வியாழன், 13 அக்டோபர், 2011

"நான் வளர்த்த மரப் பிள்ளைகள்!'


ஆயிரம் மரங்களை பிள்ளைகளாக வளர்த்த திம்மக்கா: என் சொந்த ஊர் கர்நாடகத்தில் உள்ள கூதூர் எனும் குக்கிராமம். 16 வயதுல, என் கணவர் சிக்சையா கையில புடிச்சு கொடுத்துட்டாங்க. கல்யாணமாகி 10 வருஷமாகியும் குழந்தை எதுவும் உண்டாகல; ஏறாத கோவில் இல்லை. அக்கம் பக்கத்தினர் ஜாடை மாடையா பேசின பேச்சு உயிரை வதைச்சுது. காலையில இருந்து சாயங்காலம் வரை காட்டுல உழைச்சுட்டு வீடு வந்தா, சோறு இறங்காது; நிம்மதியா தூக்கம் வராது; ஒரு கட்டத்துல, தூக்கு மாட்டிக்கலாம்னு நினைக்கற அளவுக்கு மனசு வெறுத்துட்டேன். "வயித்துல சுமந்து வளர்க்கறது மட்டும் தான் உசுரா...' ஆண்டவன் படைப்புல ஆடு, மாடு, மரம், செடின்னு எல்லாம் உயிருதான்ங்கிற உண்மையை, அப்போ என் மனசு தவிச்ச தவிப்பு மூலமா உணர்ந்தேன்.

கன்றுகள் நட்டு, தண்ணி விட்டு, அவற்றையே புள்ளையா வளர்த்தேன். ஊர்ல எல்லாரோட புள்ளைகளும் அவுங்கவங்க அப்பன், ஆத்தாவை தான் பார்த்துக்குவாங்க. ஆனா, என் புள்ளைங்க ஊருக்கே நிழல் கொடுக்கும்னு என் மனசுக்கு ஒரு தெளிவு கிடைச்சுது. அப்படி நான் பாடுபட்டு வளர்த்த ஆயிரம் மரங்கள் தான், இன்னிக்கு பொட்டல் காட்டுக்கு வர்ற சாலையை சோலையாக்கி தந்திருக்கு. "மரத்தை வெச்ச மகராசி, நீ நல்லா இருக்கணும்'னு சனங்க எல்லாம் சொல்லும்போது, நல்ல புள்ளையை பெத்த புண்ணியவதி மனசு குளிர்ற மாதிரி, என் மனசும் குளிர்ந்து போகுது. இந்த பசுமை சேவைக்காக, சிறந்த தேசிய குடிமகன் விருது, நான்கு குடியரசு தலைவர்களின் கையால் பெற்ற விருதுகள், மூன்று பிரதமர்களிடமிருந்து பெற்ற விரு துகள், பல முதல்வர்கள் அளித்த மாநில விருதுகள், பட்டங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக