அறிஞர் அண்ணா02 - arignarannaa02

 நான் கூற விரும்புவது இதுதான். காலப் போக்கில் இந்தி மொழியை நாட்டின் சட்டப்படியான இணைப்பு மொழியாக ஆக்குவதைப் பற்றி நீங்கள் சிந்திக்கும் முன், உண்மையிலான இணைப்பு மொழியாக இந்தியை ஆக்கும் வழியில் நீங்கள் செயல்படவேண்டும். எனதருமை நண்பர் வாசுபேயி தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு அதில் இருக்கும் தமிழ் இலக்கியத் தேனை ஆழ்ந்து பருகினாரானால், நிச்சயம் அவர் தமிழ் மொழியைத்தான் இந்தியாவின் இணைப்பு மொழியாகத் தேர்ந்தெடுப்பார் என்று கூறிக்கொள்கிறேன்.
அனைத்துத் தேசிய மொழிகளும் ஆட்சி மொழிகளாக ஆகவேண்டும்!
   அதனால், நமது பதினான்கு தேசிய மொழிகளும் ஆட்சி மொழியாக ஆக இயன்ற நேரம் வரும் வரை, இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும் தற்போதைய நிலையே தொடருவதற்கு நாம் எந்த விதத்திலும் குந்தகம் விளைவித்து விடக்கூடாது. இந்தியாவை ஒற்றுமையாக ஒரே நாடாக வைத்திருப்பதற்காகப் பலமொழி என்ற விலையை நாம் கொடுத்துத்தான் ஆகவேண்டும். இந்தி மொழியைத் திணிப்பதன் மூலம் உங்களால் இந்தியாவைப் பிளவுபடச் செய்துவிட முடியும். நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் மனநிறைவுடன் வாழும் இந்தியாவை நீங்கள் காண விரும்பினால், நாட்டின் ஒரு பகுதி மற்றொரு பகுதி மீது ஆதிக்கம் செலுத்துகிறது என்று மக்கள் கருதாத ஒரு இந்தியாவை நீங்கள் காண விரும்பினால், கோடிக் கணக்கான மக்களின் மனத்தில் நியாயமான அச்சங்கள் தோன்றக் கூடாது என்று நீங்கள் விரும்பினால், நாம் ஒவ்வொருவரும் பெருமைப்பட்டுக் கொள்ள இயன்ற இந்தியாவைக் காண நீங்கள் விரும்பினால், அனைத்து தேசிய மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்கும் பிரச்சினையை நீங்கள் கட்டாயமாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். சுவிட்சர்லாந்து 4 மொழிகளை ஆட்சி மொழிகளாகக் கொண்டிருக்கும்போது நம்மால் ஏன் 14 மொழிகளை வைத்துக் கொள்ள முடியாது?
  இதை நான் கூறும்போது, இது நடைமுறை சாத்தியமற்றது என்று எனது நண்பர் திரு. அக்பர் அலிகான் கூறினார். அது சிக்கலானதுதான்; எளிதானது அல்ல என்பது உண்மைதான். ஆனால் அதில் உள்ள இடையூறுகள் கடக்க இயலாதவை அல்ல. நான்கு மொழிகளை ஆட்சி மொழியாக சுவிட்சர்லாந்து நாட்டினால் வைத்துக் கொள்ள முடியுமானால், நம்மாலும் பதினான்கு மொழிகளை ஆட்சி மொழிகளாக வைத்துக் கொள்ள முடியும். இந்த விசயத்தில் எதிர்கொண்ட இடையூறுகளை சுவிட்சர்லாந்து கடந்து இருக்கிறது. அத்தகைய வழி முறைகளைக் கண்டு பின்பற்ற இயலாத அளவுக்கு அறிவுப் பஞ்சம் கொண்டவர்களா நாம்? எந்த இடையூற்றையும், சிக்கலையும் வென்று கடந்து செல்ல இயன்ற ஆற்றல் மிகு மக்களை நான் இங்கு காண்கிறேன். அந்த இடையூறுகளைக் கடக்க எங்கள் கட்சியின் உதவி தேவை எனில், அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் உதவி உங்களுக்குத் தேவைப்படாது என்று கருதுகிறேன். ஆனால், தேவை என்று நீங்கள் பாவனை காட்டினாலும் போதும், உதவ நாங்கள் தயார். பன்மொழிக் கருத்து என்பது வெறும் மயக்க உணர்வு அல்ல; தி.மு.க. நிறைவேற்றியுள்ள தீர்மானம் அது. அதைப் பற்றி நான் அஞ்சவில்லை. வெறுக்கத்தக்கதுஅது என்று கருதாதீர்கள். முன்னர் சென்னையின் ஆளுநராக இருந்த சிறீ பிரகாசா அவர்கள் கடந்த வாரம் பன்மொழிக் கருத்துக்கு ஆதரவாகப் பேசியதுடன் பொருத்தமான ஒரு வாதத்தையும் முன்வைத்தார். மொழிவாரியான மாநிலங்களை உருவாக்குவது என்ற முடிவுக்கு வந்த பிறகு, அதன் விளைவாக ஏற்படும் பல ஆட்சி மொழி எனும் கருத்தை ஏற்பதில் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ள முடியாது என்று அவர் கூறினார். நாங்கள் ஆங்கில மொழி மோகம் கொண்டிருக்கவில்லை
  அனைத்து மொழிகளும் அந்த நிலைக்கு உயரும் வரை நாம் பலமொழிகளை ஆட்சி மொழிகளாகக் கொண்டிருப்போம். தமிழ் மொழி ஏற்கெ-னவே அந்த நிலையை எட்டிவிட்டது என்று நான் இங்கு அறிவிக்கிறேன். வங்காள மொழியும் அந்த நிலைக்கு வளர்ந்து விட்டது என்று எனது நண்பர் பூபேஷ் குப்தா கூறக்கூடும். நமது தேசிய மொழிகள் அனைத்தும் அந்த நிலையை எப்போது எட்டுகினறனவோ, அது 1970 ஆக இருக்கட்டும் அல்லது 1980 ஆக இருக்கட்டும், அப்போது நாம் ஆங்கிலத்தைக் கைவிடுவோம். அதனால், ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டும் என்று தி.மு.க. வாதிடுவது, ஆங்கில மொழி மீது நாங்கள் கொண்டிருக்கும் மோகத்தின் காரணமாக அல்ல. எங்கள் மொழியைப் பொறுத்தவரை நாங்கள் கருவம் மிகுந்த மக்களாவோம். தமிழ் மொழிக்கு இணையாக எந்த மொழியாலும் நிற்கமுடியாது என்று நினைப்பவர்கள் நாங்கள். அப்போது மேற்கு வங்க உறுப்பினர் டி.எல். சென் குறுக் கிட்டு, வங்காள மொழி தவிர என்று கூறினார்.
(திரு. எசு. இராமச்சந்திரன் அவர்கள் தொகுத்த அண்ணாவின் மாநிலங்களவை என்ற ஆங்கில நூலிலிருந்து தமிழில்: த.க.பாலகிருட்டிணன். )
http://viduthalaidaily.blogspot.in/2009/10/blog-post_10.html
sanskrit-and-hindi-vendaa01