செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

questionable future of parentless children : பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்






சேலம்:"தந்தை இல்லை, தாயுமில்லை; தெய்வம் அன்றி யாருமில்லை' என, எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக கொண்ட குழந்தைகள், அரசின் உதவியை எதிர்பார்த்து, வயதானோர் அரவணைப்புடன் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வந்தனர்.

பிறக்கும் போதே, தாய், தந்தை யாரென தெரியாமல், ஆதரவற்ற நிலையில் தவிக்கும் குழந்தைகள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றனர். சேலத்தில், வயதான தாத்தா, பாட்டி அரவணைப்பில், வாழும் மூன்று குழந்தைகள், படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் உள்ளனர். எவ்வித ஆதரவும் இல்லாமல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக கொண்ட ராஜேஸ்வரி(16), திவ்யபாரதி(15), மணிகண்டன்(10), மூன்று பேரும் நேற்று, சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணத்தை சந்தித்து, உதவி கோரி மனு அளித்தனர். ராஜேஸ்வரி எஸ்.எஸ்.எல்.ஸி., முடிக்கப்போகிறார். திவ்யபாரதி, ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். மணிகண்டன், எட்டாம் வகுப்பு படிக்கிறார்.

அந்த குழந்தைகள் கூறியதாவது:அப்பா சவுந்திரராஜன், அம்மா தேவகி. நாங்கள் சின்ன வயதாக இருக்கும் போதே, அப்பாவும், அம்மாவும் இறந்து விட்டனர். எங்களுடைய தாத்தா ராமாச்சாரி, பாட்டி பத்மாவதி ஆகியோர், நெசவுத் தொழில் செய்து எங்களை காப்பாற்றி வருகின்றனர். பொன்னம்மாபேட்டை அண்ணாநகர் இரண்டாவது குறுக்குத் தெருவில் வசிக்கிறோம். தாத்தாவுக்கு, 72 வயதாகிறது. வயதான தாத்தா, பாட்டிக்கு அவ்வப்போது உடல் நலம் மோசமாகிறது. அவர்களுக்கு பின், எங்களுக்கு எந்தவித ஆதரவும் இல்லை.நாங்கள், பாவடியில் உள்ள சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறோம். மேல்படிப்பு படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற ஆசையில் மூன்று பேரும், நன்றாக படித்து வருகிறோம். தாத்தா, பாட்டிக்கு பின், எங்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற பயம் உள்ளது. அரசு உதவி செய்யும் என்ற நம்பிக்கையில்தான் இங்கு வந்துள்ளோம். அதிகாரிகள், மனுவை வாங்கிக் கொண்டு, போய் வாருங்கள், எனக் கூறுகின்றனர். எங்கள் வாழ்க்கைக்கு, அரசுதான் வழிகாட்ட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தாத்தா ராமாச்சாரி கூறுகையில்,""சிறு வயதிலேயே, மூன்று குழந்தைகளும் பெற்றோரை இழந்து விட்டனர். எனக்கு பின், அவர்களை யார் கவனிப்பார்கள் என்ற பயம் எனக்குள்ளது. அரசு அவர்களுக்கு உதவ வேண்டும்,'' என்றார்.

பெற்றோரை இழந்து வாழும் இக்குழந்தைகளுக்கு, உதவ விரும்புவோர், 90951- 63698 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.முதியோர் அரணைப்பில் இருக்கும் மூவருக்கும், கல்வி பயிலும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால், "மனிதன் என்பவன் தெய்வமாகலாம்' என்ற வாசகம் உயிர்பெறும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

- தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக