vaiko05

மத்திய அரசின் பாறை எரிவளித் திட்டத்துக்குத்
தமிழக அரசு துணைபோனால்
போராட்டம் வெடிக்கும்! – வைகோ எச்சரிக்கை

 “பாறை எரிவளித் திட்டத்தைச் செயல்படுத்த முனைப்பு காட்டும் மத்திய அரசுக்குத் தமிழக அரசு துணைபோனால், சோழ மண்டல உழவர்களும், பொதுமக்களும் பெரும் சீற்றத்துக்கு ஆளாகி, கிளர்ந்து எழுந்து பெரும் போராட்டத்தை நடத்துவதற்குத் தள்ளப்படுவார்கள்” என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

  தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரிப் பாசனப் பகுதிகளை முற்றாக அழிப்பதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. 2010ஆம் ஆண்டு, தி.மு.க ஆட்சியில், காவிரிச் சமவெளியில் (delta) கொள்ளி வளி (மீத்தேன் வாயு) எடுக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்தால் சோழ மண்டலம் பாலைவனமாகும் என்ற கண்டத்தை(ஆபத்தை) உணர்ந்த இயற்கை வேளாண் அறிவியலாளர் நம்மாழ்வார் உழவர்களைத் தட்டி எழுப்பினார். மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கொள்ளி வளி(methane gas) எடுக்கும் திட்டத்துக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வுப் பரப்புரை நடத்தப்பட்டது.
  காவிரிச் சமவெளி வேளாண் பெருமக்களும், பொதுமக்களும் போராடியதால், கொள்ளி வளி எடுக்கத் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்புதலை மத்திய அரசு நீக்கியது. ஆனால், கொள்ளி எரிவளித் திட்டத்தை முழுமையாகத் திரும்பப் பெறவில்லை. இந்நிலையில், கொள்ளி வளி எடுக்கும் திட்டத்தை விடத் தீங்கான ‘பாறை எரிவளி’ எனும் ‘Shell gas’-ஐக் காவிரிச் சமவெளியில் ஒன்பது இடங்களில் எடுப்பதற்கு மத்திய அரசின் எண்ணெய் – இயற்கை எரிவளிக் கூட்டுக்குழுமம் (எ.இ.எ.கூ / ONGC) நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  காவிரிச் சமவெளியில் ஏற்கெனவே பாறைநெய்(கச்சா எண்ணெய்) எடுக்க ஒப்புதல் பெற்ற ஐந்து இடங்களில் முதல் கட்டமாகப் பாறை எரிவளி ஆய்வுக் கிணறு அமைக்கும் நடவடிக்கைகளை எ.இ.எ.கூ மிகவும் கமுக்கமாகத்(இரகசியமாக) தொடங்கியது. மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வல்லுநர் குழு பரிந்துரையின்படி முதல் பாறை எரிவளி ஆய்வுக் கிணற்றை நாகை மாவட்டம், குற்றாலம் அருகே உள்ள திருவேள்விக்குடியில் அமைக்க எ.இ.எ.கூ நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிவிட்டு, உழவர்களை ஏமாற்றுவதற்காக மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தவும் கண்துடைப்பு அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது.
  கொள்ளி எரிவளித் திட்டத்தை விடவும் ஆயிரம் மடங்குக் கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்தால் பல்லாயிரம் கோடி வருமானம் ஈட்ட முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது. ஆனால், தமிழகத்தின் உணவு உருவாக்கத்தில் முதன்மை இடம் பெற்றிருக்கும் காவிரிச் சமவெளி வேளாண்மை முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும்!
  பாறை எரிவளி எடுப்பதற்கு நீரழுத்தப் பிளவு (Hydraulic Process) முறை பயன்படுத்தப்படுகிறது. இதன்படி நிலத்துக்கு அடியில் ஏறத்தாழ 10,000 முதல் 20,000 அடி ஆழம் வரை துளையிட்டு, அதன் பக்கவாட்டில் ஒரு புதுக் கல் (கி.மீ) வரை துளையிட்டு, அதில் 600க்கும் மேற்பட்ட வேதிப்பொருட்களை மணலுடன் நீரையும் சேர்த்து மிகுந்த அழுத்தத்தில் செலுத்திப் பாறை எரிவளி வெளிக்கொண்டு வரப்படுகிறது.
  உள்ளே செலுத்தப்படுகின்ற வேதிக் கரைசல்கள் வெளிக்கொண்டு வரப்பட்டு, மேல்மட்ட நீரில் கழிவுகளாகக் கலந்து விடப்படுகின்றன. இவ்வாறு கலந்துவிடப்படும் நீர் வேளாண் விளை நிலங்களிலும், ஆறுகளிலும்தாம் கலக்கும்.
  இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதோடு, நீருடன் காற்றும் மாசு அடையும். காவிரிப் படுகை பாழாகிப் போவதுடன், மக்களுக்குப் புற்றுநோய் முதலான பல்வேறு நோய்கள் உருவாகும் பெருங்கண்டமும் (பேராபத்தும்) விளையும்.
  பாறை எரிவளித் திட்டத்தால் தஞ்சை, நாகை, கடலூர், திருவாரூர், அரியலூர் முதலான மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு, 19 மாவட்டங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும். வளைகுடா நாடுகளில் பாலைவனப் பகுதிகளில் பாறை எரிவளி எடுக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்த பிரான்சு, செருமனி முதலான ஒன்பது நாடுகள் இத்திட்டத்துக்குத் தடை இட்டுள்ளன.
  இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாடுதான் உழவுத் தொழிலை முற்றாக இழந்து போகக்கூடிய நிலைமைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. இதற்கு மத்திய அரசின் சீரழிவுப் பொருளியல் கொள்கையும், மாநில அரசின் பொறுப்பற்ற போக்கும்தான் காரணம்.
  காவிரிச் சமவெளி மாவட்டங்களில் பாறை எரிவளி எடுக்கும் திட்டத்துக்கு எ.இ.எ.கூ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்புதலை மத்திய அரசு நீக்க வேண்டும். தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் முதலான காவிரிப் பாசன மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, வேளாண்மைத் தொழிலை அழிக்கும் கொள்ளி எரிவளி, பாறை எரிவளி எடுக்கும் திட்டங்களைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
பெயர்- இ.பு. ஞானப்பிரகாசன் : peyar_name_i.bhu.gnanaprakasan