ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

கருத்தரங்கம்: இந்தியால் தமிழுக்குக் கேடு..

கருத்தரங்கம்: இந்தியால் தமிழுக்குக் கேடு..

 thamizh-hindi02
வினா 4: இந்தி மொழியால் எங்காவது ஓர் இடத்தில் தமிழ்மொழி மறைந்திருக்கிறதா?
விடைகள்:
வட்டார மொழிப்பற்று இந்தியைப் புகுத்துவதற்குத் தடையாயிருக்கும் என்று அரசினர் கருதுவதால், தமிழ் மொழிப் பற்றூற்றும் இலக்கியப் பகுதிகளையும், தமிழ்ப் பற்றையும் தடை செய்கின்றனர். தற்போதைய தமிழ் நாட்டு முதலமைச்சர் ‘வாழிய செந்தமிழ்’ என்ற பாரதியின் பாட்டைப் பள்ளிகளில் பாட வேண்டாமென்று வேண்டியதும், இளங்கலை, இளமறிவியல் மாணவர்க்குத் தமிழ் இலக்கியப் பகுதியில் அமைந்த ‘கால்கோட்காதை’யை நீக்கியதும் இதற்குச் சான்று. இவ்வாறு மொழிப் பற்றூட்டும் பகுதிகளை நீக்குவதால் அவ்விலக்கியப் பகுதிகள் மறைய வாய்ப்புண்டு.
- மு.க. இராசமாணிக்கம்.
பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை என்ற வள்ளுவர் வாக்கிற்கேற்ப, படிக்கின்றவர்களில் பெரும்பாலோர் பொருளுக்காகத்தான் படிக்கின்றார்கள் என்பதை, பாரதம் அறிவார் என நம்புகின்றேன். எனவே இந்தி படிப்பதால் எளிதாக வேலையும் அதன் மூலம் நல்ல பொருளையும் ஈட்டக் கூடிய வாய்ப்பை அரசினரால் உண்டாக்கப்படுவதால் இந்தி மொழியால் தமிழ் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை மாணவர்கள் மனத்திலிருந்து மறைக்கப்படுகின்றது. தமிழை வளர்க்க வேண்டிப் படிக்கின்ற மாணவர்களிடமிருந்தே தமிழை மறக்கும்படி. தமிழின் நிலை எந்த நிலைக்குச் செல்லுமென்று சொல்லாமலே புரிந்து கொள்ளலாம். எனவே இந்தியைப் புகுத்தும் இந்நிலை நீடித்தால் தமிழ் ஓரிடத்தில் மட்டுமல்ல. ஆயிரமாயிரம் இளம் உள்ளங்களிலிருந்து இந்தியால் மறைக்கப்படுகின்றது என்பதை உறுதியுடன் கூறுகின்றேன்.
- பொன்னியின் செல்வன்.
தமிழ் நாட்டில் இந்தியை ஆதரிப்பவர்களில் சிலர். ஆங்கிலத்தால் தமிழ் அழிவுறுகிறது என்பதைப் பலவாறாக எடுத்துக் காட்டியுள்ளனர். (சிறப்பாகத் தமிழரசுக் கழகத்தினரும் பொதுவுடைமைக் கட்சியினரும் தமிழகத்தில் இதனை நன்கு விளக்கியுரைத்து விழிப்புணர்ச்ச்சியூட்டுகின்றனர்.) சின்னஞ்சிறிய சிற்றூர்களில் கூட ஆங்கிலச் சொற்கள் கற்றவர், கல்லாதவர், வாயில்வரக் காண்கின்றோம். ஆயிரக்கணக்கான எடுத்துக்காட்டுக்கள் காட்ட முடியும்.
ஓர் எடுத்துக்காட்டு:-
குழப்பம் என்பது தமிழ்ச் சொல். ஆங்கிலத்தில் உள்ள ‘ரேசன்’ (Ration) சொல் சேர்ந்து குழப்பரேசன் என்று முதிர்ந்த பாட்டியின் வாயிலாக வழங்குவதைக் காணலாம். இவ்வாறு ஆங்கிலத்தால் தமிழ் கெடுகிறது என்பதைப் பலரும் ஒத்துக் கொள்ளும்போது அதே இடத்தில் இந்தி வருவதால் தமிழ் கெடாது என்று எப்படிக் கூற முடியும்? ஆங்கிலத்தால் விளைந்த தீமைகள் இந்தியால் விளையாது என்று எவ்வாறு கூற முடியும்.
- பா.செயப்பிரகாசம்.
தமிழ் மொழி இந்தியால் பற்பல இடங்களில் பல வகைகளில் மறைந்து கொண்டிருக்கிறது. முதலாவதாக இந்தியப் பாராளுமன்றில் உறுப்பினர் இந்தி அல்லது ஆங்கிலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில்தான் தன் உரையைத் தொடங்க முடியும். இவ்விரு மொழிகளிலும் பேசவியலா உறுப்பினர் தம் தாய் மொழியில் பேசினால் எதிர்ப்பைத் தான் அடைகின்றனர். இரண்டாவதாக மத்திய அரசு அலுவலர் தேர்வுக் குழுவின் (Union Public Service Examination) தேர்வுக்கு இந்தியே இன்றியமையாத மொழி. இந்தியோ ஆங்கிலமோ தெரியாத ஒரு தென்னாட்டுக்காரர் இந்தியாவின் குடியரசுத் தலைவராக முடியாது. இது மூன்றாவது சான்று நான்காவதாக முதல் வினாவிற்கும் மூன்றாவது வினாவிற்கும் அளித்த விடைகள் இவ்(4) வினாவிற்கும் பொருந்துவனவாகும்.
- மு.தங்கராசு.
எரிகின்ற நெருப்பில் கைவைத்துப் பார்த்த பின்னரே சுடுமென்ற கொள்கையை ஒப்புக் கொள்ளும் கண்ணற்ற குருடர்களினும், முன்னரே சுடுமென்று அறிந்து விலகிக் கொள்பவர்கள் அறிவுடையவர்களாவர். அதைப்போல் இந்தியைத் தமிழ் நாட்டில் புகுத்தி அதனால் தமிழ் அழிகிறதா? இல்லை. வாழ்கிறதா? என்று ஆராய்ந்து கொண்டிருக்க இது நேரமன்று. எந்த ஒரு மொழியும், பிறமொழி மீது வன்மையாக ஆதிக்கம் செலுத்தினால் அதன் ஆதிக்கத்திற்கு உட்பட்ட மொழி அழிவது கண்கூடு. இவ்வாறு இன்று உலகத்தையே வளைத்துக் கொண்டிருக்கும் ஆங்கிலமொழி, பிரெஞ்சு, இலத்தீன் போன்ற பல மொழிகளை விழுங்கியுள்ளதை நாம் அறியலாம். எனவே இந்தி மொழியால் தமிழ் மறைந்திருக்கிறதா, மறையவில்லையா என்று ஆரூடம் கணித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அழிவது உறுதி.
- வி.முத்துச்சாமி.
இருப்புப்பாதை நிலையங்களின் பெயர்களை இந்தியில் எழுதினார்களே! அஞ்சல் தலைகளிலும், அட்டைகளிலும் தமிழா காணப்படுகிறது? வானொலி நிலையத்தில் தமிழ்மொழி சாகாமல் செத்துக் கொண்டிருக்கிறது. பள்ளிகளில் தமிழ் படாதபாடு படுகின்றது. இன்னும் சாகவில்லையே தமிழ்! என்ற ஏக்கம் வேண்டாம். சாகாமல் செத்துக் கொண்டே இருக்கிறது என்பது உண்மை என்பதை உணர்ந்து இன்றே ஆவன செய்க. அஃதே அறிவுடைமை. சாகட்டும் எழுப்புகின்றேன் என்பது வெள்ளம் வந்தபின் அணைபோடலாம் என்ற மதியற்ற நினைவின் மறுஉருவம் ஆம்.
- சேசுராசன், பி.ஏ.
சத்தியமேவ சயதே எனத் தமிழ்நாட்டு அரசாங்க முத்திரையில் எழுதப்பட்டுள்ளது. உண்மை வெல்க என்று எழுதினால் என்ன கேடு வந்துவிடுமோ? தமிழ் மொழி வாழும் மண்ணில் சத்தியமேவ சயதே மட்டுமல்ல; பிரச்சார் சபா. வசுதிராலயா என எண்ணற்ற இந்திச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. கிராம சேவக் என்பதற்குப் பதிலாகச் ‘சிற்றூர்த் தொண்டர்’ எனக் கொண்டால் பொருள் குன்றிவிடுமா? இனிமை செத்து விடுமா? ஆயினும் இந்திச் சொற்கள் வடக்கிலிருந்து வரவேற்கப்படுகின்றன.
இந்தியால் தமிழ் எங்காவது ஓரிடத்தில் மறைந்துள்ளதா என்பதைக் கண்டறிய, தேடி அலைய வேண்டாம். தாய் மொழியாகிய தமிழ் ஒலிக்க வேண்டிய இளம் நாக்குகள் இன்று கலம் - கிதாப் - லட்கி - அச்சா என முழங்குகின்றன; இதனால் இந்தியால் தமிழின் சிறப்பு மறைந்து வருவது காணலாம். இந்தி படித்தால் உதவிப் பணம் கிடைக்கும் என்ற அற்ப ஆசையால் இந்திப் பண்டிட்களாகி வரும் தமிழர்களிடம் தமிழின் உயர்வு மறைந்து வருவதைக் காணலாம். ‘‘இந்தியை எதிர்ப்பவர்கள் எங்கள் தமிழ்நாட்டில் இல்லை’’ என்று வடநாட்டில் நம் முதலமைச்சர் கூறி வந்தாரே. அங்கே தமிழ்த் தாயின் வீரம் ஒடுங்கியதை உணரலாம். மறத்தமிழின் சின்னச்சாமி எரிந்து மாண்டாரே ‘தமிழ் வாழ்க. இந்தி ஒழிக’ என்று இறுதி மூச்சு வரையில் முழங்கிக் கொண்டே! அவ்வீரனை வணங்காது விட்டு, ‘‘நோயால் செத்தான்” “வறுமையால் இறந்தான்” என்றெல்லாம் தமிழர்களே பொய் கூறித் தூற்ற முற்பட்டார்களே. அங்கே தமிழ்ப் பண்பு மறைந்ததைத் தெரிந்து கொள்ளலாம். இத்தனைக் கேடுகளுக்கும் காரணம் இந்தியே. இந்தியைக் கற்காவிட்டால் வாழ முடியாத கொடுமை சூழுமே!’’ என்று தமிழ்த் தாயின் நன்மக்கள் கலங்குகின்றனரே. அங்கெல்லாம் இந்தியால் தமிழ் சரிந்து வருவதாயும். நாளைக்கு முழுமையாக மறையும் என்பதையும் அறிவீராக.
- தமிழ்ப்பித்தன்
நான்காவதாக (மத்திய அல்லது மாநில) அலுவலகங்களில் இந்தியின் உதவியால் காரியங்களைச் செய்வது பற்றி ஆய்வோம். அந்த இடத்தைப் பெற்றிருந்த ஆங்கிலத்தை நீக்கிவிட்டு அவ்விடத்தைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டினை உள்ளிட்ட நகர, சிற்றூர் அலுவலகங்களில், எம்மொழி எவ்விடத்தைப் பெற்றிருந்தாலும், அலுவலகர்கள் தமிழிலேயே வேலைதனைச் செய்யத் தூண்டுவதே முறை. அது விடுத்து, ஆங்கிலத்தால் அது நடைபெற்று வந்தது. அது ஓரளவு நற்பணியைச் செய்து வந்தது. இப்பொழுது அதன் இடத்தையும் இந்தி பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. தொடர்புகளும் அதனாலேயே கொள்ளப்படுகின்றன. தமிழில் இவையெல்லாம் நடைபெற்றிருக்குமேயானால், ‘‘ஆட்சித் தமிழ்’’ பற்றிய ஓர் கருத்து நிலவாது. ஒரு சிலரும் ‘‘சிறிது சிறிதாகத் தமிழை அலுவலகங்களில் புகுத்துகிறோம்’’ என்கின்றனர். அம்மொழியினை அவ்வாறு புகுத்த வேண்டுமோ. அதை அவ்வாறு செய்யாது தமிழால் முடியும்’’ என்று கூறப்படுகின்ற போழ்தும் அதைப் புகுத்துகிறோம் என்பது, ஒவ்வாத செயலே. இக்காரணங்களாலும் ஆட்சி நடத்துவதற்குரிய வாய்ப்பினை அது பறித்தலால் தமிழின் வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கின்றது. அவ்வூறின் காரணமாகத் தமிழ்தன் உருச்சுரந்து கெடுதற்கு வாய்ப்பு ஏற்கின்றது.
-      ப.உசேன்
-
-      குறள்நெறி:  வைகாசி 02, 1995 / 15.05.1964 பக்கம் 10-11

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக