செவ்வாய், 16 அக்டோபர், 2012

வெளிநாட்டுச் சிறைகளில் தமிழக மீனவர்கள்: கருணாநிதி வலியுறுத்தல்

வெளிநாட்டுச் சிறைகளில் தமிழக மீனவர்கள்: கருணாநிதி வலியுறுத்தல்

First Published : 15 October 2012 05:40 PM IST
வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார்.
கருணாநிதி வழக்கம் போல அனுப்பும் கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில், தமிழக மீனவர்கள் ஈரான், கத்தார், சவுதி அரேபியா போன்ற நாடுகளிலே உள்ள சிறைச்சாலைகளில் பல நாட்களாக வாடிக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றனவே? என்ற கேள்விக்கு, ஈரான் நாட்டு அதிகாரிகளால் தமிழகத்தைச் சேர்ந்த 27 மீனவர்கள் கைது செய்யப்பட்டு,  அந்த நாட்டின் ஒரு தீவிலே உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியத் தூதரக அதிகாரிகளுக்குக் கூட இது பற்றி எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதைப் போலவே கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் பக்ரைன் நாட்டிலிருந்து கத்தார் நாட்டு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த 29 மீனவர்கள் துபாயிலிருந்தும், கத்தாரிலிருந்தும் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ஈரான் நாட்டு அதிகாரி களால் கைது செய்யப்பட்டு சிறையிலே வைக்கப்பட்டுள்ளார்கள். இலங்கைக் கடற் படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களைப் பற்றி மட்டுமே இதுவரை அக்கறை செலுத்தி வந்த நாம், இவர்களைப் பற்றியும் அக்கறை செலுத்த வேண்டியவர் களாக இருக்கிறோம். இவ்வாறு சிறையிலே அவதிப்படும் 79 தமிழக மீனவர்களையும் விரைவில் மீட்டு, தமிழகத்திற்கு அனுப்பி வைத்திட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அதைப்பற்றி தமிழக அரசும் இதுவரை எந்த நடவடிக்கையோ, வேண்டுகோளோ மத்திய அரசுக்கு விடுக்காமல் இருந்தாலும், இனியாவது அவர்களைப் பற்றி அக்கறையோடு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று கருணாநிதி பதில் அளித்துள்ளார்.
அண்ணா சாலையில், அண்ணா மேம்பாலத்திற்கு அருகே உள்ள அமெரிக்கத் தூதுவரகத்தின் முன்னால் உள்ள சர்வீஸ் சாலை பல நாட்களாக மூடப்பட்டுள்ளதால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறதே? என்ற கேள்விக்கு அமெரிக்காவில் செப்டம்பர் திங்களில் ஒரு குறும்படம் வெளியானது. அது உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் உள்ளத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால், அந்தப் படத்திற்கு எதிராக பல நாடுகளிலும் முஸ்லீம்கள் போராட்டத்தில் குதித்தனர். அந்த வகையில் தமிழகத்திலே உள்ள இஸ்லாமிய அமைப்பினர் கூட ெப்டம்பர் 14, 15 ஆகிய நாட்களில் சென்னையிலே உள்ளஅமெரிக்க தூதரக அலுவலகப் பகுதியிலே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அவர்களை அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்த விட்டிருந்தால் அந்த இரண்டு நாட்கள் நிகழ்ச்சியோடு பிரச்சினை முடிந்திருக்கும். ஆனால் அ.தி.மு.க அரசின் காவல் துறை போலீசாரை அங்கே குவித்ததோடு, இஸ்லாமிய மக்கள் மீது தடியடி நடத்தி பிரச்சினையைப் பெரிதாக்கி விட்டது. அந்தக் குறும்படத்திற்கு எதிரான போராட்டம் உலக அளவில் ஓய்ந்து போய்விட்ட போதிலும், தமிழகப் போலீசார் மட்டும் அமெரிக்கத் தூதரகத்திற்கு எதிரே உள்ள சாலையினை மூடியதோடு, 24 மணி நேரமும் அங்கே பாதுகாப்பு என்ற பெயரில் காவலர்களை குவித்து வைத்துள்ளார்கள். போக்குவரத்து மிகவும் நெரிசலாக உள்ள அந்தப் பகுதியில் செல்ல வேண்டிய நூற்றுக்கணக்கான வாகனங்கள் இதன் காரணமாக இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்குச் சுற்றிச் செல்ல வேண்டிய நிலைமை உள்ளது.
அந்த இடத்திலே பாதுகாப்புக்காக குவித்து வைக்கப்பட்டிருக்கும் காவலர்கள் அரசின் இந்த முடிவு காரணமாக தாங்கள் பெரிதும் சிரமப்பட வேண்டியிருப்பதாகச் சொல்லி வருகிறார்கள். அ.தி.மு.க. அரசு இனியாவது விழித்துக் கொண்டு இதுபற்றி விரைவில் முடிவெடுக்குமா? என்று கூறியுள்ளார் கருணாநிதி.
மேலும் ஒரு கேள்வியில் இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் டெல்லியில் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களையும், இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் அவர்களையும் சந்தித்து உரையாடி யது பற்றி? கேட்டதற்கு, வடக்கு, கிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து நடந்து வரும் ராணுவ மயமாக்கலைத் தடுப்பதற்கு இந்திய அரசு, இலங்கை அரசுக்கு முறைப்படி அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இந்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ள வேண்டிய இலங்கை அரசு, 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையே பறித்து வருவதாகவும் அவர்கள் இந்திய அரசிடம் தெரிவித்திருக்கிறார்கள். 2011ஆம் ஆண்டு அரசாங்கத்துடன் ஓராண்டு காலம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் 2012 ஜனவரி மாதத்தில் இலங்கை அரசு இந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகிக் கொண்டதாகவும், அதிகாரப் பகிர்வு குறித்து இலங்கை அரசாங்கம் அக்கறையற்ற தன்மை யோடுதான் இருப்பதாகவும் அவர்கள், கூறியிருக்கிறார்கள். அதிகாரப் பகிர்வு கோருகின்ற இந்த நேரத்தில், இலங்கை அரசு அவசரச் சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் பறித்து வருவதாகவும் அவர்கள் முறையிட்டிருக்கிறார்கள். இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள், இலங்கையில் தமிழர்கள் அமைதியான சூழ்நிலையில் கவுரவத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு என்றும், இதிலிருந்து இந்தியா ஒருபோதும் பின்வாங்காது என்றும் உறுதியளித்ததாகவும், இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் செய்தியாளர்களிடம் கூறி யிருப்பது நமக்கு மன நிறைவைத் தருகிறது. “டெசோ” மாநாட்டில் நாம் நிறைவேற்றிய தீர்மானங்கள் அனைத்துமே இந்தக் கருத்துக் களை உள்ளடக்கித்தான் அமைந்திருக்கின்றன. அந்தத் தீர்மானங்களை இந்திய அரசும், ஐ.நா. மன்றமும் முன்வந்து நிறைவேற்றினாலே இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்கு பெருமளவுக்கு தீர்வு காண முடியும் என்பது எனது நம்பிக்கையும் எதிர்பார்ப்புமாகும் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக