புதன், 19 அக்டோபர், 2011

அடக்குமுறைக்கு எதிராக அமைதி வழியில் கிளர்ந்தெழத் தயார் – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

அடக்குமுறைக்கு எதிராக அகிம்சை வழியில் கிளர்ந்தெழ தயார் – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

இலங்கை அரசு தமிழ் பேசும் மாணவர்களின் மீது அடக்கு முறைகளை அன்றைய காலகட்டங்களில் தரப்படுத்தல்களில் இருந்து ஆரம்பித்து பின்னர் அவை படுகொலை என்ற வடிவத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு இன்று எமது இனத்திற்கான தனித்துவ கலாசாரங்களை அழித்தும் இனந்தெரியாத தாக்குதல்கள் என்ற போர்வையிலும் தமிழ் மாணவர்கள் மீதான அடக்குமுறைகளை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:
எமது பல்கலைக்கழகமானது தமிழ் பேசும் மக்களால் என்றும் உயர்ந்த இடமாக பார்க்கப்படுவதுடன் இன்றுவரை தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரலாக உலகம் எங்கும் வியாபித்து நிற்கின்ற அதேவேளை எங்கள் உரிமைக்குரலை நசுக்குவதற்கு கடந்த பல வருடங்களாக இலங்கை அரசுகள் முயன்று வருகின்றன இது உலகத்திற்கே தெரிந்த உண்மை.
அதன் ஒரு அங்கமாகவே இன்று எமது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் காடையர்களால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டுள்ளார்.
ஒரு பல்கலைக்கழகத்தின் மாணவர்களினை வழிநடாத்திச் செல்லும் மிகப்பெரிய பொறுப்பு பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் மற்றும் அதன் மாணவ ஒன்றிய உறுப்பினர்களையே சாரும். இது இலங்கையில் உள்ள அணைத்து பல்கலைக்கழகங்களிற்கும் பொதுவான ஒன்றே. ஆனால் எமது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது இன்றுவரை எமது மாணவர்களை மட்டுமன்றி அனைத்து தமிழ் பேசும் மக்களையும் வழிநடாத்தி சென்றுகொண்டிருக்கின்றது.
இந்த உயரிய இடத்தினை பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் எத்தனையோ விலைமதிப்பில்லா உயிர் தியாகங்கள் மற்றும் எம் ஒவ்வொருவரினதும் இனப்பற்றின் ஊடாகவே அடைந்தோம். இந்த உயரிய இடத்தில் இருக்கும் எமது மாணவ ஒன்றிய தலைவருக்கு 16-10-2011 (நேற்று) ஞாயிறு மதியம் 1-30 மணியளவில் யாழ் பழம் வீதியில் உள்ள இலங்கை படையினரின் காவலரனில் இருந்து சுமார் 50 மீட்டர் அருகில் வைத்து இனந்தெரியாத நபர்கள் என்று அழைக்கபடும் அதேவேளை எமது மக்களால் கௌரவமாக இனந்தெரிந்த நபர்கள் என அழைக்கபடுவோரால் கோழைத்தனமாக தாக்கப்பட்டுள்ளார்.
இந்த கோழைத்தனமான தாக்குதலானது “நாங்கள் எங்கே வேண்டுமானாலும் எப்போதும் உங்களை தாக்குவோம் உங்களிற்கு கேட்பதற்கு யாரும் இல்லை”; என்ற ஒர் செய்தியை தமிழ் பேசும் மக்களாகிய எங்கள் எல்லோருக்கும் சொல்லி செல்கின்றது.
இதற்கு தமிழ் பேசும் மக்களாகிய நாம் என்ன பதில் சொல்ல போகின்றோம். எங்கள் அமைதியை சிலர் தமக்கு சாதகமாக பயன்படுத்தி அதில் குளிர் காய எண்ணுகின்றனர். இதை நாம் தெடர்ந்தும் அனுமதிப்பதா? இன்று எமது பல்கலைக்கழக மாணவ ஒன்றிய தலைவருக்கு நடந்தது நாளை எங்கள் ஒவ்வொரு மாணவர்களிற்கும் நாடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் எங்களிடம் இருக்கின்றது? இதற்கு நாம் என்ன செய்ய போகின்றோம்.
நாட்டில் தற்போது ஜனநாயகம் நிலவிவருவதாகவும் வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் எந்த பிரச்சினைகளிற்கும் முகம் கொடுக்காமல் இருந்து வருவதாகவும் வெளி உலகத்திற்கு காட்டிக்கொள்ளுகின்றது இலங்கை அரசு ஆனால் நேற்று எமது மாணவ ஒன்றிய தலைவர் மீதான தாக்குதல் மற்றும் இதற்கு முன்னர் நடந்த தாக்குதல்கள் வடக்கு கிழக்கில் ஜனநாயகம் இல்லை என்ற செய்தியோடு இராணுவ ஆட்சியே நடைபெறுவதை காட்டி நிற்கின்றது.
வட கிழக்கை இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அடக்கி வைக்கலாம் என இலங்கை அரசு நினைக்குமானால் எதிர் காலத்தில் இலங்கை அரசு பல எதிர் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவங்களில் இருந்து சர்வதேச சமூகம் நாங்கள் எவ்வாறான நிலைமைகளில் இருந்து கொண்டிருக்கின்றோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எமது பல்கலைகழத்திற்கு பெரும்பான்மை இன மாணவர்களின் வரவு இன்று அதிகரித்துள்ள வேளையில் தமிழ் மாணவர்களின் தலைமைத்துவத்தை விரும்பாத சில தீய சக்திகளின் செயற்பாடே இந்த தாக்குதலாகும். இது போன்ற காட்டுமிராண்டி தாக்குதல்களை நடாத்துபவர்களை நாம் உடனடியாக இனங்கான வேண்டும்.
அவர்களை சட்டங்களிற்கு முன் நிறுத்தவேண்டும். இல்லையேல் இனிவரும் காலங்களிலும் எமது தமிழ் பேசும் ஒவ்வொரு மாணவர்களும் இந்த தாக்குதல்களுக்கு உள்ளவார்கள். எனவே யாழ் பல்கலைக்கழக மாணவ சமூகமாகிய நாம் மாணவ அடக்கு முறைகளிற்கு எதிராக முக்கிய சில கோரிக்கைளை முன்வைத்து அகிம்சை வழியில் கிளர்ந்தெழ ஆயத்தமாக உள்ளோம்.
1.ஒவ்வொரு தமிழ் மாணவர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
2.மாணவ ஒன்றி தலைவரினை தாக்கியவர்களை உடன் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்.
3.மாணவர் ஒன்றிய தலைவருக்கு தாக்குதல் நடாத்தப்பட்ட இடத்திற்கு அருகில் இலங்கை படைகளின் காவலரன் உள்ளது எமது பாதுகாப்பிற்கு இல்லாத அது போன்ற பாடசாலை மற்றும் எமது பல்கலைக்கழகத்திற்கு மற்றும் மக்கள் செறிந்து வாழும் இடங்களிற்கு காவலரங்களை உடனே அகற்ற வேண்டும்.
4.மாணவர்களின் சுதந்திரமான செயற்பாடுகளிற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும்.
5.மாணவர்களின் தனித்தவமான செயற்பாடுகளில் இனந்தெரியாதோர் என அழைக்கப்படவோர் தலையிடுவது நிறுத்தப்பட வேண்டும்.
6.மாணவர்களாகிய நாம் எங்கு செல்லவும் அனுமதியளிக்கப்பட வேண்டும்.
கோரிக்கைகளை வெற்று கோரிக்கைகளாக நாம் தெரிவிக்கவில்லை. அதனூடாக நாம் எமது அனைத்து தமிழ் பேசும் மாணாவர்களின் உரிமைகளாகவே தெரிவித்து கொள்கின்றோம். எங்கள் மாணவ உரிமை கோரிக்கைகளை நிலைநிறுத்தம் வரை நாங்கள் எங்கள் விரிவுரைகளை நிறுதியுள்ளோம். எனவே எங்கள் கோரிக்கைகளை விரைவாக செயற்படுத்தி அதற்கு தீர்வு வழங்குவதன் மூலம் கற்றலை சிறப்பாக முன்னெடுத்து செல்ல உதவிடுமாறு விரைவாக கேட்டுக்கொள்கின்றோம்.
இதற்கு விரைவான தீர்வினை பெறுவதற்கு எங்களுடன் எல்லா பாடசாலைகள் உயர் கல்விக்கூடங்கள் மற்றும் எங்கள் தமிழ் தேசத்தின் சமூக அமைப்பக்கள் ஒவ்வொன்றையும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு வேண்டிநிற்கின்றோம் நாங்கள் அனைவரும் விரைவாக ஒன்றிணைவதன் மூலம் எங்கள் பலத்தினை நிரூபிப்போம்.
நாங்கள் அனைவரும் ஒன்றிணைவதன் மூலம் எங்கள் உரிமைகளை ஒவ்வொன்றாக பெற்றுக்கொள்வோம். நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய காலம் எங்கள் முன் கணிந்துள்ளது. அதை நாம் சரி வர பயன்படுத்துவதன் மூலம் எமது இலக்குகளை விரைவு படுத்துவோம்.
நன்றி
மாணவர் ஒன்றியம்
யாழ் பல்கலைக்கழகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக