ஞாயிறு, 4 நவம்பர், 2012

காலத்திற்கேற்ப நாங்களும் மாறி விட்டோம்'- changing life of IRULAR

"காலத்திற்கேற்ப நாங்களும் மாறி விட்டோம்'
 
தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், ஆந்திர மாநிலத்திலும் வாழும் இருளர் இன மக்கள், மொத்தமே சில ஆயிரக்கணக்கில் தான் உள்ளனர். எலி, பாம்பு, பூனை பிடிப்போர் என்று தான் வெளியுலகிற்கு இவர்களை பற்றி தெரியும். "டோல்கட்டை இருளர் கலைக் குழு' என்ற குழு அமைத்து, நவீன வாழ்க்கை முறையின் சில அம்சங்களையும் இணைத்துக் கொண்டு கலை உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர் என்பது புதிய செய்தி. இருளர் இனத்தை சேர்ந்த ராணி, 40; துரைராஜ், 26, ஆகியோரிடம் உரையாடியதில் இருந்து...

உங்க சொந்த ஊர்?

காடுகளிலும், மலைகளிலும் சுற்றி திரியும் எங்களுக்கு, போற இடமெல்லாமே சொந்த ஊரு தானுங்க. இப்போதைக்கு குடியிருக்கறது, காஞ்சிபுரம் மாவட்டம் அகிலி கிராமம்.

உங்கள் வாழ்க்கை முறை பற்றி?

காடு மேடெல்லாம் சுற்றி திரிவோம். ஊசி, பாசி மணி விற்போம். தீராத நோய்க்கும் மூலிகை மருந்துகள் கொண்டு வைத்தியம் பார்த்து குணமாக்குவோம். எலி, பூனை, பாம்பு எல்லாம் பிடிப்போம். இப்போ, விவசாய கூலிக்கும் போறோம்.ஒண்ணா சேர்ந்து குடும்பமா வாழ்றதால, உருப்படிங்க அதிகம். கஷ்டப்பட்டு உழைச்சா எதுவுமே மிஞ்சாது. எதிர்காலம் குறித்த கவலை எங்களுக்கு கிடையாது. கிடைச்சதை வைச்சு திருப்தியா வாழுவோம்.

கலை மீது உங்கள் உணர்வு குறித்து?:

உசிரை விட்டாலும் விடுவோம், எங்கள் பாரம்பரிய கலைகளை மட்டும் மறக்க மாட்டோம். எங்க முன்னோர்கள் பாடி வைத்த பாட்டுக்கு புது வடிவம் கொடுத்துகிட்டு இருக்கோம். பாட்டன் எப்போவோ பாடி வச்ச இரண்டு வரி, நாலு வரி பாட்டுக் கெல்லாம் மீத வரிகளை எழுதி, குறுந்தகடுகளில், பதிவிறக்கம் செய்து வைத்துள்ளோம். 120 பாடல்களை குழுக்களாக சேர்ந்து எழுதியுள்ளோம்.

உங்கள் குழு குறித்து?

எங்கள் குழுவோட பேரு, "டோல்கட்டை இருளர் கலைக் குழு'. ஆரம்பித்த போது, எழுதப்படிக்க முதலில் கற்று கொள்வது என, சபதம் எடுத்து, முதியோர் கல்வியில் இணைந்து எழுதப்படிக்க கற்று கொண்டோம். 25 பேர் எங்கள் குழுவில் உள்ளனர். சமுதாயத்தில், எங்களை வேற்று கிரக மனிதராக பார்ப்பதற்கான காரணங்களை, அலசி பார்த்தோம்.
எங்களிடம், தன் சுத்தம், சேமித்தல் என்ற எந்த அடிப்படை குணாதிசயங்களும் இல்லை என்பது தெரியவந்தது. அதனால், எங்கள் பிள்ளைகளையும், மற்ற குழந்தைகளை போல் வளர்த்தோம். இன்று, எங்கள் குழந்தைகள் பள்ளிக் கூடங்களுக்கு செல்கின்றனர்.

மருத்துவ பயிற்சிகளை எப்படி கற்று கொள்கிறீர்கள்?


எங்க இனத்துல, 18 வயசுக்குள்ளேயே கல்யாணம் பண்ணிடுவாங்க. அதனால், 14 வயசானதும் ஆண், பெண்ணுக்கு, எல்லா வித்தைகளையும் கற்று தருவோம். பாம்பு, பூனை, எலி பிடிக்க பயிற்சி கொடுப்போம். பெண்களுக்கு பிரசவம் பார்க்கும் முறையை சொல்லி தருவோம். எதற்கும் மருத்துவமனை செல்வதில்லை. அதோடு பராம்பரிய கலை நிகழ்ச்சிகளையும், கற்று தருவோம். அதனால், எங்கள் கலை அழியாது நிலை பெறும் என்று நம்புகிறோம்.

பொதுமக்களின் பார்வை குறித்த உங்கள் கருத்து?

எங்களின் சாயம் மாறிவிட்டது. நவீன காலத்துக்கு ஏற்ப, எங்களை மாற்றி கொண்டு வருகிறோம். உடைகளிலும் எண்ணங்களிலும் மாற்றங்களை புகுத்தி வருகிறோம். தற்போது அதிகாரிகள், எங்களை பார்க்கும் போது நாங்கள் இருளர்கள் என்பதை நம்ப மறுக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள், இன சான்றிதழ் வாங்குவதற்கு விண்ணப்பித்தோம். ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் எங்களை பார்த்து இருளர்கள் இல்லை என்று கூறி விட்டனர். அவர்களை நம்ப வைக்க, பாம்பு பிடித்து, கலை நிகழ்ச்சிகள் நடத்தி காண்பிக்க வேண்டியதாகி விட்டது.

அரசின் சலுகைகள் கிடைக்கிறதா?

எங்களுக்கு தேவையான பல வசதிகளை அரசு எங்களுக்கு செய்து தருகிறது. எங்களை அழைத்து, அதிகாரிகள் தேவையான வேண்டுகோள்களை கேட்டு நிறைவேற்றி வைக்கின்றனர். சான்றிதழ்களும் எளிதில் கிடைக்கிறது. அரசால் கட்டி கொடுக்கப்படும், தொகுப்பு வீடுகள் எங்களுக்கு கிடைத்தால், ஏரிக்கரைகளில் நடத்தப்படும் எங்கள் வாழ்க்கை சூழல் மாறும். இது ஒன்று தான் எங்கள் கோரிக்கை.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக