வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

இரும்புக் கரம் கொண்ட பெண்!


இரும்புக் கரம் கொண்ட பெண்!

கணவனுக்கு உதவியாக, இரும்பு ப் பட்டறை தொழில் செய்யும் விஜயலட்சுமி: சொந்த ஊர், நெல்லையின் கல்லிடைக்குறிச்சி. 28 ஆண்டுகளுக்கு முன், பேச்சிமுத்து என்பவருடன் திருமணமாகி, தூத்துக்குடியில், குடும்பத்துடன் வசித்து வருகிறேன். கணவர் சொந்தமாக லேத் பட்டறை வைத்து, கிரில் வேலை செய்து வருகிறார். பட்டறையில் இரண்டு, மூன்று பேரை வேலைக்கு வைத்து, தொழில் நடத்தினோம். வேலையாட்களுக்கான சம்பளம் உயர்ந்ததே தவிர, வேலைக்கான ஆர்டர்கள் கூடிய பாடில்லை. இதில், தினமும் ஏற்படும் மின்வெட்டால், வேலை இல்லாவிட்டாலும், தினக்கூலியாக, 350 ரூபாய் தர வேண்டும். இதனால், பட்டறை நடத்துவதில், வருமானம் குறைந்து சிக்கல் ஏற்பட்டது.

வேலை செய்பவர்களும் நின்று விட்டனர். கணவர் மட்டுமே தனியாக கஷ்டப்படுவதால், அவருக்கு வேலையில் உதவ வேண்டும் எனத் தோன்றியது. இங்கு ஆண்களே வேலை செய்ய முடியும் என, என்னை தவிர்த்தார். குடும்ப சூழ்நிலையை விளக்கி, அவர் பயத்தை நீக்கினேன்.முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. கையில், அங்கே, இங்கே அடிபட்டு, ரத்தம் வந்தாலும், மன உறுதியோடு, கவனமாக வேலை செய்தேன். சுத்தியல், வெட்டு இரும்பு, கிரில் கம்பி போன்றவற்றை பிடிப்பதால், கைகள் காய்த்து விட்டன.கடினமான இரும்பு கம்பிகளை வளைப்பது, வெட்டுவது, வெல்டிங் மூலம் பற்ற வைப்பது, "ட்ரில்லிங் மிஷினில்' துளை போடுவது என, ஆறு, ஏழு ஆண்டுகளில், கற்றுக் கொண்டேன். இன்று, 47 வயதானாலும் பெரிய சம்மட்டியைக் கூட எளிதாக தூக்கி, இரும்பு கம்பிகளை வெட்டும் அளவுக்கு பழகி விட்டேன்.லேத்தின் வரவு-செலவு கணக்குகளை, கம்ப்யூட்டரைப் போல் அப்படியே மனதில் பதிய வைத்து விடுவேன். ஓய்வு நேரங்களில், தையல் வேலையும் செய்வேன்.என் கடின உழைப்பால், குடும்பத்திற்கான வருமானம் அதிகமாக கிடைப்பதால், கஷ்டம் எல்லாம் தானாக மறைந்தது. இன்றைய சூழலில் குடும்பம் நடத்த, கணவனின் சம்பாத்தியம் மட்டும் போதாது, மனைவியும் களம் இறங்குவது அவசியம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக