செவ்வாய், 7 மே, 2013

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் புதிய கட்சியைத் தேடுகின்றனர்: வைகோ

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் புதிய கட்சியைத் தேடுகின்றனர்: வைகோ

திமுக, அதிமுகவுக்கு மாற்றான புதிய சக்தியை மக்கள் தேடத் துவங்கியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
மதிமுகவின் 20-ம் ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்பட்டது.இதனையொட்டி மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் உள்ள பெரியார், அண்ணா சிலைக்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மதிமுக கொடியை ஏற்றி வைத்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:-
மக்களின் நல் ஆதரவோடு மதிமுக 20-ம் ஆண்டை எட்டிப் பிடித்துள்ளது.சென்ற சட்டப்பேரவைத் தேர்தலை மதிமுக புறக்கணித்தது.எனினும் மக்கள் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து போராடி வரும் இயக்கமாக உள்ளோம்.ஈழத் தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னை, ஸ்டெர்லைட் ஆலை, முல்லைப் பெரியாறு பிரச்னை போன்ற போராட்டக் களங்களில் மதிமுக ஆக்கப்பூர்வமாகப் போராடியுள்ளது.பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக் கோரி பல கட்டங்களில் போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.
மதுக் கடைகள் அகற்ற வலியுறுத்தி 3 கட்டங்களாகப் பேராட்டம் நடத்தியுள்ளோம்.இந்தப் போராட்டங்களுக்கு பெண்கள் மத்தியில் மிகப் பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து வரும் நிலையில், அவர்களுக்கு மாற்றாக புதிய சக்தியைத் தேடும் படலம் மக்கள் மத்தியில் தொடங்கி இருக்கிறது. எனவே மக்கள் எதிர்பார்பை ஈடு செய்யும் வகையில் மதிமுக தொடர்ந்து மக்கள் பிரச்னைக்காகப் போராடும் என்றார் அவர்.

1 கருத்து:

  1. மதிமுகவில் புதிதாக உள் வருபவர்களை விட வெளியேறுகிறவர்கள்தான் அதிகமாகக் காணப்படுகிறார்கள். கலைப்புலி தாணு, மணிவண்ணன் போன்றோர் வெளியேறிவிட்டார்கள். காரணம் என்ன?

    பதிலளிநீக்கு