சனி, 17 டிசம்பர், 2011

Thirust for thamizh eezham: தமிழீழமே எங்கள் தாகம்’


நாம் ஒன்றாக இணைந்து உலகை நோக்கி ஒரே குரலில் ஓங்கி ஒலிப்போம் ‘தமிழீழமே எங்கள் தாகம்’ என்று!

பதிவு செய்த நாள் : 17/12/2011


சிங்கள அரசுடன் பேசி இலங்கைத் தீவின் இனப் பிரச்சினைக்குத் தீர்வினை எட்டும்படியான இந்தியா முதற்கொண்ட சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஒரு ஏமாற்ற அனுபவத்தைப் பெற்றுள்ளது.
இதுதான் நடக்கும் என்ற எதிர்பார்ப்புடனும் உளக் குமுறலுடனும் காத்திருந்த ஈழத் தமிழ் மக்களுக்கு இது எந்த வகையிலும் ஏமாற்றத்திற்குரியது அல்ல.
மாறாக, இன்னொரு தடவை பேச்சுவார்த்தை என்ற திட்டமிட்ட காலங்கடத்தும் நிகழ்ச்சி நிரலுடன் தமிழீழ மக்களது அரசியல் அபிலாசைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் சிங்கள ஆட்சியாளர்களது மாறாத இனவாதம் மீண்டும் அம்பலப்பட்டுள்ளது.
தமிழீழ மக்களுக்கான ஒரே தெரிவு சிங்கள தேசத்திடமிருந்து பிரிந்து சென்று ‘தமிழீழத் தனியரசு’ அமைப்பது மட்டுமே என்ற நியாயத்தை ஏற்க வேண்டிய தருணத்தை சர்வதேச சமூகத்திற்கு சிங்கள ஆட்சியாளர்கள் இன்னொரு தடவை புரிய வைத்துள்ளார்கள்.
இலங்கைத் தீவில், எங்குமே தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ முடியாது என்ற நிலையே யுத்தம் முடிவுக்கு வந்து இரண்டரை வருட காலம் கடந்தும் தொடர்கின்றது. திட்டமிட்ட ரீதியில் தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீது இன வன்முறையை ஏவிவிட்டு, அவர்களை அச்சப்படுத்தும் நிலை தொடர்கின்றது. வீதித் தாக்குதல்கள், மனிதப் படுகொலைகள், கடத்தல்கள், கிறிஸ் பூதங்கள், சிறைச்சாலைத் தாக்குதல்கள், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், பாலியல் கொடுமைகள், கலாச்சாரச் சீரழிவுகள் என அத்தனை வடிவங்களிலும் சிங்கள ஆதிக்கவாசிகளது கரங்கள் தமிழ் மக்களது இருப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது.
இத்தனை இழப்புக்களின் பின்னாவது சிங்கள தேசத்தின் மனம் மாறும், தமது வாழ்வு நிலை மாறும் என்ற கனவுக்குள் தொடர்ந்தும் தமிழ் மக்களை வைத்திருக்க முடியாது. அவர்களது வாழ்வையும், அவர்களது பாதுகாப்பையும் அவர்கள்வசம் ஒப்படைப்பதற்கு சிங்கள தேசம் என்றுமே முன்வரப் போவதில்லை. தமிழ் மக்களது வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும், நில வளத்தையுமாவது பாதுகாக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆகக் குறைந்த கோரிக்கையும் சிங்கள ஆட்சியாளர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
பேசுங்கள், பேசுங்கள் என்ற அனைத்துலக விருப்பங்களும், தமிழர்களுக்கு உயிர் வாழும் அனுமதி தவர்ந்த எதையும் கொடுப்பதற்குச் சம்மதிக்காத சிங்கள விருப்பத்திற்கும் இடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குறைந்தபட்சக் கோரிக்கையான வடக்குக் கிழக்கு இணைப்பு, நில உரிமை, சுய பாதுகாப்பு என்ற மூன்று கோரிக்கைகளும் சிங்கள தேசத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில் புலம்பெயர் தமிழர்களாகிய நாங்கள் தமிழீழ விடுதலை நோக்கிய எங்களது போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தில் உள்ளோம்.
எங்களுக்குள் பல்வேறு உள் கருத்து மோதல்கள் இருந்தாலும், தமிழீழ விடுதலை என்ற இலக்கில் நாம் அனைவரும் ஒரே கருத்துடனேயே உள்ளோம். எங்களுக்குள் உருவாகக்கூடிய கருத்துப் பிரிவுகளைப் பூதாகரமாக்கி எதிரி உள் நுழைவதற்கு மும்முரமாக முயன்று வருகின்றான். எங்களுக்குள் ஏற்பட்டுள்ள உரைசல் பொறிகளை ஊதித் தீயாக்கி, எம்மை எரித்துப் பொசுக்குவதற்கு எங்களுக்குள்ளேயே பல தீயவர்களை உள் நுழைய வைத்துள்ளான்.
வெளிப்படையாகவே தெரிந்து கொள்ளக்கூடிய அபாயங்களைப் புரிந்து கொள்ளாத மனிதர்களாக நாம் இருந்துவிட்டால், தமிழீழம் என்பது கனவாகவே கருகிவிடும். அது, இன்றுவரை தமிழீழ விடுதலைக்காகத் தமது உயிர்களை ஈகம் செய்த அனைத்துத் தமிழர்களது உணர்வுகளையும், உயிர்வாழும் எங்கள் மனிதங்களையும் தொலைத்து விடுவதற்குச் சமமானதாகும். எங்களுக்குள்ளான போட்டிகளால், எங்கள் தேசம் என்றுமே எமக்கு இல்லாமல் போகும் நிலையை நாமே உருவாக்கிவிட வேண்டாம்.
எனவே புலம்பெயர் தமிழர்களது அபிலாசைகளை ஏந்தி நிற்கும் அனைத்துத் தளங்களுடனும் இணைந்து, தமிழீழ விடுதலை நோக்கிய பாதையில் வேகமாகப் பயணிக்கும் முடிவினை எடுத்துள்ளோம். எந்தப் பதவிகளையோ, தகுதி நிலைகளையோ ஏற்க மறுத்து, தமிழீழ விடுதலைக்கான பாதையில் பயணிக்கும் உங்கள் அனைவருடனும் கரம் கோர்க்கும் முடிவினை எடுத்துள்ளோம்.
நாமும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும், உலகத் தமிழர் பேரவையும், அதன் கீழான மக்களவைகளும், ஏனைய அமைப்புக்களும் தங்களது சுயங்களை இழந்துவிடாமலேயே, தமிழீழு விடுதலை நோக்கிய பாதையில் கைகோர்த்துச் செயற்படலாம் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. அதுவே, சிங்கள இனவாத சக்திகளிடமிருந்து தமிழீழத்தை மீட்கும் ஈழப் போரின் இறுதி நாட்களை உருவாக்கும்.
நாம் ஒன்றாக இணைந்து உலகை நோக்கி ஒரே குரலில் ஓங்கி ஒலிப்போம் ‘தமிழீழமே எங்கள் தாகம்’ என்று!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக