செவ்வாய், 31 மே, 2011

editorial pages, dinamani: a bias article : புறக்கணிப்பே மேலானது

கட்டுரையாளர் காழ்ப்புணர்ச்சியுடன்  எழுதி உள்ளார். மாற்றுப் புத்தகங்கள் அச்சிடத் தேவையில்லை எனக் கூற வந்தவர் அதற்கான வேறு காரணங்களைத் தெரிவித்து  இருக்கலாம். திராவிடக் கட்சி ஆட்சிகளைப் பழிகக்கத் தேவையில்லை. ௧௯௭௧ இல் நான் மலையாளப் பாடப்புத்தகங்களைப் பார்த்தேன். அங்குள்ள  அமைச்சர்களைப்பற்றிய கட்டுரைகள் இருந்தன. அவையெல்லாம் வரலாற்று நோக்கில் காணப்பட்டன. காந்தி, நேரு பற்றிச் சொன்னால் வரலாறு; பேரறிஞர் அண்ணா பற்றிச் சொன்னால் கட்சியா? கம்பரின் இராமாயணத்தில் எதை இவர் சள்ளையான பகுதி என்கிறார். சள்ளை என்றால் எரிச்சல் உணர்வு எனப் பொருள். கட்டுரையாளர் பார்வை சள்ளையாக  உள்ளதால் புலவர் குழந்தையின் சிறந்த படைப்பான இராவண காவியத்தை இழிவாகக்  குறிப்பிடுகிறார். தமிழ் தவிரப் பிற பாட நூல்களையும் நீக்குவதால் உண்மையான காரணம் என்ன என உணர்ந்து எழுதாமல் வெறுப்புணர்வுடன் எழுதக்கூடாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

புறக்கணிப்பே மேலானது

First Published : 31 May 2011 12:53:55 AM IST


ஓரு பெரிய புத்தகக் கடையில் வைக்கப்பட்டிருந்த சுவர் சித்திரத் தாள் ஒன்று என் கவனத்தை ஈர்த்தது. சிறுவர்கள் பலர் ஒரு மின்விசிறியில் தொங்கிக் கொண்டிருக்க அடியில் ஒரு வாசகம்: கங்ற் நஸ்ரீட்ர்ர்ப்ள் ய்ர்ற் ண்ய்ற்ங்ழ்ச்ங்ழ்ங் ண்ய் ர்ன்ழ் ங்க்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்- ஙஹழ்ந் பஜ்ஹண்ய்.எங்கள் கற்றலில் பள்ளிகள் தலையிடாதிருக்கட்டும் என்று சொல்வதன் பொருள், நிறுவனமாக்கப்பட்ட பள்ளிகள் சொல்லித்தரும் கல்விக்கும், கற்றல் என்பதற்கும் நிறைய இடைவெளி இருக்கிறது என்பதுதான். சொல்லித்தரும் பள்ளிகள் மீதே இத்தகைய கருத்து மாறுபாடு இருக்குமானால், பள்ளிகள் சிறுவர்களின் மெய்யான கற்றலுக்கு இடையூறாக இருக்கும் என்று கருத்து காணப்படும் என்றால், அரசியல் தலையீடு எத்தகைய மோசமானதாக இருக்கும் என்று நினைக்கவே கூச்சமாக இருக்கிறது."நான் தொகுத்த பாடலை நீக்கிவிட்டாகிலும் புத்தகத்தை வெளியிடுங்கள்' என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி சொல்கிறபோது, அடடா என்று அவரது பெருந்தன்மையை மெச்ச வேண்டும் என்றாலும், அவ்வாறு செய்யத் தோன்றவில்லை. "இந்தக் குழப்பங்களுக்குக் காரணமே நீங்கள்தானே' என்ற கேள்விதான் மிஞ்சுகிறது.ரேஷன்கடை கைப்பையில் முதல்வர் படமும், உதயசூரியனும் அச்சிட்டுக் காட்டி பாராட்டுப்பெற விழையும் அமைச்சர்களும் அதிகாரிகளும், இந்த பாடப்புத்தகத்தில் அன்றைய முதல்வர் தொகுத்த பாடல் இடம்பெறுவதையும் காட்டியிருப்பார்கள். ""என்னைப் பற்றி வரலாறு சொல்லட்டும். வாத்தியார்கள் சொல்ல வேண்டாம்'' என்று இந்தப் பாடலை அவர் அப்போதே நீக்கியிருந்தால், அவர் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர். அவர் பெருந்தன்மையை அனைவரும் கட்சி பேதமின்றி பாராட்டியிருப்பார்கள். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை.கருணாநிதி சிறந்த திரைக்கதை எழுதியவர் என்பதற்கு பராசக்தி ஒரு படமே காலகாலத்துக்கும் சாட்சியாக நிற்கும். அவரது மேடைப்பேச்சுக்கு, அண்ணா மறைவையொட்டி வானொலியில் நிகழ்த்திய கவியஞ்சலி காலகாலத்துக்கும் நிற்கும். தமிழகத்தின் அரசியல் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க முற்படும் எவரும் அவரது நெஞ்சுக்கு நீதியைப் புரட்டாமல் இருக்க முடியாது. வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தில் இருந்துகொண்டிருந்த போதிலும், இவ்வாறாக பாடப்புத்தகத்திலும் இடம்பெற்றுவிட வேண்டும் என்கிற சிறு அரசியல் ஆசை, சிறந்த எழுத்தாளருக்கு இருக்க வேண்டியதில்லை.படிக்கிற மாணவர்கள் மனதிலும் தனது பிம்பம் பதிய வேண்டும் என்கிற ஆசை, வாக்கு வங்கி உத்தியைத் தவிர வேறில்லை. இவ்வாறாக, பாடநூல்களில் அரசியல் சாயம் கலப்பது புதிதல்ல. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் எலிசபெத் ராணி புகழ் இடம்பெறவே செய்தது. சுதந்திரத்துக்குப் பிறகு பாடப் புத்தகங்களில் காந்தி, நேரு பேச்சுகள், கட்டுரைகள், தன்வரலாறு சில பகுதிகள் இடம்பெறச் செய்தனர். ஆனால், அவர்கள் யாருமே இவை இடம்பெற வேண்டும் என்று விரும்பியவர்கள் அல்லர். அதற்காக ஆசைப்பட்டவர்களும் அல்லர். பாடத்திட்டக் குழுவினரும் அவர்களை அரசியல்வாதிகளாகப் பார்க்கவில்லை. வெறும் தலைவர்களாகப் பார்த்தனர்.ஆனால், தமிழகக் கல்வித்துறையில் ஒரு சுமுகமான சூழல் 1967-க்குப் பிறகு மாறியது என்பது மறுக்க முடியாதது. தேவாரம், திருவாசகம் பின்னுக்குத் தள்ளப்பட்டன.கம்பராமாயணத்தில் சள்ளையான பகுதிகளைப் பாடமாக வைத்தார்கள். இராவண காவியம் சேர்க்கப்பட்டது. திரு.வி.க. பேச்சுகள் இருந்த இடத்தில் அண்ணாவின் மேடைப்பேச்சு கட்டுரையில் சேர்ந்தது. மெல்ல திராவிட இயக்கத் தலைவர்களின் கட்டுரைகள், கவிதைகள் ஒவ்வொரு மாற்றத்தின்போதும் சேர்ந்துகொண்டன. இவை தவறு அல்ல. காலமாற்றத்துக்கேற்ப மாற வேண்டும். ஆனால், இது இயல்பாக இல்லாமல் திணிப்பாக மாறியது.இவற்றுக்கெல்லாம் திமுக, அதிமுக தலைமை மட்டுமே காரணம் என்று சொல்லிவிடவும் முடியாது. பாடத்திட்டக் குழுவில் அந்தந்த ஆட்சியில் அவரவருடைய அடிவருடிகள் பலர் இக்குழுவில் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் துதிபாடி நன்றிக்கடன் செலுத்தவே தலைப்பட்டார்கள். எந்த வயது மாணவர்களுக்கான புத்தகம், இதில் எந்தக் கருத்து, மொழிநடை, கவிநயம் போதுமானது என்றெல்லாம் யோசிக்க அவர்களுக்கு நேரமில்லை.பாடத்திட்டக் குழுவில் தாங்கள் நியமிக்கப்பட்டதும், மாலையுடன் கட்சித் தலைமையைப் பார்க்க கிளம்பிவிடுகிற அளவுக்கு அரசியல் சாயமேறிய மூளைகள், எத்தகைய பாடத்திட்டத்தைப் பற்றிச் சிந்திக்கும்? பாடப் புத்தகத்திலும்கூட செம்மொழி மாநாட்டு இலச்சினை எதற்கு? நீராரும் கடலுடுத்த.. பாடலை தமிழ்த்தாய் வாழ்த்து என்று ஒரு பக்கமும், கலைஞர் கருணாநிதியின், செம்மொழியான தமிழ்மொழியாம்... பாடலைத் தமிழ்ச் செம்மொழி வாழ்த்து என்று இன்னொரு துணை வாழ்த்து என்றும் குறிப்பிடாமல் விட்டார்களே என்கிற அளவுக்குத்தான் பாடத்திட்டக் குழுவைப் பாராட்ட வேண்டியிருக்கிறது.இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிக கவனம் செலுத்துகிறாரா அல்லது அமைச்சர்களின் விசுவாசக் கோளாறா என்றும் தெரியவில்லை. அச்சிடப்பட்டதாலேயே அந்தப் பாடநூல்களை அனைத்து மாணவர்களும் படித்துவிடப் போவதும் இல்லை. ஆசிரியர்கள் வகுப்பில் நடத்தப் போவதும் இல்லை. ஒவ்வொரு பாடப்புத்தகத்திலும் கருப்பு அடித்து அல்லது கிழித்து தைக்கிற வேலையும் வேண்டியதில்லை.புத்தகத்தில் உள்ள அந்தப் பகுதிகள் விலக்கப்பட்டவை, அவற்றில் தேர்வுக்கான கேள்விகள் வராது என்ற ஒரு வரி ஆணை போதும். ஆசிரியர்கள் நடத்தாமல் இருக்க, மாணவர்கள் அதைப் படிக்காமல் இருக்க! முன்னாள் முதல்வர் கருணாநிதி அல்லது அவரது அமைச்சர்களின் ஆசையில் இடம்பெற்ற பகுதிகளை நீக்கிவிட்டு மீண்டும் புத்தகம் அச்சிடுவதற்காக மக்கள் பணத்தைச் செலவழிப்பதைக் காட்டிலும், அந்தப் பகுதிகளைப் புறக்கணிப்பதுதான் சரியான முடிவாக இருக்க முடியும்.மாற்றுப் புத்தகங்களை அச்சடித்தால் கருணாநிதி மெüனமாக வெற்றி பெற்றவராகிவிடுவார். அவர் எழுத்தைப் புறக்கணிப்பதன் மூலம் அதிமுக அரசு அதே வெற்றியைத் தனதாக்கிக்கொள்ள முடியும். ஓர் எழுத்தைப் புறக்கணிப்பது எந்த எழுத்தாளனுக்கும் மிக அதிகமான தண்டனைதான். அந்த வாய்ப்பை விடுத்து, மீண்டும் புதிதாக அச்சிடுவது- மக்கள் பணம் வீணாவது மக்களுக்கான தண்டனையாக மாறிவிடும்.

2 கருத்துகள்: