செவ்வாய், 3 ஜூலை, 2012

கலாமின் முகமூடியைக் கிழிக்கிறார் பால்தாக்கரே!







மும்பை:"கடந்த 2004ல் நடந்த பொதுத் தேர்தலுக்குப் பின், சோனியாவை பிரதமராக்க தயாராக இருந்ததாக, பல ஆண்டுகளுக்குப் பிறகு அப்துல் கலாம் தெரிவித்திருப்பது கபட நாடகமாடும் செயல்' என, சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், "டர்னிங் பாயின்ட்' என்ற தன் புதிய புத்தகத்தில், "2004ல் நடந்த பொதுத் தேர்தலுக்குப் பின், சோனியா பிரதமராக பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும், சோனியா கேட்டிருந்தால், அவரை பிரதமராக்கியிருப்பேன்' எனத் தெரிவித்துள்ளார். இதற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி அதிருப்தி தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சிவசேனா கட்சிப் பத்திரிகையான "சாம்னா'வில், பால் தாக்கரே கூறியுள்ளதாவது:

கபட நாடகம்:சோனியாவை பிரதமராக்க தயாராக இருந்ததாக, அப்துல் கலாம் தெரிவித்திருப்பதன் மூலம், அவர் நகைப்புக்கு இடமாகியுள்ளார். பல ஆண்டுகளுக்குப் பின், அவர் இதைத் தெரிவித்திருப்பதன் மூலம், மக்களின் மனதில் அவர் பிடித்திருந்த இடத்தை இழந்து விட்டார். மக்களின் பார்வையில் அவரின் செயல் கபட நாடகமாகியுள்ளது.சோனியா பிரதமராவதை தடுத்து நிறுத்தியவர் கலாம் தான் என்ற தகவல், இதுநாள் வரை மக்கள் மத்தியில் உலாவிக் கொண்டிருந்தது. இதற்காக நாடு அவரை பாராட்டிக் கொண்டிருந்தது. ஜனாதிபதி பதவியிலிருந்து அவர் ஓய்வு பெற்ற பின்னரும், இதற்காக அவரை பலர் புகழ்ந்து கொண்டிருந்தனர். "சோனியாவை பிரதமராக்க தயாராக இருந்ததாக, இப்போது தெரிவித்திருப்பதை, கலாம் 10 ஆண்டுகளுக்கு முன்னரே தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், சுயநலம் காரணமாக அமைதியாக இருந்து விட்டார்.

சந்தேகம்:அப்துல் கலாம், பொக்ரானில் நடத்திய அணுகுண்டு சோதனை கூட நாட்டிற்கு பலன் தரவில்லை. ஆனால், சோனியா பற்றி அவர் சமீபத்தில் வெளியிட்ட தகவல், உலக அளவில் இந்தியாவின் கவுரவத்தை பாழ்படுத்தி விட்டது. கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் என, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் விரும்பின. அப்படி அவர் பிரதமர் பதவிக்கான வேட்பாளராகி, இந்த தகவலை வெளியிட்டிருந்தால், அது தேசிய ஜனநாயக கூட்டணியை அவமானப்படுத்தும் செயலாகி விடும். இப்போதைய சம்பவங்களை பார்க்கும் போது, பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடக்க உண்மையிலேயே கலாம் தான் காரணமா என்ற சந்தேகம் எழுகிறது.இவ்வாறு தாக்கரே கூறியுள்ளார்.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக