ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

உரத்த சிந்தனை: புகையிலை இல்லாத தமிழகம்! மருத்துவர் கு.கணேசன்

உரத்த சிந்தனை: புகையிலை இல்லாத தமிழகம்! மருத்துவர் கு.கணேசன்
வளரும் நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்றவற்றில், புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 1998ல், 110 கோடி பேர், உலகம் முழுவதும் புகை பிடித்ததாகவும், 2012ல், இது, 140 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் எச்சரித்துள்ளது, உலக நலவாழ்வு நிறுவனம்.

உலக அளவில் புகை பிடித்தல் மற்றும் புகையிலை தொடர்பான பொருட்களைப் பயன்படுத்துவதில், சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. புகையிலையால், நம் இந்திய அரசுக்கு ஆண்டுதோறும், 10 ஆயிரத்து, 271 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஆனால், புகையிலையால் உண்டாகும் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்காக, 30 ஆயிரத்து, 800 கோடி ரூபாயை செலவிடுகிறது அரசு. இந்தியாவில், புகையிலையால் தினமும், 2,500 பேர் இறக்கின்றனர் எனும் அதிர்ச்சித்தகவலைத் தருகிறது, "லான்சட்' எனும், பிரபல மருத்துவ இதழ்.

நம் நாட்டில் இப்போது, ஆண்களுக்குச் சமமாக, பெண்களும் புகைபிடிக்கத் துவங்கியுள்ளனர். இந்தியாவில் புகையிலை பயன்படுத்துவோரில், 15 முதல், 24 வயது உள்ளவர்கள், 18 சதவீதம் பேர்; 24 லிருந்து, 44 வயதுக்குள் உள்ளவர்கள், 37 சதவீதம் பேர்; தமிழகத்திலும், புதுவையிலும், 20 சதவீதம் பேர் புகை பிடிக்கின்றனர் என்கிறது மத்திய சுகாதாரத்துறை.இந்தப் புள்ளி விவரத்தைப் பார்த்தாலே, நிலைமை புரியும். எந்த அளவுக்கு இத்தீயப்பழக்கம், இளைய வயதினரைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது என்று. எய்ட்ஸ் நோய்க்கு அடுத்தபடியாக, "இரண்டாம் உயிர்கொல்லி' எனப் பெயர் பெற்றுள்ள புகையிலை குறித்து, இந்தியர்கள் கவலைப்படுவதும் இல்லை; அச்சப்படுவதும் இல்லை என்பது தான், இதற்கு முக்கியக் காரணம். சிகரெட் புகையில் நிகோடின், கார்பன் மோனாக் சைட், அமோனியா, அசிடோன், ஆர்செனிக், பென்சீன் என்று, 4,000க்கும் மேற்பட்ட நச்சுப் பொருள்கள் உள்ளன. நிகோடின் நச்சு, இருப்பதிலேயே மிக மோசம்.

அட்ரீனலின் இயக்குநீரை, நிகோடின் அதிகமாகச் சுரக்கச் செய்து, ரத்த அழுத்தத்தை அதிகரித்து, மாரடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தான், சிகரெட் சிநேகம் உள்ளவர்களுக்கு, மாரடைப்பு வரும் வாய்ப்பு, 25 மடங்கு அதிகம்; உயர் ரத்த அழுத்தம் வருவதற்கு, 15 மடங்கு வாய்ப்பு அதிகம்; சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு, ஐந்து மடங்கு அதிகம்.இது மட்டுமா?

நிகோடின், ரத்த நாளங்களைச் சுருங்கச் செய்வதால், புகைபிடிப்போருக்கு மூளையில் ரத்த நாளம் அடைத்துக் கொள்ள, பக்கவாதம் வருகிறது; கை, கால்களுக்குச் செல்லும் ரத்தம் குறைந்து, விரல்கள் அழுகி, கை, கால்களையே அகற்ற வேண்டிய ஆபத்து உருவாகிறது. ஆண்களின், விந்தணுக்களின் தரத்தையும், எண்ணிக்கையையும் நிகோடின் குறைப்பதால், அவர்களால் தந்தை ஆக முடிவதில்லை.புகையிலையில் இருக்கும், "டார்' எனும், "பாலிசைக்ளிக் ஹைட்ரோ கார்பன்' புற்றுநோயை உருவாக்கும். புகைபிடிப்போருக்கு வாய், கன்னம், நாக்கு, தொண்டை, மூச்சுக்குழல், நுரையீரல், உணவுக்குழல், இரைப்பை ஆகிய இடங்களில், புற்றுநோய் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் புற்றுநோயால் ஏற்படும் மரணங்களில், 50 சதவீதம் பேர், புகையிலையைப் பயன்படுத்தியவர்களாக உள்ளனர். இவர்களில் சரிபாதிப் பேர், பெண்கள் என்பது தான், அதிர்ச்சித் தகவல்.

இதற்குக் காரணம், இந்தியாவில் ஒரு பள்ளி அல்லது கல்லூரி மாணவ, மாணவியர் சிகரெட் புகைத்தால், அது ஒழுக்கக்கேடு என்று சமூகம் குற்றம் சாட்டும். ஆனால், அவர்கள் பான் மசாலா அல்லது குட்கா, பீடா பயன்படுத்தினால், அது தவறாகத் தெரியாது.எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல், தயக்கமில்லாமல் பெற்றோருடன், ஏன், ஆசிரியருடன் ஒன்றாக அமர்ந்து, இவற்றை உபயோகிக்க முடிகிறது. இத்தகைய, "புகையில்லா புகையிலைப் பழக்கம்' பெண்களிடம் அதிகரித்து வருகிறது. சினிமா அரங்குகள், பணியிடங்கள், பஸ் நிறுத்தங்கள், சந்தை, இப்படி பொது இடங்களில், மக்கள் புகைப்பிடிக்கும் போது, புகைப்பழக்கம் இல்லாத மற்றவர்களுக்கும், புகையிலை நச்சு உடலுக்குள் சென்று, பல்வேறு உடல்நல பாதிப்புகளை உண்டாக்குகிறது.ஆகவே, தவறு செய்யாத வர்களுக்கும், தண்டனை பெற்றுத் தரும் இத்தீயப் பழக்கத்திற்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது, நம் அனைவரின் கடமையல்லவா?

பொதுமக்கள் புகை பிடிப்பதை கைவிட்டு, தங்கள் நலவாழ்வை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், 1960ம் ஆண்டிலிருந்தே, இந்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக, 2008ல், பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட்டது. அபராதம் உண்டு என்றாலும், எல்லாமே ஒப்புக்குச் சப்பாணியாகவே உள்ளது.புகையிலை விற்பனையை அதிகரிக்க, புகையிலை நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளும் பிரமாண்டமான உத்திகளோடு ஒப்பிடும் போது, பட்டுச் சேலைகளுக்கு மத்தியில், பருத்திச் சேலை கண்ணில் படாத மாதிரி, புகையிலையின் கேடுகளை அறிவிக்கும் விளம்பரங்கள், மக்களை அவ்வளவாகச் சென்றடைவதில்லை."புகைப்பது உடல்நலனுக்குக் கெடுதல்' எனும் எச்சரிக்கை வாசகம், சிகரெட் பெட்டியின் அடிப்பகுதியில், கண்ணுக்குத் தெரியாத அளவிற்குச் சிறிய எழுத்தில் அச்சிடப்படுவதே இதற்குச் சான்று.

தமிழக அரசு சென்ற ஆண்டு, "புகையிலை இல்லாத சென்னை' எனும் திட்டத்தின் மூலம், புகைபிடிப்பதால் ஏற்படும் தீங்குகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், ஒரு விழிப்புணர்வுப் பிரசாரத்தை, செயல்படுத்தியது.இத்திட்டத்தை, "புகையிலை இல்லாத தமிழகம்' என்று விரிவுபடுத்தி, தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும், புகையிலைத் தடுப்பு விழிப்புணர்வுப் பிரசாரங்களை நடத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்தோடு இதை நிறுத்திக் கொள்ளாமல், ஆண்டுதோறும் நடத்த வேண்டும்.
புகைப்பதால் உண்டாகும் பாதிப்புகளை மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்களில், அறிவியலில் மட்டுமல்லாமல், துணைப் பாடங்களிலும் பாடமாகச் சேர்க்கலாம்.சில ஆண்டுகளுக்கு முன், எய்ட்ஸ் நோய்க்குத் தொடர்ந்து பல உத்திகளில், விழிப்புணர்வுப் பிரசாரங்கள் செய்து, வெற்றி கண்டது போல், ஒரு முனைப்பான, தீவிரமான, தொடர்ச்சியான தடுப்பு உத்திகளை மேற்கொண்டு, புகைப்பழக்கத்தின் அபாயங்களை பொதுமக்களுக்குப் புரிய வைக்க வேண்டியது, காலத்தின் கட்டாயம்.

இந்தியாவில் பான், குட்கா விற்பனைக்குத் தடைவிதிக்கப்பட்ட, மூன்றாவது மாநிலம் பீகார். ஏற் கனவே, மத்திய பிரதேசமும், கேரளாவும், குட்கா, ஜிர்தா பான் விற்பனைக்குத் தடைவிதித்துள்ளன. மிக அதிக அளவில் குட்காவும், கைணி எனப்படும் புகையிலையும், ஜர்தா பீடாவும், பழக்கத்தில் உள்ள இந்த மாநிலங்களே துணிந்து, இவற்றின் விற்பனைக்குத் தடைவிதிக்கும் போது, துணிச்சலுக்குப் பெயர் பெற்ற நம் தமிழக அரசுக்கு, இம்மாதிரியான சட்டங்களைக் கொண்டு வருவது கடினமான வேலையே அல்ல.மக்களின் நலன் காப்பதில், மிகுந்த அக்கறையுள்ள நம் தமிழக அரசு, மனது வைத்தால் போதும், "புகையிலை இல்லாத தமிழகம்' எனும் கனவு, விரைவிலேயேநிறைவேறும்.
இ-மெயில்: gganesan95@gmail.com

டாக்டர் கு.கணேசன்பொதுநல மருத்துவர், எழுத்தாளர்

- தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக