ஞாயிறு, 24 ஜூலை, 2016

தமிழில் வாதாடியதால் வழக்கைத் தள்ளுபடி செய்வதா? – இராமதாசு கண்டனம்


தலைப்பு-தமிழில்வாதாடியதால் தள்ளுபடி-இராமதாசு :thamizhil_vazhakkuthallupadi_ramdoss

தமிழில் வாதாடியதால் வழக்கைத் தள்ளுபடி செய்வதா?

– இராமதாசு கண்டனம்

 உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில் தமிழில் வாதாடியதால் வழக்கைத் தள்ளுபடி செய்வதா? என்று  மரு.இராமதாசு அறிக்கை வழி வினா எழுப்பிக் கண்டித்ததுள்ளார்.
பா.ம.க நிறுவனர்  மரு.இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
  மக்கள் நலனுக்காக எத்தனையோ சிறப்பான தீர்ப்புகளை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை  விந்தையான தீர்ப்பை அளித்திருக்கிறது. பொதுநலன் சார்ந்த வழக்கில் வழக்கறிஞர் இல்லாமல் வாதிட்ட  முறையீட்டாளர் தமது தரப்பு வாதுரையைத் தமிழில் கூறியதை ஏற்க முடியாது எனக் கூறி அவரது வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர். இது நீதி வழங்க மறுப்பதற்குச் சமமானதாகும்.
  புதுக்கோட்டை நகராட்சி வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களும், வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்தவர்கள் பெயர்களும் இருப்பதால் அவற்றை நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையருக்கு ஆணையிடக் கோரி புதுக்கோட்டையைச் சேர்ந்த  செயயப்பிரகாசு என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள்  இராமமோகனராவ், எசு.எசு.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று  கேட்பிற்கு வந்திருக்கிறது.
  அப்போது   முறையீட்டாளர் அவரது தரப்பு வாதங்களைத் தமிழில் முன்வைத்துள்ளார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘‘நீதிமன்ற நடைமுறைகளின்படி தமிழில் வாதிட முடியாது. ஆங்கிலத்தில்தான் வாதிட வேண்டும். இல்லாவிட்டால் வழக்கறிஞரை அமர்த்தி வாதிட வேண்டும்’’ என்று கூறியுள்ளனர்.
  ஆனால், தமக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால், தமிழிலேயே வாதிட விரும்புவதாக   முறையீட்டாளர் செயப்பிரகாசு கூறியதை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், அவர் தொடர்ந்த மனுவைக்  கேட்டறியாமலே  தள்ளுபடி செய்துள்ளனர். மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகளின் இந்தத் தீர்ப்பு ஏற்க முடியாதது என்பதுடன், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும், நாடு முழுவதுமுள்ள உயர்நீதிமன்றங்களில் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுக்கும் எதிரானது ஆகும்.
  அரசியலமைப்புச் சட்டத்தின் 348ஆவது பிரிவின்படி உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் ஆங்கிலத்தில் மட்டும்தான் வாதிட முடியும் என்றாலும், பல மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களில் உள்ளூர் மொழியில் வாதிடுவது  இசைவளிக்கப்பட்ட மரபாக உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்கள் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்த மரபைப் பின்பற்றி வருகின்றனர். நீதிபதிகள் மார்க்கண்டேய கட்சு, ஏ.பி..சா, ஏ.கே. கங்குலி, கோகலே, ஆர்.கே. அகர்வால், இக்பால் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளாக இருந்தபோது அவர்கள் முன்னிலையில்  முறையீட்டாளர்கள் எவரேனும் தமிழில் விவரங்களைக் கூறினால், அதன் ஆங்கில மொழியாக்கத்தைத் தங்களின் அமர்வில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகளிடம் கேட்டறிந்து அதனடிப்படையில் நீதி வழங்கியுள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் இப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கிசன் கவுலும் இதே அணுகுமுறையைத்தான் கடைபிடித்து வருகிறார். இந்த மரபுக்கு மாறாக மதுரை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தமிழை அவமதிக்கும் செயலாகும்.
  சென்னை, மதுரை உயர்நீதிமன்ற அமர்வுகளில் தமிழில் வாதிட முடியாத அவல நிலைக்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம் ஆகும்.
  ஒரு மாநிலத்தின் உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக அம்மாநில மொழியை அறிவிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு என்பதால், சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாகத் தமிழை அறிவிக்கக் கோரும் தீர்மானம் கடந்த கார்த்திகை 21, 2037 / 06.12.2006 அன்று பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சியால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதன்பின் 10 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், அதன்மீது எந்த முடிவும் எடுக்காமல் மத்திய அரசு கிடப்பில் போடப்பட்டிருப்பதும், இதுகுறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தராமல் தமிழக அரசு உறங்குவதும் தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் இழைக்கப்படும் மன்னிக்க முடியாத  வஞ்சகங்கள். இந்நிலை இனியும் தொடரவிடக் கூடாது.
  எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாகத்தமிழை அறிவிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர், தலைமையாளர்(தலைமையமைச்சர்(பிரதமர்) முதலான தலைவர்களை முதலமைச்சர்  செயலலிதா நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். மத்திய அரசும் இதில் அலட்சியம் காட்டாமல், அலகாபாத்து, பீகார்,  இராசசுதான், மத்தியப்பிரதேசம் ஆகிய 4 மாநில உயர்நீதிமன்றங்களின் அலுவல் மொழியாக இந்தியை அறிவித்திருப்பதைப் போல சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு  மரு.இராமதாசு கூறியுள்ளார்.
Ramadoss05

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக