வெள்ளி, 19 அக்டோபர், 2012

மிகுதியான கற்பனை, சிக்கல்களை உண்டாக்கும்

சொல்கிறார்கள்

"அதீத க் கற்பனை , சிக்கல்களை உண்டாக்கும்!'

மன நல மருத்துவர் ரஹ்மான்கான்: "நாலு பேர் நாலு விதமாக நம்மைப் பற்றி...' என்பதான சந்தேகம், நம் அனைவரையும் கடந்து செல்வது தான். ஆனால், எந்தவொரு முகாந்திரமும் இல்லாது, ஒரே நாளில் அடிக்கடி இந்த சந்தேகம் ஏற்பட்டால், அது தீவிர உளவியல் பாதிப்பின் ஆரம்பமாக இருக்கும்.சுயமதிப்பீடு குறைவாக இருப்பவர்கள், ஏதேனும் குற்ற உணர்வில் உழல்பவர்கள், தாழ்வு மனப்பான்மையில் சிக்கித் தவிப்பவர்கள், சந்தேகப்படுவதை குணமாகக் கொண்டவர்கள், கட்டுப்பாடான சூழலில் இறுக்கமாக வளர்பவர்கள், இப்படிப்பட்டவர்களுக்கு, இந்த எண்ணம் மேலோங்கும்.

அடுத்த கட்டமாக, மனச்சிதைவு, அதி தீவிர சந்தேக உணர்வு, அதீத மனக் கிளர்ச்சி என, மற்ற சில மனநலக் கேடுகளை இதுவே வரவழைத்து விடும்.இல்லாததை இருப்பதாகவும், இருப்பதை இல்லாததாகவும், சுலபமாக கற்பனை செய்து கொள்வர். நண்பர்கள், குடும்பத்தினர்களையே எதிரியாக பாவித்து, சங்கடங்களை உருவாக்கிக் கொள்வர்.
ஒரு கட்டத்தில், செய்தித் தாளில் வரும் செய்தியும், "டிவி' சீரியல்களும் கூட, தம்மை கிண்டல் செய்யவே திட்டமிட்டு ஒளிபரப்புவதாகவும், மிகையான கற்பனைக்குள், தீவிர நம்பிக்கையுடன், உலா வருவர்.இந்தப் போக்கில், திடீரென எண்ணம், சொல், செயல் எதுவுமே, ஒன்றுக்கொன்று தொடர்பின்றி, மாறிப் போகும் ஆபத்தும் உண்டு.
பாதிக்கப்பட்டவர் பேசுவதை, புலம்புவதை பரிகாசம் இன்றி, காது கொடுத்துக் கேட்கப் பழக வேண்டும்.

இந்த முயற்சியில் பலனில்லை எனில், அவரின் நிலையில், தூக்கமின்மை, பசியின்மை, கவனச்சிதறல், சமூகத்துடன் ஒன்ற முடியாது, நாளும் புதுப் பிரச்னைகள் என, கூடுதல் உபத்திரவங்கள் உருவானால், பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவம் அவசியம்.
ஆரம்ப நிலையில் மன நல ஆலோசகரிடம் சென்றால், கவுன்சிலிங் மூலம், மனப் பயிற்சி கிடைக்கும். கூடுதல் அவஸ்தைகளுடன், சற்றே முரண்டு பிடிக்கும் நிலையில் இருப்பவருக்கு, மருந்து, மாத்திரைகளுடன் கூடிய மனநல கவுன்சிலிங் தரப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக