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் ஆன பின்னரும் தமிழ்நாட்டின் தலைமை நீதிமன்றமான உயர் நீதிமன்றத்தில் தமிழ் உள்ளே நுழைய முடியவில்லை.உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக மாற்றக் கோரி தமிழக சட்டப்பேரவையில் 2008-ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.​ அந்த தீர்மானத்தின் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று தெரியவில்லை.பெயர்ப் பலகை...கேரளம்,​​ கர்நாடகம்,​​ ஆந்திர மாநிலங்களில் உயர் நீதிமன்றங்களின் பெயர்களில் அந்தந்த மாநில மொழிகள் இடம்பெற்றுள்ளன.​ ஆனால்,​​ சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயர்ப் பலகையில் தமிழ் இடம்பெறவில்லை.​ இதற்காக எங்கள் மன்றம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மேற்கண்ட 3 கோரிக்கைகளையும் வலியுறுத்தி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தமிழ் மன்றம் சார்பில் என்.எஸ்.சி.​ போஸ் சாலையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

தமிழ்நாடு உயர்நீதி மன்றம் எனப் பெயர்சூட்ட வேண்டும்; தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்பதுடன் முத்திரையில் வாய்மையே வெல்லும் எனத தமிழ்தான் இடம் பெற வேண்டும் எனப் போராடி வெற்றி காணுங்கள். பிற மாநிலங்களில் மொழி உணர்வு இயல்பாக உள்ளதாலும் அந்தந்த மொழியாளர்களே முதன்மைப்பதவிகளில் உள்ளமையாலும் விசையைத் தட்டினால் விளக்கொளி எங்கும் சீராகப் பரவுவதுபோல் மொழிசார் நடவடிக்கைகள் ஒரே நேரத்தில் நடைபெறுகின்றன. தமிழ் நாட்டில் ஒவ்வொன்றுக்கும் ஆணை தேவை. ஆணை இருந்தாலும் பொறுப்பில் உள்ளவர்க்கேற்ப நடவடிக்கை இருக்கும் என்ற அவல நிலை உள்ளது. மேலும் மாநிலத் தன்னாட்சி பேசும் கட்சியினர் இது போன்ற அதிகாரங்களையாவது பெறலாமே. தமிழுக்கே தலைமை;தமிழர்க்கே முதன்மை என்னும் நிலை தமிழ்நாட்டில் நிலவினால்தான் தமிழ் வாழும். தமிழர் வளம் பெறுவர்.மாறான சூழ்நிலையிலான வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/2/2010 3:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக