செவ்வாய், 4 செப்டம்பர், 2012

தமிழ் மொழியின் சிறப்பு!

தமிழ் மொழியின் சிறப்பு!



தமிழ் மொழியின் சிறப்பு!
தமிழ் மொழி வரலாறு, தமிழ் இன வரலாறு ஆகிய இரு வரலாறுகளையும் கண்டிப்பாக தமிழர் ஒவ்வொருவரும் அறிய வேண்டும் என்பதற்காகவே இவ்வுண்மை வரலாற்றை எழுதுகிறேன்!
நம் தாய் மொழியான தமிழைப் பற்றியும் தமிழரினத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளப் பல உண்மைச் சான்றுகள் உள்ளன.
1. பழங்குகைகளில் காணப்படும் கல்வெட்டுகள்
2. நடுகற்களில் காணப்படும் வட்டெழுத்துகள்
3. செப்பேடுகளில் காணப்படும் வட்டெழுத்துகள்
4. இலக்கியச் சான்றுகள்
5. வெளிநாட்டவர் வருகைக் குறிப்புகள்
6. பழைய நாணயங்கள்
7. அரசுச் சாசனங்கள்
8. அரசர்களின் ஆவணங்கள்
9. கலைகள் – (இயல், இசை, நாடகம்)
10. கோயில் ஒழுங்குகள், கட்டடக்கலைகள், சிற்பங்கள்.
இவை போன்ற சான்றுகள் பற்பல உள்ளன. தமிழ்மொழியின் சிறப்பையும் தொன்மையையும் உண்மை வரலாற்றையும் எடுத்துரைக்கும் சான்றுகள் மிதமிஞ்சிக் கிடக்கின்றன!
தமிழ்மொழி மிக மிகத் தொன்மை வாய்ந்த மொழி. இதற்குரிய எழுத்து வடிவங்கள் எந்தக் காலத்தில் தோன்றின என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. இன்ன காலத்தில்தான் தோன்றின எனத் திட்டவட்டமாகக் கூற முடியாத நிலையில்தான் நம் தமிழறிஞர்கள் உள்ளனர். தற்போது நமக்குக் கிடைத்துள்ள சான்றுகளைக் கொண்டு, தமிழின் உண்மை வரலாற்றை ஆய்வோம்.
தொன்மைக் காலத்தில், நாம் இன்று கையாளும் தமிழ் எழுத்தில்லாத, வேறு நான்கு வகையான தமிழ் வரி வடிவங்களைத் தமிழ்மொழி எழுதப் பயன்படுத்தி உள்ளனர் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது.
அவை:
1. தென்பிராமி என்கிற தமிழ்ப் பிராமி
2. வட்டெழுத்துகள்
3. கோலெழுத்துகள்
4. மலையாண்மை
இவற்றுள் தென்பிராமி (எ) தமிழ்ப் பிராமி எழுத்து முறைதான் மிக மிகத் தொன்மையானது. அரசர் அசோகர் தன் கல்வெட்டுகளில் பயன்படுத்திய எழுத்து பாலியும் பிராமியுமே என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
முதல் தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்கள்:
தமிழ்நாட்டில், முதன் முதலில் 1906ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஒருவரால் ‘தமிழ்ப் பிராமிக் கல்வெட்டு’ கண்டுபிடிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில், பாளையங்கோட்டைக்கு அருகிலுள்ள மருகால்தலை எனும் ஊருக்குப் பக்கத்திலுள்ள குன்றில் தமிழ்ப் பிராமி வட்டெழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பின், ஒன்றன் பின் ஒன்றாக, ஏராளமான தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அக்கல்வெட்டுக்களில் தமிழ் மொழிச் செய்திகள் அடங்கியுள்ளன என்பதை 1924ஆம் ஆண்டில், சென்னையில் நடந்த அகில இந்திய மூன்றாவது ஓரியண்டல் மாநாட்டில் எடுத்துரைத்தவர் திரு.கே.வி.சுப்ரமணிய அய்யராவார்.
அடுத்து வந்த அறிஞர்களின் சேவைகள்:
1) திரு.ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகள் அனைத்தையும் நன்கு படித்து, எழுத்துகளை வரிசைப்படுத்தித் தெளிவான கருத்துகளைக் கூறியுள்ளார்.
2) ஒரு காலத்தில், இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் பரவியிருந்த மொழி தமிழ்ப் பிராமி ஒன்றே என்கிறார்!
3) தமிழ்ப் பிராமி எழுத்துமுறைக்கும் செமிட்டிக் எழுத்துமுறைக்கும் மிக நெருங்கிய தொடர்பும் எழுத்தொற்றுமையும் மிகுதியாகக் காணப்படுவதால், செமிட்டிக் மொழியைக் கையாளும் பினீசியர்களுக்கும் தமிழ்ப் பிராமி முறையைக் கையாளும் திராவிடர்களுக்கும், 4000 ஆண்டுகளுக்கும் முன்பே வணிகத் தொடர்புகள் உண்டு என அறிஞர் பலர் கருதுகின்றனர்.
4) சிந்துச் சமவெளியின் இரு பெருநகரங்களான, மொகஞ்சதாரோ, அரப்பா ஆகிய நகர நாகரிகங்களைப் படைத்தவர்கள் திராவிடர்களே எனவும் சிந்துச் சமவெளியில் பயன்படுத்தப்பட்ட மொழியும் எழுத்தும் திராவிடர்களின் மொழியும் எழுத்தும் ஒன்றே எனவும் திரு.ரெ.வ.ஈராசு என்னும் வரலாற்று அறிஞர் கூறுகிறார்.
5) இதே கருத்தை சர்.சான் மார்சல் எனும் அறிஞரும் வலியுறுத்துகிறார்.
6) மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிகம் தொல்திராவிடப் பழங்குடியினருக்குச் சொந்தமானது என அறிஞர்களான திரு.ச.எம்.போங்கார்டு இலெவின், திரு.என்.வி.குரோ ஆகியோர் கருதுகின்றனர்.
7) கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, அசோகனின் ‘கிர்னார்’ கல்வெட்டில், அன்றைய தமிழ்நாட்டு அரசுகளையும் அரசியல் செய்திகளையும் அரசர்களின் பெயர்ப் பட்டியலையும் இன்றும் கூடக் காணலாம்.
8) அரசர் நந்திவர்மப் பல்லவருடைய கல்வெட்டொன்று தமிழ் அரசர்களைத் திராவிட அரசர்கள் எனக் கூறுகிறது.
9) தமிழ்நாட்டு நாகரிகம் கிழக்கில் போலினேசியா, மேற்கில் மேற்காசியா, எகிப்து போன்ற நாடுகளில் எளிதில் பரவியது என்கிறார் முனைவர்.ஆர்.ஆர்.தீட்சிதர்.
10) இதே கருத்தை வலியுறுத்துகிறார் அறிஞர் கால்டுவெல் தன் (Comparative grammer of Dravidian Languages) ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் நூலில்.
11) தமிழ்ப் பிராமி எழுத்துமுறை, கிறித்து பிறப்பிற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் வழக்கத்திலிருந்தது என்கிறார் திரு.ஐராவதம் மகாதேவன் அவர்கள். தமிழ்ப் பிராமியைப் பற்றி அவர் மேலும் கூறுகையில், “அரிக்கமேட்டில் கிடைத்துள்ள பானை ஓடுகளிலுள்ள தமிழ்ப் பிராமி எழுத்துகள், அதன் வளர்ச்சிக்குத் தக்க சான்று” என்கிறார்.
12) கி.பி. 3ஆம் நூற்றாண்டில், தமிழ்ப் பிராமியிலிருந்து வட்டெழுத்துகளும் தமிழ் எழுத்துக்களும் காலப்போக்கில் பிரிந்து தனித்தன்மை பெற்றதாக முனைவர்.நாகசாமி கூறுகிறார்.
13) உரோம் நாட்டுப் பொற்காசுகள், வெள்ளிக்காசுகளின் மூலம் கிறித்துப் பிறப்பிற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மொழியும் தமிழனும், யவன நாடு, சீன நாடு, தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பு, குறிப்பாக, வணிகத் தொடர்பு வைத்திருந்தனர் என்பது தெளிவாகிறது.
14) சின்னமனூர் செப்பேடுகளும், வேள்விக்குடிச் சாசனமும் சங்க கால அரசர்களின் பெயர்களை வரிசைப்படுத்திக் காட்டுவதுடன் சங்கங்களின் வரலாற்று மரபை உறுதி செய்கின்றன. அவ்வாறே தொல்காப்பியம், பட்டினப்பாலை, மருதைக்காஞ்சி, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவையும் இதற்கு  தக்க புறச்சான்றுகளாக உள்ளன. மேலும், பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள் காலத்துக் காசுகளும் தமிழ்மொழியைக் கையாண்ட தமிழர்களின் சிறப்பைப் பறைசாற்றுகின்றன.
தொன்மை வரலாறு:
தமிழனின் பிறப்பிடமும், தமிழ் மொழியின் பிறப்பிடமும் ஒன்றே! குமரிக்கண்டத்தில் கையாண்ட மொழி தமிழ்த் திராவிட மொழியே! பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின், படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டமெட்டினர்! பழம்பாண்டி நாட்டை உலகிற்குச் சுட்டிக்காட்டிச் சிறப்புடன் வாழ்ந்த்னர். தமிழ் மொழி சீரும் சிறப்பும் பெற்றுத் தழைத்தோங்கியது.
புகழ்க்கொடி நாட்டியது:
குமரிக் கண்டத்தைத் தன் தாயகமாகக் கொண்ட திராவிடத் தமிழன், உலகின் பல பகுதிகளுக்கும் பரவலானான். தரை வழியாகவும், கடல் வழியாகவும் வணிகத்தை மேற்கொண்டான். ஆங்காங்கே குடியிருப்புகளை அமைத்து உலகெங்கும் நிலைத்தான். நான்கு முறை ஏற்பட்ட கடல்கோள்களால் (சுனாமிகளால்) தமிழனின் புகழும் நாடும் மொழியும் அழிவுற்றன. தென்மதுரை, நாகநன்நாடு, கபாடபுரம், காவிரிப்பூம்பட்டினம் அனைத்துமே அழிந்தன.
முதன்மைக் குறிப்பு:
இதிலிருந்து நாம் அறிவது என்னவெனில், திராவிடக் கருவாகிய, மூலமொழியாகிய, தமிழ்மொழி குமரிக்கண்டம் முதல் இமயம் வரை பரவி வேரூன்றியிருந்தது என்பதே! அதாவது தெற்கே குமரிக்கண்டம் என்ற பெருநகர நாகரிகத்தைப் படைத்த தமிழ்த் திராவிடன், வடக்கிலும், இருபெரும் துணை நகரங்களாக மொஞ்சதாரோ, அரப்பாவை அமைத்து வாழ்ந்தான் என்பதே!
இதிலிருந்து தமிழன் பெருமைகளையும் தமிழ்மொழியின் பெரும் சிறப்பையும் நன்கு உணரலாம்!
நன்றி: http://partchil.blogspot.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக