திங்கள், 28 மார்ச், 2016

உழவர் பாலனைத் தாக்கிய காவலர்களைச் சிறையில் அடை !






உழவர் பாலனைத் தாக்கிய காவலர்களைக் கைது செய்து சிறையில் அடை !

உழவர் தற்கொலைகளைத் தடுக்க தமிழ்நாட்டை தனி உணவு மண்டலமாக்கு !

நிகழ்வு-காவிரிமீட்பு ஆர்ப்பாட்டம்01 :agitationfor_balan01

தஞ்சையில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழு  ஆர்ப்பாட்டம்! 

  உழவர் பாலனைத் தாக்கிய காவலர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கக் கோரியும், உழவர் தற்கொலைகளைத் தடுக்கத் தமிழ்நாட்டைத் தனி உணவு மண்டலமாக்க வேண்டுமெனக் கோரியும், தஞ்சையில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், 11.03.2047 / 24.03.2016 காலை, உழவர் ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
  • உழுபொறி எந்திரத்தை பறிமுதல் செய்கிறோம் என்ற பெயரில், பாப்பாநாட்டில் உழவர் பாலன் மீது கொடுந்தாக்குதல் நடத்திய காவல்துறை ஆய்வாளர் குமாரவேல் மற்றும் காவலர்களைக் குற்றவழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்,
  • உழவர்களின் வேளாண் கடன்களை முழுவதுமாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்,
  • அரியலூரில் தற்கொலை செய்து கொண்ட உழவர் அழகர் குடும்பத்திற்கு – இழப்பீடு வழங்க வேண்டும்,
  • குண்டர்களை வைத்துக் கடன் தவணைத்தொகை பெறும் வங்கிகள்,  நிதி நிறுவனங்களைக் கண்டறிந்து அவற்றின் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,
  • இந்திய அரசு நியமித்த முனைவர் எம்.எசு.சுவாமிநாதன் தலைமையிலான “தேசிய உழவர் ஆணையம்” அளித்துள்ள பரிந்துரையின்படி – உற்பத்திச் செலவில் 50%கூடுதலாக வைத்து வேளாண் விளை பொருட்களுக்கான கொள்முதல் விலையையும்,சந்தை விலையையும் நிலைநிறுத்த வேண்டும்,
  • பதுக்கல் – ஊக பேரம் – செயற்கையான விலை வீழ்ச்சி – விலை உயர்வு முதலானவற்றிற்கு வாய்ப்பு அளிக்கும் இணையத்தள வணிகத்தைத் தடை செய்ய வேண்டும்,
  • தமிழ்நாட்டைத் தனி உணவு மண்டலமாக்க வேண்டும்,
  • சருக்கரை ஆலைகளில் ஒரு டன் கரும்புக்கான விலை உரூ. 2,750-இல் உரூ. 750 பிடித்தம் செய்யாமல் முழுத் தொகையையும் உழவர்களுக்கு வழங்க வேண்டும்
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், தஞ்சைதொடர்வண்டி நிலையம் அருகில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில், காவிரி உரிமை மீட்புக் குழுவில் உறுப்பு வகிக்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும், உழவர்களும் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவருமான தோழர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை கோரிக்கை முழக்கங்களை எழுப்ப, ஆர்ப்பாட்டத் தோழர்கள் அதை விண்ணதிர எதிரொலித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், உழவர் கோரிக்கைகளைத் தீர்மானங்களாக முன்மொழிந்து, தமிழக உழவர்கள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன் பேசினார். மூன்று மாவட்ட உழவர்கள் சங்கத் தலைவர் திரு. வலிவளம் மு. சேரன், காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளர் திரு. காவிரி தனபாலன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர்கள் திரு. அயனாபுரம் சி. முருகேசன், திரு. சதா முத்துக்கிருட்டிணன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, தமிழக உழவர்கள் சங்கத் தஞ்சை மாவட்டத் துணைச் செயலாளர் திரு. செகதீசன், இந்திய சனநாயகக் கட்சித் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. சிமியோன் சேவியராசு, தலைமைக் கழகப் பேச்சாளர் திரு. ஆ.வி. நெடுஞ்செழியன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், மனித நேய மக்கள் கட்சி வணிகப்பிரிவுத் தலைவர் திரு. செ. கலந்தர், மனித நேய சனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. அகமது கபீர், விடுதலைத் தமிழ்ப்புலிகள் இணைச் செயலாளர் திரு. சி. அருண் மாசிலாமணி முதலான பல்வேறு அமைப்புத் தலைவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.
 ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் பேசிய தோழர் பெ. மணியரசன், “கடன் நிலுவை தொகைக்காகஉழவர்களை அவமானப்படுத்துவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உழவர் பாலன் தாக்கப்பட்டுள்ளார். அரியலூர் உழவர் அழகர் தர்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபோல் சில நிகழ்வுகள்தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வெளிச்சத்திற்கு வராத துயரங்கள் ஏராளம்.
  கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் 2,422 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) கூறுகிறது. ஏன் இந்த நிலைமை?
உழவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு ஆதாயமான விலை கிடைக்காததால்தான் உழவர்கள் கடன்சுமையில் சிக்கி வாழ்க்கையை இழக்கிறார்கள். வேளாண் விளை பொருட்களுக்கு உற்பத்தி செலவோடு சேர்த்து கூடுதலாக 50 சதவீதம் விலை நிர்ணயிக்க வேண்டும்.
  ஒரு மாதத்திற்கு 2 இலட்சம் டன் அரிசியைப் பொது வழங்கலுக்குத் தமிழ்நாடு அரசு இந்திய அரசிடமிருந்து வாங்குகிறது. அவை அனைத்தும் பஞ்சாப்பு, அரியானா, கருநாடகா, ஆந்திரா முதலிய வெளி மாநிலங்களில் உற்பத்தியானவை. எட்டுக் கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாடு, தமிழ்நாட்டு உழவர்களுக்கு – தமிழ்நாட்டு வணிகர்களுக்கு சந்தையாக இல்லை; வெளி மாநிலங்களுக்குச் சந்தையாக இருக்கிறது.
  எனவே, தமிழ்நாட்டு வேளாண் விளை பொருட்களுக்குச் சந்தை மதிப்பு கிடைக்கும் வகையில் தமிழ்நாட்டைத் தனி உணவு மண்டலமாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு தனி உணவு மண்டலம் ஆனால், வெளி மாநில உணவுப் பொருட்கள் தமிழ்நாடு அரசின் இசைவு இல்லாமல் தமிழ்நாட்டுச் சந்தைக்கு வர முடியாது. தமிழ்நாட்டுக்கு பற்றாக்குறையை உள்ள தவசங்களை (தானியங்களை) தமிழ்நாடு அரசு முடிவு செய்து, வெளி மாநிலங்களிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். ஏற்கெனவே, இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் ஒரு தனி உணவு மண்டலமாகத்தான் இருந்தது. பின்னர்தான் அந்நிலை மாற்றப்பட்டது.
தமிழ்நாட்டைத் தனி உணவுமண்டலமாக்கினால்தான், இங்குள்ள உழவர்களுக்கு ஆதாயமான விலை கிடைக்கும். வெளிச்சந்தையிலும் நெல்லுக்கு அதிக விலை கிடைக்கும்”என்று தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உழவர்களும், பெண்களும் திரளாகப் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
இணையம்: www.kaveriurimai.com
பேச: 76670 77075, 94432 74002

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக