வெள்ளி, 19 அக்டோபர், 2012

வெறுப்பில் உள்ளனர் மக்கள்

வெறுப்பில் உள்ளனர் மக்கள்!

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி, கோவையிலிருந்து எழுதுகிறார்: சமீபகாலமாக, தமிழக அமைச்சர்கள் நான்கு பேர் கொண்ட குழுவினர், 40 தொகுதிகளிலும், ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துகின்றனராம்; அவர்கள், ஏதாவது மக்கள் நலப்பணிகளை ஆய்வு செய்ய போகின்றனரா என்றால், அது தான் இல்லை.வரும், 2014ல் நடக்கப் போகிற, எம்.பி., தேர்தலுக்காக, செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்துகின்றனர். போகட்டும், அதில், யதார்த்தமான பேச்சுகளையாவது பேச வேண்டாமா?"ஜெ.,வைப் பார்த்து, அமெரிக்காவே அச்சப்படுகிறது; ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் என, இன்ன பிற நாடுகளும் பயப்படுகின்றன' என்கிறார் ஒரு அமைச்சர்.

இன்னொரு அமைச்சரோ, "இந்த நாட்டை ஆள, அனைத்து திறமைகளும் ஒருங்கே கொண்ட, ஒரே தலைவர், ஜெ., தான்' என்று, புளகாங்கிதம் அடைகிறார். மற்றொருவரோ, "அம்மாவே பிரதமர்; அவரை பாரதப் பிரதமராக அமர்த்தியே தீருவோம்' என்று குதூகலிக்கிறார்.இதெல்லாம் சாத்தியமா; இப்போது அவசியமா... தமிழக மக்கள், அவரை முதல்வராக தேர்ந்து எடுத்த பணி, முற்றிலும் நிறைவடைந்து விட்டதா? தமிழக மக்கள், எல்லா வகையிலும் தன்னிறைவு பெற்று, சந்தோஷமாக வாழ்கின்றனரா?அத்தியாவசியமான தேவைகளுக்காக, அன்றாடம், வீதியில் நின்று போராடி, போலீசாரிடம் அடியும், உதையும் வாங்கி, மக்கள் கஷ்டப்படுவதை அமைச்சர்கள் அறிவரா? ஒரு மணி நேர மின்வெட்டு, படிப்படியாக முன்னேறி, 14 மணி நேரம், 18 மணி நேரமாக அதிகரித்ததால், தொழில்கள் முடங்கி, விரக்தியில், தொழிலாளர்கள் விழி பிதுங்கி நிற்பது தெரியுமா? டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என்று, நாள் தோறும் பலர் இறந்து வருவதையும், விலைவாசி விண்ணை முட்டிக் கொண்டிருப்பதையும் தான் அறிவரா?இப்படி, பல்வேறு பிரச்னைகள் விஸ்வரூபம் எடுத்து வரும் வேளையில், அது, கட்சித் தொண்டர்களை பாதிக்கக் கூடாது என்பதற்காக, "அம்மாவே பிரதமர்' என்று கோஷம் போட்டு, அமைச்சர்கள், வேஷம் போடுவது தேவையா?
இப்போது தேர்தல் வந்தால், அ.தி.மு.க., ஒரு, "சீட்' கூட பெறாது என்பது தான் உண்மை. மக்கள், அந்த அளவிற்கு வெறுப்பில் உள்ளனர். ஆட்சி, அதிகாரம், சுகவாசம் என்ற திளைப்பில் உள்ள ஆட்சியாளர்கள், இதை உணர்வரா?

செயல்வீரர்கள் கூட்டத்தை நிறுத்தி, அர்ப்பணிப்பு உணர்வோடு, மக்கள் நலப்பணிகளை, ஊர் ஊராகச் சென்று மேற்கொள்வரா... இல்லை, செவிடன் காதில் ஊதப்பட்ட சங்கா?

சனி பகவான்மிரட்டியிருப்பாரோ?
என்.கந்தசாமி, மதுரையிலிருந்து எழுதுகிறார்: "தமிழகத்தின் இருள் என்று நீங்குகிறதோ, அன்று தான், கறுப்புச் சட்டை அணிவதை, இந்தக் கருணாநிதி நிறுத்துவான்; அதுவரை, 24 மணி நேரமும், கறுப்புச் சட்டை அணிந்திருப்பான்' என்று, தி.மு.க., தலைவர் போட்ட சபதம், நான்கு நாட்களில், "புஸ்வாணம்' ஆகிவிட்டது.
இப்படி, இவர், நான்கு நாட்களோடு, கறுப்புச் சட்டை அணிவதை நிறுத்தி விட்டாரே என, கண்ணீர் வடிப்பவர்களுக்குச் சொல்ல விரும்புவது யாதெனில்...

கருணாநிதி கனவில், சனி பகவான் தோன்றி, "நாத்திக சிகாமணியே... கறுப்பு நிறம் எனக்குப் பிடித்த நிறம்; அதை, ஆத்திகர்கள் அணிவது தான் உத்தமம். அடிக்கடி கொள்கைகளையும், கோட்பாடுகளையும் மாற்றி, பகுத்தறிவாளர் வேஷம் போடுபவர்
களுக்கு, கறுப்புச் சட்டை அணியும் யோக்கியதை இல்லை. "எனவே, இதை உடனே நிறுத்தி, வழக்கம் போல வெள்ளைச் சட்டையும், மஞ்சள் துண்டும் அணிந்து கொள். அப்படி செய்யத் தவறினால், உன் பேரன் தயாநிதி இருக்கும் ரகசிய இடத்தை, நான் வெளிச்சம் போட்டுக் காட்டி விடுவேன்!' என்று, மிரட்டியிருப்பாரோ என்னவோ!அதனால் தான், பாவம், தி.மு.க., தலைவர் அஞ்சி, நடுங்கி, கறுப்புச் சட்டையைத் தூக்கி கடாசி விட்டார் போலும்.இனி, கறுப்புக் கண்ணாடி கூட அணிய மாட்டார்; தி.மு.க., கொடியில் இருக்கும் கறுப்பு வண்ணத்தையும் நீக்கி, மஞ்சள் நிறத்தை, தி.மு.க., கொடிக்கு வழங்கலாம்!"கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு' என்ற பாட்டை, இனி, அவர் கண்டிப்பாக, கேட்கவே மாட்டார். கறுப்பு என்ற வார்த்தையையே, தன் அகராதியிலிருந்து நீக்கி விடுவார். கறுப்பு மீது, அவருக்கு வந்திருக்கும் வெறுப்புக்கு, என்ன காரணம் என்பதை, இப்போது, உடன்பிறப்புகள் உணர்ந்திருப்பர்.கறுப்புப் பணத்தை எல்லாம், வெள்ளைப் பணமாக்க, கருணாநிதி, தீவிர முயற்சி மேற்கொள்ளலாம். சனி பகவான், கருணாநிதியை நன்றாகவே ஆட்டுவிக்கிறார்! -தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக