புதன், 16 நவம்பர், 2011

வைகோ உட்பட 7 பேர் மீது 9 வழக்குகள்: கூடங்குளம் போராட்டத்தைத்தூண்டியதாகப் புகார்


வைகோ உட்பட 7 பேர் மீது 9 வழக்குகள்: கூடங்குளம் போராட்டத்தை தூண்டியதாக புகார்
அரசின் அனுமதியின்றி நடத்தப்படும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று, பொய் பிரசாரம் செய்ததாக, வைகோ உட்பட தலைவர்கள் மீது, 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கடந்த இரண்டரை மாதங்களாக, ஒரு குழுவினர் போராட்டம் நடத்துகின்றனர். உதயகுமார் என்பவர் தலைமையில், இடிந்தகரை லூர்து சர்ச் வளாகத்தில், இந்த போராட்டம் நடக்கிறது. இதில், தூத்துக்குடி மறை மாவட்ட பாதிரியார் இவான் அம்ப்ரோஸ் உட்பட ஆறு பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் பங்கேற்றனர்.

போராட்டத்தின் பாதியிலேயே, இவான் அம்ப்ரோஸ் விலகி விட்டார். கூடங்குளம் அணு உலை தொடர்பாக பேச்சு நடத்த நியமிக்கப்பட்ட, தமிழக குழுவிலிருந்தும் அவர் விலகி விட்டார். ஆனால், அவரது கட்டுப்பாட்டில் உள்ள மற்ற பாதிரியார்கள், போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.போராட்டத்தில் ஈடுபட்டோர், அணுமின் சக்தி வாகனங்களை வழிமறித்தது, பாதையை தடுத்தது, மத்திய அரசுக்கு சொந்தமான, அணு உலை விஜய் குடியிருப்புக்கு சென்ற தண்ணீர் குழாயை உடைத்தது போன்ற பல்வேறு வன்முறை சம்பவங்களால், அங்கு கடந்த ஒரு மாத காலமாக பதட்ட சூழல் உள்ளது. இதனால், போராட்டத்தில் பங்கேற்போர், நடத்துவோர், தூண்டிவிடுவோர் மீது, கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.போராட்டம் நடக்கும் ஒவ்வொரு நாளும், சட்டவிரோதமாக கூடி, அரசுக்கு எதிராக பிரசாரம் செய்ததாக, வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த வகையில், நேற்றுடன், 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, நெல்லை மாவட்ட போலீஸ் அதிகாரி கூறியதாவது:போலீஸ் அனுமதியின்றி போராட்டம் நடக்கிறது. போராட்டத்திற்கு அனுமதி மறுத்துவிட்ட நிலையில், அணுஉலை எதிர்ப்புக்குழுவினர் போராடுவதால், அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்கின்றனர்.
போராட்டக்காரர்கள், அவர்களை வழிநடத்தும் போராட்டக்குழு, பாதிரியார்கள், சர்ச் வளாகங்களை அரசுக்கு எதிராக பயன்படுத்தும் குழுவினர், அனுமதியற்ற சட்டவிரோத போராட்டத்தில் பங்கேற்று, மக்கள் மத்தியில் பொய் பிரசாரம் செய்வோர் ஆகியோர் மீது, அரசின் திட்டங்களுக்கு எதிராக செயல்படுதல், அரசின் திட்டங்களை தடுத்தல், மக்களிடம் பொய் தகவல்களை கூறி பீதியூட்டுதல் போன்ற 15 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

இவற்றிற்கு ஊடக செய்திகள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் உள்ளதால், குற்றத்தை நிரூபித்து, தண்டனை வாங்கி தர முடியும்.
இந்த அடிப்படையில், பாதிரியார்கள் மட்டுமின்றி, சர்ச் வளாகத்திற்கு வந்து, அரசியல் நோக்கத்திற்காக, மக்கள் மத்தியில் பொய் பிரசாரம் செய்யும் அரசியல் தலைவர்கள் மீதும், வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்குகளில், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டது தொடர்பான, சட்டப்பிரிவுகளும் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த அடிப்படையில், தே.மு.தி.க., எம்.எல்.ஏ., மைக்கேல் ராயப்பன், வைகோ, திருமாவளவன், ஜி.கே.மணி., தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., அப்பாவு, சமூக ஆர்வலர் மேதா பட்கர் உள்ளிட்ட ஏழு மீது, 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக