வீட்டுவசதி வாரிய வீடுகள் ஒதுக்கீடு: கருணாநிதி விளக்கம்
First Published : 08 Feb 2011 01:51:42 PM IST
சென்னை, பிப்.8: வீட்டுவசதி வாரிய வீடுகள் ஒதுக்கீடு தொடர்பாக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமியின் குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவையில் முதல்வர் கருணாநிதி இன்று விளக்கம் அளித்தார்.இதுதொடர்பாக விதி 110-ன் கீழ் சட்டப்பேரவையில் அவர் அறிக்கை வாசித்தார்.அதன் விவரம்: தமிழக வீட்டு வசதி வாரிய மனைகள் ஒதுக்கீட்டில் விருப்புரிமையின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி முதல்வர் ஆகிய என் மீது வழக்குத் தொடர தமிழக ஆளுநரிடம் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி நேற்று அனுமதி கோரியுள்ளார் என்று செய்தி வந்துள்ளது.வீட்டு வசதி வாரியத்தின் வீடுகள் அல்லது மனைகள் ஆகியவற்றில் 85 சத விகித வீடுகளை வீட்டு வசதி வாரியத்திற்கு விண்ணப்பம் செய்வோருக்கு குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படுவதும், மீதியுள்ள 15 சதவிகித வீடுகள் மற்றும் மனைகளை அரசு, தனது விருப்புரிமையின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படுவதும், எல்லா ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறை. அரசு தனது விருப்புரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்த வீடுகளிலே முறைகேடு நடைபெற்று விட்டதாக சுப்பிரமணிய சுவாமி சொல்லியிருக்கிறார்.அரசு விருப்புரிமை ஒதுக்கீடு என்பது தி.மு.க ஆட்சியிலே மட்டும் நடைபெற்ற நிகழ்ச்சியல்ல. கடந்த பல ஆண்டுகளாகவே, நடைபெற்ற எல்லா ஆட்சிக் காலங்களிலும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் உருவாக்கப்படும் மனைகள், கட்டப்படும் வீடுகள் அனைத்தும் இப்போது போலவே விருப்புரிமை ஒதுக்கீடு என்பது நடைமுறையில் இருந்து வரும் ஒன்று. அரசு தனது விருப்புரிமை ஒதுக்கீடான 15 சதவிகித இடங்களை திருமணம் ஆகாத பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர், கணவனை இழந்தோர், மாற்றுத் திறனாளிகள், சமூக சேவகர்கள், சமூகத்தில் சிறப்பு வாய்ந்தோர், தனியாக வசிக்கும் முதியோர், பொது நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களில் பணி புரிவோர், மத்திய அரசு மற்றும் மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களில் பணி புரிவோர், பத்திரிகையாளர்கள், தேசியமயமாக ஆக்கப்பட்ட வங்கிகளில் பணி புரிவோர், தேசியமயமாக ஆக்கப்பட்ட ஈட்டுறுதி நிறுவனங்களில் பணி புரிவோர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாரியங்களில் (தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தைத் தவிர) பணிபுரிவோர், உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் நகராட்சிகளில் பணிபுரிவோர், ராணுவத்தினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர், விடுதலைப் போராட்ட தியாகிகள், மொழிக்காவலர்கள், அப்பழுக்கற்ற அரசு ஊழியர் ஆகியோர்க்கு, விண்ணப்பங்கள் - கைவசம் உள்ள மனைகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் தமிழக அரசால் விருப்புரிமையைப் பயன்படுத்தி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் தரப்படும் வீடுகள் அல்லது மனைகள் சலுகை விலையில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. குலுக்கல் முறையிலே விற்பவர்களிடம் பெறப்படும் தொகையை விட குறைவானத் தொகைக்கும் தரப்படவில்லை. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் - குடியிருப்புகளுக்கு அல்லது மனைகளுக்கு விலை நிர்ணயம் செய்யும்பொழுது; வாரியம் நடைமுறையில் கடைபிடிக்கும் விலை, சந்தை விலை, பத்திரப்பதிவு அலுவலக வழிகாட்டி மதிப்பீட்டு விலை ஆகியவற்றுள் எது அதிகமோ, அதையே இறுதி விலையாக நிர்ணயம் செய்கிறது. அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டிற்கும், வாரிய ஒதுக்கீட்டிற்கும் ஒரே மாதிரியான விலை நிர்ணய முறைதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த அரசின் சார்பில் விருப்புரிமை அடிப்படையில் மனை பெற்றோர், அந்தத் தொகை மிகவும் அதிகமாக உள்ளது என்று தெரிவித்து, அந்த மனையையே திரும்ப ஒப்படைக்கின்ற நிலைமையும் உள்ளது என்பதிலிருந்தே இதில் எந்தச் சலுகையும் செய்யப் படவில்லை என்பதை அறியலாம்.மேலும், ஒதுக்கீடு பெறுவோர், வாரிய விதிமுறைகளின்படி விண்ணப்பப் படிவத்தில் தெரிவித்துள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு தரும் உறுதிமொழியை அடிப்படையாகக் கொண்டே ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டினால் அரசுக்கோ, வீட்டுவசதி வாரியத்திற்கோ எந்த வகையிலும் நிதியிழப்பு இல்லை. எல்லா ஆட்சிக் காலத்திலும் ஒரே மாதிரியான நடைமுறைகள், விதிமுறைகள்தான் பின்பற்றப்பட்டு வருகின்றன. விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு அல்லது விதிமுறைகளை மீறி அரசு விருப்புரிமை ஒதுக்கீடுகள் நடைபெற்றதாகச் சொல்லப்படும் செய்தி விஷமத்தனமானது. விதிமுறைகளுக்கு உட்பட்டே அரசு ஒதுக்கீடு செய்யும். விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் - குறிப்பிட்டுப் புகார் கொடுக்கப்பட்டால் - அரசு அதனைப் பரிசீலனை செய்து, அதில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கும்’என்று 7.12.2010 அன்றே செய்தியாளர்களிடம் வருவாய்த்துறை மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி விளக்கியுள்ளார்.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் இது போல வீட்டு மனைகள் வழங்கப்பட்டுள்ளன. அ.திமு.க. ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த என். நாராயணன், ஐ.ஏ.எஸ். க்கு 1993ஆம் ஆண்டு 4115 சதுர அடி; முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மகன் கே.எஸ். கார்த்தீசன் என்பவருக்கு பெசண்ட் நகர் பகுதியில் 1995ஆம் ஆண்டு 4535 சதுர அடி; முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் துணைவியார் நூர் ஜமிலாவுக்கு கொட்டிவாக்கத்தில் 1993ஆம் ஆண்டு 2559 சதுர அடி; நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை மனைவி டாக்டர் பானுமதிக்கு அண்ணா நகரில் 7 கிரவுண்ட் நிலம்; அ.தி.மு.க.வின் தொழிலாளர் பேரவைக்கு அண்ணா நகரில் 3 கிரவுண்ட் நிலம்; அ.தி.மு.க. வின் முன்னாள் அமைச்சர் எஸ்.எம். வேலுச்சாமியின் மனைவி பானுமதிக்கு கோவையில் 1993ஆம் ஆண்டு வீடு, 2004ஆம் ஆண்டு தேவாரம், ஐ.பி.எஸ்., கே.விஜயகுமார், ஐ.பி.எஸ்., ஆர். நடராஜ், ஐ.பி.எஸ்., உட்பட பல ஐ.பி.எஸ். அதிகாரி களுக்கு சோளிங்கநல்லூரில் தலா 4800 சதுர அடி; நீதியரசர் எஸ்.ஆர். சிங்கார வேலு அவர்களுக்கு 2005ஆம் ஆண்டு சோளிங்கநல்லூரில் இரண்டு மனைகள், சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த கே. செல்வராஜ் என்பவருக்கு 1994ஆம் ஆண்டு கொட்டிவாக்கத்தில் 2692 சதுர அடி, முன்னாள் முதல்வரிடம் துணைச் செயலாளராக இருந்த டி. நடராஜன், ஐ.ஏ.எஸ்.க்கு 1995ஆம் ஆண்டு திருவான்மியூரில் 6784 சதுர அடி; ஆதி. ராஜாராமுக்கு 1995இல் 3101 சதுர அடி., 1993இல் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த சரஸ்வதிக்கு அண்ணா நகரில் 880 சதுர அடி; சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த மல்லிகாவுக்கு அண்ணா நகரில் 950 சதுர அடி; எம்.ஜி.ஆருடைய ஓட்டுநர் பூபதிக்கு நந்தனத்தில் 3600 சதுர அடி; எஸ். ஆண்டித் தேவரின் மனைவி பிலோமினாவுக்கு 1994இல் மதுரையில் 1500 சதுர அடி என்று ஒரு நீண்ட பட்டியலே உள்ளது. 2005ஆம் ஆண்டு பலருக்கு இரண்டு மனைகள் கொடுக்கப்பட்ட நீண்ட பட்டியலும் உண்டு. தமிழகத்திலே அரசின் சார்பில் விருப்புரிமை அடிப்படையில் இது போல விரும்புவோருக்கு வீடுகளை, மனைகளை அரசு வழங்கலாம் என்ற முடிவே அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தான் எடுக்கப்பட்டு, அதற்கான அரசாணை 25-1-1979 இல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதன் முதலில் இதைத் தொடங்கிய போது 10 சதவீத வீடுகள் அல்லது மனைகள் என்பதற்கு மாறாக 1991-1996ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 15 சதவீத வீடுகளை அல்லது மனைகளை அரசு தனது விருப்புரிமை அடிப்படையிலே வழங்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. உண்மை இவ்வாறிருக்க, சுப்பிரமணியன் சுவாமி இந்த செய்தியைத் திரித்து வெளியிட்டிருப்பது உள்ளபடியே வருந்தத்தக்கது; நடவடிக்கைக்கு உரியது என்பதை தெரிவித்துக் கொள்வதாக கருணாநிதி வாசித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்


By manik
2/8/2011 4:02:00 PM
2/8/2011 4:02:00 PM


By அன்பு
2/8/2011 3:16:00 PM
2/8/2011 3:16:00 PM


By சீனு
2/8/2011 3:13:00 PM
2/8/2011 3:13:00 PM


By மணி வி
2/8/2011 2:55:00 PM
2/8/2011 2:55:00 PM


By மணி வி
2/8/2011 2:52:00 PM
2/8/2011 2:52:00 PM


By சதீஷ்
2/8/2011 2:35:00 PM
2/8/2011 2:35:00 PM


By M.Thangarajan
2/8/2011 2:15:00 PM
2/8/2011 2:15:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *