செவ்வாய், 2 மார்ச், 2010

Front page news and headlines today

கள்ளிக்குடி : மத்திய பாதுகாப்புத்துறையில் சிறப்பாக செயல்புரிந்தமைக்காக, இந்தாண்டுக்கான தேசிய விருது, கள்ளிக்குடி ஒன்றியம் பொட்டல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவருக்கு வழங்கப்பட்டுள்ளது.



கள்ளிக்குடி ஒன்றியம் பொட்டல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி மகன் மணியம்(50). இவர் சென்னை ஆவடியில் உள்ள போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் தொழில் நுட்ப அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ராணுவ வாகனங்கள் உற்பத்தி, ராணுவத்தினருக்கான பயிற்சி கொடுப்பதில், சாதனை படைத்தற்காக, இந்த உயரிய தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 22ந்தேதி டில்லியில் டி.ஆர்.டி.ஏ., பவனில் நடந்த விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி, பிரதமரின் வேளாண்மை ஆலோசகர் சுவாமிநாதன் ஆகியோரிடமிருந்து விருதினை பெற்றார். தற்போது ராஜஸ்தானில் அர்ஜூன் டேங்க் உள்ளிட்ட பிற சாதனங்களை சோதிக்கும், ஒத்திகையிலும், ராணுவத்தினருக்கு பயன்படுத்தும் பயிற்சி கொடுப்பதிலும் ஈடுபட்டு வருகிறார்.இவரதுபெற்றோர் சின்னச்சாமி, தனலட்சுமி தமிழகத்திலிருந்து வேலைதேடி சிங்கப்பூர் சென்று பணியாற்றினர். 1970ஆம் ஆண்டுகளில் குடியுரிமை ரத்து செய்யப்பட்டு வெளியேற்ற பட்டு, தாயகம் திரும்பி சொந்த ஊரான மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியம் பொட்டல் பட்டி கிராமத்தில் குடியேறினர் .



இது குறித்து மணியம் கூறியதாவது: சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பும் போது 10 வயது. படிப்பதற்கு வடக்கம்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளிக்குச் சென்றேன். படிப்பு வரவில்லை, மக்கு பையனாக உள்ளான் என்று தலைமையாசிரியர் சேர்க்க மறுத்தார். அங்கு ஆசிரியையாக வேலை பார்த்த ஜெயசிலிடேவிட் சிறந்த பையனாக உருவாக்குவதாக உறுதியளித்து, தலைமையாசிரியரிடம் போராடி என்னை பள்ளியில் சேர்த்தார். ஆரம்பத்தில் நூற்றுக்கு பத்து, பதினைந்து மார்க் எடுத்த என்னை, ஆண்டு இறுதியில் முதல் மதிப்பெண் பெறும் அளவிற்கு உருவாக்கினார். எட்டாம் வகுப்பு முடித்து விட்டு ஆடு, மாடு மேய்க்கச் சென்ற என்னை கூப்பிட்டு, விருதுநகர் ஹாஷிபி செய்யது முகம்மது உயர்நிலைப்பள்ளியில் சேர்த்தார்.



பத்தாம் வகுப்பில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்ற நான், குடும்ப வறுமை காரணமாக மாட்டு வண்டி வேலை செய்ய ஆரம்பித்தேன். மீண்டும் என் நிலையை பார்த்த ஆசிரியை, 10 ரூபாய் கொடுத்து மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக் சென்று விண்ணப்பித்து படிக்கக் கூறினார். ஒரு கட்டத்தில் என் தாயின் தாலியை விற்று பணம் செலுத்தினோம். டிப்ளமா இன் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்து, 1982ல் இந்த துறையில் பணியில் சேர்ந்தேன். பின் பணியாற்றிக் கொண்டே சிறப்பு அனுமதி பெற்று, சென்னை அண்ணா பல்கலையில் பி.இ., யும், புனேயில், எம்.இ., யும் படித்தேன். ராணுவ டேங்க், ஏவுகணைகள் கட்டமைப்பது, போர்முனையில் பயன்படுத்து விதம் குறித்து வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பதில் என் சாதனையை பாராட்டி, இந்த உயரிய விருதுவழங்கப்பட்டது. தாய்நாட்டிற்காக தொடர்ந்து சாதனை படைப்பேன், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக