ஞாயிறு, 31 ஜனவரி, 2010

அப்படியெல்லாம் பெருமைப்பட முடியாது. தமிழைக் காங்கிரசு என்றைக்கு மதித்தது. முதல்வர் சொன்னதைக் கேட்டு உடனே மாற்ற. கொல்கத்தா, மும்பை குவகாத்தி உயர் நீதி மன்றங்கள் பெயர் மாற்றம் பெறுவதால் அப்பட்டியலில் சென்னையும் சேருகிறது. சென்னை உயர் நீதி மன்றத்தைத் தமிழ்நாடு உயர் நீதிமன்றம் எனப் பெயர் மாற்றடம் செய்வதே முறையாகும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சென்னை, ஜன.31-

முதல்-அமைச்சர் கருணாநிதி வற்புறுத்தலை தொடர்ந்து `மெட்ராஸ் ஐகோர்ட்டு' என்ற பெயரை `சென்னை ஐகோர்ட்டு' என்று மாற்றம் செய்வது பற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. விரைவில் இதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

`மெட்ராஸ் ஸ்டேட்' என்று அழைக்கப்பட்டதை `தமிழ்நாடு மாநிலம்' என்று அண்ணா பெயர் மாற்றம் செய்தார். அதுபோல `மெட்ராஸ்' என்ற பெயரை சென்னை என்று பெயர் மாற்றம் செய்ய முதல்-அமைச்சர் கருணாநிதி சட்டம் கொண்டு வந்தார். அதன்படி, சென்னை என்ற பெயரில் அனைத்து நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. ஆனால், ஐகோர்ட்டு மட்டும் `மெட்ராஸ் ஐகோர்ட்டு' என்ற பெயரிலே இயங்குகிறது.
`மெட்ராஸ்' என்ற பெயர் சென்னை என்று முழுமையாக மாற்றம் செய்யப்பட்ட பிறகு `மெட்ராஸ் ஐகோர்ட்டு' என்பது சென்னை ஐகோர்ட்டு (தமிழில் சென்னை உயர்நீதிமன்றம்) என்று அழைக்கப்பட வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் கருணாநிதி கண்ணும், கருத்துமாக உள்ளார். இதையொட்டி மத்திய அரசை அவர் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்.
இந்த நிலையில், `மெட்ராஸ் ஐகோர்ட்டு' என்ற பெயரை `சென்னை ஐகோர்ட்டு' என்று பெயர் மாற்றம் செய்வது தீவிர பரிசீலனையில் இருப்பதாக மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை தெரிவித்து உள்ளது. தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் இதுகுறித்தும், இதேபோல பம்பாய் ஐகோர்ட்டு என்ற பெயரை மும்பை ஐகோர்ட்டு என்றும், கல்கத்தா ஐகோர்ட்டு என்ற பெயரை கொல்கத்தா ஐகோர்ட்டு என்றும், கவுகாத்தி ஐகோர்ட்டு என்ற பெயரை குவகாத்தி ஐகோர்ட்டு என்றும் பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுவான நடைமுறை என்னவென்றால் ஐகோர்ட்டுகளின் பெயரை மாற்றம் செய்யும்போது அந்தந்த மாநில அரசுகளுக்கு கருத்துரு அனுப்ப வேண்டும். அதுகுறித்து மாநில அரசுகள் ஆலோசனை செய்து அதற்கான கருத்துருவை அந்தந்த ஐகோர்ட்டுகளுக்கு அனுப்ப வேண்டும். அந்த கருத்துருவிற்கு ஐகோர்ட்டுகள் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்பிறகு நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும்.
`மெட்ராஸ்' என்ற வார்த்தையை `சென்னை' என்று பெயர் மாற்றம் செய்வதற்காக தமிழக சட்டசபையில் 1996-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதி சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம், 1996-ம் ஆண்டு மெட்ராஸ் மாநகர் (பெயர் மாற்றம்) சட்டம் என அழைக்கப்படுகிறது. இந்த சட்டத்தின்படி `மெட்ராஸ்' என்ற சொல்லுக்கு பதிலாக `சென்னை' என்னும் சொல் அமைக்கப்படுதல் வேண்டும்.
``தொன்றுதொட்டே `மெட்ராஸ் மாநகர்' அடங்கியிருக்கின்ற பரப்பிடம் தமிழில் `சென்னை' என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது. பல்வேறுபட்ட மக்களால் பயன்படுத்தப்பட்டும் வந்துள்ளது. இந்த பெயரானது, ஒருமுகமாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. `சென்னை' என எல்லோராலும் ஒருமுகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதை கருத்தில் கொண்டும், மெட்ராஸ் மாநகரத்தின் சரித்திர, சமூக, பண்பாட்டு வகையிலான விவரங்களையும், பிற விவரங்களையும் சட்ட கருத்தில் கொண்டும், பிற மொழிகளில் இதுநாள்வரை `மெட்ராஸ்' என்றும் `மதராஸ்' என்றும் அழைக்கப்பட்டு வந்தது, இனிமேல் இந்நாள் (31-08-1996) முதல் `சென்னை' என அனைத்து மொழிகளிலுமே அழைக்கப்படும்'' என்று அந்த சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது.
எங்கெங்கெல்லாம் `மெட்ராஸ்' என்ற பெயர் இருக்கிறதோ அவை எல்லாம் `சென்னை' என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதே இந்த சட்டத்தின் சாராம்சமாகும். அதன்படி `சென்னை' என்று எல்லா இடங்களிலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு முழு முதற்காரணம் முதல்-அமைச்சர் கருணாநிதிதான்.
ஆனால், `மெட்ராஸ் ஐகோர்ட்டு' என்றிருப்பதை `சென்னை ஐகோர்ட்டு' என்று பெயர் மாற்றம் செய்வது-ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு, மத்திய அரசு ஆகியவற்றின் அதிகார எல்லைக்குள் வருவதால் பாராளுமன்றத்தில் இதற்காக சட்டம் நிறைவேற்றப்பட்டால்தான் `மெட்ராஸ் ஐகோர்ட்டு' - `சென்னை ஐகோர்ட்டு' என்று பெயர் மாற்றம் செய்யப்படும். இப்போது அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. மத்திய அரசின் நடவடிக்கையால் விரைவில் பாராளுமன்றத்தில் இதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டு `சென்னை ஐகோர்ட்டு' என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக