சனி, 20 அக்டோபர், 2012

ஆலம்பரை க் கோட்டையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்




செய்யூர்:பராமரிப்பில்லாததால் சீரழிந்து வரும், வரலாற்று சிறப்புமிக்க, ஆலம்பரை கோட்டையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இடைக்கழிநாடு மக்கள் கோரியுள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம், இடைக்கழிநாடு பேரூராட்சியில், கடப்பாக்கத்தில் இருந்து 3 கி.மீ., தொலைவில், வங்க கடல் ஓரம் அமைந்துள்ளது ஆலம்பரை கோட்டை.
இது, கி.பி., 18ம் நூற்றாண்டில், செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவை கொண்டு, 15 ஏக்கர் பரப்பளவில், முகமதியர்களால் கட்டப்பட்டது.ஆலம்பரையில் நாணய சாலை இருந்தது. இங்கு, ஆலம்பரை காசு, ஆலம்பரை வராகன் ஆகிய நாணயங்கள் தயாரிக்கப்பட்டன. நாணய சாலைக்கு பொறுப்பாக இருந்த பொட்டிபத்தன், கடப்பாக்கம் காசி விஸ்வநாதர் கோவிலையும், அங்கு ஒரு குளத்தையும் வெட்டினான். இவ்வழியாக காசி யாத்திரை செல்பவர்கள் தங்கி செல்ல, ஒரு சத்திரத்தையும் கட்டினான். இச்சாலை இன்றும் காசிபாட்டை என்று, இன்றைக்கும் அழைக்கப்படுகிறது.வரலாற்று எச்சங்கள்இந்த ஆண்டு மார்ச் மாதம் இக்கோட்டையில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப் பட்டது. அகழ்வாராய்ச்சியின்போது, ஆற்காடு நவாப் தோஸ்த் அலிகான் காலத்தில் பயன்படுத்திய கல்லால் ஆன பீரங்கி குண்டுகள், ஈய குண்டுகள், பீங்கான் பாத்திரங்கள் மண்பானை ஓடுகள், காசு
தயாரிக்க பயன்படுத்திய செப்பு உருக்கு கழிவுகள்,புகைபிடிக்கும் பைப், இரும்பு கழிவுகள், விலங்குகளின் எலும்புகள், குழந்தைகள் விளையாடும் வட்ட சில்லுகள், வட்ட சுற்றி, தாயத்து, கண்ணாடி பொருட்கள் ஆகியவை கிடைத்துள்ளன.
பொழுதுபோக்க... இக்கோட்டையை சுற்றிபார்க்க, தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோட்டையை ஒட்டி செல்லும் பக்கிங்காம் கால்வாய் வழியாக, படகில் வந்து செல்வோரும் அதிகம். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், அருகில் உள்ள கிராம மக்கள், வேன் போன்ற வாகனங்களில், இங்கு வருகின்றனர். நாள் முழுவதும் தங்கி, சமைத்து, சாப்பிட்டு விட்டு, முகத்துவாரத்தில் குளித்து, பொழுது போக்குகின்றனர்.வரலாற்றுபெருமை பெற்ற இக்கோட்டை, பராமரிப்பில்லாமல் சீர்குலைந்து வருகிறது. சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இல்லை. இளைப்பாற நிழற்குடையோ, கட்டடங்களோ கிடையாது. வாகனங்களை நிறுத்த, இடவசதி இல்லை. பாதுகாப்பும் குறைவாகவே உள்ளது.இக்கோட்டையை சீரமைத்து பாதுகாப்பதுடன் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பொழுதுபோக்கு மையங்கள், பூங்காக்கள் அமைக்க வேண்டும். இக்கோட்டைக்கு செல்ல, பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும்.

நிதிக்கு கோரிக்கைஇதுகுறித்து தொல்லியல்துறைஆணையர் (பொறுப்பு) வசந்தி கூறியதாவது:ஆலம்பரை, ஜெகதேரி, தியாகதுர்கம், கட்டபொம்மன், மருதுபாண்டி, கருங்குழி, டேனிஷ், உதயகிரி போன்ற 11 கோட்டைகளையும், அவற்றில் உள்ள கல்வெட்டுகள், சிற்பங்கள், குளங்கள், சத்திரம், ஓவியங்கள் ஆகியவற்றை சரிசெய்யவும், உள்கட்டமைப்பு வசதி செய்யவும், மத்திய அரசிடம் 15 கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளோம். இதில், ஆலம்பரை கோட்டைக்கு நான்கு கோடி கிடைக்கும். நிதி கிடைத்தவுடன், கோட்டை பராமரிப்பு பணிகள் துவங்கும்.இவ்வாறு வசந்தி கூறினார்.
கோட்டையின் வரலாறு!:இக்கோட்டை கி.பி., 1735ம் ஆண்டு நவாப் தோஸ்த் அலிகான் வசமிருந்தது. கி.பி.,1750ல் ஆங்கிலேயரை எதிர்க்க உதவிய பிரஞ்சு தளபதி டியூப்ளசுக்கு, சுபேதார் முசாபர்ஜங் இக்கோட்டையை பரிசளித்தார். கி.பி. 1760ல் பிரஞ்சு படையை வெற்றி கொண்ட ஆங்கிலேய படை இக்கோட்டையை கைப்பற்றி சிதைத்தது. கடந்த, 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது இக்கோட்டையின் சில பகுதிகள் சிதைந்து விழுந்தன.எஞ்சிய பகுதி தான், தற்போது வரலாற்று சின்னமாக காட்சியளிக்கிறது. கோட்டையின் கீழ் பகுதியில் கப்பலில் கொண்டு வரப்படும் பொருட்களை ஏற்றி இறக்குவதற்காக, 100 மீட்டர் நீளமுள்ள படகுத்துறை உள்ளது. ஆலம்பரை படகுதுறையில் இருந்து ஜரிகை துணி வகைகள், உப்பு, நெய் போன்ற பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. நவாப்களின் ஆட்சி காலத்தில் ஆலம்பரைகோட்டை சிறந்த துறைமுக பட்டினமாக திகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக