ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

கருத்து அரங்கம் இந்தியால் தமிழுக்குக் கேடு… – மே.சி.சிதம்பரனார்

கருத்து அரங்கம் இந்தியால் தமிழுக்குக் கேடு… – மே.சி.சிதம்பரனார்

கருத்து அரங்கம்
இந்தியால் தமிழுக்குக் கேடு
விடைகள்
thamizh-hindi02
வினா 6 : மொத்தத்தில் இந்தியால் நம் தமிழ் சிஞ்சித்தும் சிதைவுறாது என்று பசுமரத்தாணிபோல் என் மனத்தில் பதிகிறது. இதில் உங்கள் மனச்சாட்சி என்ன?
விடைகள்:
நம்நாட்டிற்கு அண்டை நாடுகள் பண்டைக்காலம் தொட்டு வாணிபம் போக்குவரவு முதலியவை நீடிப்பினும், அந்நாட்டு மொழிகள் நட்பு மொழிகளானாதால் மொழி வளர்ச்சியே யன்றிக் கேடில்லை. ஆட்சி மொழிகளாக வந்தவைதான் மொழியைச் சிதைத்தனவென்பது மேலே கூறினோம். இந்தி ஆட்சிமொழியாக வந்தும் வராததின் முன்பே பல தமிழ்ச் சொற்களழிந்தமையையும் எடுத்துக் காட்டினோம். இந்தி ஆட்சி மொழியாக நீடிக்குமானால், அரசியல் அலுவலகங்கள், பள்ளிகள், வழக்காறுகளிலுள்ள கொஞ்ச நஞ்சம் சொற்களுமழிந்து தமிழ் வீட்டுமொழியாக ஏட்டு மொழியாக உலவி வருமன்றி ஒரு மதிப்பான மொழியாக, நாட்டில் செல்வாக்குப் பெற்ற மொழியாக இருக்க முடியாது. ஆதலில் ‘‘தமிழ் கிஞ்சித்தும் சிதைவுறும்’’ என்ற உறுதியை வினவிய நண்பர் அறவே மாற்றிக்கொள்ள வேண்டுமென்பதுதான் நமது மனச்சான்றின் முடிவு.
& மே. சி.சிதம்பரனார்.
இந்தி புகுத்தப்படுவதால் தமிழ் மொழியின் வளர்ச்சி மிகவும் தடைப்படும். இந்தி புகுத்தலால் தாய்மொழிப் பற்றும் குறையும். அரசின் பாராட்டுதலைப் பெறும் பொருட்டு தமிழ் இலக்கியங்களைப் புறக்கணித்து அம்மொழி இலக்கியங்களைப் புறக்கணித்து அம்மொழி இலக்கியங்களைப் பலரும் கற்க முன்வருவர். அதனால் தமிழின் வளர்ச்சியும் அதற்கு அளிக்கப்படும் ஆதரவும் குறையும். ஆங்கில ஆட்சிக்காலத்தில் பலரும் தமிழைப் புறக்கணித்து ஆங்கில இலக்கியங்களைப் பயிலவில்லையா?
‘‘குறள்நெறி இந்தி & தமிழ் என்று பிரித்துப் பேசவில்லை. இந்தியின் புகுத்தலால் தமிழுக்கு நேர்ந்துள்ள நேரவிருக்கும் இழுக்குகளையே மக்களுக்கு அறிவுறுத்துகிறது. இச்செயல் எந்தக் கட்சிக்கும் வளர்ச்சியாய் அமையாது. இந்திய நாட்டின் பற்றிலிருந்து ஒரு சிலரை வெளியேற்றுவது இந்திய மொழிகளில் ஒன்றுக்குத் தனிச் சிறப்பும் ஒதுக்கீடும் அரசினர் அளிக்கும் செயலேயன்றி, தாய்மொழிப் பற்றூட்டும் செயலன்று.
- மு.க. இராசமாணிக்கம்.
இந்தியால் தமிழ் சிதைவுறாது என்பதை ஒப்புக்கொள்ள முடியாது, மொழியறிஞர்கள் எவருமே இக்கருத்தினை ஏற்கார். தாங்களும் தங்கள் மனச்சான்றினை மாற்றிக் கொள்ள வேண்டுகிறேன். இன்று வழக்கிலுள்ள தமிழை உற்று நோக்கினால் பிறமொழிகளால் தமிழின் சிதைவை உணரலாம். உறவுமொழியாக வந்த சமசுக்கிருதத்தாலும், ஆட்சிமொழியாக வந்த ஆங்கிலத்தாலும், தமிழ்மொழி எவ்வளவோ சிதைந்து அன்றைய சிறப்புகளை இழந்துள்ளது. நாமெல்லாம் எழுதும், பேசும் தமிழே இதனை முழுமையாக எடுத்துக் காட்டுகிறதே? தமிழ்ப்புலவர்கள் கூட வடமொழிச் சொற்களையும், ஆங்கிலச் சொற்களையும், தூய தமிழோடு கலக்க நேரிடுகிறது. புலவர்களே இவ்வாறெனில் புலமையில்லாதவர்களின் தமிழைப் பற்றி விளக்கத் தேவையில்லை. இவ்வாறு, தமிழோடு சமசுக்கிருதமும், ஆங்கிலமும் பிரிக்க முடியாமல், கலந்திருப்பது, தமிழின் சிதைவைக் கூறவில்லையா? இந்த ஆட்சி மொழியாக வந்து தமிழோடு பெரிதும் கலக்கும்; இந்தியால், தமிழ்மொழி மேன்மேலும் சிதைந்து தூய்மை குன்றும்.
- தமிழ்ப்பித்தன்.
பசுமரத்தில் ஆணி எவ்வாறு எளிதாகப் பதிகின்றதோ அதேபோல வெகு எளிதாக எடுக்கவும் படலாம்! இந்தி ஆதரவாளர்களும், அதிகாரப் பிரியர்களும் அழகாக மேடைகளில் பேசுவர்; கேட்பவர் மனத்தில் பசுமரத்தாணிபோல் பதியத்தான் செய்யும். ஆனால் சிந்திப்பவர்க்கு இது ஆணி அல்ல, புல்லுருவி என்பது புலப்படும்.
ஆனால் வைரம் ஏறிய நெஞ்சினனுக்கு ஆபத்து இல்லை. எவனிடம் தமிழறிவும், தமிழ்ப்பற்றும் உளதோ அவனுக்கு அச்சம் இல்லை. தமிழர்கள் அனைவரும் உறுதியாக இருந்து, தமிழே எங்கள் உயிர் என இருந்து, தமிழை ஐயம் திரிபறக்கற்பார்களாயின், ஆயிரம் மொழிகள் ஆட்சி செலுத்தினும் அச்சமில்லை, அச்சமில்லை. முடியுமா? இந்தி படித்தவன் அதிகாரி ஆகிவிடுவான்! அடிமையாக இருக்க விரும்புவரா? அன்று, ஆயின் தமிழைவிடுத்து இந்தி படிக்க முனைவர். போட்டி போட்டுப்படிப்பர். தமிழின் கதி என்னை? சிந்தனை செய்மின்.
- வித்துவான் சேகராசன் பி.ஏ.
இந்தியால் தமிழ் கிஞ்சித்தும் அழியாது என்று இந்தி வெறியர்கள்தான் சொல்வர். தமிழர்களாகிய  நாம் கூறுவது அறிவு நிறைந்த கூற்றாகாது. ஒருவன் பாலுக்குக் காவலாகவும் பூனைக்குத் தோழனாகவும் எப்படி இருக்க முடியும்? அதுபோல்தான் இந்தியும் வேண்டும், தமிழும் வேண்டும் என்று கூறுவது அமைந்துள்ளது.
- ப.முத்துச்சாமி
இந்தியால் நந்தமிழ் கிஞ்சித்தும் சிதைவுறாது என்று கூறுதல் மனச்சான்றுக்கு மாறாகக் கூறும் கூற்று என என் மனத்தில் பசுமரத்தாணிபோல் நிலை பெற்றிருக்கும் தன்மையாகும். மாணவரிடையே மும்மொழித்திட்டம் மூளையைக் குழப்பிக் கொண்டிருப்பதையும், அரசு அலுவலர் பலர் தாய்மொழி தவிர பிறமொழி தெரியாக் காரணத்தால் குறிப்பாக இந்தி தெரியாதிருப்பதால் தமக்குப் பதவி உயர்வு பாதிக்குமே என்ற மன வேதனையுடன் தாய்மொழியைப்பற்றிய தம் கவனத்தை மாற்றியதாலும் தமிழ் சிதைவுபெற்று வருகின்றது. இது தவிர, இந்தியைக் கற்றால் தனி உரிமைகளும் கிடைக்கின்றன என்ற ஆசை வலையை வீசித் தமிழ் மாணவர்களின் மனத்தில் எழுச்சியை அடக்குவதன் காரணத்தாலும் தமிழ் சிதைவுற்று வருதல் வெள்ளிடைமலை.
-      மு.தங்கராசு.
பிறமொழி புகுவதால், புகுந்தமொழி உயர்ந்த இடத்தில் அமர இருந்தமொழி தாழ்ந்த இடத்தில் வைக்கப்படுகிறது. ஆட்சியில் இருக்கும் மொழிக்கு எப்பொழுதும் வளர்ச்சியும் சிறப்பும் வந்து சேரும். ஆட்சியில் இருக்கின்ற மொழி குறவர் மொழியாக இருந்தாலும், குறத்தி மொழியாக இருந்தாலும் அதுமட்டும் தனிச்சிறப்புப் பெற்று ஓங்கி நிற்கும். தன்கீழ் இருக்கும் மொழி சிதைவுறும். காலப்போக்கில் அழியும். இங்கிலாந்து வரலாற்றில் ஆங்கிலத்திற்கு முன்னிருந்த மொழி அழிந்ததும், இடைக்காலத்தில் தமிழுக்கு வீழ்ச்சி ஏற்பட்டு வடமொழி ஏற்றம் பெற்றதும் சிறந்த சான்றுகள்.
‘இந்தி படித்தால் தான் வேலை; இந்தி படித்தால்தான் வாழ்வு; இந்தி படித்தால்தான் உயிர்’ என்ற நிலை உருவாகிவிட்டது. மொழியைவிட வயிறும் வாழ்வும் பெரிது. என்று எண்ணும் நிலை வறுமை மிகுந்த நாட்டில் நடைமுறையில் காணும் காட்சி! வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியிருக்கும் இவ்வேளையில் இந்தி படித்தால் வேலை எளிதில் கிடைக்கும் என்றால் இந்தியைப் படித்து வாழ்வை வளமாக்க எவரும் தயங்க மாட்டார்கள். இங்குதான் தமிழுக்கு முதல் அரிவாள் வெட்டு விழுகிறது என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த ஓர் ஆண்டில் மதுரையில் மட்டும் எட்டு, ‘இந்திப் பிரச்சார சபைகள்’’ புதிதாகத் தோன்றியுள்ளன. இந்தியால் தமிழுக்குக் கேடு இல்லையென்றால் இந்திப் பிரச்சார சபைகள் தோன்றியிருக்கக் கூடாது. எட்டுத் தமிழ்ச்சங்கங்கள் (கல்லூரிகள்) அல்லவா தோன்றியிருக்க வேண்டும்!
- பா. வெற்றிச்சுடரோன்
குறள்நெறி 01.05.1964 பக்கம் 3-4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக