ஞாயிறு, 14 அக்டோபர், 2012

"யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம்!'

"யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம்!'
தினமலர்
கண்ணாடிச் சிற்பங்கள் மற்றும் நவீன மெழுகுவர்த்திகள் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள வர்ஷா: என் சொந்த ஊர், குஜராத். "ஆர்க்கிடெக்சர்' டிப்ளமா முடித்தேன். வேலை தேடிக் கொண்டிருந்த சமயத்தில் தான், சென்னையில் பிசினஸ் செய்து கொண்டிருந்தவருடன், எனக்குத் திருமணம் நடந்தது. பின், ஒரு நடன நிறுவனத்தில், வரவேற்பாளராகப் பணியில் சேர்ந்தேன். குடும்பத்தை கவனிக்க நேரம் போதாததால், வேலையை விட்டுவிட்டேன். அடுத்த சில மாதங்களில், என் கணவருக்கு, பிசினசில், பெருத்த நஷ்டம் ஏற்பட்டு விட்டது.
குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் கட்டக் கூட, கையேந்தி நிற்க வேண்டிய நிலை. அப்போது தான், ஒரு கண்காட்சி மூலம், கண்ணாடிச் சிற்பங்கள் செய்யும் தொழில், எனக்கு அறிமுகமானது. கண்காட்சியில், கண்ணாடிச் சிற்பங்களின் விற்பனையும், அதற்கு மக்களிடம் இருந்த வரவேற்பையும் கவனித்தேன். "இந்த தொழிலை, நாமே செய்யலாமே' என, யோசித்தேன்.கண்ணாடிச் சிற்ப தொழில் பயிற்சி எடுத்தேன். கடன் வாங்கி, மூலப் பொருட்கள் வாங்கினேன். வீட்டிலேயே விதவிதமான கண்ணாடிச் சிலைகள் செய்து, தெரிந்தவர் மூலம், தயாரிப்புகளை விற்பனைக்கு வைத்தேன். நேர்த்தியான வடிவமைப்பால், நல்ல வரவேற்பும், வருமானமும் கிடைத்தது.கண்ணாடிச் சிற்ப தொழிலுடன் கூடவே, மெழுகுவர்த்திகள் செய்யும் தொழிலிலும் இறங்கினேன். நட்சத்திர ஓட்டல்களில் பயன்படுத்தும் மெழுகுவர்த்திகளை தயாரித்தால், வெற்றி நிச்சயம் என்பதால், அதற்கான பயிற்சிகளை எடுத்தேன்.சமையல் நேரம் போக, மீதி நேரங்களில் என் வீட்டு அடுப்படி, மெழுகுவர்த்தி தொழிற்சாலையாக மாறியது. கற்பனைத் திறனை பயன்படுத்தி, பூ, பட்டாம் பூச்சி என, பல வடிவங்களில் மெழுகுவர்த்திகள் செய்தேன். இதற்காக, "நம்பர் ஒன் குவாலிட்டி' மெழுகை மட்டுமே பயன்படுத்தினேன்.என் மகன், மகள் இருவரும், என் தயாரிப்புப் பொருட்களின் விற்பனைக்காக, "வெப் சைட்' உருவாக்கித் தந்தனர். இதனால், என் தயாரிப்புகளுக்கு, வெளிநாடுகளிலும், வரவேற்பு கிடைக்கிறது. கொஞ்சம் பணம், கற்பனைத் திறன், மனதில் உறுதி இருந்தால், யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக