திமுகவில் இப்போது அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையில் மோதல் முற்றிவருகிறது. வாரிசு அரசியலால் களத்துக்கு வந்த இருவரில், யார் அடுத்த வாரிசு என்பதில் திட்டவட்டமான நிலைமை இல்லாததால் இந்தச் சண்டைகள் ஏற்படுகின்றன. கட்சியின் தலைவர் இவர்களைக் கட்டுப்படுத்தும் திறனை இழந்துவிட்டதால் இத்தகைய சண்டைகளை அவரால் தடுக்க முடியவில்லையோ என்று தோன்றுகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியை இனி எந்த அணியும் நம்பாது; அடுத்து எந்த அணி வெற்றி பெறுகிறதோ அதில் தேமுதிக இணைந்துவிடக்கூடும். அதிமுக தலைவர் ஜெயலலிதா தன் பங்குக்கு எதையும் அதிகம் செய்ய வேண்டிய தேவையே இருக்காது. அரசியலில் நிரந்தரம் என்று எதுவுமே கிடையாது. எனவே திமுகவுக்குச் சாதகமாக இப்போது இருக்கும் அலை, எதிராக எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம். திமுக நல்ல கூட்டணிக் கட்சிதான் - எப்போது என்றால் தாங்கள் விரும்பும் துறைகளைப் பெறும்போதும், பெரும்பான்மை வலு இல்லாவிட்டாலும் தனித்தே ஆட்சி நடத்த அனுமதிக்கப்படும்போதும்தான். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி புதிய உறுப்பினர்களைச் சேர்த்து தன்னை வலுப்படுத்திக் கொள்வதை திமுக சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கும்; ராகுல் காந்தி ஏதோ வருகிறார், போகிறார் - இளைஞர் காங்கிரûஸத்தான் வலுப்படுத்துகிறார் அதனால் என்ன என்று திமுக சும்மா இருந்துவிடாது; ராகுல் காந்தியின் செயலால் காங்கிரஸ் கட்சிக்கு வலு கூடிவிடாது என்று திமுக தலைமை குறைத்து மதிப்பிடாது.
கருணாநிதியின் காலத்திலேயே கட்சிக்கும் ஆட்சிக்கும் அடுத்த வாரிசை அடையாளம் கண்டுவிட வேண்டும் என்ற கட்சிக்குள் தீவிர நடவடிக்கைகள் தொடங்கலாம். மு.க. ஸ்டாலின்தான் கருணாநிதியின் அரசியல் வாரிசு என்று திட்டவட்டமாகத் தெரியவந்தால் கொந்தளிப்பு ஏற்படலாம். அது திமுக குடும்பத்திலும் தோழமைக் கட்சிகளிடத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கக் காங்கிரஸ் தயாராகிக் கொண்டு வருகிறது என்றுகூட நம்ப இடமிருக்கிறது.விஷம் போல ஏறிவரும் விலைவாசிதான் சாமானிய மக்களுக்கு முக்கிய பிரச்னை. அரிசி, கோதுமை போன்ற உணவு தானியங்களின் விலை உயர்வைப் போலவே போக்குவரத்துச் செலவு, கல்விச் செலவு, மருத்துவச் செலவு போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தொலைக்காட்சிகளின் வர்த்தக விளம்பர ஒளிபரப்பினால் மக்களிடம் அதிகரித்துள்ள நுகர்வுக் கலாசாரத்தாலும் குடும்பச் செலவு என்பது எவராலும் கட்டுக்குள் வைக்க முடியாதபடி பெருகிக் கொண்டே வருகிறது. மானியங்களைக் குறைக்க வேண்டும் என்று அரசு நினைப்பதைத் தவறு என்று கூறிவிட முடியாது; அதேசமயம் மாதம்தோறும் 5,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாய்வரை மட்டுமே ஊதியம் பெறுவோர் நிலைமைதான் என்ன? இந்த ஆட்சிக்குத் தேவையான கொள்கைகளை வகுப்போரும் அமல் செய்வோரும் இந்த விலைவாசி உயர்வால் சிறிது கூட பாதிக்கப்படவேயில்லை என்பது உண்மையே. அரசியல் களத்தில் வெற்றி, தோல்வியாளர்களைத் தீர்மானிப்பது சாமானிய மனிதன்தான் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. அந்த சாமானிய மனிதன் விலைவாசி உயர்வால் பாதிக்கப்படுபவன். பாதிக்கப்பட்டிருப்பவன். அவனைப் பற்றி கவலைப்படாமல் இருந்தால்கூடப் பரவாயில்லை. வலிய விலைவாசி யை அதிகரித்துச் சீண்டினால் விளைவு சாதகமாக இருக்காது!
அழகிரி, தாலின் இருவரிடையே அடுத்த வழியுரிமையர் யார் எனப் போராட்டம் இருப்பதாகத் தவறாகக் கணிக்கப்பட்டுள்ளது. மூத்தவருக்குக் கட்சித் தலைமையை அளிப்பதற்காக நடத்தப்படும் நாடகம்தான் இது. (கலைஞர் குடும்பத்தினருக்கும் மற்றவர்களுக்கும் இடையில் போட்டி என்றில்லாமல் அவரது குடும்பத்தினருக்கு இடையே மட்டும் போட்டி என்னும் சூழலை உருவாக்கியமையால்) போட்டியில் யார் தோற்றாலும் வெல்லப்போவது கலைஞரின் குடும்பத்தினர்தான் என்பதை அறிவர். எனவே, அடுத்த முதலமைச்சர் யார் என அறிவித்தது போல் அடுத்த தலைவர் யார் என அறிவிக்கவும் அதற்காக மூத்தவரின் ஈகங்களையும் திறமைகளையும் பட்டியலிட்டு இவரை விட வேறு யார் தகுதியானவர் எனக் கூறச் செய்வதிலுமே கட்சியின் கவனத்தைத் திருப்பும் வெற்றியே இது. கலைஞரைக் குறைவாக எடை போட வேண்டா.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
3/27/2010 3:12:00 AM



மார்ச் 25th, 2010
யாழினி 


