seithi_vavvaal_vaigaianeesu02
  தேவதானப்பட்டி பகுதியில் வெளவால்கள் அழிவாட்டத்தால் (அட்டகாசத்தால்) விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
  தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை, கெங்குவார்பட்டி, வைகை அணைப்பகுதியில் ஆயிரக்கணக்கான வெளவாலகள் கூட்டம் கூட்டமாக தங்கியுள்ளது. இவ்வகை வெளவால்கள் இப்பொழுது மழை இல்லாததால் பழங்கள் இருக்கும் பகுதியை நாடி இடம் பெயர்ந்து வருகின்றன. மேலும் இப்பொழுது நாவல் பழப் பருவம் தொடங்கியுள்ளதால் நாவல்மரங்கள் அடங்கிய பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன.
  இவ்வாறு நாவல்மரங்களில் தங்களுக்குத் தேவையான உணவுகள் கிடைக்காவிட்டால் அண்மையில் உள்ள   சீமையிலுப்பை(சப்போட்டா), வெள்ளரித்தோட்டம், முந்திரித்தோட்டம், பப்பாளித்தோட்டங்களில் நுழைந்து அவற்றை உணவாக உட்கொள்கின்றன.
  ஏற்கெனவே மழை இல்லாமல் வாடும் உழவர்குடியினர் இருக்கின்ற தண்ணீரை வைத்துப் பயிர்த்தொழில் செய்து வருகின்றனர். இப்பொழுது அந்தப் பயிர்த்தொழிலையும் நசுக்கும் வகையில் வெளவால்கள் அழித்து வருகின்றன.
  எனவே வனத்துறையினர் வெளவால்களை விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என உழவர் பெருமக்கள் வலியுறுத்துகின்றனர்