வியாழன், 18 அக்டோபர், 2012

பெண்களும் ஈடுபடலாம் இந்த த் தொழிலில்!

சொல்கிறார்கள்

பெண்களும் ஈடுபடலாம் இந்த த் தொழிலில்!
 குவாரியில் கற்களை வாங்கி, கிரைண்டர்களுக்கான கல்லாக மாற்றித் தரும் தொழிலில் ஈடுபட்டுள்ள, திருப்பூர் அருகில் உள்ள வெள்ளியம்பாளையம் முத்துமாரியம்மன் மகளிர் குழுவைச் சேர்ந்த ஜான்சி: என் கணவருடன், கிரைண்டிங் பட்டறையில் வேலை செய்ய, திருப்பூருக்கு வந்தேன். தினக்கூலி வேலையில், சாப்பாட்டிற்கே பணம் சரியாக இருக்கும். வறுமையை சமாளிக்க, வட்டிக்கு கடன் வாங்குவோம். மகளிர் சுய உதவிக் குழு ஆரம்பித்தால், சுழல் நிதி என, பணம் போட்டு, நமக்குள்ளேயே குறைந்த வட்டிக்கு கடன் கொடுக்கலாம் என, கேள்விப்பட்டேன். உடனே, செயலில் இறங்கினேன். 15 பெண்களை சேர்த்து, குழுவைத் துவங்கி விட்டோம். முதலில், இட்லி மாவு அரைத்து விற்றோம்; பெரிய லாபம் இல்லை.அப்போது, தான் நமக்கு தெரிந்த கிரைண்டர் கல், "பினிஷிங்' தொழிலை செய்யலாம் என, நான் யோசனை கூற, அனைவரும் ஏற்றுக் கொண்டு தொழிலில் இறங்கினோம். 2007ம் ஆண்டு வங்கி மூலம், 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, இரண்டு மிஷின்களை வாங்கி தொழிலை துவங்கினோம். இரவு பகலாக கஷ்டப்பட்டு, இப்போது, இந்தத் தொழில் மூலம், நாள் ஒன்றுக்கு, 150 ரூபாயிலிருந்து, 200 ரூபாய் வரை ஒரு ஆளுக்கு லாபம் கிடைக்கிறது.கிரைண்டர் கல் செய்வதற்கு முதலில், குவாரியில் இருந்து வரும் கல்லை, "ட்ரில்லிங் மிஷின்' மூலம், அடிமட்டம் போட்டு தயார் செய்வோம். பின், கட்டிங் மிஷின் மூலம், கீழ்ப்பகுதியை வெட்டி, வெளிப்பகுதியை, மினுமினுப்பிற்காக, உளியால், கொத்துவோம். அந்தக் கல்லை, "லேத் மிஷினில்' மாட்டி குடைந்து, கடைசியாய், "பினிஷிங் மிஷினில்' மாட்டி சரிசெய்து, இறுதியில், கிரைண்டரில் வைக்கும் வடிவத்திற்கு கல்லை கொண்டு வருவோம்.கிரைண்டர் தயாரிக்கும் போது, உதிரியாய் விழும் கற்கள் மூலம், இஞ்சி, பூண்டு அரைக்கும் கல்லை, தயார் செய்வோம். இந்தத் தொழிலை பொருத்தவரை, கற்கள் கிடைப்பதில் தான் சிரமம் அதிகம். கஷ்டம் இல்லாமல், எந்தத் தொழிலையும் செய்ய முடியாதே!விரைவில் வங்கி கடனை அடைத்துவிட்டு, புதிதாக இரண்டு மிஷின்களை இறக்கி, இன்னும் பெரிதாக இந்த தொழிலை செய்ய வேண்டும் என்பது தான், எங்கள் குழுவின் ஆசை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக