ஞாயிறு, 14 அக்டோபர், 2012

வன்முறை இல்லாமல் தமிழ் பேசுவோருக்கு வாணாள் மிகுதி


"வன்முறை இல்லாமல் தமிழ் பேசுவோருக்கு ஆயுள் அதிகம்'

அன்றாட நடைமுறையில் ஆங்கில மொழி கலப்பு இல்லாமல், தமிழில் உரையாடுவதை தமிழர்கள் அனுமதிப்பது இல்லை. பிறந்த குழந்தைக்கு "டாடி, மம்மி' என்று சொல்லிக் கொடுப்பது ஒருவித நாகரிகமாக மாறி வருகிறது. இன்னும் ஒரு படிமேல் சென்று ஆங்கிலம் கலந்து பேசுவோரை உலகத்தில் அனைத்தும் அறிந்தவராக கருதும் மனோபாவம்
தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகிறது. ஆங்கிலம் கலக்காமல் தமிழ் சொற்களை மட்டும் பயன்படுத்தி ஒருவர் உரையாடினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். "தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி' என்று, சந்திக்க வருபவரின் கையை பற்றிக்கொண்டு, இனிய முறுவலுடன் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் அனுபவப்படுத்துகிறார் பரசுராமன்.இவரை சந்திக்கும் நிகழ்வு அமைந்தால், பணிவாக கும்பிட்ட நிலையில் தெளிவான தமிழ் உச்சரிப்புடன் அவர் பேசும் பாணி, மனசில் நிழலாடிக் கொண்டே இருக்கும். அவருடன் உரையாடியதிலிருந்து...

உங்களை பற்றி?
என் இல்லத்தரசி பானுமதி. பசுபதி, பவித்ரா, பபிதா என மூன்று செல்வங்கள். கடந்த 25 ஆண்டாக மீனம்பாக்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், வாகன ஆய்வாளர்களின் உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன்.

உங்கள் கல்வி குறித்து?
காஞ்சிபுரம் மாவட்டம் கீழாம்பூர் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்தேன். ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது தந்தை இறந்து விட்டதால், தாயை கவனிப்பதற்காக, 1969ல் சென்னை வந்துவிட்டேன்.

தமிழ் பேசும் ஆர்வம் எப்படி ஏற்பட்டது?
செங்கல்வராய சாஸ்திரி, அம்பலவாணன், கண்ணையா போன்ற தமிழ் ஆசிரியர்கள் ஆரம்ப மற்றும் நடுநிலை கல்வியில் பாடம் நடத்தியவர்கள். அவர்களின் மொழி நடை, பாவனை, அன்பு கலந்த பேச்சு என்னை ஈர்த்தது. அதுவே என்னை தமிழ் பேச வைத்தது.என் திருமணத்தை நடத்தி வைத்தவரும் செங்கல்வராய சாஸ்திரி தான். தலைவர்களின் மேடை பேச்சு என்னை பேச்சாளராக்கி விட்டது. தமிழ் அறிஞர்களின் புத்தகத்தை தினமும் 20 நிமிடங்கள் படித்தபிறகுதான் தூங்கச் செல்கிறேன். இதுவே, தமிழ் ஆர்வம் மேலும் கூட வழிவகுத்தது. "படி, படித்து படி, படித்து படித்து படி' என்பது பாரதிதாசன் சொன்னது. இதுதான் என்னுடைய மந்திரகோல்.

மொழியை பற்றி?
தமிழ் மொழி ஒழுக்கம், மரியாதை, அன்பு போன்றவற்றை கற்றுக்கொடுக்கும். ஒரு நபரை முதல் சுற்றில் பார்க்கும்போது, "வணக்கம், தங்களை சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி', "வாங்க, உங்களுக்கு என்ன தேவை' என, கூறி பாருங்கள். பல ஆண்டு பழக்கப்பட்டவர் போன்ற உணர்ச்சியில் நனைந்து மட்டற்ற மகிழ்ச்சி கொள்வார். தமிழ் சொற்களில் அளவிட முடியாத மாண்புகள் அடங்கி உள்ளன.

திருமணங்களில் உபசரிப்பீர்களாமே?
திருமண நிகழ்ச்சியை நடத்துவோர், நிகழ்வுக்கு வருபவர்களை உபசரிப்பதற்கே நேரம் போதாதது போல் செயல்படுவர். இது போன்ற திருமண நிகழ்ச்சியில் நான் பங்கேற்றால், வாசல்படியில் நின்று, பாகுபாடில்லாமல் அனைவரையும் வணக்கம் கூறி உபசரித்து வரவேற்பேன். விருந்து நடக்கும் இடம் வரை அழைத்துச் சென்று, நாற்காலியில் அமர வைப்பேன். அதில் அவர்களுக்கு ஏற்படுகிற மகிழ்ச்சி இருக்கிறதே, கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது.

கோபப்பட மாட்டீர்களாமே?
தமிழை மட்டும் வழக்கு மொழியாக பேசிப்பாருங்கள். கோபமே வராது. எவ்வளவு இன்னல்கள், கேவலங்கள் என்னை நோக்கி வந்தாலும் கோபப்பட மாட்டேன். அது அவர்களுடைய "தரம்' என, ஒதுங்கி விடுவேன்.கோபம் ஒருவனை அழித்து விடும். ஒருவர் தாழ்ந்தவர் என்றோ, நாம் ஏன் அவரை மதிக்க வேண்டும் என்றோ நினைக்காமல், இரு கைகளையும் பற்றி, புன் சிரிப்பை மலரவிட்டு, "மகிழ்ச்சி' என, கூறி பாருங்கள். எவ்வளவு பெரிய எதிரியும் அந்த அன்பில் விழுந்து விடுவார்.

பொது இடங்களில்?
ஒரு முறை மாநகர பேருந்தில், பயணம் செய்த போது, அகண்டபாதைக்கு (பிராட்வே) ஒரு பயணசீட்டு தாருங்கள் என, கேட்டேன். "எங்க போனுமுன்னு கேட்டா, ரோட்டுக்கு போனுமுனு சொல்லுற' என, நடத்துனர் குறைபட்டு கொண்டார்.மற்றொரு நாள், நீதிமன்ற வளாகத்தில், ஒரு நீதிமன்ற வில்லை (கோர்ட் பீஸ் ஸ்டாம்ப்) தாருங்கள் என, கேட்டேன். பதிலாக, "ஏன் தமிழில கேட்க மாட்டியா?' என, விற்பனையாளர் திருப்பி கேட்டார். அமைதியாக புரிய வைத்தேன். அவர் ஏற்றுக்கொண்டார். கவுரவ பிரச்னை தான் நம்மை தமிழ் பேச விடுவதில்லை.

உரையாடல்கள் குறைந்து வருகிறனவே...
முகம் பார்த்து பேசினால் தொந்தரவு வந்துவிடுமோ என்ற அச்சம் பலரிடம் உள்ளது. குடும்பத்தில் உள்ள சிரமங்களை சொல்லி தேவையில்லாத பிரச்னைகளில் மாட்டி விடுவார்கள் என்ற பயத்தில், முகத்தை கூட பார்க்காமல் பலர் கடந்து விடுகின்றனர். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத அணுகுமுறை இருந்தால் நட்பு அதிகரிக்கும். வன்முறை இல்லாத தமிழ் பேச்சுக்கு ஆயுள் அதிகம்.ஆங்கில சொற்களை பயன்படுத்தாமல் பேசும்போது கிடைக்கும் பாராட்டுக்களை தமிழ் மொழிக்கு கிடைத்த பெருமையாகவே நான் கருதுகிறேன். உயிர் மூச்சு உள்ளவரை தங்கு தடையின்றி தமிழில் பேச வேண்டும் என்பது தான் என் ஆசை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக