ஞாயிறு, 13 மே, 2012

சிறீலங்காவில் 2000ஆம் ஆண்டின் பின்னர் 14,257 சிறுமியர் பெண்கள் மீதும் 27,003 சிறுவர்கள் மீதும் பாலியல் துன்புறுத்தம்

சிறீலங்காவில் 2000ஆம் ஆண்டின் பின்னர் 14,257 சிறுமியர் பெண்கள் மீதும் 27,003 சிறுவர்கள் மீதும் பாலியல் துன்புறுத்தம்

child_rape
2000ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 14,257 பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருப்பதாகவும் 2000 முதல் 2010ஆம் ஆண்டு வரையில் 27,003 சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப் பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்திருப்பதாக சிறீலங்காவின் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சு நேற்று சபையில் தகவல் வெளியிட்டது.
இதேவேளை மேற்படி துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கான வேலைத் திட்டங்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுக்கொடுத்தல் ஆகியன அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சபையில் தெரிவிக்கப்பட்டது.
சிறீலங்காவின் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அமர்வின் போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. தயாசிறி ஜயசேகரவினால் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மேற்கண்டவாறு தகவல் வெளியிட்டார்.
அவர் மேலும் தகவல் தருகையில் 2000ஆம் ஆண்டில் 600 சிறுமிகளும் 320 பெண்களுமாக 928 பேரும், 2001இல் 685 சிறுமிகளும் 395 பெண்களுமாக 1080 பேரும், 2003இல் 714 சிறுமிகளும் 333 பெண்களுமாக 1047 பேரும் 2003இல் 753 சிறுமிகளும் 409 பெண்களுமாக 1162 பேரும் 2004இல் 930 சிறுமிகளும் 362 பெண்களுமாக 1292 பேரும் 2005இல் 793 சிறுமிகளும் 460 பெண்களுமாக 1253 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல் 2006இல் 799 சிறுமிகளும் 353 பெண்களுமாக 1152 பேரும் 2007இல் 805 சிறுமிகளும் 346 பெண்களுமாக 1151 பேரும் 2008இல் 914 சிறுமிகளும் 303 பெண்களுமாக 1217 பேரும் 2009இல் 922 சிறுமிகளும் 279 பெண்களுமாக 1201 பேரும் 2010இல் 1089 சிறுமிகளும் 235 பெண்களுமாக 1324 பேரும் 2011ஆம் ஆண்டில் 1160 சிறுமிகளும் 281 பெண்களுமாக 1450 பேரும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்காகியுள்ளனர்.
இதன்படி 2000 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையில் சிறுமிகள் மற்றும் பெண்கள் என 14,257 பேர் இவ்வாறு துஷ்பிரயோகத்துக்குட்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதேவேளை 2000ஆம் ஆண்டில் 1557 சிறுவர்களும், 2001இல் 1370 சிறுவர்களும் 2002இல் 143 சிறுவர்களும் 2003இல் 1762 சிறுவர்களும் 2004இல் 2896 சிறுவர்களும் 2005இல் 2824 சிறுவர்களும் துஷ்பிரயோகத்துக்குட்பட்டுள்ள அதேவேளை 2006இல் 2355 சிறுவர்களும் 2007இல் 2624 சிறுவர்களும் 2008இல் 3196 சிறுவர்களும் 2009இல் 2954 சிறுவர்களும் மற்றும் 2010இல் 4029 சிறுவர்களும் என மொத்தமாக 27,023 சிறுவர்கள் இக்காலப்பகுதியில் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
2011ஆம் ஆண்டுக்கான தரவுகள் இங்கு தரப்படவில்லை.
சிறுவர்களின் பாதுகாப்பற்ற நிலைமை பெற்றோரின் கவனிக்குறைவு, பொருளாதார பலவீன நிலைமை, சிறுவர்களின் அறிவீனம் பெற்றோரின் விவாகரத்து நடவடிக்கைகள், உழைப்பில் ஈடுபடுத்தல். தாய் வெளிநாடு செல்லல். பெற்றோர் கல்வியறிவின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறுவர்களும் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்படுகின்றனர்.
அதேபோன்று கல்வி மட்டம் குறைதல், கையடக்க தொலைபேசிகள் மற்றும் இணையத்தளங்கள் , மதுபானம் , போதைவஸ்து உபயோகம், தனிமைப்படுத்தப்பட்டிருத்தல், சிறிய சூழலில் அநேகர் இணைந்து வாழ்தல், பாலியல் ஊக்குவிக்கும் வகையில் நவீன சமூகத்தில் பலதரப்பட்ட விடயங்களை உருவாக்கியிருத்தல். பெற்றோர் அதிக நேரத்தை தொழிலுக்காக செலவிடுதல் உள்ளிட்ட காரணங்களினாலேயே பெண்களும் சிறுமிகளும் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்படுகின்ற நிலைமை உருவாகின்றது.
இதனைத் தடுப்பதற்கென பல்வேறு விழிப்புணர்வுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் ஆபாச இறுவெட்டுக்கள் (சீடிக்கள்) விற்பனை நிலையங்களை சுற்றிவளைத்தல், இணையத்தளம் ஊடாக இயங்கி வருகின்ற ஆபாச தளங்களை தடை செய்தல் உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கின்றன.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈட்டைப் பெற்றுக்கொடுத்தல் குற்றவாளிகளை நீதிமன்றில் ஆஜர்படுத்தி தண்டனையைப் பெற்றுக்கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக