வெள்ளி, 19 அக்டோபர், 2012

மழைக்கால நோய்களில் இருந்து தப்புவது எப்படி? how to protect rain season diseases,

மழைக்கால நோய்களில் இருந்து தப்புவது எப்படி?

வெயிலோ, மழையோ, குளிரோ, தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, நமது உடல் தகவமைத்துக் கொள்ளும் இயல்புடையது. அதேபோல, அந்தந்த தட்பவெப்பத்திற்கேற்ப, வைரஸ், பாக்டீரியாக்களால் நோய்களும் அதிகமாக பரவ ஆரம்பிக்கும். தற்போது, வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டது. அதற்கு முன்பே, ஆங்காங்கே மழை கொட்டத் துவங்கி விட்டது. நோயின் முன்னோடியாக, "டெங்கு' காய்ச்சல் தமிழகம் முழுதும் பரவலாகி விட்டது. இதேபோல மழைக்காலத்தில், பல்வேறு நோய்களும் நம்மைத் தாக்கும். வெயில் காலத்தில் "எறும்பைப் போல' சுறுசுறுப்பாக செயல்படும் நாம், மழைக்காலத்தில் சோம்பல் நிலைக்கு சென்று விடுவோம். திடீர் மழையில் நனையும் போது சளி, காய்ச்சல் தொந்தரவு ஏற்படும். மழைக்கால நோய்கள், அதிலிருந்து நம்மை பாதுகாப்பது, நோய் வந்தால் எப்படி செயல்படுவதென, "மழைக் காலத் தொடரில்' டாக்டர்கள் ஆலோசனை வழங்க உள்ளனர்.மழைக்கால பொதுவான நோய்கள், அதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஜெ.சங்குமணி.

மழைக்காலம், பனிக்காலம் என்றாலே அதிக சளி, மூச்சுதிணறல், இருமல் தொந்தரவு பரவலாக இருக்கும். நோயாளிகள் இதிலிருந்து தங்களை தற்காத்து கொள்வது அவசியம்.ஆஸ்துமா, காசநோய், நுரையீரல் நோய் உள்ளவர்கள் வெளியே செல்லும் போது, மழையில் நனையக் கூடாது. மழையில் நனைந்தால் இருமல், சளி, தலைவலி, காய்ச்சல், மூச்சு முட்டல் ஏற்படும். இருதய நோயாளிகள் மழை, அதிக குளிரில் செல்லக்கூடாது. அதிக குளிர், ரத்தத் தமனிகளை சுருங்கவைப்பதால், ஆபத்தில் முடியலாம். மாரடைப்பு மற்றும் வால்வுயு க் கோளாறு உள்ளவர்களுக்கு அடிக்கடி சளிப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. பக்கவாதம், மூளை தொடர்பான நோய்கள் இருந்தால், நோயை கூடுதலாக்கி விடும்.சர்க்கரை நோயாளிகள் மழைக் காலத்தில் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்ய முடியாது. எனவே, ரத்த சர்க்கரை கூட வாய்ப்புள்ளது. அந்தநிலையில், உணவுக் கட்டுப்பாட்டை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அதிக குளிரில், அதிகாலையில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்யும் போது, மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.தேங்கிய மழைநீர் மூலம் சிக்குன்குனியா, டெங்கு, பன்றி காய்ச்சல் வரலாம். பன்றி காய்ச்சல் கிருமிகள் (எச்1என்1) அதிக குளிர், மழை சீதோஷ்ணத்தில் அதிகமாக உற்பத்தியாகும். எனவே, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும். பெண்கள், ஈரத்தலையுடன் இருந்தால், "சைனஸ்' தொல்லை ஏற்படும். வைரசால் கண்நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது.
குளிருக்கு அதிக டீ, காபி குடித்தால் ஆபத்து
பாதுகாப்பில்லாத குடிநீரால் மஞ்சள் காமாலை நோய் தாக்கலாம்.
கொதிக்க வைத்த வெதுவெதுப்பான நீரை குடித்தால், காலரா, வயிற்றுப் போக்கு ஏற்படுத்தும், கிருமிகளில் இருந்து நம்மை காப்பாற்றும்.
மழை பெய்யும் போது, சாக்கடை கழிவுநீரும் சேர்ந்துவிடும். தவிர்க்க முடியாமல் நடந்து வந்தாலும், உடனடியாக ஆடையை மாற்றி, கால்களை நன்கு கழுவ வேண்டும்.
மழையில் நனைந்த ஆடைகள் மூலம், தோல்நோய்கள் வரலாம்.
உடல் இயங்குவதற்கு தண்ணீர் அவசியம். குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
குளிர், மழைக் காலத்தில் உடலை வெதுவெதுப்பாக வைத்திருக்க, சிலர் அதிகமாக சிகரெட் புகைப்பர், மதுரை அருந்துவர். இவர்களுக்கு மாரடைப்பு, நுரையீரல், கல்லீரல் தொடர்பான நோய்கள் வரலாம்.
காப்பி, டீ அதிகமாக குடித்தால், வயிற்றுப் புண் ஏற்படும். சர்க்கரை நோயாளிகளின், கொழுப்புச்சத்து அதிகரிக்க காரணமாகிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக